அவன் குரலில் கட்டாயம் அது ரகு இல்லை என்று உணர்ந்து கொண்ட ஜானகி அது ஸ்ரீராம் என்று தெரியாமல் “கிரி மாமாவா பேசுறது? நான் யமுனா தங்கச்சி ஜானகி பேசுறேன்”, என்றாள்.
“என்னது அண்ணனோட மச்சினிச்சி அண்ணனுக்கு கால் பண்ணிருக்கா?”, என்று எண்ணிய ஸ்ரீராம் அது எதற்கு என்று தெரிந்து கொண்டு அண்ணனைக் கலாய்க்கலாம் என்று முடிவு எடுத்து “ஆன் நான் கிரி தான் பேசுறேன். சொல்லு ஜானகி என்ன விஷயம்? அங்க எல்லாம் ஓகே தானே?”, என்று தன்னுடைய அண்ணன் குரலைப் போல வரவைத்துப் பேசினான்.
“அப்பாடி நீங்க தான் எடுத்தீங்களா? உங்க வீட்ல வேற யாராவது எடுத்துருவாங்களோன்னு பயந்துட்டேன்”, என்று அவள் நிம்மதியாக சொல்ல புருவம் உயர்த்திய ஸ்ரீராம் “என்ன ஆச்சு?”, என்று குழப்பமாக கேட்டான்.
“அது வந்து… நான் சொல்றதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியலை”, என்று அவள் தடுமாற “இவ என்ன அக்காவுக்கு பாத்திருக்குற மாப்பிள்ளையை கரெக்ட் பண்ணப் பாக்குறாளா?”, என்று திகைப்பாய் எண்ணினான் ஸ்ரீராம்.
உண்மையை தெரிஞ்சிக்க “என்ன விஷயம் சொல்லு ஜானகி”, என்று தன்மையாகச் சொன்னான்.
“இல்லை. எனக்கு ஒரு உண்மை தெரியணும்”
“உண்மையா? என்ன உண்மை?”
“நீங்க வேற ஏதாவது பொண்ணை விரும்புறீங்களா?”
“சே சே அப்படி எல்லாம் இல்லையே ஏன் கேக்குற? உங்க அக்கா கேக்கச் சொன்னாங்களா?”, என்று கேட்டான். அவளை ஒருமையில் அழைத்தவனுக்கு யமுனாவை மரியாதையாக தான் அழைக்கத் தோன்றியது.
அதைக் கூட உணராமல் “ஐயோ இல்லவே இல்லை. நான் இப்ப கால் பண்ணினது எங்க அக்காவுக்கே தெரியாது. நீங்களும் நான் பேசினேன்னு யார்க் கிட்டயும் காட்டிக்காதீங்க;. நாமளும் இன்னையோட இந்த போன் பேச்சை மறந்துரனும்”
“சரி, எதனால அப்படி கேட்ட? சொல்லு”
“இல்லை, இன்னைக்கு நீங்க எங்க வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி வரைக்கும் எனக்கு உங்க மேல எந்த சந்தேகமும் வரலை. ஆனா அதுக்கப்புறம் உங்களை பத்தி பெரிய சந்தேகம் வந்துருச்சு. அதை யார் கிட்ட கேக்கன்னு தெரியலை. அதான் உங்க கிட்டயே விசாரிக்கலாம்னு…..”
“ஏன் இத்தனை நாள் இருந்த நம்பிக்கை இன்னைக்கு உனக்கு இல்லாம போச்சு? என்ன சந்தேகம் வந்துச்சு?”
“ஏன்னா உங்க கூட உங்க தம்பி வந்துருந்தானே?”, என்று அவள் சொன்னதும் சுள்ளென்று கோபம் வந்தது ஸ்ரீராமுக்கு. அதை அடக்கிய படியே “அவன் உன்னை விட வயசுல மூத்தவன் ஜானகி”, என்றான்.
“வயசுல மூத்தவன்னாலும் அவனுக்கு என்ன மரியாதை கொடுக்குறது?”
“ஜானகி அவன் என் தம்பி”, என்று கோபத்தை அடக்கிக் கொண்டு சொன்ன ஸ்ரீராமுக்கு எரிச்சலாக இருந்தது.
“சாரி மச்சான், உங்க கிட்ட நான் இதைச் சொல்லித் தான் ஆகணும். உங்க தம்பி குணம் சரியில்லை”, என்று ஒரு வழியாக சொல்லி விட்டாள்.
அதைக் கேட்டு திகைத்து போனான் ஸ்ரீராம். அவள் மட்டும் நேரில் இருந்திருந்தால் அவள் கழுத்தை திருகியிருப்பான். ஆனால் அவளை முழுதாக பேச வைக்க “எதனால அப்படி சொல்ற? இன்னைக்கு தானே அவனைப் பாத்த?”, என்று கேட்டான்.
“அவனை ஏற்கனவே நான் ரெண்டு டைம் பாத்துருக்கேன். ரெண்டு டைமும் அந்த பொறுக்கி வேற வேற பொண்ணு கூட இருந்தான். அதுவும் ஒரு டைம் ஒரு பொண்ணு அவனுக்கு முத்தம் கொடுத்தது. அந்த பொறுக்கி எப்படி இருந்தா எனக்கு என்ன? நான் இப்ப கேக்க வந்தது, உங்களுக்கு அப்படி ஒரு குணமும் இல்லை தானே? ஏன்னா எங்க அக்கா தேவதை மாதிரி. அவ வாழ்க்கை எனக்கு முக்கியம்”
“சாரி மச்சான், அந்த பொறுக்கியை பத்தி பேச வேண்டாம். நீங்க சொல்லுங்க. எங்க அக்காவை ஏமாத்திற மாட்டீங்க தானே?”, என்று தவிப்புடன் கேட்டாள்.
“உங்க அக்கா மட்டும் தான் என் வாழ்க்கைல வந்த முதல் பொண்ணு போதுமா? இனி அவங்க மட்டும் தான் என் உலகம். அப்படி எந்த கெட்ட பழக்கமும் எனக்கு இல்லை. நீ என்னை தாராளமா நம்பலாம்”, என்று தன்னுடைய அண்ணன் மேல் உள்ள நம்பிக்கையால் அண்ணன் மனதில் என்ன இருக்கும் என்பதை யூகித்துச் சொன்னான்.
“ஓகே மச்சான், நான் உங்களை நம்புறேன் . அப்புறம் நான் இப்ப பேசினது யாருக்கும் தெரிய வேண்டாம். நான் உங்க தம்பியைப் பத்தி சொன்னதையும் நீங்க தெறிஞ்சிக்கிட்டதா காட்டிக்க வேண்டாம். ஆனா அவனை நம்பி எந்த பொண்ணோட வாழ்க்கையையும் கெடுத்துராதீங்க. நான் வைக்கிறேன்”, என்று சொல்லி விட்டு அவள் போனை வைக்க கோபத்தில் புசுபுசுவென்று மூச்சு விட்டுக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.
“என்னையாடி பொறுக்கின்னு சொன்ன? என்னைக் கல்யாணம் பண்ண போற பொண்ணு பாவமா? அந்த பாவப் பட்ட பொண்ணா உன்னை ஆக்கலை நான் ஸ்ரீராம் இல்லை டி”, என்று எண்ணிக் கொண்டான்.
தன்னுடைய வாழ்க்கையைக் கெடுக்க அவன் காத்திருப்பது புரியாமல் அக்கா வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்ற நிம்மதியில் இருந்தாள் ஜானகி.
இரு வீட்டிலும் திருமண வேலைகள் வேகமாக நடக்க ஆரம்பித்தன. உடை எடுக்க போன போது ஸ்ரீராம் பார்வை ஜானகி பக்கம் திரும்ப அவன் பார்வையை கண்டு கொண்ட ஜானகி “பொறுக்கி அடுத்து எனக்கு ரூட்டு போடுறான் போல?”, என்று வெறுப்புடன் எண்ணிக் கொண்டாள். அவள் எண்ணத்தை அவளுடைய பார்வையின் மூலம் உணர்ந்தவனுக்கு அவளை பழி வாங்கும் எண்ணம் அதிகமானது.
அதன் பின் வந்த் நாட்களில் அவனுடைய கழுகுப் பார்வை அவளையே வட்டம் இட அவளோ துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பது போல விலக ஆரம்பித்தாள்.
ஒரு வழியாக அனைவரும் எதிர் பார்க்கும் திருமண நாளும் வந்தது.
முதல் ஆளாக கிளம்பி அக்காவுக்கு அலங்காரம் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜானகியைக் கண்டு சரவணன் மற்றும் அரசி இருவரும் ஆச்சர்யப் பட்டுப் போனார்கள். கூடவே சேலை கட்ட மாட்டேன் கட்ட மாட்டேன் என்று முந்தின நாள் வரை கத்திக் கொண்டிருந்தவள் பாந்தமாக புடவையில் இருந்தது அவர்களுக்கு இரண்டாவது அதிர்ச்சி. ஆனால் அதை வார்த்தையால் சொன்னாலோ பாராட்டினாலோ அவள் திருப்பியும் முறுக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதால் அமைதியாக இருந்து கொண்டார்கள் .
பெண்ணழைக்க மாப்பிள்ளை வீட்டில் இருந்து ஆள் வந்ததும் இங்கிருந்து அனைவரும் மண்டபத்துக்கு கிளம்பினார்கள். அங்கே சென்றதும் யமுனாவுக்கு ஆலம் சுற்றி உள்ளே அழைத்துச் சென்றார்கள். இன்னும் நேரம் இருப்பதால்
சேலையில் தேவதை போல வந்த ஜானகியை கண்டு மலைத்துப் போனான் ஸ்ரீராம். “இந்த ராட்சசி இவ்வளவு அழகா? இந்த அழுகு தான் உனக்கு திமிர் தருதுன்னா அதை அடையாம, அடக்காம விட மாட்டேன் டி. என்னோட பொறுக்கித் தனத்தை உன் கிட்ட காட்டலைன்னா நான் ஸ்ரீராம் இல்லை. இன்னைக்கு உனக்கு இருக்கு”, என்று வன்மமாக எண்ணிக் கொண்டான்.
“எவ்வளவு திமிர் இருந்தா என்னைப் பத்தி என் அண்ணன் கிட்ட போட்டுக் கொடுக்கப் பாத்திருப்பா? உண்மைலே அந்த போனை கிரி எடுத்திருந்தால் வீட்டில் எவ்வளவு பெரிய பிரளையம் வெடித்திருக்கும்?”, என்றும் எண்ணும் போதே அவன் நெஞ்சம் நடுங்கியது. ஏற்கனவே அவனுடைய தந்தை அவனை ஒரு காசுக்கும் மதிக்க மாட்டார். இதில் இவள் பேசியது தெரிந்தால் அவ்வளவு தான் என்று எரிச்சலாக எண்ணிக் கொண்டான்.
அதன் பின் கிரியை அழைத்து மணமேடையில் அமர வைத்து விட்டு பூஜை செய்ய ஆரம்பித்தார் ஐயர். அதன் பின் யமுனாவை மேடைக்கு அழைத்தார்கள்.
திருமணத்தை அருகில் நின்று காண வேண்டும் என்று எண்ணிய ஜானகி அவரச அவசரமாக மேடைக்கு செல்ல அதே நேரம் ஸ்ரீராமும் அங்கு சென்றான். இருவரும் வேகமாக செல்ல அப்போது அவளை இடித்து விட்டான்.
கூட்டம் அதிகமா இருந்த்தால் அவர்கள் மோதிக் கொண்டது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அவன் தான் மோதியது என்று தெரிந்ததும் அவனை முறைத்துப் பார்த்தாள் ஜானகி .
யாரோ என்று எண்ணி மன்னிப்பு கேட்க திரும்பியவன் “இவளா? இது தெரிஞ்ச இன்னும் நல்லா மோதிருப்பேனே?”, என்று எண்ணிக் கொண்டு அவளை பார்த்த படியே மேடை ஏறினான்.
“பொறுக்கி ராஸ்கல். பொம்பளைங்களை இடிக்கணும்னே அலையுவானுங்க”, என்று அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் அவள் முணுமுணுத்து விட்டுச் செல்ல அவன் கோபம் உச்சத்தை அடைந்தது.
மேடையில் இரண்டு வீட்டு சொந்தமும் இருந்ததால் கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருக்க நைசாக அவளுக்கு பின் சென்று நின்றவன் “என்னையா பொறுக்கின்னு சொன்ன? பொறுக்கி என்ன பண்ணுவான்னு காட்ட வேண்டாம்”, என்று எண்ணிக் கொண்டே அவள் இடையைக் கிள்ளிவைத்தான்.
அந்தோ பரிதாபம் அவன் சத்தியமாக அவள் வெற்றிடையைக் கிள்ள தான் நினைத்தான். ஆனால் தவறுதலாக கூட்ட நெரிசலில் அவன் கை சற்று மேலே ஏறி விட்டது.
இருவருமே அந்த தொடுகையில் விக்கித்துப் போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
திரும்பி அவனைப் பார்த்த ஜானகி கண்ணில் ஒரு துளி கண்ணீர் வர அவனோ முதல் முறை உணர்ந்த மென்மையிலும், அவளுடைய கண்ணீரிலும் பேய் அறைந்தது போல நின்றான்.
‘கெட்டிமேளம் கெட்டிமேளம்’ என்ற ஐயரின் குரலில் நடப்புக்கு வந்தவன் அவளைப் பார்க்க கண்களில் நீரோடு “தூ பொம்பளைப் பொறுக்கி”, என்று சொன்னாள். இது வரை அவன் செய்த செய்கையில் இருந்த குற்ற உணர்ச்சி அவளுடைய சொல்லில் அவனை விட்டுச் சென்றிருந்தது.
“இன்னும் நீ அடங்கலைல? இனி உன் வாழ்க்கை என் கைல தான் டி”, என்று எண்ணிக் கொண்டே அங்கிருந்து நகன்றான்.
அதன் பின் அனைவரின் கவனமும் கிரி யமுனா திருமணத்தில் நிலைக்க ஜானகிக்கோ அவன் கை பட்ட இடம் எரிந்தது. உடம்பெல்லாம், சேரை எடுத்து பூசியது போல இருந்தது அவளுக்கு. அவன் தொட்ட இடம் நெருப்பாக சுட்டது.
“எவ்வளவு தைரியம் இருந்தா யாருன்னு தெரியாத ஒரு பொண்ணு மேல அதுவும் அந்த இடத்துல கை வைப்பான்?”, என்று எண்ணி நொந்து போனாள். அது வரை இருந்த உற்சாகம் சந்தோஷம் அனைத்தும் அவளை விட்டுச் சென்றிருந்தது. அவனை முறைத்த படி அவள் அவனைப் பார்க்க அவனோ அவளைப் பார்த்து கண் சிமிட்டி சிரித்தான். அவன் செய்கையில் விதிர்த்துப் போனவள் அதன் பின் அவன் முகத்தைக் கூட பார்க்க பிடிக்காதவளாய் இருந்து கொண்டாள்.
அனைவரின் ஆசியோடு யமுனா கழுத்தில் தாலி கட்டினான் கிரி. அதன் பின் மற்ற சடங்குகள் எல்லாம் நடந்தது. அதன் பின் உணவு, மறுவீடு எல்லாம் முடித்து விட்டு யமுனாவை கிரி வீட்டில் விடுவதற்காக மொத்த குடும்பமும் கிளம்பியது.