Skip to content
Post Views: 3,407
அந்த காலை நேர பனியை அனுபவித்தபடி தோட்டத்தில் அமர்ந்திருந்த மார்த்தாண்டம் கிட்டத்தட்ட வயிறை பிடித்துக்கொண்டு சிரித்தார்.
செடிகளுக்கு நீர்வார்த்துக்கொண்டு நின்ற ஷியாமலனின் முகத்திலுமே சிரிப்பின் சாயல்கள் தான்…!
Advertisement
“நிஜமாவே அப்படி பாடுனாலா டா?” இதோடு ஆறாவது முறையாக அவனிடம் கேட்கிறார் மார்த்தாண்டம்.
இம்முறை அவனுக்கு துளிர் கோபம் கூட வர, “மாமா…?” என்று முறைத்தவனிடம்,
Advertisement
Advertisement
“என்னால நம்பவே முடியலடா… அத்தனை பேருக்கு முன்ன எப்படிடா இந்த மாதிரி பண்ண முடிஞ்சுது அந்த பொண்ணால?!” ஆச்சரியமாய் அவர் வினவ,
“பாடுனது மட்டுமா… கடைசில, ஒரு இழு இழுத்தா பாருங்க…
Advertisement
‘என் காதலா…ஆஆஆ’ன்னு… ஐயோ அப்படியே அரண்டு போய்ட்டேன்” என்றான்.
மார்த்தாண்டதுக்கு அந்த கற்பனையே கண்ணில் நீர் வர சிரிப்பை உண்டுபண்ண, அதீத சிரிப்பில் இருமல் கூட வந்துவிட்டது.
“போதும்… போதும்” கேலியாக சொன்ன ஷியாமலனிடம்,
“அந்த பொண்ணு பேர் என்ன?!” என்றார் அவர்.
ஷியாமலன் அப்படியே நின்றான் யோசனையில்.
“என்னடா?”
“அது… நான் கேட்கவே இல்லையே மாமா!” என்றான் பரிதாபமாய்.
“ஹும்… ஏதாவது போஸ்டிங்’ல இருந்தாளா?!”
“அப்டி தான் போல… பேட்ச் மாறி ஏதோ போட்டுருந்தா… ஆனா, நான் என்னன்னு பாக்கலையே?”
மார்த்தாண்டம் அவனை மேலும் கீழும் ஒருமாதிரி பார்த்து வைத்து, “ஏன்டா வயசு பையன் தானே நீ… இதெல்லாம் கூடவா தெரிஞ்சுக்க தோணாம போயிருக்கும்?!” என்றார்.
“மாமா… என்னை தப்பா கைட்’ பண்ணாதீங்க சொல்லிட்டேன்” போலியாய் மிரட்டினான் ஷியாம்.
“அடடா… இவன் அப்டியே குட்டி பாப்பா… ஒண்ணுமே தெரியாது… நாங்க கைட் பண்ணித்தான் வழி மாறிப்போறான்… போடாங்…” அவனுக்கு சரியாய் பேசியவர் அமர்ந்திருந்த சேரை விட்டு எழுந்து லேசாக விந்திக்கொண்டே நகர,
“நீங்க மட்டும் விழுந்து வாரி புதையல் எடுக்காம இருந்துருந்தா நான் அங்கே போயிருக்கவே மாட்டேன்… அப்டி ஒரு ஸீனே நடந்துருக்காது…!” என்றான் அவரிடம்.
“நீ போனதால தானே இப்படியொரு அமோகமாக ஸீன் நடந்துச்சு… என்னவோ அந்த பொண்ணு பேசுனது பாடுனது எல்லாம் பிடிக்காத மாறியே நடிக்குறியே!!!” என்றார் போறபோக்கில்.
கையில் இருந்த பைப்பை அப்படியே போட்டவன், அவர் போகும் திக்கில் திரும்பி,
“மாமா… நீங்க கற்பனை பண்ற அளவுக்கு ஒண்ணுமே நடக்கல… இப்போவே சொல்லிட்டேன்…” என்றான் உஷாராய்.
அவரோ வீட்டை நோக்கி நடந்துக்கொண்டே,
“சும்மா நடிக்காத டா… எப்படியும் அடுத்த வருஷம் உனக்கு பொண்ணு பாக்குறதாதான் இருந்தேன்… நீயே ஒன்னு பாத்து சொன்னாலும் சரி, வேலை மிச்சம் ன்னு கட்டி வச்சுடுவேன்” என்று சொல்ல…
“ஐயோ மாமா… எனக்கு சத்தியமா அந்த பொண்ணு யாருனே தெரியாது” என்றான் சத்தமாய்.
“நம்பிட்டேன் டா” குரல் மட்டுமே வந்தது.
“யோவ் மாமா… நம்புயா!!! நீ மட்டும் ஒண்டிகட்டையா பேச்சுலர் லைஃப் என்ஜாய் பண்றல்ல…? என்னையும் அப்டியே விடேன்…!!!”
வீட்டிற்குள் சென்றவர் பதில் சொல்லவில்லை.
அவருக்கு கேட்கும் என்று அவனுக்கு தெரியும்…!
“நீங்க கண்ட கற்பனையும் பண்ணாதீங்க… நான் அந்த பெண்ணை திரும்ப பாக்கக்கூட போறதில்லை… புரிஞ்சுதா… கேட்டுச்சா!!!?” என்று கத்த… வீட்டின் மேல் மாடியில் இருந்து,
“குளிச்சுட்டு ஷோரூம் கிளம்புடா!” என்று அதட்டல் வந்தது.
‘குளிக்க போயிட்டாரு!’ என்று நினைத்துக்கொண்டான்.
நேரம் எட்டை தாண்டவே அவனும் குளித்து கிளம்ப எண்ணி வீட்டிற்குள் திரும்ப, வாசலில் ஏதோ பேச்சு சத்தம் கேட்டது.
“ராமண்ணா.. யாரு?!” குரல் கொடுத்தான்.
“தம்பி, ஒரு பாப்பா… உங்க பேரை கேட்டு வந்துருக்கு” காவலாளி சொல்லும்போதே,
கதவில் முகம் மட்டுமே தெரியும்படி இருக்கும் ஓரடி குட்டி ஜன்னலில் கரத்தை தாராளமாய் நீட்டி,
“ஹலோ சா..ஆஆர்” என்று கத்தினாள் ஜனனி.
தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு.
இப்படியொரு நிகழ்வை அவன் எதிர்ப்பார்த்திருந்தால் தானே அதிர்ச்சி அடையாமல் இருக்க…!?
நின்ற இடத்தில் அவன் உறைந்த சில நொடிகளுக்குள்,
“என்னை தெரியலையா… மறந்துட்டீங்களா? நான் தான்…” என்றவள்,
“மனம் விரும்புதே… உன்னை… உன்னை.. உன்னை.. உன்னை….” என ராகம் இழுக்க ஆரம்பிக்க,
‘ஐயோ!’ என தலையில் கைவைத்தவன் ஒருமுறை மாடியை நிமிர்ந்துப்பார்த்துவிட்டு கிட்டத்தட்ட தலைகால் தெறிக்க ஓடினான் வாசலுக்கு.
பலவருடமாய் அங்கே இருக்கும் ராம் அண்ணனோ இருவரையும் குறுகுறுவென பார்க்க, ‘ஹிஹி’ என அவரிடம் சிரித்தவன்,
“மாமா இன்னைக்கு பூரி கிழங்கு வேணுன்னு கேட்டாரு… சமையல் அக்கா இட்லி தான் செஞ்சாங்க போல… கொஞ்சம் அவசரமா வாங்கிட்டு வரீங்களா அண்ணா…?” என்றான் அவரிடம்.
அவரது குறுகுறு பார்வை இப்போது சந்தேகப்பார்வையாக மாற, “சரி தம்பி” என்றவர், இருவரையும் ஒருமாதிரி பார்த்துக்கொண்டே சென்றார்.
அவர் நகரும் மட்டும் இயல்பாய் நின்றவன் மறுநொடி வெடுக்கென அவள் கரம் பற்றி இழுத்துக்கொண்டு போர்டிகோ’விற்கு சென்று மறைவாய் அவளை நிறுத்தினான்.
கரத்தை விட்டவன் ஈரடி தள்ளி நின்று, “எதுக்கு வந்த?” என்றான்.
“என்ன சார் நீங்க… வீட்டுக்கு முதல் தடவை வரேன்… என் வீரதீர பிரதாபம் எல்லாம் சொல்லி வரவேற்கலன்னாலும் அட்லீஸ்ட் ‘வெல்கம்’னு சிம்பிளா சொல்லிருக்கலாம்!!!” என்றாள் குறையாய்.
ஷியாமலனுக்கு உடல் மட்டும் தான் அங்கே நின்றது. கண்கள் காதுகள் எல்லாம் வெளியே அலைப்பாய்ந்து ஓடி, ‘மாமனிடம் விஷயம் போகக்கூடாது’ என்பதிலேயே குறியாய் இருக்க அவள் பேசியது கேட்கவில்லை அவனுக்கு.
“என்ன சொன்ன?!” என்றான் எங்கோ பார்த்து.
அதில் என்ன கண்டாளோ??!!
“ஹோ… நம்ம பேசிக்குறது யாருக்கும் தெரியக்கூடாதா? நம்ம ரகசியமா இனி மீட் பண்ணிக்கணுமா?” என்று கேட்க, திடுக்கிட்டு திணறி முழித்தான் அவன்.
“மீட் பண்றதா? நமக்குள்ள என்ன இருக்கு மீட் பண்ண?” என்ன முயன்றும் அவன் குரல் அவனது பதட்டத்தை பச்சையாய் காட்டிவிட,
“கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க சார்… எதுக்கு இவ்ளோ படபடப்பு!?” என்றதோடு நிறுத்தாமல்,
“இதுக்கு தான் என் மனசுக்குள்ள ஓடிட்டே இருக்காதீங்கன்னு சொல்றது… பாருங்க இப்போ எப்டி மூச்சு வாங்க நிக்குறீங்கன்னு…!!!” என்று சொல்ல…
அந்த வளர்ந்த குழந்தைக்கு என்ன பதில் பேசுவது என்றுக்கூட தெரியவில்லை.
“இங்க பாரு பாப்பா, உன் பேரு கூட என்னனு தெரியாது…” அவன் அப்படி சொல்லும்போதே,
“ஜனனி…. ஜானு’ன்னு செல்லமா சொன்னாக்கூட நோ இஸ்ஸூஸ்!” என்று தோளை குலுக்கினாள் அவள்.
‘செல்லமா சொல்றதா?’ அதிர்ந்தவன், ‘இது சரிப்படாது!’ என்று தெளிந்து,
“லுக் ஜனனி… எனக்கு இந்த மாறி ஸ்டாக்கிங்’ பண்றதெல்லாம் சுத்தமா பிடிக்காது….!!!” கறாராக சொல்ல வர,
“இது ஸ்டாக்கிங் இல்ல சார்… ரிசர்ச்!!! உங்களை பத்தி தெரிஞ்சுக்க வேண்டிய டீ….ஈஈஈ….ப் ரிசர்ச்’ல இறங்கிருக்கேன்!!!” என்றாள் அவள்.
என்ன பேசுவான் அவன்!!! வாயடைத்து நின்றான்.
எங்கிருந்தோ “ஷ்யாம்…!!!” என்ற மார்த்தாண்டத்தின் குரல் கேட்க, அவன் புலன்கள் பரபரப்பானது.
‘இவள் எப்படியும் தன்னை, தன் எண்ணத்தை சொல்ல விடப்போவதில்லை!’ என்று புரிந்துப்போக,
“நம்ம இதை வேறொரு இடத்துல சாவகாசமா பேசுவோம்… இப்போ தயவுசெஞ்சு கிளம்பு” என்றான் ஷ்யாம்.
“அவ்வ்… சோ ஸ்வீட்… எங்க எப்போ மீட் பண்ணலாம்…!” உடனே அப்பாயின்மெண்ட் கேட்டாள் அவள்.
மார்த்தாண்டத்தின் குரல் வேறு அருகே வருவதை போல தோன்றியது அவனுக்கு. போன வாட்ச்மேன் திரும்ப வருவதற்குள் இவளை திருப்பி அனுப்பிவிட்டால் தேவலாம் என்று நினைத்து,
“ஈவ்னிங் மீட் பண்ணலாம்… அஷ்டலட்சுமி கோவில்ல” என்றான் துரிதகதியில்.
“வாவ்… முதல் அவுட்டிங்கே மங்களகரமா ஆரம்பிக்கப்போறோமா!?” என்றவள்,
“ஷார்ப் சிக்ஸ் வந்துடுங்க… ஒருவேளை வரலன்னா உங்களை தேடி நான் வந்துடுவேன்!!!” என்று சொல்லி[மிரட்டி]விட்டு,
“பை சார்!!!!” என டாட்டா காட்டிக்கொண்டே தன் ஸ்கூட்டியில் சிறகின்றி பறக்க, ‘இப்போ கொஞ்ச நேரம் முன்ன என்ன நடந்துச்சு!!!’ என கனவு போல நடந்ததை நினைத்து நினைத்து விம்மிதமாகி போனான் ஷ்யாம்.
***
மாலை ஆறாக, அஷ்டலட்சுமி கோவில் வாசலில் நின்றான்.
‘உள்ளே செல்வதா?! வேண்டாமா?’ என்ற தயக்கம் வெகுவாய் இருந்தது அவனிடம்.
‘அவ யாருன்னு கூட தெரியாது… அவ பேச்சை கேட்க இங்க வந்து நின்னுட்டு இருக்கேன்… பைத்தியம் தான் பிடிச்சு போச்சு எனக்கு!!!’ மானசீகமாக அவன் பேசிக்கொண்டு நிற்க,
“இன்னும் எவ்ளோ நேரம் இப்படியே நிக்குறதா பிளான் வச்சுருக்கீங்க சார்?!” என பின்னால் ஒரு குரல் கேட்கவும், திரும்பாமலே தெரிந்தது அது அவள் தான் என்று…!
“வந்துட்டியா?!” என்றான் சாதாரணம் போல.
“உங்களுக்கு முன்னாடியே வந்துட்டேனே!!” என்றவள், “சரி, சரி வாங்க… பீச் பக்கம் போவோம்” என்று நகர்ந்தாள்.
கோவிலும் சற்றும் கும்பலாய் இருக்க, மௌனமாய் அவள் பின்னே நடந்தான் அவன்.
மணல்பரப்பில் நடந்துப்போனவள் சற்று ஓரமாய் ஓரிடம் பிடித்து, “வாங்க, உட்காருங்க” என்று அவனை அழைத்தாள்.
இதெல்லாம் அவனுக்கு புதிதோ புதிது!!!
சங்கடத்துடனே சுற்றிலும் பார்த்துக்கொண்டே அவன் அமர, “நான் ஜனனி!” என கரத்தை நீட்டினாள் அவள்.
அவளையும் நீண்டிருந்த அவள் கரத்தையும் மாற்றி மாற்றி இருமுறை பார்த்தவன், பின் அதை மெலிதாய் பற்றி, “ஷியாமளன்!” என்றான்.
“கூல்! நான் உங்க காலேஜ்’ல தான் படிக்குறேன்! பிஜி ஃபைனல் இயர்!” என்றாள்.
“அது ஒன்னும் எங்க காலேஜ் இல்லை! நாங்க ஜஸ்ட் ட்ரஸ்ட்டி மெம்பர்ஸ்!”
“அடடே! என்ன ஒரு பெருந்தன்மை!” என்றவள், “அப்பறம்… உங்களை பத்தி சொல்லுங்க!” என்றாள்.
“என்னை பத்தி என்ன சொல்ல… நானும் மாமாவும் மட்டும் தான்! நம்ம பாய்ஸ் காலேஜ்ல தான்…” சொல்லிக்கொண்டே போனவன், சட்டென, “ஏய்… நான் எதுக்கு இதெல்லாம் சொல்றேன்!?” என்றான் அதிர்ந்து.
ஜனனி சத்தமாய் சிரித்தாள்.
அவனுக்கு வெட்கமாய் போனது. ‘எதுக்கு வந்த? என்ன செஞ்சுட்டு இருக்க?’ என்று அவன் மனமே கேள்வி கேட்க,
“இங்க பாரு ஜனனி… இந்த மாறி ஒரு பையன் பின்ன பொண்ணு சுத்துறது எல்லாம் படத்துல வேணுனா பாக்க நல்லா இருக்கும்! நிஜத்துல காண சகிக்காது! சொன்னா கேளு… இத்தோட நிறுத்திக்கோ! இனி என்கிட்ட பேச வராத!” என்று கடகடவென ஒப்பித்து முடித்தான்.
“கடலை சாப்புடுறீங்களா?”
அவளிடம் இருந்து பதில் வேண்டி அவன் இருக்க, வெகு அசட்டையாய் “கடலை சாப்புடுறீங்களா?” என்று கேட்டாள் அவள்.
அவன் முழிப்பதை கண்டு, “கடலை போடத்தான் வர மாட்டேன்னு சொல்லிட்டீங்க… அட்லீஸ்ட் கடலையை வாங்கியாவது தரலாமே!” என்று வேறு அவள் கேட்க, அங்கே இருந்த பையனிடம் இரண்டு பொட்டலங்களை வாங்கி ஒன்றை அவளிடம் கொடுத்தான்.
“இந்த கடலை காலியாகுற வரைக்கும் பேசலாமா?” என்றாள் அவளே.
‘வேண்டாம் டா… நோ சொல்லு!’ என உள்ளே குரல் கேட்டாலும் தலை தன்னால் ‘சரி!’ என ஆடியிருந்தது.
“நான் சைக்காலஜி’ல மாஸ்டர்ஸ் பண்ணிட்டு இருக்கேன்!”
“வாவ்! அது ஏன் சைக்காலஜி?” ஆர்வமாய் கேட்டான்.
“எனக்கு நிறைய தெரிஞ்சுக்க பிடிக்கும்! எந்த படிப்பும் ஏதோ ஒரு இடத்துல ‘இவ்ளோதான்’னு முடிஞ்சு போய்டும்! ஆனா, உளவியல்!!! அப்படி கிடையாது! இந்த உலகத்துல இருக்க ஒவ்வொரு மனுஷனும் ஒவ்வொரு லெசன்!
புதுசா இருப்பாங்க! நிறைய தெரிஞ்சுக்கலாம்! நிறைய ஆராய்ச்சி பண்ணலாம்! நிறைய கத்துக்கலாம்! இன்னும் நிறைய… நிறைய….!!!” அவள் கைகளை விரித்து கண்கள் மின்ன பேசிய பேச்சே அந்த படிப்பின் மீதான அவள் பிரியத்தை அவனுக்கு உணர்த்தி இருந்தது.
“ம்ம்ம்! கேட்கவே நல்லா இருக்கு!” என்றான்.
“ம்ம்! என் படிப்பாச்சே! நல்லா தான் இருக்கும்!” என்றவள், “சரி சொல்லுங்க, ஷோரூம் எப்போ ஆரம்பிச்சீங்க?” என்றாள்.
“படிப்பு முடிச்சதும் தான் ஆரம்பிக்க தோனுச்சு! மாமா, கார் சர்வீஸ் சென்டர் வச்சுருக்காங்க! அதோடவே சேல்ஸ்’சும் போடலாம்ன்னு தோணி ஆரம்பிச்சேன்! நல்லா போயிட்டு இருக்கு…!” என்றான்.
“ஓ!” என்றவள், “எனக்கு அம்மா இல்லை… அப்பா மட்டும் தான்! ரொம்ப ஜாலியான பிரன்ட்லியான அப்பா… கவர்ன்மென்ட் ஜாப்ல இருக்காரு… நான் ஒரே செல்ல பொண்ணு!!!” என்றுவிட்டு,
“நீங்க?” என்றாள்.
“ம்ம்… எனக்கு ரெண்டு பேருமே இல்ல!!! நானும் ஒரே பையன்” என்றான்.
“ஓ!” என்றாள். அவ்வளவு தான்! மேற்கொண்டு அவனை துருவவில்லை.
“எப்படி இவ்ளோ ஹேண்ட்சமா இருக்கீங்க? வாட் இஸ் த சீக்ரெட் ஆஃப் யுவர் பியூட்டி?” என்றாள்.
சிரித்துவிட்டான் அவன்.
“இதுவரைக்கும் என்கிட்ட இப்படி ஒருத்தரும் கேட்டதும் இல்லை… சொன்னதும் இல்லை!” இன்னும் சிரிக்க,
“ரியல்லி?” என்று அதிர்வாய் கேட்டாள் அவள்.
“நீ இவ்ளோ ஷாக் ஆகுற அளவுக்கு என்ன இருக்கு இதுல?”
“இதுவரைக்கும் ப்ரோபோசல் வந்ததே இல்லையா?”
யோசித்தவன், “இல்லையே!” என்று உதடு பிதுக்க,
“ம்ச்! இந்த பெண்கள் சமுதாயம் அழகான ஒரு ஆண்மகனை இனம் காணாம விட்டுடுச்சு!” என்றாள் வருத்தம் போல!
“அய்ய!” என்றவன், “உனக்கு நிறைய ப்ரோபோசல் வந்துருக்குமே!” என்றான்.
“பொண்ணுங்களுக்கு ப்ரோபோசல் வராமையா இருக்கும்? லைஃப்’ல எதாச்சும் ஒன்னாவது எல்லாருக்கும் வந்துருக்கும்!!!”
“அப்படியெல்லாம் சொல்லாத! ப்ரோபோசல்ன்னா என்னன்னே தெரியாத பொண்ணுங்களும் இன்னமும் இருக்கத்தான் செய்யுறாங்க!” என்றான்.
“தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை மன்னா!” என்று அவள் கும்பிடு போட, ‘செம்ம வாயாடியா இருப்பா போலயே!’ என்றுதான் தோன்றியது அவனுக்கு.
கையில் இருந்த கடலையும் முடிந்துபோயிருக்க, காலி பேப்பரை சுருட்டி குப்பைத்தொட்டியில் குறிப்பார்த்து எறிந்தான் அவன்.
“கடலை போடுறதுன்னா என்னன்னு புரிஞ்சுடுச்சா?” என்றாள் நக்கலாய்.
இவன் முறைப்பாய் பார்க்க, “இனி அடுத்தடுத்த மீட்டிங்’ல வேற வேற டாப்பிக் பார்ப்போம்… சரியா?” என்றவள், எழுந்துக்கொண்டாள்.
‘அவ்ளோதானா?’ என்று அவனுக்கு தோணாமல் இல்லை!
அவனும் எழுந்துவிட, “ம்ச்!” என சலிப்பாய் தன் மொபைலையே தட்டி தட்டி முகம் சுளித்தாள் அவள்.
“என்ன ஆச்சு?” என்றான்.
“ஃபோன்’ல பிரச்சனை!”
“என்ன பிரச்சனை?”
“எவ்ளோ தேடுனாலும் உங்க நம்பரை மட்டும் காட்டவே மாட்டேங்குது!” என்றவளின் உதடோரங்கள் சிரிப்பில் நெளிய, அதை கண்டுக்கொண்டவனும்,
“நம்பர் குடுத்தாத்தானே இருக்கும்!” என்றான் அவளைப்போலவே சிரிப்பை அதக்கி.
“அப்போ குடுங்க!!!” இலகுவாய் கேட்டுவிட்டு கண்ணை சுருக்கி கொஞ்சலாய் சிரித்தாள் பெண்!
தூரத்தில் எங்கோ, ‘நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணே!’ என்று பாடல் ஓட, அது ஷியாமளனின் மனதில் உள்ளதை சொல்வதை போலவே இருந்தது.
…………………………..
error: Content is protected !!