‘பட்டம்மா.. பட்டம்மா..” என மொழியாள் குரலில் தூக்கம் தெளிந்தான் அதிரூபன். குழந்தை அன்னையை சமாளிப்பது புரிய நேரம் பார்க்க மணி எட்டரை என்றது.
ஆதிரையைப் பார்க்க அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். இவன் குளித்து வெளியே வர நினைக்க.. பட்டுவின் சத்தம் எங்கிருந்து வருகிறதென அறிய கதவருகே நின்றான்.
‘பட்டம்மா பட்டம்மா..” என பட்டுவின் சத்தம் குறையத் தொடங்கி.. ஐந்து நிமிடத்தில் சத்தம் இல்லாமல் போகவும் மெல்ல வெளியே வந்து தனதறை கதவை அவசரமாய் லாக் செய்து பட்டுவின் குரல் வந்த திசை நோக்கி சென்றான்.
சாப்பிடுவதற்கு போக்கு காட்டிக்கொண்டிருந்த குழந்தை ரூபனைக் கண்டதும்.. ‘ப்பா..” என விழிவிரித்தாள் பெரிதாக.
‘பட்டூ..” என தானும் பெரிதாய் விழிவிரித்து குழந்தையை வாங்கியவன்.. ‘நான் ஊட்டிக்கிறேன்மா..” என இட்லியையும் வாங்கினான்.
மொழியாள் சொன்ன பிறகுதான் ஆதிரை குழந்தைக்கு பெயர் சொன்னது நினைவு வர.. கூடவே குழந்தை அதை ஏற்றுக்கொண்டதும் சந்தோசத்தை தர.. ‘அப்படியாடா பட்டு.? உனக்கு ரெண்டு பேரா.? உன் புதுப்பேரு மொழியாளா.? சூப்பரா இருக்கே..” என சந்தோசித்தான்.
‘இத்தனை நேரம் எத்தனை ஆர்ப்பாட்டம் செய்துட்டு இப்போ ஆ காட்டுறதைப் பாரு..” என நொடித்தார் கனகா.
‘ப்பா.. பாட்டி திட்டி..” என ரூபனிடம் மாட்டிவிட்ட சந்தோசத்தில் மீண்டும் சிரித்தாள் பட்டு.
‘அச்சோ உங்கப்பனுக்கு பயந்துட்டேன்..” என பொய்யாய் பயந்த கனகா.. ‘எப்போ வந்த ரூபா.? போன் கூட பண்ணல..” என்றார் என்றார் சிறு கோபத்தோடு.
படப்பிடிப்பு இட சூழலை சொல்லி.. ‘இரண்டு மணிக்கு வந்தேன்மா..” என்றான்.
‘ப்பா.. பட்டம்மா.. காய்ச்சல்..” என கனகா சொன்னதை குழந்தை சொல்ல.. ‘ம்.. பட்டம்மாக்கு காய்ச்சல்..” என பொய்யாய் முகம் வாடினான் அதிரூபன்.
‘ப்பா.. டாக்டர் சரியாகி..” என பட்டு ரூபனை தேற்ற.. குழந்தை தன்னை தேற்றிய விதத்தில் சிரித்தவன்.. ‘வர வர செமையா வாயடிக்கிறால்லமா..?” என்றான் பெருமையாக.
‘இதுக்கே இப்படி சொல்ற.? இன்னும் ஆதியோட இவ அடிக்கிற வாயை பார்த்தினா என்ன சொல்வ.?” என்றார் கனகா.
‘அப்படியாடா பட்டு.? அம்மாக்கு நிறைய கதை சொன்னியா.?” என ஊட்டிக்கொண்டே கதை பேச ஆரம்பித்தான்.
இவர்களின் பிணக்கு தீர்ந்திருக்குமா என மகன் முகத்தை ஆராய.. அதிரூபனின் முகத்திலிருந்து எதையும் கண்டறிய முடியாததால் ஆதிரையை காணும் ஆவலோடு.. ‘நீ ஊட்டு.. நான் உனக்கு காபி போட்டுட்டு வரேன்..” என உள்ளே போனார் கனகா.
கணேசனும் மாரியப்பனும் வந்தனர். ‘நல்லாயிருக்கியா தாத்தா..?” என்றான் அதிருபன்.
‘நல்லாயிருக்கேன் ரூபா..” என மாரியப்பன் சந்தோசமாய் சொல்ல.. கணேசன்.. ‘கல்யாணத்துக்கு முன்னதான் இஷ்டத்துக்கு சுத்தின.. இப்பவும் அப்படியேயிருந்தா எப்படி ரூபா.? ஒரு மாசம் பக்கம் ஆகிடுச்சி. ஒரு ஃபோன் கூட செய்யல..” என பெரிதாய் குறைபட்டார்.
உண்மை நிலையை தந்தைக்கு விளக்க.. ‘அததுக்கு ஒரு பதில் சொல்லி எங்களை சமாளிச்ச மாதிரி என் மருமகளை சமாளிக்க முடியாது. ஆதிகிட்ட நல்லா போட்டுகொடுக்கிறேன் இரு..” என்றார் கோபம் குறைந்தவராய்.
‘ஹா..ஹா.. சரிடா சரிடா.. இனி என் பட்டுகிட்ட மட்டும்தான் பேசுவேன்..” என அப்பா தாத்தாவிடம் உள்ளே வர செய்கை காட்டி தானும் உள்ளே வந்தான்.
குழந்தையிடம் பேசுவதுபோல தனது படப்பிடிப்புக் காட்சிகளை மாரியப்பனிடம் சொல்லிக்கொண்டிருந்தான். காபியோடு வந்த கனகாவின் முகம் தவிப்பாய் இருக்கவும்.. காபியை வாங்கியவன்.. ‘என்னம்மா.? உடம்பு சரியில்லையா.?” என்றான் அக்கறையாக.
‘நான் நல்லாதான் இருக்கேன்.. ஆதி..” என நிறுத்திய கனகாவிற்கு.. மகனோட மருமகள் சமாதனமானாளா.? இல்லை சண்டையிட்டு கோபமாய் உள்ளிருக்கிறாளோ என்ற அச்சம் வர.. கேட்கவும் முடியாமல் கேளாமல் இருக்கவும் முடியாமல் திண்டாடி நிறுத்தினார்.
அன்னையின் எண்ணம் புரிந்தவனாய்.. ‘அம்மா.. ஒரு மாசமா ஏன் வரல.? வர முடியலன்னாலும் ஃபோன் கூட செய்ய முடியாதா.? அப்படியிப்படின்னு என்கிட்ட கத்திட்டு..” எனும்போது.. ‘வாய மூடுங்க..” ஆதிரையிடமிருந்து குறுஞ்செய்தி வர, எழுந்துட்டாளா என சிரித்தவன்.. “என்னோட பேச பிடிக்கலனு வீம்பா உள்ள இருக்கா..” என எழுந்து கதவை திறந்தான்.
ரூபனைக் கண்டதும் சட்டென எழுந்து கபோர்டில் துணி மடிப்பதை போல் பாவனை செய்தவள்.. ‘பட்டம்மா.. காய்ச்சல்..” என்ற மொழியாளின் குரலில் திரும்பினாள்.
மருமகளின் முகம் காணும் தவிப்பிலிருந்த கனகா அதற்கு மேல் தாளமுடியாமல் ‘காபி போடறேன் வா ஆதி..” என மருமகளிற்கு குரல் கொடுத்து.. ‘பட்டுவ கூப்பிட்டுக்கோங்க..” என கணவனிடம் முனுமுனுத்து சமையலறை விரைந்தார்.
‘பட்டுமா.. அப்பாக்கு மொழியாள் கேக் வெட்டின போட்டோ காட்டலாமா.?” என கணேசன் குரல் கொடுக்க.. ‘ப்பா.. பட்டு போட்டோ..” என ஓடி வந்தாள் கணேசனிடம்.
ஆதிரை தடுமாறி தலைகுனிய.. இப்படி பாவனையை எதிர்பாராதவனாய்.. ‘ஹே.. கீழ என்னத்த தேடுற..?” என சிரித்து ஆதிரையின் முகம் நிமிர்த்தியவன்.. ’நைட் நான் வந்ததும் என்னை தீயா முறைச்ச பெரிய பட்டுவா இது.?” என்றான் ஆச்சர்யத்தோடு.
ரூபனின் கையை தட்டிவிட்டு.. ‘வெளில போங்க..” என மீண்டும் தலைகுனிய.. அவள் மீது சாய்ந்தவன்.. ‘இப்போ கூட உன் ஹார்ட் பீட்..” என ரூபன் சொல்ல.. சிவந்த ஆதிரை நின்றிருந்த இடத்திலேயே அமர்ந்து முழங்காலில் முகம் புதைத்தாள்.
‘உனக்கு என்னோட சண்டையில்லன்னு தெரிஞ்சிட்டா அம்மா நிம்மதியாகிடுவாங்க.. ஜஸ்ட் ஒரு அட்டனன்ஸ் போட்டுடலாம் வா..” என அவளின் கையை பிடிக்கவும்.. ‘எழுந்துக்கு ரொம்ப லேட்டாகிடுச்சி.. வெளில வர கஷ்டமா இருக்கு..” என்றாள் குனிந்த நிலையிலேயே.
‘சரி இங்கயே இரு.. நான் எடுத்து வரேன்..” என ரூபன் வெளியே வரவும்.. காபியோடு உள்ளே சென்றார் கனகா.
‘வேணாம் நானே வரேன்..” என எழவும் கனகா உள்ளே வந்தார். ‘அத்தை.. நா.. நான் வந்துருப்பேனே..” என தடுமாறினாள்.
மருமகளின் பாவனையில் கன்னம் வழித்து திருஷ்டி கழித்த கனகா.. ‘லேட்டா எழுந்துக்கிறதெல்லாம் பெரிய விசயமா.? திரும்பவும் சண்டையேது போட்டுகிட்டிங்களோனுதான் தவிச்சிட்டிருந்தேன்.. அப்படியொன்னும் இல்லன்னு உன் முகம் சொல்லுது.. இதுபோதும் எனக்கு..” என சந்தோசித்து..
ஆதிரையின் சங்கடம் போக்க.. ‘அவன் எப்பவும் நடுராத்திரிலதான் வருவான்.. கதவு திறக்க எழுந்தாலும் திரும்ப தூக்கம் வராதுதான.? அப்போ காலைல லேட்டாகத்தான் செய்யும்.. இதுக்கு நீ என்ன செய்வ.? காபி குடிச்சிட்டு வெளில வா.. பட்டம்மா பட்டம்மான்னு உன் மொழியாளை சமாளிக்க முடியல..” என்று நிறைந்த மனதோடு வெளியே வந்தார்.
‘இங்க வான்னாலும் வரமாட்ற.. ஒரு மாசமா புள்ளைய பார்க்காம தவிச்சிட்டு என்னம்மா போம்மா..” என சலித்து.. ‘ஆதிகிட்ட கொடுக்கிறேன்..” என மொபைலை நீட்டினார்.
‘அம்மா..” என்றாள் சன்னக்குரலில்.
‘உடம்புக்கேது சரியில்லையா.? ஏன் ஃபோன் எடுக்கல.. எப்பவும் எட்டு ஒன்பது மணிக்குள்ள போன் செய்திடுவ.. இன்னைக்கு போனையும் காணோம்..” என புலம்பினார் காஞ்சனா.
‘இல்லம்மா இவங்க மிட்நைட்தான் வந்தாங்க..” என ஆதிரை தயங்க.. ‘ஓ.. சரி சரி..” என சந்தோசித்து.. ‘இரண்டு நாள் கழிச்சி அழைக்க வரேன்.. இப்போ அங்க பாரு..” என தன் பேச்சை முடித்துக்கொண்டார் காஞ்சனா.
கணேசன்.. ‘ரூபா இன்னைக்காவது ஆதியை கூட்டிட்டு போறியா.? இன்னும் மறுவீடு சம்பிரதாயமே முடியல.. எத்தனை முறை கூப்பிட்டாலும் காஞ்சனாவும் வர மாட்டுது..” என்றார் புலம்பலாக.
‘ஏங்க.. இன்னைக்கு செவ்வாய்கிழமை.. நாளை மறுநாள் போய்ட்டு ஆதிக்கு வேணும் வரை அங்க இருந்துட்டு வரட்டும்.. ஆனா செவ்வாய் புதன்ல போக வேணாம்..” என்றார் கனகா.
‘சரி விடு.. ரெண்டு நாள் பட்டுவோட என்ஜாய் பண்ணலாம்..” என குழந்தையை கணேசனிடமிருந்து வாங்கினான்.
ஆதிரை குழந்தைக்கு பெயர் சூட்டியதும் அதை குழந்தை ஏற்றுக்கொண்டதும்.. ப்ரியாவின் நினைவு தினத்தன்று குழந்தைக்காக ஆதிரை பேசியது என அனைத்தும் நெகிழ்வோடு பகிர்ந்தார் மாரியப்பன்.
ப்ரியாவின் நினைவுதினம் என்றதும் முகம் வாடியவன்.. ‘நான் சொல்லாம எதையும் ஒத்துக்காத பட்டும்மா.. நீ சொன்னதும் கேட்டுக்கிட்டாளா..? பட்டுவ உன் பக்கம் இழுத்திட்டியா..?” என மனைவியிடம் கேட்டான் பெருமையாக.
வரவழைத்த இயல்போடு ரூபன் கேட்டாலும் அவனின் கண்கள் கலங்கியிருக்க ஆதிரைக்கும் மனம் பிசைய உள்ளே போனாள். மொழியாள்.. ‘ப்பா.. பட்டம்மா..” என்றாள் ஏமாற்றமாக.. ‘பட்டம்மா போலாம் வா..” என குழந்தையோடு உள்ளே போனவன்.. ‘மணி பத்தாகப் போகுது.. வா ஆதி சாப்பிடலாம்..” என்றான்.
‘இப்போதான காபி குடிச்சேன்.. நீங்க சாப்பிடுங்க.. நான் அப்புறம் சாப்பிட்டுக்கறேன்..”
‘எனக்கும் பசிக்கல..” என குழந்தையோடு கதை பேச வார்த்தைக்கொரு பட்டம்மா சொல்லும் பட்டு, எந்தளவிற்கு ஆதிரையோடு ஒன்றியிருக்கிறாள் எனப்புரிய மனம் அத்தனை சந்தோசம் கொண்டது.
அடுத்த அரைமணி நேரத்தில் கனகா வற்புறுத்தி சாப்பிட அழைக்கவும் இருவரும் உண்டார்கள். வழக்கமாய் அதிரூபன் ஊருக்கு வந்தால் மதிய தூக்கம் அவனின் மார்பின் மீதுதான் குழந்தைக்கு. இன்றும் தூக்கம் வந்ததும் ரூபனை படுக்க பணித்து அவனின் நெஞ்சில் அழகாய் பொருந்தினாள் மொழியாள்.
இரண்டு நாட்கள் தொடர் படப்பிடிப்பு காரணமாய் குழந்தையோடு தானும் தூங்கினான் ஹாலிலேயே. இப்படியாக அன்றைய தினம் முழுதும் குழந்தையோடே பொழுதை கழித்தான்.
இரவு எட்டு மணிக்கெல்லாம் தூக்கத்திற்கு கண்ணை தேய்த்தாள் மொழியாள். கனகா.. ‘நீ வந்தா மதியத்துலயும் சீக்கிரம் முழிச்சிடறா.. ஆட்டமும் அதிகமாகிடுது.. இன்னும் கொஞ்ச நேரம் போனா சாப்பிடாமலே தூங்கிடுவா..” என பெருமை பேசியவாறு ரூபனிடம் உணவை கொடுக்க விளையாட்டு காட்டி ஊட்ட வைத்து தூங்க வைத்தான் ரூபன்.
தனதறை கதவை ரூபன் திறக்கவும்.. அவன் முகத்திலிருந்த ஆவலைக் கண்டவள்.. ‘ஹார்ட் பீட் சத்தம் கேக்குது அது இதுனு பிணாத்திட்டு பக்கத்துல வந்திங்க.. கொன்னுடுவேன்.. அப்படி உக்காருங்க.. உங்ககிட்ட நிறைய பேசனும்..” என மிரட்டினாள் ஆதிரை.
‘ஹா..ஹா.. நான் எங்க பிணாத்துறேன்.? உண்மையைத்தான் சொல்றேன்.. வேணா ப்ரூப் பண்ணட்டுமா.?” என ஆதிரையை நெருங்க.. ‘ப்ச்.. எல்லாருக்கும்தான் ஹார்ட் பீட் கேக்கும்.. அதை இப்படி எடுத்துப்பிங்களா.? தள்ளுங்க..” என ரூபனை விலக்க முற்பட..
‘எல்லாருக்கும் கேக்கும்தான்.. ஆனா நான் பக்கத்துல வந்தா உன் ஹார்ட் பீட் ஸ்பெஷல் சௌன்ட் கொடுக்குது..” என குழைந்து.. ‘விடிய விடிய பேசலாம்.. ஆனால் அரைமணி நேரம் கழிச்சி..” என ஆதிரையை வளைத்தான் தாபமாக.
‘ஹே.. என்ன இப்படி சடர்னா கெஞ்சல்ல இறங்கிட்ட..” என சிரித்து ஆதிரையை விடுவித்தவன்.. ‘சரி என்ன பேசனும்..” என கட்டிலில் அமர்ந்தான்.
‘ப்ரியா பேர் சொன்னதும் ஃபீல் ஆகிட்டிங்க.. அவங்களைப் பத்திதான் பேசனும்..” என்றாள் தயக்கமாக.
‘ஆமாம்.. எப்பவும் காட்டிக்கமாட்டேன்.. ஆனா இன்னைக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சி..“ என ஆமோதித்தவன்.. ‘இப்போ ஓ.கே.. என்ன பேசனும் பேசு..”
‘பட்டுவ எங்கயும் போக விடாம பழக்கி வச்சிருக்கிங்க.. அன்னைக்கு உங்கத்தை வீட்ல ரொம்ப நேரம் சமாளிக்க முடியல.. இப்படி இருக்க வேணாமே.. அது குழந்தைக்கு நல்லதில்லன்னு தோணுது.” என்றாள்.
‘ஸ்கூல் சேர்த்தா சரியாகிடுவா..” என்றான்.
‘அது மட்டுமில்ல.. அத்த மாமா எல்லாரையும் ரொம்ப கன்ட்ரோல் பண்ணிவச்சிருக்கிங்க.. இருபது நாளாகியும் நீங்க வராம போகவும் மாமா என்னை ஊருக்கு கூட்டட்டு போறேன்னாங்க.. நான் பட்டுவயும் அழைச்சிட்டு போலாம்னேன்.. நீங்க எதாவது சொல்விங்கனு பயப்படுறாங்க..” என குறைபட்டாள்.
‘நான் இல்லாம குழந்தையை தூக்கிட்டு போனா பட்டுவோட அம்மாபத்தி விசாரிப்பாங்கனுதான் எங்கையும் போக வேணாம்னு சொல்லியிருந்தேன்.. அதுகூட இப்படியொரு பொண்டாட்டி கிடைக்கும்முன்ன சொன்னது.. இனி நீ வந்துட்டல்ல.? போகப் போக பழக்கப்படுத்திக்கலாம்..”
ஆதிரையின் முகம் தெளிவில்லாமல் இருக்க.. ‘நீ பேச வந்ததே வேறன்னு நினைக்கிறேன்.. எதையும் மனசுல வைக்காத.. கேட்டுடு..” என ஊக்கினான்.
ஆதிரை அமைதியாய் இருக்கவும்.. ‘யார் என்ன சொன்னாங்க..?” என்றான் சிறு கோபத்தோடு.
‘எங்கம்மா..” என்றாள் வருத்தத்தோடு.
‘அத்தையா.? என்ன சொன்னாங்க.?” என்றான் யோசனையாய்.
‘பட்டுவ அன்பா பார்த்துக்கோ.. உன் வயித்தில பிறக்கலன்னாலும் குழந்தை உன் புருசனோட ரத்தம்.. அப்படியிப்படின்னு ஃபோன் செய்யும்போதெல்லாம் ஒரே அட்வைஸ்..” என்றவளிற்கு கண்ணீர் கன்னம் தொட்டது.
‘ப்ச்.. அத்தை அப்படி வளர்ந்ததால பேசியிருப்பாங்க.. அதோட நீவேற என்னை பிடிக்காம கல்யாணம் செய்துகிட்ட.. அதுனால பட்டுவோட ஒட்டாம இருந்திடுவியோனு அட்வைஸ் செய்திருப்பாங்க.. இதுக்கெல்லாம் அழுவியா.?” என அதட்டி.. ‘பட்டுவ நல்லா பார்த்துப்பனு அத்தைக்கு காட்டத்தான் ஊருக்கு கூட்டிட்டு போக நினைச்சியா.?” என முறைத்தான்.