“சும்மா தான் டா, சரி அவ கிட்ட சொல்லிட்டியா? இன்னைக்கு அங்க கிளம்ப போறதை பத்தி?”
“இன்னும் இல்லை அன்பு, சாயங்காலம் தான் சொல்லணும். சரி நான் ஆபீஸ் கிளம்புறேன்”
“சரி டா, பாத்துப் போயிட்டு வாங்க”, என்று அம்பிகா சொன்னதும் வெளியே வந்தான் ஸ்ரீராம். அவன் மனைவி அங்கேயே தான் நின்றாள்.
“என்ன ஜானு கிளம்பலையா?”, என்று கேட்ட படி அவன் தன்னுடைய வண்டியை எடுக்க “என்னையும் கூட்டிட்டு போயேன் ராம். என் வண்டி ஸ்டார்ட் ஆகலை”, என்றாள்.
“அன்னைக்கு மட்டும் உன் மாமனார் கூட போன? இப்பவும் அவர் கூட போக வேண்டியது தானே?”
“போடா மக்கு பிளாஸ்திரி, நானே மாமா கிட்ட என் வண்டில வறேன்னு புழுகி உனக்காக வெயிட் பண்ணுறேன். இதுல இவன் வேற?”, என்று முனங்க அவள் பேசியது தெளிவாக அவனுக்கு கேட்டது.
“சரி சரி, ஏறு. போகலாம்”, என்று சொன்னதும் சந்தோஷமாக அவன் பின்னே இரண்டு பக்கமும் கால் போட்டு ஏறி அமர்ந்து கொண்டாள்.
“ஏய் என்ன டி இப்படி உக்காருற?”, என்று உண்மையிலே அலறினான்.
“லவ்வர்ஸ் எல்லாம் இப்படி தான் உக்காருவாங்க ராம். உனக்கு தெரியாதா? போகலாம் போகலாம்”, என்று சொன்ன ஜானகி அவன் தோளை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.
“ஒரு முடிவுல தான் இருக்கியா ஜானு? செத்தேன் நான் இன்னைக்கு”, என்று எண்ணிய படியே வண்டியை எடுத்தான் ஸ்ரீராம்.
சிறிது நேரத்தில் அவனுடைய தோளில் இருந்த கை அவனது இடுப்புக்கு இடம் மாற “படுத்துறாளே”, என்று எண்ணியவன் “ஒழுங்கா உக்காரு டி”, என்றான்.
சொன்னதை செய்தால் அவள் எப்படி ஜானகி ஆவாள்? அவனை ஒட்டி உரசி அவனை சோதித்த படியே தான் வந்தாள். கடை முன் வண்டியை நிறுத்தியதும் “சாயங்காலமும் என்னைக் கூப்பிட வந்துரு என்ன?”, என்றாள்.
“எம்மா தாயே ஆளை விடு மா. அப்பா காரை எடுத்துட்டு வருவாங்க. அதுல போய்க்கோ”, என்று சொல்லி விட்டுச் சென்றான். அவன் சொன்னதைக் கேட்டு அவளுக்கு முகம் வாடியது. “இவன் ஏன் இந்த வாரம் ஒரு மாதிரி நடந்துக்குறான்? என்னை விட்டு விலகிப் போற மாதிரியே இருக்கே? இவனுக்கு என்ன ஆச்சு?”, என்று குழம்பியவள் அன்றைய வேலைகளை செய்ய முயன்றாள். அவனுடைய நினைவில் வேலை செய்ய கஷ்டமாக இருக்கவே அவனுக்கு மெஸ்ஸேஜ் அனுப்பினாள்.
“உனக்கு என்னை பிடிக்கலையா ராம்? எதுக்கு என்னை அவாய்ட் பண்ணுற? உனக்கு என் மனசு புரியவே இல்லையா? இல்லை புரியாத மாதிரி நடிக்கிறியா?”, என்று வந்திருந்த மெஸ்ஸேஜ் படிச்ச ஸ்ரீராம் தனக்குள் சிரித்து கொண்டான். தான் அனுப்பியதை படித்து விட்டு பதில் அனுப்பாமல் இருக்கும் அவனை எண்ணி அவளுக்கு கஷ்டமாக இருந்தது.
மதியம் பன்னிரெண்டு மணி போல அவளது கடைக்கு வந்த ஸ்ரீராம் வந்ததும் வராததுமாய் “கிளம்பு ஜானு, சீக்கிரம் கிளம்பு”, என்று அவசரப் படுத்தினான். அவனை வியப்பாக பார்த்தாள் ஜானகி.
அவன் பதில் அனுப்பாததால் இருந்த கோபத்தில் “எங்க கிளம்பச் சொல்ற? நான் வரலை”, என்றாள்.
“என் பிரண்டோட கல்யாணம். அதான் நாம ரெண்டு பேரும் போகப் போறோம். நேரம் இல்லை, கிளம்பு ஜானு”
“திடீர்னு வந்து கிளம்ப சொல்ற? எந்த ஊர்?”
“அதெல்லாம் போகும் போது சொல்றேன்”
“இதைக் கூட சொல்ல மாட்டிக்க. நான் வர மாட்டேன். நீ மட்டும் தனியா போ”
“தனியா போய் நான் அங்க என்ன டி செய்யப் போறேன். இப்ப கிளம்ப போறியா இல்லையா?”
“ஓய் என்ன மிரட்டுற? நான் என் மாமா கிட்ட சொல்லிக் கொடுத்துருவேன் பாத்துக்கோ”
“சொல்லிக்கோ யார் வேண்டாம்னு சொன்னா”
“ராம், நான் உன் அப்பா கிட்ட தான் சொல்லிருவேன்னு சொன்னேன்”
“தெரியுது தெரியுது”
“உனக்கு பயமா இல்லையா?”
“எனக்கு என்ன பயம்? போகச் சொன்னதே அவர் தான்”
“அப்படியா? அப்படின்னா ஐ ஜாலி ஜாலி, எல்லாரையும் தான் கூட்டிட்டு போறோமா?”
“எல்லாரையுமா? காரியத்தை கெடுத்தாளே?”, என்று எண்ணியவன் “எல்லாரும் போனா இங்க வேலையை எல்லாம் யார் பாத்துக்குவா? அண்ணியும் டிராவல் பண்ணக் கூடாது. அதனால நாம ரெண்டு பேர் மட்டும் தான் போறோம். கிளம்பு ஜானு. உனக்கு என் கூட வர விருப்பம் இருக்கா இல்லையா? இத்தனை கேள்வி கேக்குற?”, என்று கேட்டான்.
“லூசா நீ? உன் கூட வர விருப்பம் இல்லாமல் இருக்குமா?”
“அப்புறம் என்ன வா”, என்று சொன்னவன் அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
அறைக்குள் வந்ததும் “எத்தனை டிரெஸ் எடுத்து வைக்க?”, என்று கேட்டாள் ஜானகி.
“ஒண்ணு கூட எடுத்து வைக்கலைன்னா கூட பரவால்ல”, என்று அவன் பட்டென்று சொல்ல அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவள் “என்ன டா சொல்ற?”, என்று கேட்டாள்.
“ஹி ஹி, நான் எடுத்து வச்சிட்டேன்னு சொன்னேன். உனக்கு தேவையானதை எல்லாம் அதோ அந்த பேக்ல எடுத்து வச்சிருக்கேன். ஏதோ எனக்கு தெரிஞ்சதை எடுத்து வச்சேன். உனக்கு வேற ஏதாவது தேவைன்னா எடுத்து வச்சிக்கோ”
“எதுக்கு ராம் இவ்வளவு பெரிய பேக்? வேற எங்கயாவது போறோமா?”
“எவ்வளவு நேரம் ஜானு கேள்வி மேல கேள்வியா கேட்டுட்டு இருக்க போற? கிளம்பு டி”, என்று அவன் கத்தியதும் தான் வாயை மூடிக் கொண்டு கிளம்ப ஆரம்பித்தாள்.
கிளம்பி வெளியே வந்ததும் அனைவரும் அவர்களுக்கு போகும் இடத்தைப் பற்றி அறிவுரை சொல்ல தன்னைத் தவிர மற்ற அனைவருக்கும் போகும் இடம் தெரிந்திருக்கிறது என்று உணர்ந்த ஜானகி அவனை தான் முறைத்தாள்.
அவர்களிடம் சொல்லி விட்டு வெளியே வந்ததும் அவன் காரை எடுக்க “ராம், என்ன மாமா காரை எடுக்குற? நாம டிரைன்ல போகலையா?”, என்று கேட்டாள்.
“உன் மாமா தான் இதுல போகச் சொன்னார், நீ வா”, என்று சொன்னவன் காரை எடுத்தான். அவளும் அவன் அருகே ஏறி அமர்ந்தாள்.
சிறிது தூரம் வரை “எங்க போறோம் ராம்?”, என்று கேட்டுக் கொண்டே வந்தவள் அவன் பதில் எதுவும் சொல்லாததால் அவன் தோளில் சாய்ந்தவாறே தூங்கிப் போனாள்.
அதிகமான குளிர் அவளது உடலைத் துளைத்தெடுத்ததும் தான் கண் விழித்தாள். மணி எட்டு என்பதால் ஒரே இருட்டாக இருந்தது.
“அடப்பாவி, என்னை எங்க டா கடத்திட்டு போற? இப்பவாது சொல்லேன். நாம எங்க போறோம்?”, என்று கேட்டாள் ஜானகி.
“இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துரும். வந்த உடனே பாத்துக்கோ”, என்று அவன் சொன்னதும் வாயை மூடிக் கொண்டாள்.
அவர்கள் ஊட்டிக்கு வந்து சேரும் போது இரவு மணி ஒன்பது ஆகியது. “ராம், ஊட்டிக்கா வந்திருக்கோம்? சொல்லவே இல்லை”, என்றவளின் முகம் மலர்ந்தது.
ஒரு வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தியவன் அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.
“வா பா ஸ்ரீ, வா மா. எப்படி இருக்கீங்க? கல்யாணம் அப்ப பாத்தது”, என்று அவர்களை வரவேற்றார் ஸ்ரீராமின் மாமா உறவில் இருக்கும் ஒருவர்.
“நல்லா இருக்கோம் மாமா”, என்று சொன்ன ஸ்ரீராம் அவர் தனக்கு எப்படி சொந்தம் என்று அவளுக்கு சொன்னான். சிறிது நேரம் அவரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“சாப்பிடுறீங்களா?”, என்று கேட்டார் அவர்.
“குளிச்சிட்டு தான் மாமா சாப்பிடணும்”
“அதுவும் சரி தான். சரி இந்தா ஸ்ரீ சாவி, சாப்பாடு எல்லாம் இந்த கூடைல இருக்கு. அப்புறம் சாப்பிடுங்க. காலைல இங்க வந்துரணும் சரியா?”, என்று சொல்லி விட்டு சாவியைக் கொடுத்தார்.
“ரொம்ப தேங்க்ஸ் மாமா. சரி காலைல வரோம்”, என்று சொன்ன ஸ்ரீராம் அவளை அழைத்துக் கொண்டு அந்த காட்டேஜ்க்கு வந்தான்.
சுற்றி சிறிதாக மட்டுமே வெளிச்சம் இருந்ததால் வெளியே உள்ள அழகு தெரிய வில்லை. குளிர் வேறு வாட்டி எடுக்க உடனே அந்த வீட்டுக்குள் சென்று விட்டார்கள்.
ஸ்ரீராமின் நண்பனுடைய திருமணத்துக்கு வந்திருப்பதாக எண்ணியிருந்ததால் ஜானகி வேறு எதையும் யோசிக்க வில்லை. உள்ளே சென்று குளித்து முடித்து அவர் கொடுத்த இரவு உணவையும் முடித்து விட்டு எப்போதும் போல் தூங்கச் சென்றார்கள். சிறிது நேரத்தில் நன்றாக தூங்கி விட்டார்கள் இருவரும்.
ஆனால் சிறிது நேரத்தில் ஸ்ரீராம் எழுந்து விட்டான். சரியாக பன்னிரெண்டு மணி ஆகப் போகும் போது “ஏய் ஜானு பேபி, எந்திரி எந்திரி”, என்று அவளை எழுப்ப “என்ன ராம்? இந்த நேரத்துல? எனக்கு தூக்கமா வருது”, என்று புலம்பிக் கொண்டே எழுந்தாள்.
“ஹேப்பி பெர்த்டே மை டியர் செல்ல பொண்டாட்டி”, என்று அவன் சொல்ல அவள் தூக்கம் பறந்து போனது. “இதை எப்படி மறந்தேன்?”, என்று எண்ணியவள் “ராம் உனக்கு எப்படி என் பெர்த்டே தெரியும்?”, என்று கேட்டாள்.
“இது பெரிய விஷயமா? அண்ணி தான் சொன்னாங்க. சரி சரி வா கேக் வெட்டலாம்”, என்று சொல்லி அழைத்துச் சென்றான்.
“இதெல்லாம் எப்ப ரெடி பண்ணின? கேக் எனக்கு ரொம்ப பிடிச்சது. ஆனா ஏன் இங்க வந்தோம்? நாம நம்ம வீட்ல இருந்துருக்கலாம்லா? எல்லார் கூடவும் செலிபிரெட் பண்ணிருக்கலாம்”, என்று சொல்லிக் கொண்டே கேக் வெட்டி அவனுக்கு ஊட்டி விட்டாள். அவனும் அவளுக்கு ஊட்டினான்.
“அதெல்லாம் அடுத்த வருஷம் எல்லார் கூடவும் கொண்டாடலாம். இப்ப நீ வா”, என்று சொல்லி அவளை அழைத்துச் சென்று அங்கு கட்டியிருந்த மர ஊஞ்சலில் அமர வைத்து தானும் அவள் அருகில் அமர்ந்துவிட்டான். அன்று பௌர்ணமி என்பதால் முழு நிலவு காய்ந்து கொண்டிருந்தது தோட்டத்தில் இருந்து வந்த முல்லைப் பூவின் மணம் அவர்கள் நாசியை வருடியது.
அவள் அந்த நிலவைப் பார்க்க அவனோ அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். “இந்த சீட்டுவேசன் ரொம்ப அழகா இருக்கு ராம்”, என்று சொன்ன ஜானகி அவனிடம் இருந்து சத்தம் வராததால் அவனை திரும்பிப் பார்த்தாள். அவனுடைய கண்களில் இருந்த மயக்கத்தில் அவள் பேச்சு அப்படியே நின்று போனது.