“நீங்க என்ன சொல்ல வரீங்க..?” என்றாள் இசை கொஞ்சம் கோபமாக.
“என்ன சொல்ல வரோம்ன்னு உனக்குப் புரியுதா புரியலையா செல்வி..?” என்றார் மங்கை கோபமாக.
“மங்கை.. நீ கொஞ்சம் அமைதியா இரு. நான் பேசிக்கிறேன்..” என்றார் ராஜாங்கம்.
“இங்க பாருமா செல்வி..! சம்பந்தி வீட்ல உன்னை அவங்க பையன் அன்புக்கு கேட்குறாங்க. நீ என்ன சொல்ற..?” என்றார் ராஜாங்கம் தெளிவாய்.
“என்ன உளறிகிட்டு இருக்கீங்க..? நான் எப்படி..? உங்களுக்கு புத்தி கித்தி கெட்டுப் போச்சா..? நான் எப்படி இன்னொரு கல்யாணம்..?” என்றவளுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை.
“நீ இப்படி அதிர்ச்சி ஆவேன்னு எங்களுக்குத் தெரியும் செல்வி. ஆனா, அன்பை கல்யாணம் பண்ணிகிட்டா, நீ ரொம்ப சந்தோஷமா இருப்ப..” என்றார் ராஜாங்கம்.
“கல்யாணம் என்ன கடையில விக்கிற பொருளா..? நினைச்ச நேரத்துக்கு வாங்குறதுக்கு..? அதுலயும் நான் கல்யாணம் ஆகி, ஒரு பையனுக்கு அம்மா. இப்ப போய் இப்படி கேட்குறிங்களே, உங்களுக்கே நல்லா இருக்கா..?” என்றாள் எரிச்சலுடன்.
“நீ வீட்டை விட்டு வராம இருந்திருந்தா, இதை அப்பவே கேட்டிருப்போம். எத்தனை நாளைக்கு இப்படியே இருப்ப இசை..? உனக்கு அப்படியென்ன வயசாகிடுச்சு..?” என்றார் மங்கை.
“நீங்க இப்படியெல்லாம் செய்வீங்கன்னு தெரிஞ்சு தான், நான் வீட்டை விட்டே வந்தேன். இப்போ மறுபடியும் ஆரம்பிச்சுருக்கிங்க..?” என்று இசை சொல்ல,
“எப்பவுமே நாங்க சொல்றதை கேட்க கூடாதுன்னு முடிவுல இருக்கியா செல்வி..?” என்று ராஜாங்கம் கொஞ்சம் குரலை உயர்த்த,
“கதிர் மாமாவையும் நீங்க சொல்லி தான் கல்யாணம் பண்ணேன். நானா ஒன்னும் பண்ணலையே..? கடைசி வரைக்கும் நீங்க நினைக்கிற மாதிரி தான் நான் இருக்கணும்ன்னா…அப்பறம் எனக்குன்னு என்ன இருக்கு..?” என்றாள்.
“நீ முடிவா என்ன சொல்ல வர..?” என்றார் ராஜாங்கம்.
“என்னால முடியவே முடியாது..” என்றாள் உறுதியாக.
“இந்த காலத்துல யாரும் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறது இல்லையா..?” என்றார் மங்கை.
“இருக்காங்க.. இல்லைன்னு சொல்லலை. ஆனா, அவங்கல்ல ஒருத்தியா நான் இருக்க விரும்பலை. கதிர் மாமா கூட வாழ்ந்த கொஞ்ச நாட்களே எனக்குப் போதும். இதுக்கு மேல என்னை வற்புறுத்தாதிங்க..! மீறி இதையே பேசிட்டு இருந்தா, அப்பறம் நான் என்ன செய்வேன்னு எனக்குத் தெரியாது..” என்றாள் கோபமாக.
“என்னடி செய்வ..? மறுபடியும் வீட்டை விட்டு போவ..? அதைத் தவிர வேற என்ன செய்யத் தெரியும் உனக்கு. உனக்கெல்லாம் எங்களோட மனக் கஷ்ட்டம் எங்க தெரிய போகுது..?” என்றார் மங்கை.
“பெத்த பொண்ணோட கஷ்ட்டம் தான் உங்களுக்குத் தெரியலை..?” என்றாள் விரக்தியாய்.
“என்னது..? உன்னோட கஷ்ட்டம் எங்களுக்குத் தெரியலையா..? நீயும் ஒரு பொண்ணைப் பெத்து, வளர்த்து,கல்யாணமும் பண்ணி வச்சு.. அந்த புள்ள மூணு மாசத்துல புருஷனை இழந்துட்டு வந்தா, இப்படித்தான் வேடிக்கை மட்டும் பார்ப்பியா..?” என்றார் மங்கை.
“அது அப்படியில்லைம்மா..”
“உனக்குன்னா ஒன்னு. எனக்குன்னா ஒன்னா..? என்னோட வலி என்னன்னு, ஒரு பிள்ளையைப் பெத்ததுக்கு அப்பறமும் உனக்குத் தெரியலை பாரு.. அதாண்டி எனக்கு தாங்க முடியாம இருக்கு..” என்று மங்கை பேசிக் கொண்டிருக்க, இசையோ அப்படியே அமர்ந்திருந்தாள்.
“என்னால முடியாதும்மா..புரிஞ்சுக்கங்க..! அத்தனை பேர் பேசின பேச்சும் இன்னும் என் காதுக்குள்ள கேட்டுக் கிட்டே இருக்கு..” என்றாள் இசை.
அதைத்தாண்டி நானும் சொல்றேன்..! அப்படி பேசுனவங்க முன்னாடி வாழ்ந்து காட்டனும்கிற வெறி உனக்கு ஏன் வரலை..?”
“இன்னொரு கல்யாணம் பண்ணி தான், அதைக் காட்டனும்ன்னு இல்லைம்மா..! என் பிள்ளையை நல்ல முறையில வளர்த்தும் அதைக் காட்டலாம்..” என்றாள் இசை.
“அடிப்போடி, பைத்தியக்காரி. புருஷன் இல்லாதவங்க, அண்ணன் தம்பி கூட பேசுனாலே.. அதை முப்பது கதையா திரிச்சு சொல்ற உலகம்டி இது. அதுல நீ சொல்றது, பேச்சுக்கு சரியா இருக்கும். நடைமுறைக்கு சரியா வராது..” என்றார் மங்கை.
“தேவையில்லாதை எல்லாம் பேசாத மங்கை..!” என்று அவரை அதட்டிய ராஜாங்கம்,
“இப்ப உன்னோட முடிவு என்ன செல்வி..?” என்றார் கோபமாக.
“என்னால முடியாது…” என்றாள்.
“இத்தனை நாள், எவ்வளவு கோபம் இருந்தாலும் அதை உன்கிட்ட காட்டாம, என் மக செல்வியைப் போல உண்டான்னு மார்தட்டிகிட்டு இருந்தேன் பாரு, எனக்கு நல்ல மரியாதை செஞ்சுட்ட. பெத்த தகப்பனை அப்பான்னு சொல்லாத பிள்ளையா இருந்தாலும், அதை பெரிசா எடுத்துக்காம, நீ என்னாதான் பேசாம இருந்தாலும், மகள் தான் எல்லாம்ன்னு நினைச்சுட்டு இருந்தேன் பாரு என்னை சொல்லணும்.. ஒருத்தி ஓடிப் போய் மானத்தை வாங்கிட்டா. இருக்குற கொஞ்ச நிம்மதியையும் நீ எடுத்துக்க. உனக்கு அடுத்து இருக்கவளுக்கு நல்லது கெட்டது பார்க்கமையே போய் சேரப் போறேன். அப்ப தான் நிம்மதியா இருக்கும் உனக்கு..” என்று கோபத்தில் ஆரம்பித்து ஆதங்கத்தில் முடித்தார் ராஜாங்கம்.
“விடுங்க..! இவகிட்ட இனி பேசி பிரயோஜனம் இல்லை..! இவளுக்கு என்ன தோணுதோ செய்யட்டும். நாளைக்கு நாம ஊருக்குக் கிளம்புவோம்..” என்று மங்கை முடித்து விட்டார்.
இசைக்கு தான் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. கடைசியில் அவள் மேல் தான் தப்போ என்று அவளே ஒரு நிமிடம் யோசிக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருந்தாள்.
அகரனைத் தூக்கிக் கொண்டு வந்த அன்புச்செழியன், இசை இருந்த வீட்டின் முன் இறக்கிவிட்டான். ஏற்கனவே கோபத்தில் இருந்த இசை,
“எல்லாம் உங்க வேலை தானா சார்..? பையனை உங்க பக்கம் இழுத்து உங்க காரியத்தை சாதிக்கப் பார்க்குறிங்களா..?” என்றாள் கோபமாய்.
“என்னாச்சு..? என்ன பிரச்சனை..?” என்றான் புரியாமல். சத்தியமாக அன்பிற்கு எதுவும் புரியவில்லை. அவனுக்கு, பல்லவன் அவள் பெற்றோரிடம் பேசியதும், அவர்கள் இசையிடம் பேசியதும் தான் தெரியாதே.
“சும்மா நடிக்காதிங்க சார்..?” என்றாள்.
‘ஒருவேளை மாதவன் சொல்லியிருப்பானோ..?’ என்று மனதிற்குள் நினைத்தவன், எதுவும் பேசாமல் அவளையே பார்த்தான்.
“அகரனை மயக்கி.. நான் என்ன காரியம் சாதிக்கப் போறேன். அதுக்கு என்ன அவசியம் வந்தது..?” என்றான் புரியாமல்.
“செல்வி..! என்ன பேச்சு இதெல்லாம்..? அன்பு தம்பிக்கு ஒன்னும் தெரியாது.. இது நாங்களா பேசினது..” என்று மங்கை அவனுக்கு சப்போர்ட்க்கு வர,
“என்ன பேசினிங்க ஆன்ட்டி..?” என்றான்.
மங்கை நடந்த விஷயத்தை அவனின் சொல்ல, அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பல்லவன் இவ்வளவு வேகத்தில் செல்வார் என்று அவனுக்கு என்ன தெரியும்..?
‘பார்த்திங்களா..? என்னமோ இவரைப் பெரிய யோக்கியன் மாதிரி பேசினிங்க. இவர் சொல்லித் தான் இவர் அப்பா உங்ககிட்ட பேசியிருப்பார்..’ என்றாள் இசை கோபமாக.
“இப்பவும் சொல்றேன்..! நான் எங்கப்பாகிட்ட பேசவே இல்லை. ஆனா, அவர் சொன்னது உண்மை தான். அதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்லை..” என்றான் தெளிவாக, அவளைப் பார்த்துக் கொண்டே.
மங்கை அந்த இடத்தில் இருந்து நகர்ந்து விட,
“இத்தனை நாள் இந்த நோக்கத்தோட தான்,என்கிட்டே பேசினிங்களா..?” என்றாள் இசை.
“எனக்கு வேற வேலை இல்லையா இசை..? லவ் பண்ணி உங்க பின்னாடி சுத்திகிட்டு இருக்க, நான் என்ன காலேஜ் பையனா..? எனக்கு நல்லது கெட்டது தெரியாது? உன்மேல எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது உண்மை தான். அப்போ, நீ கல்யாணம் ஆன பொண்ணுன்னு எனக்குத் தெரியாது. அதை மறைச்சது யார் தப்பு..?” என்றான்.
“அதுக்காக, நான் கல்யாணம் ஆன பொண்ணுன்னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டே இருக்க முடியுமா..?” என்றாள்.
“இப்போ பிரச்சனை அது இல்லை..! நீ மேரிட்ன்னு தெரிஞ்ச அடுத்த நிமிஷம், நான் என் மனசை மாத்திகிட்டேன். ஆனா, நீதான் அந்த செல்வின்னு எனக்கு தெரிய வந்தப்போ, நான் மனசை மாத்த வேண்டிய அவசியம் இல்லைன்னு எனக்குத் தோணுச்சு..” என்றான்.
“நல்லா கதை விடுறிங்க சார்..! உங்க கம்பெனில வேலை பார்க்குற ஒரு பொண்ணோட முழுப் பேர் எப்படி உங்களுக்குத் தெரியாம இருக்கும்..?” என்றாள்.
“இந்த பேர்ல நீங்க ஒருத்தர் தான் இருக்கிங்களா..? இல்லை, உங்க பேரை ஆராய்ச்சி பண்றது தான் என்னோட வேலையா..? செல்வியோட கதை மட்டும் தான் தெரியும். அந்த செல்வி தான் இந்த தேனிசைச்செல்வின்னு எனக்கு என்ன ஜோசியமா தெரியும்..?” என்றான்.
“போனதை விடுங்க சார்..! எனக்கு இதுல சுத்தமா விருப்பம் கிடையாது. எங்க வீட்ல இருக்கவங்களை எனக்கு எதிரா திருப்பி விடுறது, அகரனை உங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்கிறது, இதையெல்லாம் விட்டுருங்க.” என்றாள் தீர்மானமாய்.
“சின்னப் பையனை வச்சு காரியம் சாதிக்கிற அளவுக்கு இந்த அன்புச்செழியன் தரம் தாழ்ந்து போயிடலை. உன்னை உனக்காக மட்டும் தான் பிடிச்சது. இன்னும் சொல்லப் போனா, இசையை மட்டும் தான் பிடிச்சது. நீ நம்பினாலும், நம்பலைன்னாலும் அது தான் உண்மை. இந்த ஜென்மத்துல எனக்கு மனைவியா ஒருத்தி வருவான்னா, அது நீயா மட்டும் தான் இருப்ப..! அது எப்பன்னு நீயே முடிவு பண்ணிக்க..!” என்றான் அன்பு கோபமாக.
“இப்போ நான் பேசினதுல.. எங்க இருந்து ஆம்பளைத் திமிர கண்ட…? என்னை உனக்கு மூணு வருஷமா தெரியும்.. இந்த மூணு வருஷத்துல எந்த இடத்துல என்னோட ஆம்பிள்ளைத் திமிரை நீ பார்த்த..?” என்றான் கோபமாக.
அது என்னவோ உண்மைதான். இதுவரை அன்பை அப்படி ஒரு சூழ்நிலையில் யாரும் பார்த்ததில்லை. அதனால் இசை வாயை மூடிக் கொண்டிருக்க,
“தன்னை சுத்தி இருக்குற பெண்களோட உணர்வுகளை மதிக்கிறவன் தான் ஆம்பளை..! தனக்கு மனைவியா வந்தவளோட உணர்வுகளை மதிக்கிறவன் தான் ஆம்பளைன்னு, நம்புறவன் நான். நீ இவ்வளவு பேசியும் நான் பொறுமையா பதில் சொல்லிட்டு இருக்குறதுக்கு ஒரே காரணமும் அது தான்..” என்று நிறுத்தியவன்,
“உங்களுக்கு, கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்றவன், மேட்டரை முடிச்சு கல்யாணம் பண்றவன், பழி வாங்க கல்யாணம் பண்றவன், பல பொண்ணுங்களோட தொடர்புல இருந்துட்டு கல்யாணம் பண்றவன், தான் மட்டும் தான் அப்படின்ற திமிரோட இருக்குறவன்.. இவங்களை மாதிரி ஆளுங்களைத் தான் பிடிக்குது. அதுலயும் கல்யாணம் பண்ணி, செய்ற எல்லா மொள்ளமாறித் தனமும் செஞ்சு முடிச்சுட்டு, கண்ணே மணியேன்னு உருகினா.. அவனைப் போல உண்டான்னு கால்ல விழுந்திடுவிங்க. இல்லையா, அவனைத் திருத்தி மனுஷனாக்கிக் காட்டுறேன்னு சம்பதம் எடுப்பிங்க. ஆனா, என்னை மாதிரி இயல்பா இருக்கவங்களைப் பார்த்தா, உங்களுக்கு முட்டாளாத் தெரியுது..” என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு செல்ல முற்பட,
“நான் அப்படி சொல்லலை சார்…! நீங்க வேற நல்லா பொண்ணா பார்த்து..” என்று அவள் பேசி முடிக்கும் முன்,
“நான் தான் தெளிவா சொல்லிட்டேனே..! எனக்கு மனைவின்னா அது நீ மட்டும் தான். அதுக்காக கட்டாயத் தாலி எல்லாம் கட்ட மாட்டேன். உன்னோட மனசு என்னைக்கு மாறுதோ அப்ப சொல்லு.. கல்யாணம் பண்ணிக்கலாம். இல்லையா, நீ இப்படியே இரு. நானும் இப்படியே இருக்கேன்..” என்றான்.
“நீங்க ஏன் சார் புரிஞ்சுக்கவே மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறிங்க..? என்னால ஒரு நல்ல மனைவியா இருக்க முடியாது..?” என்றாள்.
“இதுக்கு நான் என்ன பதில் சொல்லனும்ன்னு எதிர்பார்க்குற இசை. இப்போ கல்யாணம் பண்ணி நண்பர்களா இருப்போம். உன்னோட மனசு மாறும் வரைக்கும் நான் காத்திருக்கேன்னு சொல்லனுமா..? நெவர். இது சினிமா இல்லை.. எதார்த்த வாழ்க்கை. நார்மலா ஒரு பையனுக்கு இருக்குற எல்லா ஆசையும் எனக்குள்ள இருக்கு. அதனால, முதல்ல உங்க மனசு மாறட்டும்..அப்பறம் பார்ப்போம்..!” என்றான் தெளிவாக.
“மாறவேயில்லைன்னா…?” என்றாள்.
“ஜோதிகா டயலாக் தான்… மாற வேண்டியது மனசு மட்டும் தானே.. மாறதுல தப்பில்லையே..?” என்றவன், சிரித்தபடி சென்று விட்டான்.
அவன் என்ன சொல்லி சென்றான் என்று புரியவில்லை. ஆனால், தன்னை நன்றாக குழப்பி விட்டு சென்றிருக்கிறான் என்று மட்டும் தெரிந்தது.
இசையிடம் அவன் அவ்வளவு நேரம் பேசி விட்டு வந்ததை பார்த்துக் கொண்டு தான் இருந்தார் காதம்பரி. அன்பு வீட்டிற்குள் வர,
“அன்பு.. கண்டிப்பா எனக்கு இதுல சம்மதம் கிடையாது. அதுலயும் அந்த பொண்ணு இவ்வளவு பிகு பண்ணுது…? இவளை விட்டா வேற பொண்ணா இல்லை, அம்மா சொல்றதை கேளுப்பா..” என்றார் காதம்பரி.
“ஆமாண்ணா…! அம்மா சொல்றதை கேளுன்னா. அந்த இசையை விட நல்ல பொண்ணு உனக்குக் கிடைப்பாண்ணா..” என்று சங்கீதாவும் அவள் அம்மாவுடன் சேர்ந்து கோரஸ் பாடினாள்.
“நான் எடுத்த முடிவு என்னைக்குமே மாறாது. இசை மட்டும் தான் எனக்கு மனைவி. அப்படி அவ சம்மதம் சொல்லைன்னா, நான் இப்படியே இருந்துக்கிறேன். என்னைப் பத்தின கவலை உனக்கெதுக்கு சங்கீதா..? அம்மா உங்களுக்கும் தான், இனி இந்த பேச்சை இந்த வீட்ல பேசாதிங்க.” என்று முதலும் முடிவுமாய் சொல்லிவிட்டு சென்று விட்டான்.
அடுத்து வந்த நாட்களில் இசையிடம் யாரும் சரியாக பேசவில்லை. இசை எப்போதும் போல் வேலைக்கு சென்று கொண்டிருக்க, அன்பு அவளிடம் எப்போதும் போல் நடந்து கொண்டான்.
அப்படி ஒரு பேச்சு நடந்தது என்ற மாதிரியே அவன் காட்டிக் கொள்ளவில்லை. உண்மையை சொல்லப் போனால், இசை மட்டும் தான் அதையே நினைத்துக் கொண்டிருந்தாள்.
“அம்மா, பேசுனதுல தப்பிருக்க மாதிரி எனக்கும் தெரியலை..!” என்று ரோகிணியும் சொல்லியிருந்தாள். எல்லாரும் அவளுக்கு எதிராய் இருக்க, அவள் பிடி கொடுக்காமல் இருப்பது மூவருக்கு மட்டும் தான் சந்தோசம்.
அகரனிடம் கூட இப்போது அன்பு, அதிகம் பேசுவதில்லை. அவனை வைத்து காரியம் சாதிக்கப் பார்க்கிறான் என்று அவள் நினைத்துக் கொள்ள கூடாது என்பதில் அன்பு உறுதியாக இருந்தான்.
ஆனால் தினமும் கம்பெனியில் வைத்து அவளை மாங்கு மாங்கென்று பார்ப்பதை மட்டும் குறைக்கவில்லை. அவளை ரசிப்பதை எல்லாம் மனதிற்குள் மட்டுமே செய்து கொண்டான். தப்பித் தவறியும் முகத்தில் காட்டவில்லை.
ஊருக்கு செல்லும் முன் கயல்விழியும் இசையிடம் சொல்லிவிட்டுத் தான் சென்றிருந்தாள்.
“அக்கா..! நீ இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டா மட்டும் தான், நான் என்னோட கல்யாணத்துக்கு சம்மதம் சொல்வேன். நான் இதை விளையாட்டா சொல்லிட்டு போகலை. இது தான் நிஜம். கதிர் மாமாவோட ஆசையும் அதுவா தான் இருக்கும். அவர் எப்பவும் உன்னோட சந்தோஷத்தை மட்டும் தான் நினைப்பார். நாங்களும் அப்படித்தான்…” என்று உறுதியாக சொல்லிவிட்டு சென்றிருந்தாள்.
மாதவனும் கிளம்பி சென்று இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது. இந்த இரண்டு மாதத்தில் யாரும் இசையை வற்புறுத்தவில்லை. கல்யாணப் பேச்சையே எடுக்கவில்லை. ஆனால் மங்கை மட்டும் மனதிற்குள் வேண்டிக் கொண்டே இருந்தார், இசை எப்படியாவது சம்மதம் சொல்லிவிட வேண்டும் என்று.
இரவு நன்றாக உறக்கத்தில் இருந்த இசைக்கு, ஏதேதோ நிகழ்வுகள், யார் யாரோ அழும் சத்தங்கள் என்று உழன்று கொண்டே இருந்தாள். கதிரவன் அவளைப் பார்த்து சிரிப்பதை போல் இருந்தது.
“மாமா..!” என்று அவள் உதடுகள் தானாகவே முனுமுனுத்தது.
“என்ன செல்வி..? என்ன குழப்பம் உனக்கு..? நான் நிஜம் இல்லை செல்வி. இப்போ நான் நிழல். காலத்துக்கும் உன்கூடவே வரப் போற நிழல். என்னை நினைச்சு உன் வாழ்க்கையை நீ வாழாம இருக்கக் கூடாது. அன்பு தான் நிஜம்..! தயங்காம சரின்னு சொல்லு..! நம்ம பையனா வந்து பிறந்திருக்கிறதே நான் தான்… தெரியலையா உனக்கு..?” என்று அவன் சிரிக்க,
“தெரியுது மாமா.. தெரியுது மாமா..!” என்று உழன்று கொண்டிருக்க, சட்டென்று காணாமல் போனான் கதிரவன்.
“மாமா..!” என்று அவனை இருட்டில் தேடியவள், சட்டென்று கண் விழிக்க, அப்போது தான் தெரிந்தது, இதுவரை கண்டது கனவு என்று.
“இத்தனை நாள் இல்லாம, இப்ப என்ன இப்படி ஒரு கனவு..?” என்று வேர்த்துக் கொட்ட, அமர்ந்துவிட்டாள்.
அவரைப் பத்தி யோசிச்சுட்டே படுத்திருப்பேன், அதான் கனவா வந்திருக்கும்.. என்று அவளே பேசிக் கொண்டாள்.
அவ்வளவு தான், அவளுடைய அன்றைய தூக்கம் பறிபோயிருந்தது. அருகில் தூங்கிக் கொண்டிருந்த அகரனைப் பார்க்க, ஏதோ கதிரையே பார்ப்பது போல் இருந்தது இசைக்கு.
மாற்றங்கள் மாறிக் கொண்டு தான் இருக்கிறது. நாம் தான் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்.
பெண்களின் இரண்டாம் திருமணத்தை இந்த சமூகம் எப்பொழுதும் கேலிக் கூத்தாக மட்டுமே பார்க்கிறது. அந்த எண்ணம் கூட, இசையின் மறுப்பிற்கு காரணமாக இருக்கலாம்.
சமூகம், கலாச்சாரம் எல்லாமே பெண்களைக் கொண்டு மட்டுமே வடிவமைக்கப் பட்டுள்ளது. சமூகத்தின் பார்வைக்கு பயந்தே, சிலர் முடிவுகளை எடுக்கிறார்கள். இசையும் அந்த வகையில் சேர்த்தி தான். ஆனால் அதற்கு அவள் வைத்திருக்கும் காரணம் தான் வேறு. தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறாள் அவ்வளவு தான். அன்புச்செழியன் அதைத் தகர்த்து விட்டான். அதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தனக்குத் தானே ஒரு முகமூடியைப் போட்டுக் கொண்டு நடமாடுகிறாள்.
அந்த முகமூடியைக் கிழிக்கக் கூட, கதிர் தான் கனவில் வர வேண்டியிருக்கிறது.