அதிகாலைச் செவ்வானம் தன்னுடைய சிவந்த நிறத்தில் இருந்து மாறி வெயிலாக உருமாறிக் கொண்டிருந்தான். நேரம் ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமாக அவனது உக்கிரம் அதிகமாக ஆரம்பித்திருந்தது.
ஆதவனைக் கண்டதும் பனித் துளிகள் அனைத்தும் அதன் உக்கிரம் தாங்க முடியாமல் மாயமாய் மறைந்து கொண்டிருந்தன.
அந்த அழகான காலைப் பொழுதில் மதுரையில் உள்ள கல்லூரி ஹாஸ்டலில் தன்னுடைய தோழிகளுடன் வகுப்பறைக்கு தயாராகிக் கொண்டிருந்தாள் பாரதி. குளித்து முடித்து வந்தவள் வெளியே கட்டியிருந்த கோடியில் தன்னுடைய துவைத்த உடைகளை காயப் போட்டாள்.
பின் அறைக்குள் வந்தவள் நைட்டியை மாற்றி விட்டு தன்னுடைய பெட்டியில் இருந்து ஒரு சுடிதார் எடுத்து அணிந்தாள். பின் தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து தலையை துவட்டினாள். பின் தலையை விரித்து போட்டு விட்டு அன்றைக்கு எந்த பீரியட் எல்லாம் இருக்கிறது என்று பார்த்து அதற்கு தேவையான நோட்டை எல்லாம் எடுத்து கட்டிலில் வைத்தாள்.
அதற்குள் தலை சிறிது காய்ந்து விட அந்த கத்தையான தலை முடியை சீப்பால் சீவி பின்னல் போட்டு அதை ஒரு ரப்பர் பேண்டுக்குள் அடக்கினாள். பின் பொட்டு வைத்து பவுடரைப் முகத்தில் பூசினாள்.
“என்ன பாரதி அதுக்குள்ள பவுடர் போட்டுட்ட? சாப்பிட வரலையா?”, என்று கேட்டாள் அவளது அறைத் தோழி மீனா.
“மீனா, இன்னைக்கு நம்ம ஹாஸ்டல்ல இடியாப்பம் தான டி. எப்படியும் நான் சாப்பிடப் போறது இல்லை. அதனால நான் கிளாஸ்க்கு கிளம்புறேன். நீங்க சாப்பிட்டு மெதுவா வாங்க”
“பசிக்கும் டி”
“அதுக்குன்னு பிடிக்காத இடியாப்பத்தை எப்படி சாப்பிட? இன்னைக்கு மதியம் சிக்கன் குழம்பு. மதியம் காலைல சாப்பிடாததுக்கு சேத்து ஒரு பிடி பிடிச்சிருவேன். நீங்க எல்லாம் சாப்பிட்டுட்டு வாங்க”, என்று சொல்லி விட்டு காலை நான்கு பீரியடுக்கான நோட்டையும், பேனாக்கள் அடங்கிய பவுச்சையும் எடுத்துக் கொண்டு ஹாஸ்டலை விட்டு வெளியே வந்தாள்.
சிறு வயதில் இருந்த பாரதிக்கு இடியாப்பம் என்றால் பிடிக்கவே செய்யாது. அதனால் இடியாப்பம் போடும் நாளில் மட்டும் அவள் பட்டினி தான் கிடப்பாள். காலையில் சாப்பிடாததற்கு சேர்த்து மதியம் ஒரு கட்டு கட்டி விடுவாள்.
ஆனால் அவள் எவ்வளவு சாப்பிட்டாலும் அது அவள் உடலில் ஒட்டவே ஒட்டாது. அவள் எவ்வளவு சாப்பிட்டாலும் அவள் உடல் எடை சாதாரண அளவை விட கூடவும் செய்யாது குறையவும் செய்யாது. உயரத்துக்கு ஏற்ற உடல் எடையில் சிக்கென்று இருப்பாள். “எப்படி இவ்வளவு அளவா இருக்க? எங்களுக்கும் டிரிக்ஸ் சொல்லிக் கொடு டி”, என்று கேட்பார்கள் அவளது தோழிகள்.
ஹாஸ்டலில் இருந்து வெளியே வந்த பாரதி கல்லூரியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். இன்னும் கிளாஸ் ஆரம்பிக்க நேரம் இருப்பதால் மெதுவாகவே நடந்தாள். சுற்றி வித விதமான பூச்செடிகள் நடப் பட்டிருந்ததால் அதை ரசனையாக பார்த்துக் கொண்டே நடந்து வந்தாள்.
பாரதி மூன்றாம் ஆண்டின் கடைசி பருவத்தில் இருந்தாள். இந்த மாதம் கடைசியில் அவளது படிப்பு முடிந்து விடும். அடுத்து என்ன செய்ய என்பது தான் அவளது தற்போதைய குழப்பம்.
பாரதி அழகும் அன்பும் ஒருங்கே கொண்டவள். அவளுக்கு யாரையும் சுடு சொல் கூறி காயப் படுத்த தெரியாது. அவளை யாராவது சொன்னால் கூட புன்னகையுடன் அந்த இடத்தில் நின்று அகன்று விடுவாளே தவிர, யாரிடமும் அவள் சண்டை போட்டது கிடையாது.
பால் போன்ற வெண்மை நிறத்தில் இல்லாமல், மஞ்சள் வண்ண எழுமிச்சை நிறத்திலும் இல்லாமலும், சிவப்பு வண்ண ரோஜா வண்ணத்திலும் இல்லாமல் இவை எல்லாம் கலந்த ஒரு நிறத்தில் அழகாக இருந்தாள் பாரதி.
அவளது சிவந்த முகத்துக்கு அழகு சேர்ப்பது போல இருந்த அடர்த்தியான புருவம் அவளுக்கு தனி அழகைக் கொடுத்தது. இவளது விழிகளை வைத்து தான் மீன் விழியாள் என்று கவிஞர்கள் வர்ணிப்பார்கள் போல என்ற எண்ணத்தை, பார்ப்பவர்கள் மனதில் விதைக்கும் படி இருந்தது. நீண்ட இமைகளுடன் இருந்த அவளது நீழ் விழிகள் அவ்வளவு அழகாக இருந்தது.
கூர்மையான அதே நேரம் சின்னதாக இருந்த நாசிக்கு கூட ரசிகர் மன்றம் வைக்கலாம். (அவன் அவன் நடிகைகளின் கால்களுக்கே சிலை வைக்கும் போது இவள் மூக்குக்கு வைக்க கூடாதா என்ன?”
எந்த செயற்கை பூச்சு இல்லாமல் இயற்கையிலே சிவந்த அதரங்கள் எப்போதுமே தேன் சொட்டுமா என்ற எண்ணத்தை தான் கொடுக்கும். ஒள்ளியும் இல்லாமல் குண்டும் இல்லாமல் சரியான அளவில் இருந்த உடல் வாகு அவளுக்கு கடவுள் கொடுத்த வரம். இருக்கா இல்லையா என்று தெரியாத மெலிந்த சிற்றிடை கட்டிளங்காளைகளை பிரமிக்க வைக்கும். நெட்டையும் இல்லாமல் குட்டையும் இல்லாமல் பெண்களுக்கே உரிய அளவான உயரம் என அவ்வளவு அழகாக இருந்தாள் பாரதி.
அதுவும் அவள் முகத்தில் இருந்த மலர்ச்சி பார்ப்பவர் அனைவரையும் கூட சேர்ந்து சிரிக்க வைக்கும். மனதில் எவ்வளவு சோகம் இருந்தாலும் அதை முகத்தில் ஒரு நாளும் அவள் காட்டியதே இல்லை. அது சிறு வயதிலே அவளுக்குள் உருவான ஒரு திறமை. உள்ளதை உள்ள படி காட்டும் பளிங்கு முகம் என்று அவள் முகத்தைப் பார்த்து யாராலும் அவளைச் சொல்ல முடியாது. ஏனென்றால் எதையுமே அவள் முகத்தில் காட்ட மாட்டாள். அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்று அவளாகவே சொன்னால் தான் மற்றவருக்கு தெரியும்.
நேராக நடந்து சென்ற பாரதி தன்னுடைய கிளாசுக்கு வந்து தன்னுடைய இடத்தில் அமர்ந்து விட்டாள். அங்கே வந்திருந்த மற்ற தோழிகள் அனைவரும் “என்ன நீ மட்டும் சீக்கிரம் வந்துட்ட? மத்தவங்க எல்லாம் எங்க காணும்?”, என்று அவளிடம் கேள்வி கேட்க அவர்களுக்கு புன்னகையுடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவர்கள் அனைவரும் அவளிடம் விசாரித்து விட்டு அசைன்மெண்ட் எழுதும் வேலையைப் பார்க்க ஆரம்பிக்கவும் ஒருவருக்காக ஆவலாக வாசலைப் பார்த்து காத்திருக்க ஆரம்பித்தாள் பாரதி. அது வேறு யாரும் அல்ல. அவளது அருகில் அமர்ந்திருக்கும் அவளது ஆருயிர் தோழி சஹானா தான். முதலாம் ஆண்டில் இருந்து சஹானா மட்டும் தான் அவளது நெருங்கிய தோழி. அவள் வாழ்க்கையில் அவளுக்கு கிடைத்த உயிர்த் தோழியும் அவள் தான். இருவருக்குள்ளும் அந்த அளவு நட்பு புதைந்திருந்தது. அதற்காக இருவரும் நாங்க தான் குளோஸ் என்று அனைவரிடம் காட்ட ஒட்டிக் கொண்டு எல்லாம் திரிய மாட்டார்கள். ஆனால் ஒருவர் மேல் மற்றவருக்கு மிகுந்த அக்கறை உண்டு என்று மட்டும் அவர்களுக்கு தெரியும்.
“இந்த சஹி, ஏன் இன்னும் வரலை? இவ கிட்ட பேசிட்டு இருக்கலாம்னு தானே சீக்கிரம் வந்தேன்?”, என்று பாரதி எண்ணிக் கொண்டிருந்தாள் பாரதி.
சிறிது நேரத்தில் தோளில் தன்னுடைய பேகைப் போட்டுக் கொண்டு கிளாசுக்குள் வந்தாள் சஹானா. அவளைக் கண்டதும் பாரதியின் கண்கள் மின்னின. முகம் முழுவதும் மத்தாப்பாக மலர்ந்தது. அவளைக் கண்டதும் சஹானா முகம் கூட ஒளிர்ந்தது.
அருகில் வந்த சஹானா “ஹாய் அண்ணி”, என்று புன்னகையுடன் சொல்லிய படியே பாரதி அருகில் அமர்ந்தாள்.
“ஏய் கத்தாத டி, யாருக்காவது கேட்டுறப் போகுது”, என்று பதறிய படி சொன்ன பாரதி சஹானா கையில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள்.
அவள் கிள்ளிய இடத்தை தேய்த்துக் கொண்டே “ஆ வலிக்குதுடி பிசாசே, இப்படியா கிள்ளுவ? எதுக்கு டி கிள்ளின?”, என்று கேட்டாள் சஹானா.
“பின்ன நீ அண்ணின்னு சொன்னா கிள்ளாம கொஞ்சுவாங்களா”, என்று கோபமாக கேட்பது போல் கேட்ட பாரதி “கிள்ளுனது வலிக்குதா?”, என்று அக்கறையாக கேட்டாள்.
“அதெல்லாம் வலி இல்லை. எறும்பு கடிச்ச மாதிரி தான் இருக்கு. சரி நான் அண்ணின்னு சொன்னதுல என்ன தப்பு இருக்கு? என்னோட அண்ணாவை நீ கல்யாணம் பண்ணினா எனக்கு நீ அண்ணி தானே டி? அதனால தான் அண்ணின்னு சொன்னேன்”, என்று சொல்லி சிரித்தாள் சஹானா.
“ஐயோ அப்படி எல்லாம் இல்லை. சும்மா இஷ்டத்துக்கு பேசாத”
“நான் உண்மையை தான் சொன்னேன் அண்ணி”
“ஐயோ கொஞ்சம் சும்மா இரேன் சஹி”, என்று சொன்ன பாரதியின் முகத்தில் வெட்கத்தை தேடினாள் சஹானா. பாரதி முகத்தில் சிறு கூச்சம் மட்டுமே இருந்தது. அவள் முகத்தில் வெட்கத்தின் அறிகுறி எதுவுமே இல்லை.
“ஓகோ அப்ப நான் உன்னை அண்ணின்னு கூப்பிடக் கூடாதா? சரி சரி என் அண்ணனுக்கு நான் வேற பெண்ணை பாத்துக்குறேன். நீ கொடுத்து வச்சது அவ்வளவு தான் போ”, என்று சஹானா குறும்பாக சொன்னாலும் அந்த குறும்பைத் தாங்க முடியாமல் கண்கள் கலங்கினாள் பாரதி.