அவனது பார்வையில் அவள் உடல் முழுவதும் சிவந்தது. மதுவுண்ட வண்டு போல மயங்கிய விழிகளை இறுக மூடிக் கொண்டாள். அவள் நெருங்கி அமர்ந்தான் ஸ்ரீராம். அவன் அருகாமையை உணர்ந்தவளுக்கு கண்களைத் திறக்க தயக்கமாக இருந்தது. அவன் உதடுகள் அவள் நெற்றியில் முத்தத்தை பதிக்க அவள் கை உயர்ந்து அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டது.
அவன் உதடுகள் அவள் முகம் எல்லாம் ஊர்வலம் போய் கடைசியில் அவள் இதழ்களில் இளைப்பாறியது. சிறிது நேரம் கழித்து அவனிடம் இருந்து விலகியவள் “ஏய் நாம இப்ப இங்க எதுக்கு வந்திருக்கோம்?”, என்று கேட்டாள்.
“ஆமா ஜானு, ரெண்டு பேர் மனசுலயும் அதிகமான அன்பு இருக்கும் போது ஏன் விலகி இருக்கணும்? உன் பிறந்த நாள் அன்னைக்கு நம்ம வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணலாம்னு தான் இந்த பிளான் பண்னினேன்”
அவன் காதைத் திருகியவள் “வீட்ல எல்லார்க் கிட்டயும் சொல்லிட்டியா? எல்லாரும் என்ன நினைச்சிருப்பாங்க?”, என்று சிணுங்களுடன் கேட்டாள்.
“நீ வேற? அன்னைக்கு நீன்னு நினைச்சு….”
“நான்னு நினைச்சு என்னத்தை பண்ணித் தொலைச்ச?”
“அது வந்து ஜானு, அன்னைக்கு நீ தான் ரூமுக்குள்ள வரன்னு நினைச்சு கையை பிடிச்சு இழுத்து கிஸ் பண்ண நினைச்சேன். பாத்தா அது அப்பா. ஆபீஸ் விஷயம் கேக்க வந்திருக்காரு…”, என்று சொல்லி அசடு வழிந்தான்.
“அடப்பாவி, மாமாவையா?”, என்று கேட்டவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.
“ஒண்ணும் நடக்கலை டி. அவருன்னதும் கையை விட்டுட்டேன்”
“மாமா என்ன சொன்னாங்க?”
“என்ன சொல்வார்? கிறுக்கு முத்திட்டுன்னு சொல்லி தலையில அடிச்சிட்டுப் போனார். அப்புறம் குடும்பம் மொத்தமும் கூட்டு சேந்து ஹனிமூன் போகச் சொன்னாங்க. நான் தான் உன் பெர்த்டே இங்க கொண்டாடலாம்னு நினைச்சேன். கிரி அண்ணா தான் இந்த மாமா கிட்ட பேசி கேக் எல்லாம் அரெஞ்ச் பண்ணினான்”, என்று சொல்லி சிரித்ததும் “எல்லாம் சரி தான். ஆனா நீ மாமாக்கு கிஸ் கொடுக்க டிரைப் பண்ணது தான் கொஞ்சம் ஓவர்”, என்று சொல்லி சிரித்தாள்.
“சிரிக்கவா செய்ற? உன்னை”, என்று சொன்னவன் அவள் இதழ்களைச் சிறை செய்து அவளை பேச விடாமல் செய்தான். சிறிது நேரம் கழித்து விலகியவன் அவளை தன்னுடைய கைகளில் அள்ளிக் கொண்டு அறைக்குள் சென்றான். அவளும் வெட்கத்துடன் அவன் கழுத்தில் தன்னுடைய கரங்களை மாலையாக போட்டாள்.
உடல் சிலிர்க்க தன்னுடைய கைக்குள் பாந்தமாய் அடங்கி இருந்தவளை படுக்கையில் தவழ விட்ட ஸ்ரீராம் அவள் அருகில் படுத்து அவளை இறுக அணைத்துக் கொண்டான். அவளும் அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.
“ஜானு”
“ம்ம்”
“உனக்கு ஓகே வா?”, என்று அவன் அனுமதி கேட்க அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் தன்னுடைய உதடுகளை அவனுடைய கன்னத்தில் அழுந்த பதித்தாள்.
அவள் சம்மதம் உணர்ந்தவன் “இது என்ன எப்ப பாத்தாலும் கன்னத்திலே குடுக்குற? இங்க குடு”, என்று சொல்லி தன்னுடைய இதழைக் காண்பித்தான்.
மாட்டேன் என்னும் விதமாய் தலையசைத்தவளின் இதழ்களை அவன் கவ்விக் கொண்டான். அவன் உதடுகள் அவளை கொள்ளை கொள்ள ஆரம்பிக்க அவன் கரங்கள் அவள் உடலை வீணை போல மீட்ட ஆரம்பித்தது.
அவன் உணர்வுகள் பொங்கி எழ “நீ வேணும் ஜானு,. இதுக்கு மேல என்னால முடியாது”, என்று முணங்கியவன் ஆவேசமாக அவளை எடுத்துக் கொள்ள துவங்கினான். அவனுடைய செய்கையில் அவளுடைய சிணுங்கல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்க அது அவனை நாதமாய் மயக்கியது. கிட்டத்தட்ட பத்து நாட்கள் கழித்து தான் அவளை வீட்டுக்கு அழைத்து வந்தான்.
வீட்டுக்கு வந்த பிறகும் அவர்களின் காதலில் எந்த குறையும் வந்ததில்லை. மனதளவிலும் உடல் அளவிலும் இன்னும் நெருங்கத் தான் செய்தார்கள். தொடர்ந்து வந்த நாட்களில் அவர்கள் வீட்டில் சந்தோஷம் மட்டுமே நிலைத்திருந்தது.
மூன்று வருடங்களுக்கு பிறகு…..
“அம்மு குட்டி இன்னும் ஒரு வாய் சாப்பிடுங்க”, என்று சொல்லிக் கொண்டே யமுனா மற்றும் கிரியின் குழந்தை தர்ஷினிக்கு இட்லியை ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள் ஜானகி.
“எனக்கு வேண்டாம் சித்தி, போதும்”, என்று மறுத்துக் கொண்டிருந்தது குழந்தை.
“இன்னும் ஒரு வாய் தான் சாப்பிடு”, என்று குழந்தையை கெஞ்சி கொஞ்சி ஊட்டிக் கொண்டிருந்த ஜானகியின் முகத்தில் குழந்தை தனம் எல்லாம் குறைந்திருந்தது. அவள் முகத்தில் சாந்தமும் கம்பீரமும் நிறைந்திருந்தது.
டிவி பார்த்துக் கொண்டிருப்பது போல ஓரக் கண்ணால் தன்னுடைய மனைவியை ரசித்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.
உணவு ஊட்டி முடித்ததும் குழந்தையை ஜெயந்தியிடம் விட்டுவிட்டு ஜானகி அவர்களின் அறைக்குள் செல்ல அதற்காக காத்திருந்தது போல ஸ்ரீராமும் அங்கே சென்றான்.
திடீரென்று கண் முன் வந்து நின்றவனைப் பார்த்து சிரித்தவள் “திருட்டுப் பூனைக்கு இங்க என்ன வேலை?”, என்று கேட்டாள்.
“வேற எதுக்கு பூனை வரும்? உன்னைக் கொஞ்ச தான்”, என்று சொன்னவனின் விரல்கள் அவள் கன்னம் வருடி அவளது கூந்தலை ஒதுக்கி விளையாடிக் கொண்டிருந்தது.
அவன் கைகளுக்குள் குழைந்தவள் “என்னைக் கொஞ்ச வந்தீங்களா? இல்லை உங்க குழந்தையை கொஞ்ச வந்தீங்களா?’, என்று கேட்டாள்.
“முதல்ல உன்னைக் கொஞ்சிட்டு அப்புறம் என்னோட குழந்தையை கொஞ்சனும்”, என்று சொன்னவனின் கைகள் அவளது நிறை மாத வயிற்றை வருடிக் கொடுக்க ஆரம்பித்தது.
அவன் கையைத் தட்டி விட்டவள் “போ டா. நீ தான் என்னோட முதல் குழந்தைன்னு சொல்லுவன்னு எதிர் பாத்தேன்”, என்று சிணுங்கினாள்.
“நீ என்னோடா சரி பாதி டி, நீயில்லைன்னா நான் இல்லை. அப்படி இருக்க உன்னை எப்படி குழந்தையா பாக்க முடியும்? உனக்கு உடம்பு சரியில்லாதப்ப மட்டும் தான் உன்னை என்னோட குழந்தை மாதிரி பாத்துக்குவேன்”, என்றான்.
அது உண்மை என்பதால் சந்தோஷமாக அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் ஜானகி. அவள் கற்பமானது முதல் இப்போது வரை அவளை தாங்கிக் கொண்டிருந்தான் ஸ்ரீராம். அவனது அன்பு, கவனிப்பு அனைத்தும் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது.
மசக்கையால் வாந்தி, தலை சுற்றல், சின்ன சின்ன கோபங்கள் அவளுக்கு இருக்கும் போது அவளை பொறுப்பாக கவனித்துக் கொண்டது அவன் தான்.
வளைகாப்பு முடிந்து ஒரு நாள் அவளுடைய வீட்டில் அவள் இருந்ததோடு சரி. அடுத்த நாளே அவளை இங்கே அழைத்து வந்து விட்டான்.
தங்களின் மகள்களை கிரியும் ஸ்ரீராமும் தாங்குவதைக் கண்ட சரவணனும் அரசியும் தான் அடிக்கடி வந்து பார்த்து விட்டுச் சென்றார்கள்.
கட்டிலில் அமர்ந்து தன்னுடைய தோளில் அவளை சாய வைத்து அவளிடம் கதை பேசிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அவன் தோளில் சாய்ந்த படியே தூங்கி விட்டாள் ஜானகி. அவளைக் கைக்குள் வைத்திருந்தவனின் மனதில் எல்லையில்லா நிம்மதி குடி கொண்டது. அவள் மீதான நேசம் இப்போது வரை இன்னும் கூடிக் கொண்டே செல்வது போல தான் அவனுக்கு தோன்றியது.
மனைவியை எண்ணி அவனுக்கு பூரிப்பாகவும் இருந்தது. அந்த வீட்டின் உயிர்ப்பே ஜானகி தான். அவளும் சந்தோசமாக இருந்து அனைவரையும் சந்தோஷமாக வைத்திருந்தாள். இன்னும் சில நாட்களில் அவர்களின் குழந்தையும் வந்து விடும்.
அவளை அடைந்தது, தான் வாழ்வில் செய்த பாக்கியம் என்று எண்ணிக் கொண்டே அவள் தலையின் மேல் தன்னுடைய தலையை சாய்த்துக் கொண்டான்.
சில நாட்கள் கழித்து அந்த குடும்பமே மருத்துவமனையில் குழுமி இருந்தது. ஜானகியை பிரசவத்துக்கு உள்ளே அழைத்துச் சென்றதில் இருந்து பரிதவிப்போடு நின்றிருந்தான் ஸ்ரீராம்.
அவன் மன நிலை உணர்ந்த ரகு அவன் தோளை ஆதரவாக தட்டிக் கொடுத்தார்.
சிறிது நேரத்தில் ஜானகிக்கு சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்த்ததும் ஜானகி மயக்கத்துக்கு சென்றாள். நர்ஸ் வெளியே குழந்தையை எடுத்து வந்து காட்ட அனைவருக்கும் சந்தோஷமாக இருந்தது.
முதலில் மனைவியைப் பற்றி விசாரித்து விட்டு ஆசையாக தன்னுடைய மகனை கையில் வாங்கி முத்தமிட்டான் ஸ்ரீராம்.
பின் ஜானகியை அறைக்கு மாற்றியதும் அவளைக் காணச் சென்றான் ஸ்ரீராம். ஆனந்த கண்ணீரோடு அவளது நெற்றியில் அவன் இதழ் பதிக்க அவள் மயக்கம் தெளிந்து கண் விழித்தாள்.
அவனைக் கண்டு மென்மையாக புன்னகைத்தவள் “சந்தோஷமா ராம்?”, என்று கேட்டாள்.
“ரொம்ப”, என்று சொன்னவனின் குரலில் சந்தோஷத்தை தவிர வேறு எதுவும் இல்லை. மகனைக் கையில் வைத்துக் கொண்டு அவள் அருகே அமர்ந்தவன் குழந்தையைப் பற்றி பேச ஆரம்பித்தான்.
ரோஜா பூ போல இருந்த மகனை காண காண ஸ்ரீராம்க்கு தெவிட்ட வில்லை.
“நம்ம மகன் உன்னை மாதிரியே இருக்கான்ல ராம்?”, என்று கேட்டாள் ஜானகி.
“ஆமா ஜானு, ஆனா…”
“ஆனா என்ன டா?”
“நான் உன்னை மாதிரி பெண் குழந்தையை எதிர் பார்த்தேன் ஜானு”
“ரெடி பண்ணலாமா?”
“என்ன?”
“நீ தானே பெண் குழந்தை கேட்ட? அதான் ரெடி பண்ணலாமான்னு கேட்டேன்?”, என்று அவள் கண் சிமிட்டிய படியே கேட்க அவள் காதை திருகியவன் “இன்னும் உடம்பே சரியாகலை. அதுக்குள்ள பேச்சைப் பாரு?”, என்று சிரித்தான்.
அவர்களின் மலர்ந்த முகத்தைக் கண்டவாறே உள்ளே வந்த பெரியவர்களின் முகமும் மலர்ந்தே இருந்தது. “ஐ குட்டி தம்பி… குட்டி தம்பி”, என்று தர்ஷினி குதிக்க அங்கே சந்தோஷம் கரை புரண்டு ஓடியது. அவர்கள் வாழ்க்கையில் எந்த நிமிடத்திலோ உருவான நேசம் எப்போதும் அவர்களுடனே இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.