கடம்பன் குன்று
பகுதி – 3
தன் அண்ணனின் குரல் வந்த திக்கைக் நோக்கி நடந்த விகர்ணன், சில வினாடிகளிலேயே அவனை எதிர்கொண்டு அழைத்து வந்த கர்ணனை கண்டு கொண்டான்.
“எங்கேயடா சென்றாய்? காட்டில் தொலைந்து விட்டாயோ என நான் அஞ்சினேன்” என்று தம்பியை ஏசிய கர்ணன், அவன் பதில் சொல்லும் முன்னரே தன் தம்பியை துரிதப்படுத்தினான்.
“எங்கையாவது வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்துவிட்டாயாக்கும்? சரி, சரி, துரிதமாக நட.. தாயார் நம் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.”
“அண்ணா, நான் இன்று தெரிந்து கொண்ட விஷயங்களை நீ கேட்டாயானால் மிகவும் ஆச்சர்யம் கொள்வாய். இன்று என்னவாயிற்று தெரியுமா?” என்று பாலகன் விகர்ணன் சொல்லத் துவங்கும் முன்னர், அவனை இடைமறித்தான் கர்ணன்.
“இரு, இரு. உன் கட்டுக்கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்க இப்போது சமயமில்லை. முதலில் நாம் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. விரைந்து செயல்படு. அந்தி சாயும் நேரம் வேறு நெருங்கிவிட்டது.. ம்ம்.. சீக்கிரம் பிரித்து வைத்திருக்கும் சுள்ளிகளை கட்டுகளாகக் கட்டி வை. நான் சென்று வறட்டிகள் போதுமா, இன்னமும் தேவையா என்று விசாரித்து வருகிறேன்” என்று படென மொழிந்த கர்ணன், தன் தம்பி சொல்ல வந்த விஷயத்தைக் காது கொடுத்துக் கேட்டானில்லை.
அண்ணனின் அலட்சியப்போக்கு விகர்ணனை சற்றே பாதித்துவிட்டது எனலாம். “சே, புலியாரிடம் பேசியதை இவனிடம் பகிர்ந்து கொள்ள எவ்வளவு ஆவலாக இருந்தேன். ஒரு நிமிடம் கூட என்னஏதென்று கேட்கவில்லையே. இனி, இவனிடம் சொல்லிப் பயனில்லை” என்று முடிவெடுத்த பாலகன் விகர்ணன், அன்றைய மீதிப் பொழுதை அமைதியாகக் கழித்தான்.
மாலை வீடு திரும்பும் பொழுது, “ஏதோ விஷேஷமான சம்பவம் பற்றி கூற விளைந்தாயே விகர்ணா? அது என்னவென்று இப்போது கூறேன்” என்று தலையில் கனத்த விறகு சுள்ளிகள் கொண்ட மூட்டையை லாவகமாக பிடித்தபடிக்கே வினவினான் தமையன் கர்ணன்.
“அது, அது ஒன்றுமில்லை…” என்று சற்றே தயக்கம் காட்டிய விகர்ணன், புலியுடனான தன் சினேகத்தைப் பற்றி கர்ணனிடம் கூறவிழையவில்லை.
அன்றில் இருந்து விகர்ணனும் புலியாரும் நண்பர்களாகவே மாறிப் போயினர். தனக்குத் தோன்றும் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்து வைக்கும் மானசீக குருவாகவே புலியைக் கருதினான் விகர்ணன்.
புலியும் தனக்குத் தெரிந்த விஷயங்களைப் பற்றிய தகவல்களை தவறாமல் விகர்ணனிடம் பகிர்ந்து கொண்டது.
சிறுவர்கள் இருவரும் காலையில் சூரியன் உதயமாகும் முன்பே அவர்களது வீட்டிலிருந்து புறப்பட்டு இங்கே வந்து சேர்ந்து விடுவர். வந்தக் கணம் முதல் கர்ணன் துரிதமாக அவன் செய்யவேண்டிய காரியங்களைச் செய்யத் துவங்குவான்.
விகர்ணன் தமையனுக்கு உதவியாக ஒத்தாசை செய்வான். அண்ணன் வேலை கொடுக்காத சமயங்களில், இவன் புலியார் இருக்கும் இடத்தை நாடிச் செல்வான்.
இவனுக்காகவே காத்திருந்தது போல் புலியாரும், அங்கே நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளை விகர்ணனுடன் பகிர்ந்து கொள்ளும். மூலிகைகளின் குணங்கள் பற்றியும், அவற்றை தேடிச் செல்லவேண்டிய தக்க சமயம் பற்றியும், தன் எஜமானனுடன் மூலிகை பறிக்கச் செல்லும் சமயம் நடந்த விந்தையான நிகழ்வுகள் பற்றியெல்லாம் விகர்ணனுடன் பகிர்ந்து கொண்டது புலி.
“செங்கழுநீர் குளங்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு மலையில் ஒரு விசித்திரமான தாவரத்தைப் பறிக்க எஜமானர் அழைத்துச் சென்றார். அந்த் தாவரத்தை அஷ்டகர்மநிவாரணி என்றும், அஷ்டரோகமூலிகை என்று அழைப்பர். 8 விதமான வியாதிகளைக் குணப்படுத்தக் கூடிய ஒற்றைச் செடி அது.”
“அஹா.. கேட்கவே சுவாரஸ்யமாக உள்ளதே! மேலே சொல்” என்று ஆவலாக வினவினான் விகர்ணன்.
“இதுமட்டுமல்ல ஆச்சர்யம். அச்க்செடியினைப் பறிக்க அச்செடியின் அனுமதி முக்கியம். பெளர்ணமி நாளில், சந்திரன் இரண்டாம் சாமத்தை அடையும் வேளையில் இத்தாவரம் மண்ணிலிருந்து வெளிப்படும். அதனருகே மற்ற செடி கொடிகள் எதுவும் வளர்ந்திராத சம தரையில், ஓரடி உயரத்தில் வளரும் தாவரம், ஒரே இரவில் மூன்றடிகள் வரையிலும் கூட வளரும் தன்மை கொண்டதாம்”
“மிகவும் விஷேஷமான தாவரம் போலும்”
“அச்செடியின் இலைகளைப் பறிக்க வேண்டுமானால், அச்செடியின் முன்பு விழுந்து வணங்கி அதன் அனுமதியைக் கோர வேண்டும். செடி அனுமத்தித்தால், தானும் தரைதொட்டு வணங்கி தன்னைப் பறித்துக் கொள்ள அனுமதியளிக்கும். அதன் பின்னரே செடியின் இலைகளைத் தொட இயலும்.” என்று கூறி நிறுத்தியது புலியார்.
“ஒருவேளை செடி அனுமதிக்காமல் நாம் அதைப் பறிக்க முயன்றால் என்னவாகும் புலியாரே?” என்று வினவினான் விகர்ணன்.
“செடியின் இலைகளில் ஒரு வித விஷம் தோய்ந்த முட்கள் இருக்கும். செடி அனுமதியளுக்கும் பட்சத்தில், அம்முட்கள் தரையில் கொட்டிவிடும். முட்களற்ற செடியின் இலைகளை நாம் பறித்துக் கொள்ளலாம். செடி அனுமதிக்காமல் இலைகளில் நாம் கைவைக்க, நம்மை முட்கள் குத்துவது நிட்சயம்.”
“அவ்விஷ செடிகளுக்குத் தான் எத்தனை மகத்துவம் பாரேன்.”
“ஆம், இந்த அஷ்டரோகமூலிகை நம் பாஷாண கட்டுகளை சமன்படுத்த மிகவும் தேவைப்படுவன. இம்மூலிகையினைத் தேடி மூன்று தடவைக்கும் மேல் சென்று தோல்வியுடன் திரும்பியிருக்கிறோம். பிறகு குருவின் அருளால் இம்மூலிகை நமக்கு அனுமதியளித்தது” என்று அழகாக தன் பயணத்தை விகர்ணனுடன் பகிர்ந்து கொள்ளும் புலியார்.
இப்படி புலியாரின் வாயிலாக, அங்கே அவர்கள் உபயோகப்படுத்தும் மூலிகைகளின் குணங்கள் பற்றியும், அவற்றை பறிக்கா ஏதுவான காலம் சூழல் பற்றியெல்லாம் நிறைய ஞானம் பெற்றான் விகர்ணன்.
நாட்கள் இப்படியே சென்றன.
சிறுவர்கள் இருவரும் மகிழ்வுடன் தமது பணிகளை மேற்கொண்டனர். ஒரு தினம், பணிகள் முடிந்து, தன் அண்ணனுடன் இல்லம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தான் விகர்ணன்.
அண்ணனுடன் பேசிக் கொண்டே வந்த விகர்ணன், அடுத்து அவனது அண்ணன் கூறிய செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தான்.
“நான் கூறப்போகும் விஷயத்தைக் கேள் விகர்ணா. நாளையில் இருந்து நமக்கு இந்தக் காட்டில், இந்த சித்தர்களுக்கு உதவி செய்ய வேலை எதுவும் இருக்காது என்று தோன்றுகிறது”
“ஏன் அப்படிச் சொல்கிறாய் அண்ணா! ஒரு சிலை தானே செய்திருக்கின்றனர். இன்னமும் இவர்கள் மற்ற சிலைகளை வடிக்கவில்லையே”
“ஒரு சிலை வடித்தாயிற்று விகர்ணா! சிலையினைப் பதப்படுத்த மணல்வறட்டி கொண்டு புடம்போட்டு, இன்றைக்கு மண்ணுக்குள் புதைத்துவிடுவார்கள்.”
“பிறகு மண்ணை விட்டு எப்போது வெளியே எடுப்பார்கள்?”
“அதற்கு சில மாத காலம் ஆகும் என்று பேசிக் கொண்டார்கள் விகர்ணா” என்ற கர்ணன் வேகநடை போட்டுக் கொண்டே பதிலளித்தான்.
“அதுமட்டுமல்ல தம்பி, இந்த சித்தர்களின் தலைமைச் சித்தரும் அவர் சீடரும் மேரு மலைகளுக்கு அப்பால் இருக்கும் சீன தேசம் நோக்கி நாளை பயணிக்கின்றனராம்” என்ற கர்ணனின் சொற்கள் கேட்ட விகர்ணன், அவை புலியார் சொன்ன விஷயங்களுடன் மனதில் ஒப்பு நோக்கிக் கொண்டே நடந்தான்.
“இன்னமும் கேள். தலைமைச் சித்தர்கள் இருவரும் நாளை செல்கின்றபடியால், துரிதமாக இன்றைய வேலைகளை முடித்துக் கொண்டு மற்ற சித்தர்கள் இன்றிரவே இங்கிருந்து சென்றுவிடுவார்களாம்.”
“பிறகு எப்போது திரும்புவார்கள்?”
“யாருக்குத் தெரியும்? மேரு மலையில் போகர் தவமிருப்பதற்காகச் செல்வதாகக் கேள்வி. எத்தனை ஆண்டுகள் தவமிருப்பார் என்பதற்கான விடை யாருக்கும் தெரியவில்லை. ஏன், போகருக்கே கூட தெரிந்திருக்காது.”
“அண்ணா, இவர்கள் நாளை இங்கிருக்க மாட்டார்கள் என்று சொல்கிறாயே. இங்கே குகையில் அவர்கள் கேகரித்து வைத்து மூலிகைகள் பலவும் இருக்கின்றதே. அவற்றை யார் பாதுகாப்பார்கள்? காற்றில், மழையில் அவை சேதமடைய நிறைய வாய்ப்புகள் உள்ளதல்லவா?”
“ஆம் விகர்ணா. இப்பகுதியில் மனிதர்களின் நடமாட்டத்தைத் திசை திருப்ப, “மதிமயக்கி” மரங்களை இக்குன்றைச் சுற்றிலும் நட்டிருக்கின்றனர். மனிதர்கள் எவரேணும் இக்குன்றை நோக்கி வர நினைத்தால், அவர்கள் நினைவுகள் அழிந்து போய், வேறு திசை நோக்கி சென்றுவிடுவார்களாம்”
“அப்படியானால் நம்மாலும் கூட இங்கே திரும்ப நாளிய வர இயலாதா?”
“வர இயலாது என்று தான் எண்ணுகிறேன். உனக்கென்ன இவ்வளவு ஆதங்கம். எப்படியும் உனக்கு இங்கே இவர்களுக்கு வேலை செய்ய பிடித்தமில்லை தானே. அன்னை இட்ட கட்டளைக்காக வேண்டித்தானே நீ தினமும் என்னோடு வருகிறாய்” என்று சிறு சிரிப்புடன் வினவினான் கர்ணன்.
இதைக் கேட்ட விகர்ணனுன்னு மனம் பாரமாகிப் போனது. இருந்திருந்து சில நாட்களாகத் தான் இங்கு நடக்கும் வேலைகள் என்னவென்பதையும், அதற்கு தாங்கள் ஆற்றும் சிறு தொண்டினைப் பற்றியும் தெரிந்து கொண்டிருந்த விகர்ணனுக்கு, இவையெல்லாம் நாளை முதல் தன்னால் காண்பதற்கு இல்லை என்ற செய்தி நிறைய வருத்தத்தை உண்டு பண்ணியது.
அதிலும் அவனை வியப்புக்குள்ளாக்கிய அந்த பேசும் புலியாரையும் இனி சந்திக்க இயலாமல் போகும் என்ற விஷயம் மிகுந்த வேதனை கொடுத்தது. கவலை மனதை அழுத்த, மிகுந்த சோகத்துடன் மெல்ல எட்டு வைத்து நடந்த விகர்ணன், முன்னர் சென்று கொண்டிருந்த அண்ணன் சென்ற திக்கை விட்டு வேறு திசையில் கால் மாறி நடக்கலானான்.
தம்பி பின்னால் வருகிறான் என்ற எண்ணத்தில் பேசிக் கொண்டே சென்ற கர்ணன், தன்னைப் பின் தொடர்ந்து கொண்டிருந்த காலடி ஓசைகள் அரவே நின்றுவிட, “விகர்ணா! தம்பி”என்று தலையின் சுள்ளி மூட்டையை தரையில் போட்டுவிட்டு தம்பியைத் தேடலானான்.
சிறு தூரத்தில் சிறு பாறையின் மீது சோகமே வடிவாக அமர்ந்திருந்த விகர்ணனைக் கண்ட கர்ணன், ஒரே ஓட்டமாக ஓடி வந்து தம்பி இருக்கும் இடம் அடைந்தான்.
“என்னடா நீ? திடீர் திடீர்ரென்று காணாமல் சென்றுவிடுகிறாய்? என்னவாயிற்று உனக்கு? எப்போதும் வீட்டிற்குச் செல்லும் சமயம் துள்ளிக் கொண்டல்லவா நடப்பாய்? இன்று உனக்கு என்னவானது?” என்று தன் தம்பியின் அருகில் அமர்ந்து வினவினான் கர்ணன்.
சிறிது நேரம் அமைதியாக வீற்றிருந்த விகர்ணன், “அண்ணா, இந்த சித்தர்கள் நாளை முதல் இங்கே வேலை செய்யாவிடில் பின்பு நாம் வேலை தேடி எங்கே செல்வோம்? நம்மை குருகுலத்தில் சேர்த்து பாடம் பயிற்றுவிக்க நம் அன்னையிடம் போதுமான வருமானம் எதுவும் இல்லையே”
“அட, இதற்காகவா நீ சஞ்சலம் கொள்கிறாய். பார் விகர்ணா, நாம் இந்த சித்தர்களுக்கு உதவியாக இங்கே வந்து சேர்ந்து மூன்றாண்டுகள் இருக்கும். அதற்கு முன்னர், நானும் அன்னையும் கைக்குழந்தையான உன்னைச் சுமந்து கொண்டு மன்னர் பெருமாள் ஆவினனின் குதிரைக் கொட்டகைக்கு வேலைக்குச் செல்வோம். அரபு தேசத்திலிருந்து தருவித்த புரவிகளை சுத்தம் செய்யவும், கொட்டகையை பராமறிக்கும் வேலையும் எப்போதுமே இருக்கும். அதனால் நீ கவலை கொள்ள எதுவும் இல்லை விகர்ணா”
“இல்லை அண்ணா! எனக்கு இந்தச் சித்தர்களுக்கு உதவும் பணியில் இப்போது தான் நாட்டம் உண்டாயிற்று. இங்கே நடக்கும் வேலைகளை அருகில் இருந்து பார்ப்பதும், இவர்களுக்கு உதவுவதும் பெரும் பேறாக நான் நினைக்கத் துவங்கினேன்.”
“அதில் எந்த தவறும் இல்லை விகர்ணா. செய்யும் செயல் எத்துனை சிறியாத இருப்பினும் அதை முழுமனதுடன் செய்திடல் வேண்டும். அதுவே தருமம் என்று அன்னை கூறுவார்.”
“அண்ணா, எனக்கொரு யோசனை, இந்த சித்தர்கள் இங்கிருந்து சென்றுவிட்டால் இங்கிருக்கும் மூலிகைகளை பாதுகாக்க ஒருவர் வேண்டும் அல்லவா? அந்தப் பொறுப்பை நாமே முன்வந்து ஏற்றுக் கொண்டால் என்ன? எனக்கு என்னவோ இது நமக்கான வேலை என்றே தோன்றுகிறது. இங்கிருந்து செல்ல எனக்கு மனம் வரவில்லையே அண்ணா”
“அப்படியெல்லாம் நாமாக சென்று கேட்பது முறையாகாது. ஒருவேளை உன் போலவே இச்சித்தர்களும் அவ்வாறு எண்ணினால் மட்டுமே அது சாத்தியமாகும். இதைப் பற்றி வீண் விவாதம் கொள்ள இது தருணம் அல்ல விகர்ணா. அன்னை நமக்காக காத்துக் கொண்டிருப்பார். எழுந்திரு. நாம் செல்ல வேண்டும்” என்று தீர்மானமாக மொழிந்த கர்ணன், தம்பியை அந்தப் பாறையில் இருந்து எழவைத்து அங்கிருந்து விரைந்து அழைத்துச் சென்றான்.
வழி முழுக்க விகர்ணன் எதுவுமே பேசவில்லை. அவன் மனம் வேதனையில் சிக்கியிருந்தது. அவன் ஆழ்மனதில் இந்த மூலிகைகளைக் காப்பது அவனுக்கு இடப்பட்ட வேலை என்று திடமாகத் தோன்றியது. எதனால் இந்த மன உறுதி தோன்றுகிறது என்று அறிய இயலவில்லை.
சிறுவர்கள் இருவரும் காட்டின் ஓரத்தில் அமையப்பெற்றிருந்த அவர்களது கிராமத்தை சென்றடைந்த போது இருள் கவிழ்ந்திருந்தது. இருவரின் வரவையும் எதிர்நோக்கியபடிக்கு வீட்டின் வாயிலேயே அமர்ந்திருந்தாள் அவர்களது அன்னை பசுங்குழலி.
“அம்மா என்னவாயிற்று தெரியுமா இன்று? இந்த விகர்ணன் இருக்கின்றானே..” என்று கர்ணன் தன் தம்பி அன்று நடந்து கொண்ட விசித்திரமான முறையைப் பற்றி சொல்லத் துவங்க,
“இருவரும் வீடு வந்து சேர எவ்வளது தாமதம். உள்ளே வாருங்கள் இருவரும். உங்களுக்காக புலிப்பாணிச்சித்தர் வெகு நேரமாக காத்துக் கொண்டிருக்கிறார்” என்று பதைபதைப்புடன் பேசினார் பசுங்குழலி.
“புலிப்பாணியாரா? இங்கேயா? எங்களுக்காகவா?” என்று ஆச்சர்யக் கூவலுடன் குடிசையினுள் விரைந்தான் விகர்ணர். உள்ளே தீபம் ஏற்றி வைக்கப்பட்டிருந்த மாடத்தின் கீழே கண்மூடிய நிலையில் அமர்ந்திருந்தார் புலிப்பாணியார். அவர் அருகில் அவரது புலியும் மண்டியிட்டபடிக்கு அமர்ந்திருந்தது.
விகர்ணன் ஓடி வந்த அரவம் கேட்டு கண்விழித்த சித்தர், “வந்துவிட்டாயா என் மூலிகைக் காவலா! வா, உன் வரவிற்காகத் தான் நான் இங்கே காத்திருந்தேன்”
“மூலிகைக் காவலனா? நானா?” என்று புரியாமல் விழித்த விகர்ணனைக் கண்டு மந்தகாசப் புன்னகை ஒன்றைச் சிந்தினார் புலிப்பாணியார்.
“ஆம் பாலகா! இன்று முதல் இந்தக் காட்டின் மூலிகைக்களைக் கட்டிக் காக்கப் போகின்ற மூலிகைக் காவலன் நீ தான். அது தானே உனது ஆசையும். இது என் குருவின் உத்தரவு. என் குருவான போகரும், நானும், மற்ற சீடர்களுடன் மேரு மலைகளுக்கு அப்பால் இருக்கும் சீன தேசம் நோக்கிப் பயணிக்கப் போகிறோம் என்று நீ அறிவாயல்லவா? நாங்கள் திரும்ப வரும் வரையில் இங்கே சேகரித்து வைத்திருக்கும் மூலிகைகளைக் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வாயா?” என்று வினவினார்.
விகர்ணனுக்கு என்ன பதில் செல்வதென்று தெரியாமல் போக, புலிப்பாணியாரின் முன்னே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். அது வரையில் அவன் மனதை அழுத்திக் கொண்டிருந்த பெரும் பாரம் சட்டென நீங்கி விட்டதைப் போன்ற உணர்வு தோன்றியது.
“நாளை முதல் உன் பணியைத் துவங்கலாம் விகர்ணா. என் புலி உனக்குத் துணையாக இருக்கும். நாங்கள் திரும்ப வரும் வரையில் இந்த மலையில் சேகரித்திருக்கும் மூலிகைகளுக்கும், இந்த வனத்திற்கும் நீயே காவல்.” என்று மொழிந்த புலிப்பாணியார், விகர்ணனை ஆசிர்வதித்து, அக்குடிசையிலிருந்து வெளியேரினார்.
அவருடன் வாயில் வரை சென்ற புலி, புலிப்பாணியார் சென்ற திக்கை நோக்கி மண்டியிட்டு வணக்குவது போல் தரையில் தலையை வைத்து சில நொடிகள் அசையாது நின்றது. பின்னர், விகர்ணனின் அருகில் வந்து அவன் கால்களை பூனை போல் போல் உரசியது. வாஞ்சையுடன் புலியின் முதுகை தடவிய விகர்ணன், புலிப்பாணியார் சென்ற திக்கையே சிறிது நேரம் பார்த்திருந்தான்.
அன்று முதல் அம்மூலிகை வனத்தின் காவல் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.