கல்யாண வேலைகள் சித்து தலைமையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க, ஆரதி தன் பிறந்த இல்லத்திற்கு சென்று ஒரு வாரம் ஆகி விட்டது. அந்த ஏழு நாட்களில் கண்ணன் …இருமுறை தன் வருங்கால மாமனார் வீட்டிற்கு சென்றது எல்லாம் வேறு கதை. காதலும் கடமையும் கதாநாயகனை சரியாக கையாண்டு கொண்டிருந்தது. ஆரதி தான்… திருமணத்திற்காக தன் பணியினை நிறுத்தி வைத்திருக்கிறாள்.
ஒரு காதல் ஜோடி திருமண நாளை எதிர்பார்த்து இருக்க, அன்று ஜவுளிக்கடையில் தினேஷிடம் பேசியதிலிருந்து ரதி தேவிக்கு உலகம் இயங்காமல் அப்படியே நிறுத்தப்பட்டிருந்தது. அதில் உயிர்ப்புடன் சுழன்று கொண்டிருக்கும் ஒரே நபர் தினேஷ் தான். தினமும் சித்து உடன் கல்யாண வேலைக்கு உதவுவதாக….. வெளியில் செல்பவள் ஏதேதோ காரணம் கூறி தினேஷிடம் சென்று விடுகிறாள். முதல் இரண்டு நாட்கள் கண்டுகொள்ளாத சித்து… கையும் களவுமாய் பிடித்து விட்டான் இருவரையும்.
நீதிமன்ற உத்தரவின்படி தினேஷ்.. ஆரதி சித்துவிற்கு அனிதா விஷயத்தில் கை கோர்க்க….. அவனது புத்திக்கூர்மையும் , நேர்மையும் இருவரையும் ரசிக்க வைத்திருந்தது. அவனுடன் பழகிய சில நாட்களிலே தனிமையில் வாழ்வதை தெரிந்து கொண்டனர். அதைப்பற்றி விசாரித்தாலும் பெரிதாக பேசமாட்டான் தினேஷ். அனிதா விஷயத்தில்….. தினேஷ் எடுத்த முயற்சிகள் தான் ஆரதிக்கு பெரும் துணையாக இருந்து இருக்கிறது. பெரிதாக எதிலும் அலட்டிக் கொள்ளாதவன் ரதிதேவியிடம் காதலில் விழுந்து இருக்க அதுவே சித்துவிற்க்கு அவனின் உணர்வுகளை தெளிவாக எடுத்துரைத்திருந்தது.
அன்று முதல் ரதி தேவியை தினமும் தினேஷுடன் பேசவைப்பதை தன் தலையாய கடமையாக மாற்றியிருந்தான் சித்து. ஒவ்வொரு முறையும் அவர்களின் சந்திப்பு நடக்கும் பொழுது தானாக வானதி நினைவும் சேர்ந்துகொள்ள….. தானும் இதுபோல் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் வாழ ஆரம்பித்திருந்தான்.
இரவு வேலை காவலில் இருந்த கண்ணனுக்கு அழைப்பு வர…. கைப்பேசியை பார்க்காமலே அது யார் என்று தெரிந்துக் கொண்டவன் சிரித்த முகமாகவே அழைப்பை ஏற்க…அந்த புறமோ,
“ஆழி….!” என இரவை ரகசியமாக களவாடும் காற்றாய் கண்ணனின் ரதி சினுங்க… அதில் கிறங்கியவன்,
“என்ன பொண்டாட்டி தூங்கலையா….. கல்யாணத்துக்கு இன்னும் 6 நாள் தான் இருக்கு. ” என்றவனின் குரலும் காற்றில் அசையும் இலையாக மெல்ல அசைந்துக் கொடுத்துக் கொண்டிருந்தது.
“ப்ச்!!!! தூங்க விடாம தொல்ல பண்ற ஆழி.” என மேலும் சினுங்க..,
அதில் சத்தமாக சிரித்த கண்ணன், “இனிமே இப்படித்தான் தான் பொண்டாட்டி……. அட்ஜஸ்ட் பண்ணிக்க.” என்றவனுக்கு சம்மதமாக அவளும் சிரிக்க ஆரம்பிக்க… காவலனின் அறை காதலர்களின் அறையானது. நிமிடங்கள்… அதோ இதோ என அசைந்து கொடுத்து ஒரு மணி நேரத்தை கடந்து விட… கண்ணனின் ரதியிடம் இருந்து வரும் பேச்சு சத்தம் நின்றது. தன்னவள் துயில் கொண்டதை… உறுதி செய்தவன் சிறு சிரிப்புடன் கைப்பேசியை அணைக்க, மனமோ ‘இனியாது வேலையை கவனி’ என்றது கிண்டலாக.
‘அதுக்கு என் ரதி எந்திரிக்காம இருக்கணும்.’ என பதில் சொல்லியவனின் கைப்பேசி மீண்டும் சினுங்க ஆரம்பித்து. அதில் மனம் தான் ‘ஆரம்பிச்சிடாங்கடா…. காப்பாத்து அந்த ஃபோனை’ என்ற வேண்டுதலோடு அவர்களின் உரையாடல்களை கேட்க தொடங்கியது. ஆரதி ஊருக்கு சென்றதில் இருந்தே கைபேசியை கதற விடும் செயல் அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது இரவில்.
மாலை நேரம்
மின்மினி விளக்குகள் மின்சாரத்துடன் சண்டை போல விட்டு விட்டு ஒளிர்ந்து கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்க, வண்ண வண்ண சேலை பொம்மைகளும்,தத்தி தவழும் குழந்தைகளும், ஆண்களின் மன வேதனையில் ஜொலிக்கும் ஆபரணங்களும், வாலிபர்களின் கண்ணில் இள மயில்களும், கன்னியரின் அலட்சிய பார்வையில் காளைகளும், எச்சில் ஊறும்.. பதார்த்தங்களும், நவ நாகரிக அறுசுவை உணவுகளும், பளபளக்கும் சிரிப்புகளும், காதுக்குள் ஓதும் ரகசியங்களும் என பல பலக்கும் சர்வ அலங்கார தோரணையுடன்…. அந்த மண்டபமே பூக்களின் நறுமணங்களால் வருபவரை மயக்கி கொண்டிருந்தது.
அந்த மயக்கத்தை தெளிய வைக்கவே புன்னகை முகமாக மணமக்களின் பெற்றோர்கள் வரவேற்று கொண்டிருக்க… உடன் பிறப்புகளாய் சித்துவும் , தினேஷும் மண்டப வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தனர். ரதிதேவி வேலை செய்வது போல தினேஷை வம்பிழுத்து கொண்டிருக்க… வானதியோ அதை ரசித்துக் கொண்டே மேடை நாற்காலியை துடைத்துக் கொண்டிருந்தாள்.
“வானு! இதலா எதுக்கு நீ பண்ணிட்டு இருக்க. ஆள் இருக்காங்க அவங்க பாத்துப்பாங்க..” என்ற சித்துவிற்க்கு,
“இல்ல சித்து அவங்க இப்ப தான் சரி பண்ணிட்டு போனாங்க. இந்த சின்ன பசங்க தான் ஓடியாடி திரும்பவும் கலைச்சிட்டாங்க. எத்தனை தடவைதான் சரி பண்ணுவாங்க.. அதான் நானே பண்ணிட்டேன்.” நாற்காலியை சரி செய்தவாறே பேசிக் கொண்டிருந்த வானதிக்கு ஏதோ ஒன்று உள்ளுக்குள் குறு குறுக்க பார்வையை மட்டும் மேல தூக்கி சித்துவை காண..
அவனோ, தலை முடியை சரி செய்து கொண்டே.. தோளில் விழும் பூக்களை முதுகில் தள்ளிவிட்டபடி …
அலங்கார நாற்காலியை சரி செய்து கொண்டிருக்கும் கைக்கு ஏற்றபடி வளையல்கள் தாளம் போட்டு கொண்டிருக்க… அதன் அழகில் தன்னை மறந்தவன் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பார்வையில் என்ன கண்டாலோ வானதியும் அதில் கலக்க ஆரம்பித்திருக்க மேடையில் இருவரும் வருங்கால தம்பதிகளாய் காட்சி அளித்தனர் அங்கிருந்த அனைவருக்கும்.
அப்போதுதான் மேடைக்கு வந்த மஹாலட்சுமி மகனை காண.. ஒரு நொடி எதுவும் புரியவில்லை அவருக்கு. ஏற்கனவே பட்ட அனுபவங்களால் சாதரணமாக எடுத்துக் கொண்டவர், “சித்து.. இது கொண்டு போய் அப்பா கிட்ட கொடுத்திடு. ரொம்ப நேரமா தேடிக் கிட்டு இருந்தாரு…” என்று விட்டு அடுத்த வேலையைப் பார்க்க சென்றிருக்க… தாயின் வார்த்தையில் மகன் உயிர் பெற்றான். அவன் தெளிந்த பின்னே வானதிக்கு சுய நினைவு வந்தது. சற்றம் மறந்து நின்ற தன்னை தானே கடிந்து கொண்டவள் அங்கிருந்து ஓடிவிட்டாள்.
நேரங்கள் கடந்து…. பரிசுப் பொருட்களை கையில் பிடித்துக்கொண்டு நண்பர்களும், ஆசி வழங்க பெரியவர்களும் காத்துக்கொண்டிருக்க அன்றைய நாயகனான ஆழிக்கண்ணன் கோட் சூட்டில் அம்சமான ராஜநடை யோடு….. திருத்தப்பட்ட மீசையின் அளவை சரி செய்தவாறு புன்னகை முகமாக மேடை ஏற அவனுக்கு எதிர்ப்புறமாக…. ஒப்பனைகள் வேண்டாத… தேகத்திற்கு சிறு ஒப்பனைகள் பூசி , வைர அணிகலன்களில் சொக்கத் தங்கமான பாவை வெட்கத்தில் ஒளிந்து கொள்ள… கால்கள் தானாய் தன் துணை யை நோக்கி மேடை ஏறியது.
பார்வை பரிமாற்றம் பாரபட்சமில்லாமல் அரங்கேறிக் கொண்டிருக்க… மாலை மாற்ற சொல்லிய பெரியவர்களின் கூக்குரலில் தங்களை மீட்டுக் கொண்டனர். ஜோடிகள் அழகாக மாலையை மாற்றிக் கொண்டு நிற்க அந்த அரங்கமே… வாழ்த்துக்களால் மகிழ ஆரம்பித்திருந்தது. வந்திருந்த அனைவரும் வாழ்த்தி விட்டு கிளம்பி இருந்தனர். நடுஇரவிற்க்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்க காதல் ஜோடியை ஓய்வுக்கு அனுப்பிய குடும்பத்தார்கள் மற்ற வேலையை முடித்துவிட்டு காலை திருமணத்திற்காக தயாராக இருந்தனர்.
மிக நெருக்கமான சொந்தங்கள் மட்டுமே இருக்க… மாலை செய்த எந்த அலங்காரங்களும் தேவையே படாத மணி மண்டபத்தில் இவர்களின் திருமணம் நடக்க போகிறது. சேலையூரில் உள்ள பெரிய காப்பகம் தான் நந்தவனம். இதில் ஒரு பகுதி …. வயதான குழந்தைகள் இருக்க, அடுத்த பகுதில்.. பிறப்பில் அடையாளங்களை தொலைத்து விட்டு.. எதிர் காலத்தோடு போராட போகும் சிறு மொட்டுகள். இங்கு தான் திருமணம் நடக்க வேண்டும் என்பது ஆரதியின் கனவு. அதை தன் அத்தையிடம் சொல்ல.. உடனே சம்மதம் கிடைத்து விட்டது. இங்கு தானே உண்மையான அன்பும், அரவணைப்பும் , நல்ல நல்ல வாழ்க்கை பாடங்களும், மனித உணர்வுகளும் , குழந்தையின் அருமையும், வயதான காலத்தில் கிடைக்கும் தனிமையும் குவிந்து கிடக்கிறது. ஆயிரம் கோடி ரூபாயை கொட்டி வாழ்த்துக்களை பெற்றாலும்… இதற்கு ஈடாகாது.
மலர் தேவதையவள்… மன்னனுடன் சேர்ந்து காட்சி தர… பல பெற்றோர்களின் ஆசிர்வாதத்தோடு மஞ்சள் கயிற்றில் பொன் தாலி மின்ன.. கண்ணனின் கைகளால் கட்டப்பட்டது…. அருகில் அமர்ந்திருப்பவளின் வெட்கத்தை ரசித்துக் கொண்டே. சற்றி இருந்தவர்களும் பூ மழை துவ…இனிதே முடிந்தது ஆழிக்கண்ணன் ஆரதி திருமணம்.
அடுத்து நடைபெற வேண்டிய அனைத்தும் சிறப்பாக நடந்துக் கொண்டிருக்க… மஹாலட்சுமி மனம் நிறைந்து இருந்தது. மகன் மருமகளை… தள்ளி நின்று ரசித்துக் கொண்டிருக்கும் நாரயனனுக்கும் மனம் நிறைவாய் இருக்க… மகளை பெற்ற இருவரும் பூரிப்பு கலந்த அழுகையோடு பார்த்திருந்தனர்.
நந்தவனத்தின் பெரியவர்கள்..தன் வீட்டு திருமணம் போல சடங்குகளை நடத்திக் கொண்டிருந்தனர். வைக்கும் ஒவ்வொரு போட்டியிலும் ஆரதியே ஜெயிக்க….. கடைசியாக குடத்தில் மோதிரம் போட்டு எடுக்க வைத்தனர்.
“அதையும் பார்க்கலாம். எங்க ஆதி தான் எடுப்பா… ஆதி விடாத எடு. இன்னைக்கு ஆண் வர்க்கத்தையே அவமான படுத்தனும். எடு ஆதி சிக்கிரம்.” தேவி.
“அதையும் பார்த்துடலாமா…. தேவி. இப்ப பாரு கண்ணன் சார் எப்படி எடுக்குறாங்கன்னு… விடாதிங்க சார் எடுங்க எடுங்க…..எடுங்க சார்.” வானதி.
நால்வரும் ஆளுக்கு ஒரு பக்கமாய் மண மக்களை போட்டியில் தள்ளி விட….. சிரிப்பும் வெட்கமும் மாறி மாறி .. போட்டி போட்டு இருவரையும் படுத்தி எடுக்க.. கடைசியில் கண்ணன் கைக்கே வந்து விட்டது மோதிரம்.
சித்து, வானதி, தினேஷ், தேவி நால்வரும் பந்தி பரிமாற… மன நிறைவான விருந்தொம்பல் இன்று நந்தவனத்தில்.
“தினு! என்ன இங்க நின்னுட்டு இருக்க…”
“ஒன்னும் இல்ல திவி… நீ போ நா வர…” தினேஷின் குரலில் வலியை உணர்ந்த தேவி..,
“தினு… இங்க திரும்புங்க. பீஃல் பண்றிங்களா..”
“இல்ல..” என்றவனின் குரல் மேலும் கலங்க… ஆரம்பித்து.
அவன் முன் வந்து நின்ற தேவிக்கு … தினேஷின் கலங்கிய கண்ணே காட்சி தர அதில் பதறியவள், “என்னங்க இது.. எதுக்கு இப்ப ஃபீல் பண்றீங்க..!”
“நானும் இதே மாதிரி தான் குழந்தையில இருந்திருக்க தேவி. யாராது சாப்பாடு போட வந்தா நாக்குல அவ்ளோ எச்சில் ஊறும். சாப்ட சாப்பாடு நெஞ்சில தேன்னா இனிக்கும். அம்மா யாரு அப்பா யாருன்னு தெரியாம தவிச்ச தவிப்பு இருக்கே… நரகம் அதெல்லாம். இவங்களை பார்த்ததும் பழைய ஞாபகம் வந்துடுச்சி… தேவி.”
“விடுங்க தினு… இப்ப எதுக்கு பழச பேசிக்கிட்டு. உங்களுக்கு நான் இருக்க. அம்மா அப்பா இருக்காங்க. கண்ணன் சார், ஆதி, சித்து, வானதி , ஆண்ட்டி அங்கிள் லா இருக்காங்களே… தேவை இல்லாம ஃபீல் பண்ணாதிங்க. நா அம்மா கிட்ட நம்ம கல்யாண விஷயத்தை பத்தி பேசிட்டேன்.. நாளைக்கு அப்பா கிட்ட பேச போறேன். அப்பா வெளிய வந்ததும்.. கல்யாணம் பண்ணிக்கலாம். அது வரைக்கும்… லவ் பண்ணிட்டு இருக்கலாம் தினு.” என்றவள் அவன் கையோடு கை சேர்த்து கொள்ள… இனி தினேஷ் வாழ்வில் தனிமை நொடி இருக்க போவதில்லை.