மகனின் உற்சாக முகத்தை கண்டபின்னே நிம்மதியான கணேசன்.. ‘பட்டுமாவை காட்ட மாட்டேன்.. குழந்தையை பார்க்கனும்னா வீட்டுக்கு வா..” என்றார்.
‘ஹா..ஹா.. நீங்க காட்டலன்னா என் பட்டுமாவை என்னால பார்க்க முடியாதா.?” என்றான் குழந்தையின் செயலை ரசித்தவாறு.
இவர்களை கவனியாத குழந்தை.. ‘ப்ரூ…” என எச்சில் தெறிக்க சத்தமிட்டபடி பொம்மை காரை ஓட விட்டுக்கொண்டிருந்தாள்.
கணேசன் திரும்பிப் பார்க்க.. ‘பட்டுமா..” என்ற அதிரூபனின் அழைப்பிற்கு வேகமாய் திரும்பியவள்.. ‘ப்பா… ப்ரூ..” என காரை ஓட்டிக்காட்டி மொபைலை நோக்கி வேக நடைபோட… தற்போதுதான் தன் குழந்தை எவ்வித பிடிப்புமின்றி நடப்பதை பார்த்தவன்.. ‘டேய்.. பார்த்துடா..” எனப் பதறி.. ‘அப்பா பிடிங்கப்பா விழுந்துடப் போறா..” என்றான் அவசரமாக.
‘பத்து நாளாதான் நடக்க ஆரம்பிச்சிருக்கு, ஆனா மெதுவா நடக்கிறதேயில்ல.. நல்லா நடக்கும் முன்னமே ஓட்டம்தான்.. இவ பின்னாடி ஓடவே சரியாயிருக்கு..” என செல்லமாய் சலித்துக்கொண்டவர்.. ‘ஈரம் இருந்தாதான் வழுக்கி விழுந்திடுவா.. இல்லன்னா என் செல்லம் விழாது..” என கொஞ்சியபடி குழந்தையை தூக்கி.. ‘அப்பாவ வர சொல்லுடா..” என குழந்தைக்கு சொல்லி கொடுத்தார்.
தந்தை அருகாமைக்கு ஏங்கிய குழந்தை.. ‘அப்பா..” என தன் சோகத்தை முகத்தினில் காட்ட.. கெஞ்சல் கொஞ்சல் என தனது முகத்தில் மாற்றி மாற்றி பாவனை காண்பித்து குழந்தையை சிரிக்க வைக்கும் முயற்சியில் இறங்கினான்.
மாரியப்பனும் கனகாவும் வர.. அவர்களிடம் நலம் விசாரித்தான். வழக்கம் போல் கனகா எப்போ வர என தன் முகத்தை சோகமாக்கவே.. ‘எனக்கு மட்டும் இந்த மெஸ் சாப்பாடு சாப்டுட்டு இருக்க ஆசையாம்மா.? எப்படா அங்க வந்து உன் கையால சாப்பிடுவேன்னு இருக்கு..” என குழந்தைக்கு போல் அல்லாமல் அம்மாவை வேறுமாதிரி சமாதனப்படுத்த..
‘உன் தந்திரம் தெரியாம என் மருமக எப்படி சோகமாகிடுச்சி பாரு..” என சிரித்த மாரியப்பன்.. ‘மூனு லட்சம் கொடுத்தா உன் பேரனுக்கும் இந்த கேசுக்கும் சம்மதமில்லன்னு சொல்றேன்னு அந்த பொண்ணு சொல்லியிருக்கு ரூபா.. ராமசாமி பேரனுக்கும் அந்த பொண்ணுக்கும் எந்த சம்மதமும் இல்லையாம்..
போன வாரம் ராமசாமி போன் செய்து பேரனோட கூடா நட்பால தேவையில்லாம மூனு லட்சம் தண்டம்னு புலம்பினான்.. அந்த பொண்ணு வீடும் லேசுபட்டவங்க இல்ல போல.. அரவிந்தனுக்கும் இதுக்கும் சம்மதமேயில்லன்னு தெரிஞ்சும் ப்ளாக்மெயில் செய்து பணத்தை வாங்கியிருக்காங்க..” என்றார் கவலையாக.
அதிரூபன் பேசும் முன்னே.. ‘அந்த பொண்ணு வீட்ல அப்படியொன்னும் யாருக்கும் தைரியம் கிடையாதாம்.. யாரோ சொல்லிகொடுத்துதான் இப்படி பேசியிருப்பாங்கன்னு அரவிந்தன் சொன்னானாம்..” என்றார் கணேசன்.
‘அந்த பொண்ணுக்கும் இவனுக்கும் சம்மதமில்லாமத்தான் அந்த பொண்ணு வீட்ல இப்படி பேச யாருக்கும் தைரியமில்லன்ற வரைக்கும் தெரிஞ்சி வச்சிருக்கானாப்பா அந்த அரவிந்தன்..?” என்றான் கோபமாக.
‘ஆமாமில்ல..?” என மாரியப்பன் யோசிக்க.. ‘நான் தான்ப்பா அந்த பொண்ணை அப்படி சொல்ல சொல்லிட்டு வந்தேன்.. முதல்ல அவங்க ஒத்துக்கல.. சொல்லலைன்னா அவன் திரும்பவும் உன்னை தொல்லை பண்ணுவான்னு மிரட்டி சொல்ல சொன்னேன்..
ஆமா.. ஐந்து லட்சம் இல்ல கேக்க சொன்னேன்..? ஐந்து லட்சம் எப்படி மூனா குறைஞ்சது.?” என்றான் யோசனையாக.
மாரியப்பன்.. ‘என்னடா சொல்ற.? ராமசாமிக்காக என்ன ஏதுன்னு பார்த்துட்டு வர உன்ன அனுப்பி வச்சா.. நீ அவனுக்கு தண்டம் வச்சிட்டு வந்திருக்க..?” என்றார் கோபமாக.
‘நீங்க அந்த தாத்தாக்காக அனுப்பி வச்சாலும்.. நான் போனது அவர் பேத்தியை எனக்கு பார்க்கயிருக்கன்னு சொன்னிங்களேன்னுதான்.. அங்க போய் அவங்க பேத்தியை பார்த்ததும் இது நமக்கு சரிப்படாதுன்னு தெரிஞ்சிடுச்சி.. உடனே கிளம்பலாம்னுதான் பார்த்தேன்..
உங்க ஃபிரண்டு ரொம்ப அக்கறையா நம்ம எல்லாரையும் விசாரிச்சார்.. இத்தனை பிரச்சனையிலும் நம்ம குடும்பத்தை விசாரிக்கிறார்ன்னும்.. சின்ன வயசில உங்களுக்கு நிறைய ஹெல்ப் பண்ணியிருக்கார்ன்னு நீங்க சொன்னதாலும்.. சரி வந்ததே வந்தோம் என்னன்னு பார்த்துட்டு நம்மளால எதாவது செய்ய முடியுமான்னு பார்ப்போம்னு விசாரிச்சேன்.
கம்ப்ளைண் கொடுத்த பொண்ணு வீட்டுக்கு போய் கேசை வாபஸ் வாங்க முடியுமான்னு கேட்டு பார்த்தேன்.. அவங்க முடியாதுன்னுட்டாங்க..
அடுத்ததா பாதிக்கப்பட்ட பொண்ணு வீட்டுக்கு போனேன்.. அரவிந்தன் ஏற்கனவே அந்த பொண்ணுகிட்ட காதலை சொல்லியிருக்கான்.. அந்த பொண்ணு இவனை பிடிக்கலன்னு சொல்லியிருக்கு..
அரவிந்தன் மாதவன்கிட்ட விசயத்தை சொல்லி அவளை கொஞ்சம் பயமுறுத்துங்க.. நான் காப்பாத்துற மாதிரி வந்து அந்த பொண்ணு மனசுல இடம் பிடிச்சிடறேன்னு உதவி கேட்டிருக்கான்.
அந்த கேடுகெட்ட மாதவனுக்கும் இந்த பொண்ணை பார்த்தும் பிடிச்சி போய்டுச்சி.. அரவிந்தன் சொன்னதெல்லாம் அந்த பொண்ணுகிட்ட போட்டு கொடுத்துட்டு.. எனக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கோ.. அவன்கிட்டயிருந்து உன்னை நான் காப்பாத்துறேன்னு இவன் கைவரிசையை காட்ட ஆரம்பிச்சிருக்கான்..
அந்த பொண்ணு இவனுங்களுக்கு இணங்காம சத்தம் போட்டு போராடவும் கட்டாயப்படுத்தி போதை மாத்திரை கலந்த ஜூசை குடிக்க வச்சிருக்கானுங்க.. கொஞ்ச நேரம் லேட்டாகியிருந்தாலும் அந்த பொண்ணை நாசம் செய்திருப்பானுங்க.. அந்த நேரம் அந்த பக்கம் வந்த பொண்ணு போலீஸ்க்கு ஃபோன் செய்துருக்கு.. போலீசும் சரியான நேரத்துக்கு வந்து அந்த பொண்ணை காப்பாத்தியிருக்கு..
இதெல்லாமும் பாதிக்கப்பட்ட பொண்ணு சொல்லும்போது அவங்கப்பா எப்படி அழுதார் தெரியுமாப்பா.? அந்த அரவிந்தன் என் பொண்ணு பேரை கெடுத்தது பத்தாம இன்னொருத்தனையும் இதுல இழுத்து விட்டுட்டான்.. இவனுங்க செய்த அட்டூழித்துல என் பொண்ணு பயந்து தற்கொலை வரைக்கும் போய்டுச்சி..
கம்ப்ளைன் கொடுத்து அது கோர்ட் கேசாகி பிரச்சனையை திரும்ப திரும்ப பேசுவாங்கன்னுதான் போலீஸ் கேட்டப்போ கூட நான் கம்ப்ளைண்ட் கொடுக்கலன்னு ரொம்ப அழுதார்.
திரும்பவும் ஸ்டேசன் போய் இன்ஸ்பெக்டர்கிட்ட அந்த பொண்ணோட குடும்ப நிலையை எடுத்து சொல்லி.. அந்த பொண்ணை அலைக்கடிக்காத மாதிரி எதாவது பார்த்து பண்ணுங்க சார்ன்னு சொன்னேன்..
அந்த பொண்ணு சொல்லாம அரவிந்தனை ஒன்னும் பண்ணமுடியாதுன்றதால் பொண்ணுக்கு எதாவதுன்னா நீதான் காரணம்னு அவன்கிட்ட எழுதி வாங்கிட்டுதான் விட்டுருக்கேன்னு சொன்னார்.
போலீஸ்க்கு பயந்து அரவிந்தன் சும்மாயிருந்தாலும் இந்த மாதவிம்மா பேரனுக்காக அந்த பொண்ணு வீட்ல சண்டைக்கு கிளம்பிடும்னு.. நல்ல வசதி வாய்பிருக்கிறவங்கதான்னு மாதவிம்மா பத்தி சொல்லி.. ஒரு ஐந்து லட்சம் அந்த பொண்ணுக்கு கொடுக்கிற மாதிரி ஏற்பாடு செய்திங்கனா அந்த பொண்ணு குடும்பத்துக்கும் யூசாகும்.. தன் செயலுக்கான பாதிப்பு வந்தாதான் அரவிந்தனும் திருந்த யோசிப்பான்னு இன்ஸ்பெக்டர்கிட்ட பேசினேன்.” என்றான் நீண்ட விளக்கமாக.
மாரியப்பன்.. ‘அந்த ஊர்ல உனக்கு யாரையும் தெரியாது.. அப்படியிருக்க நீ சொல்லி எப்படி அந்த இன்ஸ்பெக்டர் கேட்டுக்கிட்டார்.? அதுவும் அந்த இன்ஸ்பெக்டர் தம்பி ரொம்ப நேர்மையானவர்ன்னு வேற ராமசாமி சொன்னான்..” என்றார் யோசனையோடு.
கணேசன் ஊன்றிப்பார்க்க.. ‘நான் போற ஜிம்முக்குதான்ப்பா ஐ.ஜியோட பையனும் வரான்.. அவனுக்கு கால் செய்து இந்;த கேஸ் விசயத்தில உங்கப்பா ஹெல்ப் பண்ணுவாரான்னு கேட்டேன்.. உங்களுக்கு செய்யாமலான்னு சொல்லி உடனே அவங்கப்பாகிட்ட பேசியிருக்கான். ஒரு ஐ.ஜி பேசினதுக்கப்புறம் இன்ஸ்பெக்டர் செய்யாம இருப்பாரா.? எல்லாம் நான் நினைச்ச மாதிரி முடிஞ்சது.
‘தாத்தா சொன்னாரேன்னுதான் அங்க போனேன்.. பாதிக்கப்பட்ட பொண்ணை நேர்ல பார்;க்கும் வரை இந்த கேசுல நானும் அதிக இன்வால்வ் ஆகலைப்பா..
நாலு தடிப்பசங்களை பார்த்ததுக்கப்புறமும் பயந்து ஓடாம ஒரு பொண்ணு துணிஞ்சி போலீஸ்க்கு கம்ப்ளைன் செய்யும்போது.. பாதிக்கப்பட்ட பொண்ணோட நிலைமை தெரிஞ்சதுக்கப்புறம் அதை அப்படியே விட்டுட்டு வந்தேன்னா நான் என்ன ஆம்பிளைன்னு தோணுச்சி.. அதான் இன்வால்வாகிட்டேன்..” என்றான் ஆதிரையின் நினைவில் பெருமையாக.
நாம் ஆதிரையை நினைத்துக்கொண்டிருக்க.. இவர்கள் ராமசாமி தாத்தா பேத்தியை பேசி முடிச்சிடப் போறாங்க என நினைத்தவன்.. ‘என்னப்பா விசயம்.? அம்மா எதை சொல்ல சொல்றாங்க.?” என்றான்.
கணேசன்.. ‘அன்னைக்கே சொல்லத்தான் நினைச்சேன்.. நீதான் அவசரமா ஊருக்கு கிளம்பிட்ட.. நாங்க உனக்கு பார்க்க நினைச்ச பொண்ணு ராமசாமியப்பாவோட மூத்த தாரத்துக்கு பிறந்த காஞ்சனா மகளை..” என காஞ்சனாவின் அனைத்து விசயத்தையும் சொல்லி.. ‘காஞ்சனா மகள்ன்றதுக்காகன்னு இல்லடா.. பொண்ணு அச்சுல வார்த்தமாதிரி அத்தனை லட்சணமா இருக்கும்.. காஞ்சனாகிட்ட எல்லாமும் பேசிட்டோம்.. நீ வந்ததும் கல்யாண ஏற்பாட்டை பார்க்க வேண்டியதுதான்..” என்றார் சந்தோசமாக.
‘என்னை கேட்காம எதுக்குப்பா பேசி முடிச்சிங்க.?” என கோபப்பட்டவன்.. ‘அந்த பொண்ணுக்கு எவ்வளவு பண உதவின்னாலும் செய்யிங்க.. ஆனா என்னால கல்யாணம் செய்துக்க முடியாது. நான் வேற ஒரு பொண்ணை லவ் பண்றேன்..” என்றான்.
‘டேய்.. என்ன சொல்ற.? போன முறை வந்தப்ப கூட ல்வ்வு அது இதுன்னு ஒன்னும் சொல்லலையேடா.. உன் மனசுல யாரும் இல்லன்னு நம்பிதாண்டா காஞ்சனாகிட்ட உன் மகள்தான் என் மருமகள்னு சொல்லிட்டு வந்தேன்.. காஞ்சனாவும் ரொம்ப சந்தோசப்பட்டுச்சிடா.. அவங்களை ஏமாத்த முடியாது..” என்றார் தவிப்பாக.
‘போன மாசம் வரை யாரும் இல்லதான்ப்பா.. ஆனா இப்ப அப்படியில்ல.. அவளைத்தவிர யாரையும் என்னால கல்யாணம் செய்துக்க முடியாது. என்னை கன்வினியன்ஸ் பண்றதை விட்டுட்டு காஞ்சனாம்மாகிட்ட என் மகன் லவ் பண்றது தெரியாம உன்கிட்ட பேசிட்டோம்.. உங்க பொண்ணுக்கு வேற நல்ல பையனா பாருங்கன்னு சொல்லிடுங்க.. இல்ல நீங்களே கூட நல்ல பையனா தேடி கல்யாணம் செய்து வைங்க..” என்றான் பிடிவாதமாக.
‘ரூபா..” என காஞ்சனா நிலையை மீண்டும் எடுத்து சொல்லி.. ‘இந்த சூழல்ல பொண்ணு கேட்டுட்டு.. வேணாம்னு சொன்னா வசதியில்லன்னு ஒதுக்குறாங்கன்னு காஞ்சிமா வேதனைப்படும்டா.. கொஞ்சம் புரிஞ்சிக்கோடா..” என்றார் வேதனையாக.
காஞ்சனாவின் நிலை அதிரூபனிற்கு வேதனையளித்தாலும் ஆதிரையை தவிர்த்து வேறு யாரோடும் தன்னோடு வாழமுடியாது என்றுணர்ந்தவனாய்.. ‘இத்தனை வருசம் கழிச்சி துக்கம் விசாரிக்க போய்ட்டு.. அந்த நேரத்துல கல்யாணத்தை பத்தி எதுக்குப்பா பேசுனிங்க.? பேசினது மட்டுமில்லாம என்னை கேட்காம வாக்கு கொடுத்தது தப்புதானப்பா.?” என வருத்தத்தோடு கேட்டவன்..
‘ஆமா.. அவங்ககிட்ட எனக்கு ஏற்கனவே குழந்தையிருக்குன்னு சொன்னிங்களா.? அப்படி சொல்லியும் அவங்க பொண்ணை எனக்கு தரன்னாங்களா.?” என்றான் சந்தேகமாக.
கணேசன்.. ‘அன்னைக்கு இருந்த சூழல்ல நம்ம பட்டுமா விசயம் சொல்லல..” என குற்றவுணர்வோடு சொல்லி.. ‘உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்ன்னா காஞ்சனாகிட்ட நான் பக்குவமா எடுத்து சொல்றேன்.. காஞ்சனா புரிஞ்சிக்கும்.” என்றார் நம்பிக்கையாக.
‘பட்டுமா விசயம் சொல்லாம பொண்ணு கேட்டது பெரிய தப்புப்பா.. வசதி கம்மின்றதால குழந்தையிருக்கிறதை மறைச்சிட்டிங்கனு தப்பா நினைப்பாங்க.. அவங்க நினைக்கலன்னாலும் ஒரு குழந்தைக்கு தகப்பனை கல்யாணம் செய்துக்க அந்த பொண்ணு விரும்புமா.? நீங்க திரும்ப பேசும்போது நம்ம பட்டுமா விசயம் சொல்லுங்க.. கண்டிப்பா என்னை மருமகனாக்கிக்க விரும்பமாட்டாங்க..
ஏழெட்டு வருசம் கழிச்சி போய் பார்த்துட்டு பாசத்தை காட்டிட்டு வந்திருக்கிங்க.. குழந்தை விசயம் சொல்லாததுனால எல்லாம் வேசம்னு நினைச்சிட போறாங்க..” என எச்சரித்து மீண்டும் எடுத்துரைத்து இணைப்பை துண்டித்தான்.