அதன் பின் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து ஒரு நாள் மாலை கடையில் இருந்தவளை அழைக்க வந்திருந்தான் ஸ்ரீராம். வண்டியில் அவனுடன் ஏறி அமர்ந்தவள் “ரொம்ப பசிக்குது ராம். ஏதாவது சாப்பிட்டுட்டு போகலாமா?’, என்று கேட்டாள்.
“ஓ போகலாமே?”, என்று சொல்லி அவளை அழைத்துச் சென்றான். இருவரும் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டும் கதை பேசிய படியும் சாபிட்டார்கள். அப்போது “ஏய் ஸ்ரீ எப்படி டா இருக்க? பாத்தே ரொம்ப நாள் ஆச்சு?”, என்று கேட்ட படி அவர்களின் அருகில் வந்தான் ஸ்ரீராமின் நண்பன் வசந்த்.
“நல்லா இருக்கேன் மாப்பிள்ளை. நீ எப்படி இருக்க?”, என்று கேட்ட ஸ்ரீராம் அவனை அனைத்துக் கொண்டான்.
“நல்ல இருக்கேன் டா”, என்று சொன்ன வசந்த் ஜானகி புறம் திரும்பி “எப்படி இருக்க மா?”, என்று கேட்டான்.
“நல்லா இருக்கேன் அண்ணா, நீங்களும் உக்காருங்க”, என்று சொல்லி புன்னகைத்தாள் ஜானகி. வசந்தும் எந்த பந்தாவும் இல்லாமல் ஸ்ரீராம் அருகில் அமர்ந்தான்.
“அப்புறம் மச்சான் லைப் எப்படி போகுது? நம்ம பிரண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்காங்க?”, என்று கேட்டான் ஸ்ரீராம்.
“போடா, உன் மேல செம காண்டுல இருக்கோம் எல்லாரும்”, என்று வசந்த் கோபமாக சொல்ல ஜானகி சுவாரசியமாக அவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்தாள்.
“ஏண்டா? நான் என்ன பண்னினேன்?”, என்று கேட்டான் ஸ்ரீராம்.
“நாங்க என்ன டா செஞ்சோம்? எங்களுக்கு ஒரு கால் கிடையாது. மெஸ்ஸேஜ் கிடையாது. நாங்க கால் பண்ணினாலும் எடுக்குறது இல்லை. ரம்யா கல்யாணத்துக்கு கூட வராம இருந்துட்டியே டா. எதுக்கு நீ அவ கல்யாணத்துக்கு வரலை? எங்களை விட நீ தானே டா அவளுக்கு குளோஸ். ஏன் அவளை அப்படியே ஒதுக்கிட்ட. அவ ரொம்ப வருத்தப் பட்டா. கூடவே என்ன தப்புன்னு சொல்லாம அவ பக்கம் தான் தப்பு இருக்குனு சொல்லி ஒத்துக்கிட்டா. அவ கிட்ட நாங்க பேசுறதுனால எங்களையும் ஒதுக்கிட்டல்ல நீ?”, என்று அவன் சொன்னதும் ஸ்ரீராம் மனைவியைப் பார்த்தான். அவளுக்கு இது புதிய செய்தி என்பதால் அவனை திகைப்பாக பார்த்தாள். கூடவே மனதுக்கு சந்தோஷமாக இருந்தது.
ரம்யாவைப் பற்றிய எண்ணம் எல்லாம் அவள் மனதில் இப்போது எழுவதே இல்லை. இருந்தாலும் இந்த நிமிடம் அவளுக்கு திருமணம் ஆனது அவளுக்கு சந்தோசத்தைத் தான் கொடுத்தது. கூடவே ஸ்ரீராம் இதை ஏன் தன்னிடம் சொல்ல வில்லை என்று குழப்பமாகவும் இருந்தது.
“அதைப் பத்தி பேச வேண்டாம் டா. சரி உன் பையன் எப்படி இருக்கான்?”, என்று பேச்சை மாற்றினான் ஸ்ரீராம்.
வசந்தும் அதற்கு மேல் அவனின் மனநிலையைக் கெடுக்காமல் நல்ல படியாக பேசிக் கொண்டிருந்து விட்டு இருவரிடமும் விடை பெற்றுச் சென்றான்.
வசந்த் அங்கிருந்து சென்றதும் “நீ ஏன் ராம் இதை என் கிட்ட சொல்லலை? நீயும் ஏன் அவ கல்யாணத்துக்கு போகலை? நீ போனேன்னா நான் கோப படுவேன்னு நினைச்சு போகலையா?”, என்று கேட்டாள் ஜானகி.
“அப்படி எல்லாம் இல்லை ஜானு. நீ எதுவும் சொல்ல மாட்ட தான். நிஜமாவே எனக்கு போகத் தோணலை. நம்மளைப் பிரிக்கப் பாத்த அவ முகத்தை பாக்க கூட பிடிக்கலை. இன்னொன்னு நமக்கு அந்த அளவுக்கு அவ உறவு தேவை இல்லை ஜானு. அவ கூட எல்லா நான் எந்த உறவையும் வச்சிக்க விரும்பலை. அதனால தான் போகலை. உன் கிட்ட சொல்லாம இருந்ததுக்கு காரணம் இந்த பேச்சு நமக்கு இடையே தேவையில்லைன்னு தான். நமக்குள்ள எந்த மன சங்கடமும் வரக் கூடாதுன்னு நினைச்சு தான் சொல்லலை. அன்னைக்கு வீட்டுக்கு வந்து ரம்யா பத்திரிக்கை கொடுத்துருப்பா போல? அம்மா தான் என் கிட்ட சொன்னாங்க. அப்பவே அதை கிழிச்சு குப்பைத் தொட்டில போட்டுட்டேன்”, என்று சொன்னதும் அவள் நிம்மதியாகவும் காதலாகவும் அவனைப் பார்த்தாள். இதற்கு மேல் அவளுக்கு வேறு என்ன வேண்டுமாம்?
“சரி வா போகலாமா?”, என்று அவன் கேட்டதும் சரி என்று சொல்லி அவனுடன் கிளம்பினாள். வண்டியில் சந்தோஷமாக அவன் பின்னே அமர்ந்திருந்தவளுக்கு இன்றே அவனுடன் வாழ்க்கையைத் துவங்க வேண்டும் என்ற வேகம் வந்தது. எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு அவனை நெருங்கி அமர்ந்தாள்.
அதை உணர்ந்த ஸ்ரீராம் திகைத்து போனான். “என்ன ஆச்சு இவளுக்கு?”, என்ற எண்ணம் வந்து அவன் மனதைக் குழப்பியது. இருவரும் அவரவர் யோசனையில் இருந்ததால் அந்த பயணம் அமைதியாகவே கழிந்தது.
அன்று இரவு உணவு முடிந்ததும் முதல் ஆளாக அறைக்குள் சென்று அவனுக்காக காத்திருந்தாள் ஜானகி. அவனோ அன்று பார்த்து சீக்கிரம் வராமல் அவளுடைய பொறுமையை சோதித்தான்.
சிறிது நேரம் பார்த்தவள் அவன் வராததால் மெதுவாக அறையை விட்டு வெளியே வந்து அவன் எங்கே என்று பார்த்தாள்.
கிரி, ரகு, ஸ்ரீராம் மூவரும் ஆபிஸ் விஷயமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அவனை அப்படியே இழுத்து வந்து “உன்னை முழுசா நம்புறேன் ராம். நீ எனக்கு வேணும் டா”, என்று சொல்ல அவளுடைய செல்கள் அனைத்தும் பரபரத்தது. ஆனால் அப்படிச் செய்யும் அளவுக்கு அவளிடம் தைரியம் இல்லை. அதனால் பெருமூச்சு விட்டவள் மீண்டும் அறைக்குள் வந்து அவனுக்காக காத்திருந்தாள்.
“நீ இன்னும் தூங்கலையா ஜானு? நல்லா தூங்கிருப்பேன்னு நினைச்சு வந்தேன்”, என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்த ஸ்ரீராம் எப்போதும் போல் அவள் அருகில் படுத்து “குட் நைட் ஜானு”, என்றான்.
“ஐயையோ இவன் என்ன வந்ததும் படுத்துட்டான்? இவன் கிட்ட எப்படி பேச?”, என்று திகைத்தாள்.
பின் அவன் அருகே படுத்தவள் “ராம்”, என்று அழைத்தாள்.
“சொல்லு ஜானு”
“சாரி, நான் உன்னைத் தப்பா நினைச்சு உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்”
“முடிஞ்சு போன பழைய விசயத்துக்கு எத்தனை தடவை ஜானு சாரி சொல்வ? தப்பு என் மேலயும் தான் இருக்கு. எதையும் யோசிக்காம தூங்கு”
“எதையாவது புரிஞ்சிக்கிறானான்னு பாரு. டியூப்லைட் டியூப்லைட்”, என்று அவள் முணுமுணுக்க “என்ன ஜானு? ஏதாவது சொன்னியா?”, என்று கேட்டான்.
“ஈ ஒண்ணும் இல்லை”, என்று சொல்லி சிரித்து வைத்தாள். அவளுக்கு தன்னுடைய மனதை எப்படி அவனிடம் தெரிய வைக்க என்று குழப்பமாக இருந்தது.
“நீ தானே டைம் கேட்ட? அப்படின்னா நீ தான் அவன் கிட்ட பேசணும்”, என்று மனசாட்சி சொன்னாலும் அதை அவனிடம் பேச தான் தைரியம் இல்லை.
சரி நாளைக்கு புரிய வைக்கலாம் என்று எண்ணி படுத்துக் கொண்டாள். அவனோ உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். அவள் பைக்கில் வரும் போது நெருங்கி அமர்ந்த போதே அவள் மனது கொஞ்சம் புரிந்தது. அதன் பின் வீட்டுக்கு வந்ததும் அவள் பார்வை முழுக்க அவன் மீதே தான் இருந்தது. வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கூட யோசியாமல் அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அதைக் கண்டு தெளிவாக புரிந்து கொண்டான்.
அதுவும் இப்போது டியூப்லைட் டியூப்லைட் என்று அவள் சொன்னது வேறு அவனுக்கு தெளிவாக கேட்டது. “இன்னும் ரெண்டு நாள் மட்டும் வெயிட் பண்ணு பேபி. அதுக்கு அப்புறம் இருந்து நம்ம வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணலாம்”, என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.
அவன் மனது புரியாதவளோ அடுத்த நாள் அவனிடம் எப்படி தன்னை புரிய வைக்க என்ற குழப்பத்தோடு கண் விழித்தாள்.
அடுத்து வந்த நாட்களில் அவள் என்ன தான் செய்கையில் உணர்த்தினாலும் அவன் அதை புரிந்து கொள்ளாத மாதிரி நடந்து கொண்டான். இருவருக்குள்ளும் அழகான கண்ணாம்பூச்சி ஆட்டம் நடந்து கொண்டிருந்தது.
அவள் அவனை ஒட்டிக் கொண்டு திரிந்தாலும் அவன் அவளை கண்டு கொள்ளும் வழியே இல்லை. எப்போதும் போல் முத்தமிட்டால் கூட அடுத்த கட்டத்துக்கு நகர்த்தலாம் என்று அவள் எண்ண அவனோ அவளை நெருங்கியே வரவில்லை.
அதற்கு அடுத்த நாள் ஸ்ரீராம் ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருந்தான். உணவு உண்டு விட்டு சோபாவில் அமர்ந்து சாக்ஸ் போட ஆரம்பித்தான். அப்போது அவனை இடித்த படி அவன் அருகே நெருங்கி அமர்ந்தாள் ஜானகி.
“ஏண்டி இப்படி? கொஞ்சம் தள்ளி உக்காரு. உன் மாமனார் பாத்தா என்னமோ நான் ரொமான்ஸ் பண்ணுறேன்னு நினைச்சு தலையில அடிச்சிட்டு போவார்”, என்றான்.
“போடா, ஆமா ராம் உன் கன்னத்துல என்னது?”, என்று கேட்ட படியே அவனை இன்னும் நெருங்கி வந்தாள் ஜானகி.
“கன்னத்துல என்னது?”, என்று கேட்டுக் கொண்டே தன்னுடைய கன்னத்தை தடவிப் பார்த்த ஸ்ரீராம் அவளுடைய நெருக்கம் அதிகமானதை கவனிக்க வில்லை.
அவனுடைய கன்னத்தில் இருந்து அவன் கையை எடுத்தவள் தன்னுடைய இதழை பதித்து விட்டு ஓடி விட்டாள்.
இனிய அதிர்ச்சியில் உறைந்து நின்ற ஸ்ரீராமின் உதடுகள் புன்னகையால் மலர்ந்தது.
“பட்டுக் குட்டி இன்னைக்கு மதியம் வரைக்கும் தான் டி”, என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
“என்ன பேராண்டி, முகம் டால் அடிக்குது?”, என்று கேட்ட படி அங்கே வந்தாள் அம்பிகா.
லேசாக முகம் சிவந்த படி “ஹி ஹி அதெல்லாம் ஒண்ணும் இல்லையே அன்பு?”, என்று அசடு வழிந்த படி சொன்னான் ஸ்ரீராம்.