மதிய உணவு இடைவெளியில் மரத்தடியில் அமர்ந்து அப்போது தான் உணவு டப்பாவை திறந்திருந்தாள் கௌசி.
“யாருடி அந்த ரோமியோ?” அருகே இருந்த இன்னொரு தோழி புரியாமல் கேட்க, ‘சொல்லவா?’ என கௌசிக்கு ஜாடை காட்டி அவளை தவிக்க விட்டவள்,
“நம்ம கௌசியோட ஆளுடி!” என்றிருந்தாள் மற்றவளிடம்.
அதை கேட்டவளோ ஏகப்பட்ட திகைப்புடன், ‘நிஜமாவா?’ என்ற வினாக்கொண்டு அவளை பார்க்க, கௌசியின் உதட்டோர சிரிப்பு அது உண்மைதான் என்பதை அவளுக்கு உணர்த்தியது.
“ஹே சொல்லுடி! எங்க போனாரு உன் ஆளு? ரெண்டு நாளா உங்க கண்ணும் கண்ணும் நோக்கியாவை பார்க்கவே முடியலையே?” வருத்தம் போல சீண்டினாள் முன்னவள்.
“ச்சு! போடி” கௌசிக்கு ஏனோ வெட்கம் தான் வந்தது. உணவோடு சேர்த்து அதையும் தொண்டைக்குள் விழுங்கி மறைக்க முயன்றாள்.
“கௌசி… இவ யாரை பத்தி சொல்லிட்டு இருக்கா? எனக்கு ஒன்னும் புரியல”
கௌசி சங்கடமாய் விழிக்க, “அதை நான் சொல்றேன்” என்றவள், அவளுக்கு தெரிந்த விதத்தில் அந்த ரோமியோ பற்றி சுருக்கமாய் சொல்லி முடித்தாள்.
கௌசியும் காயத்ரியும் ஒரே ஊர் தான்! கிட்டத்தட்ட அவள் குடும்ப நிலவரம் மொத்தமும் அறிந்தவள் என்பதால் இதை கேட்டதும் அவள் முகம் சிந்தனை சாயம் பூசியது.
இதை அறியாத மற்றவள், “போன வாரம் இவ தனியா போறப்போ வழிமறிச்சு ஒரு கர்சீப்பை இவ சைக்கிள் கூடையில போட்டுட்டு ஓடிட்டானாம்! வீட்டுக்கு போய் பார்த்தா அதுல ‘ஐ லவ் யூ’ன்னு எழுதிருந்துருக்கு! தெரியுமா?” அதிசயம் போல சொல்லி முடித்தாள் அவள்.
கௌசி அதற்கும் மௌனமாய் இருக்க, “நீ அதுக்கு என்ன சொன்ன கௌசி?” என்றாள் காயத்ரி.
“நா… நான் என்ன சொல்லுவேன்!?”
காயத்ரி, “உன்கிட்ட தானே அவன் காதலிக்குறேன்னு சொல்லிருக்கான்! அப்போ நீதானே பதிலும் சொல்லணும்?”
“சரிதான்!! ஆனா, எனக்கு தயக்கமா இருக்கு!!!”
இப்படி சொன்னவளை உற்று பார்த்தவள், “தயக்கமா இருக்கா? பயமா இருக்கா?” என்றாள்.
கௌசி, “பயம் எதுக்கு? தயக்கம் மட்டும் தான்” என்றாள் உடனே.
“தப்பு கௌசி! நீ பயப்படனும்!” என்ற காயத்ரியை மற்ற இருவரும் புரியாமல் பார்த்தனர்.
“உன் குடும்பம் என்ன? உன் அப்பா யாரு? எப்படிப்பட்டவரு? எல்லாம் எங்களை விட உனக்கு தான் அதிகம் தெரியும்! தெரிஞ்சும் இந்த ‘காதல்’ங்குற வார்த்தைக்கு நீ எப்படி பயப்படாம இருக்கன்னு எனக்கு புரியல!” என்றாள் தெளிவாய்.
காயத்ரி அப்படி சொன்னபிறகு தான் நிதர்சனம் கௌசியின் மூளைக்குள் உரைக்க ஆரம்பித்தது.
“என் அக்கா காதலிக்குறேன்னு வந்து நின்னா! ஜாதி சங்க தலைவருங்குற முறையில விஷயம் உங்க அப்பாக்கு போச்சு! அடுத்த ஒரே மாசத்துல அவர் தலைமையில் என் அக்கா கல்யாணத்தை சீரும் சிறப்புமா நடத்தி வச்சாரு! ஆனா, அவ காதலிச்ச பையன்? கை கால் உடைஞ்சு ஹாஸ்பிடல்ல கடந்தான்! அதுக்குபிறகு அவங்க குடும்பம் இந்த சுத்துப்பட்டு ஊருலயே இல்லை. இது என் கண் பார்க்க நடந்தது. உனக்குமே நல்லா தெரியும்!
நமக்கு தெரியாம இன்னும் எத்தனையோ நடந்துருக்கும்!” காயத்ரி சொல்ல, அன்றொருநாள் காயுவின் அக்கா அழுத அழுகை கௌசியின் நினைவுக்கு வந்து நெஞ்சை அடைத்தது.
“என் அக்கா இப்போ சந்தோசமா தான் இருக்கா! ஆனா மனசுல குற்றவுணர்ச்சி இல்லாம இல்ல! அவ பார்த்து சிரிச்சு பேசுனதால தானே அவனுக்கு இந்த நிலைமைன்னு அடிக்கடி அழுவா! இப்போ எப்படி இருக்கானோ தெரியலையேன்னு அடிக்கடி புலம்புவா! இதுக்கு யார் என்ன செய்ய முடியும் சொல்லு?”
காயத்ரி பேச, மற்றோருவளோ, “எந்த காலத்துல இருக்கீங்க ரெண்டு பேரும்? அழகா ஒருத்தனை புடிச்சோமா, லவ் பண்ணி ஓடி போனோமா, ஒரு புள்ளையை பெத்துட்டு வந்து நின்னு பெத்தவங்க காலுல விழுந்தோமான்னு போய்டே இருக்கணும் டி!” என்று சொல்ல,
அவளை உறுத்து விழித்த காயு, “முதல்ல இவ கூட பேசுறதை நிறுத்து!” என்று கோபமாய் சொல்லிவிட்டு பாதி உணவோடு எழுந்து சென்றுவிட்டாள்.
“அவ கடக்குறா!” என அலட்சியம் செய்த தோழியை அப்படியே விட்டு விட்டு காயத்ரி பின்னே ஓடினாள் கௌசி.
“இப்போ என்ன தான்டி நான் செய்யணும்?” தன் பின்னே கலங்கிய முகத்துடன் வந்து நின்ற கௌசியை பார்த்த காயத்ரி, “உனக்கு என்ன தோணுது?” என்றாள்.
“எதைப்பத்தி?”
“அந்த பையனை பத்தி!”
“பெருசா ஒன்னும் இல்லடி! என்னையே பார்த்துக்கிட்டு, எனக்காகவே வெயிட் பண்ணிக்கிட்டு, என் பார்வைக்காக தவம் கடக்குற ஒருத்தனை பிடிக்கலைன்னு எப்படி சொல்லுவேன்?”
“உனக்கு தோணுதா? இந்த காதல் கல்யாணத்துல முடியும்ன்னு!!!”
கௌசி யோசித்தாள்.
மேலும், “கொஞ்சம் போராடினா கூட உங்க வீட்டுல லட்சத்துல ஒரு வாய்ப்பா அந்த பையனை ஏத்துப்பாங்கன்னு நினைக்குறியா?” என்றாள்.
கௌசியின் மனக்கண்ணில் சட்டென கையில் ஒரு கத்தை துடைப்பத்துடன் ஆங்காரமாய் புவனேஸ்வரி தெரிய,
அவள் சிரமோ இப்போது தயங்காமல், வேகமாய் ‘இல்லை’ என அசைந்தது.
அதை நிம்மதியுடன் பார்த்தவள், “அப்போ யோசிக்காம விட்டுடு… இந்த சலனத்துக்கு பின்னாடி வலி தான்டி இருக்கும்! கண்க்கூட பார்த்தனால சொல்றேன்!” என்றாள் காயத்ரி.
நிர்மலமாய் இருந்த கௌசியின் முகத்தை கண்ட காயத்ரி, “என்ன யோசிக்குற?” என்றாள் ஆதூரமாய் அவள் கரம் பற்றி.
“உன் தெளிவு ஏன்டி எனக்கு இல்லாம போச்சு? என் புத்தி ஏன் தடுமாறுது?”
மென்மையாய் சிரித்தவள், “இப்போ எத்தனை கட்டுப்பாட்டோட நான் தினம் படிக்க வரேன்னு தெரியுமா உனக்கு? ‘உன் அக்கா மாறி செஞ்சுடாத’ன்னு பேசி பேசியே கொல்றாங்க டி! அதோட வெளிப்பாடு தான் என்னோட பேச்சு!” என்றாள் விரக்தி போல.
“எல்லாம் நம்ம நல்லா இருக்கனும்ன்னு தானேடி சொல்றாங்க! அவங்க சொல்றதை கேட்டு நடந்தா நமக்குமே நல்லது தான் இல்லையா?” என்றாள் கௌசியிடம்.
மௌனமாய் ‘ஆம்’ என்று தலையசைத்தாள் கௌசி.
“முதல்ல உன்னை தூண்டி விடுற மாதிரி ஆளுங்ககிட்ட இருந்து தள்ளி நிக்க பழகு! சாதாரண பார்வையை காதல்’ன்னு ஏத்தி விடுற கேஸ் கூட எல்லாம் சேராத!” என்றாள் கண்டிப்புடன்.
சரியென்றவளும், “நான் பார்த்ததால தானே அவ என்னை சீண்டுனா! தப்பு என் மேல தான்!” என்றாள்.
அவள் தெளிவு காயத்ரிக்கு நிம்மதியாய் இருந்தது. தவற இருந்தவளை தாங்கி நிமிர்த்திய நிறைவு அவள் வதனத்தில். அது கொடுத்த மகிழ்வில், “ஹே, நான் ஒன்னு சொல்லவா உன்கிட்ட?” என்றாள்.
கௌசி கேள்வியாய் பார்க்க, “கைல வெண்ணையை வச்சுக்கிட்டு யாராவது நெய்’க்கு அலைவாங்களா?” என்ற காயத்ரியை குழம்பிப்போய் அவள் பார்க்க,
“உன் மனோகர் மாமாவை தான் சொல்றேன்” என்றாள் காயத்ரி.
“அவருக்கென்ன?”
“அவருக்கென்னவா? எனக்கு என்னவோ அவர்தான் உனக்கு பர்ஃபெக்ட் மேட்ச்ன்னு தோணுது!” என்று சொல்ல, விழிவிரித்து திகைத்துப்போய் நின்ற கௌசியிடம் மேற்கொண்டு அதைப்பற்றி பேச முடியாது இடைவேளை மணி அடித்தது.
அதன்பின்னே மதிய நேரம் பாடங்கள் வேகமெடுக்க மாலை கவிழ்ந்து கௌசி வெளியே வரும் நேரம், எப்போதும் போல போட்டோக்கடை வாசலில் ஒளிந்து நின்று எட்டிப்பார்த்தான் ஹரி.
வழக்கம்போல அவளது சிரிப்பு மிதந்த ரகசிய பார்வையை அவன் எதிர்ப்பார்க்க, அவன் இருக்கும் திக்கில் கூட பார்வை பதிக்காமல் சைக்கிளில் ஏறி வீட்டை நோக்கி விரைந்துக்கொண்டிருந்தாள் கௌசல்யா.
****
“நம்ம பைனான்சுக்கு நம்பகமா ஒரு ஆள் வேணும்! நம்ம சாதிக்காரனா பாரு! என்னால முன்னமாறி எல்லா இடமும் கவனிக்க முடியல!” எதிரே நின்ற ஒருவரிடம் தீவிரமாய் சொல்லிக்கொண்டிருந்தார் அன்பழகன்.
‘சரி’யென கேட்டுக்கொண்டு அவர் அங்கிருந்து சென்றதும், “என்னத்துக்குடா ஆளு கேட்குற?” என்றார் தனபாக்கியம்.
“பைனான்சு இப்ப பெருசா போய்க்கிட்டு இருக்கு! வரவு செலவு வசூல் எல்லாம் தினந்தினம் நானே ஒத்தையில சரிப்பாக்க முடியல! வசூலுக்கு ஆளு இருந்தாலும், ஜவ்வு மாறி இழுக்குற கேஸு நிறைய இருக்கு! ஒரே தலைவலிம்மா!
“அதானே கேட்டேன், எதுத்த வீட்டு காக்கா என் வீட்டுல வந்து கூவுதேன்னு! அந்த அனாதைபயலுக்கு இருக்க இடம் குடுத்ததே அதிகம், இதுல கல்லால வேற தூக்கி உட்கார வைக்கனுமோ? நல்லா இருக்கு! போற போக்கை பாத்தா என் மவளை அவனுக்கே கட்டிவச்சுடுவீங்க போலயே!” தொண்டையை திறந்திருந்தார் புவனா.
ரெக்கார்டில் எழுதிக்கொண்டிருந்த கௌசியின் கரம் திக்கென்று அப்படியே நின்றது.
“ஏன்டி? அவனுக்கு என்ன குறையை கண்ட? சொக்கதங்கம்டி! உன் மவளுக்கு அவனை விட மேலா ஒருத்தன் கிடைச்சுடுவானா!?” தனப்பாக்கியம் எகிற,
கௌசியின் கரங்கள் வியர்க்கவே ஆரம்பித்தது.
“அவனுக்கு என்ன தகுதி இருக்குன்னு வரிஞ்சுக்கட்டிக்கிட்டு வரீங்க நீங்க?”
“அவன் என் பேரன்டி… இதைவிடவா தகுதி வேணும்?”
“அய்யய்யயோ… அப்டியே உங்க மவளுக்கு பொறந்தவன் தான் அவன்!!!”
“என் மவளுக்கு பொறக்காட்டியும் அவன் என் பேரன் தான் டி!!!”
“யாரு இவனா? வெண்டைக்காய்க்கும் வெத்தலைக்கும் வித்தியாசம் தெரியாத பய! இவனை கல்லால உட்காத்தி வச்சா என் குலத்தொழிலு சுடுசட்டில கொட்டுன தண்ணியாத்தான் போவும்!”
மகனை பேசியதும் புவனா இன்னும் ஹை டெசிபலில் ஏறிக்கொண்டு வர, குறுக்கே புகுந்த அன்பழகன், “நிறுத்துறீங்களா ரெண்டு பேரும்?” என்று குரல் உயர்த்தினார்.
இரு பெண்களும் பேச்சை நிறுத்தியதும், “தொழில் விசயத்துல என்ன செய்யணும் செய்யக்கூடாதுன்னு நான் பாத்துக்குறேன்! வீட்டு பொம்பளைங்க தலையிட வேண்டாம்” என அதிகாரமாய் சொல்லிவிட்டு நகர, இரு பெண்டிரும் தங்களால் முடிந்த மட்டும் கழுத்தை வெட்டிக்கொண்டு இரு வேறு திசைகளில் திரும்பி நடந்தனர்.
தோட்டத்திற்கு வந்து நின்ற தனபாக்கியத்திற்கு மருமகள் மீதிருந்த கோபம் ஆறவில்லை. வாய்விட்டு திட்டிக்கொண்டு, எதிரே அவர் நிற்பதை போல கையை நீட்டி மடக்கி அவர் தன் ஆதங்கத்தை தணிக்க பார்க்க,
“எதுக்கு ஆத்தா இப்படி கோபப்படுறீங்க?” என்று வந்து நின்றாள் கௌசி.
முகம் கடுக்க கேட்டவரை நிதானமாய் பார்த்தவள், “ஏன் ஆத்தா! உங்களுக்கு மனோ மாமா மேல எதுக்கு இவ்ளோ பாசம்? பெரியம்மாவோட தம்பிங்குறதாலையா? இல்ல எங்க அம்மாக்கு அவரை புடிக்காததாலயா?” என்றிட, லேசாக துணுக்குற்றவர், பின் மனதை மறையாது, “ரெண்டும் தான்!!!” என்றுவிட்டார்.
“எனக்கு என்னமோ அம்மா மேல இருக்க கடுப்பு தான் மாமா மேல பாசமா கொட்டுற மாறி தோணுது!!!”
கௌசி சொன்னதும் அசராமல், “இருந்துட்டு போட்டுமே! இப்போ என்னாங்குற?” என்று எகிறியவர், பின் தணிந்து, “அவனை விட்டுடாதடி! நம்ம விட்டா அவன் ஒத்தையில நின்னுடுவான்! அவனுக்கு யார் இருக்கா சொல்லு?” என்று கேட்க, கௌசியால் பதில் பேச முடியவில்லை.
“நீ அவனை கட்டிக்கிட்டா அவனும் சொந்தபந்தம்ன்னு ஒட்டு உறவா ஒரு வாழ்க்கை வாழ்வான்! இல்லனா அவனுக்கு எடுத்துக்கட்டி நல்ல காரியமெல்லாம் எவன் செய்வான்?”
“ம்ச்! என்ன ஆத்தா? மாமாவ…. நான் எப்படி?”
“மாமானை தானே கட்டிக்க சொன்னேன்? என்னவோ சித்தப்பன் பெரியப்பனை கட்டிக்க சொன்ன மாறி மூஞ்சி சுழிக்குற?”
தனப்பாக்கியத்தின் பேச்சில் ஏகத்துக்கும் முகத்தை சுழித்தவள், “சேச்சே…. என்ன ஆத்தா இது கன்றாவியா பேசுறீங்க?” என்றாள்.
“ம்கும்! உங்களுக்கெல்லாம் இப்போ என் பேரனை பார்த்தா அலட்சியமா தான் இருக்குமுடியோவ்! ஒரு நாளு பாரு! ‘என் புள்ள கழுத்துல தாலியை கட்டு ராசா’ன்னு அவன்கிட்ட உன் ஆத்தாளும் அப்பனும் கெஞ்சிக்கிட்டு நிக்க போறாங்க! நீ வேணுனா பார்த்துக்கிட்டே இருடி!!! உனக்கு அவன் தான் புருஷன்”
தனப்பாக்கியம் தன்போக்கில் வீராவேசம் பேசிக்கொண்டே வீட்டுக்குள் செல்ல, ‘உனக்கு அவன் தான் புருஷன்’ என்ற அவரது அழுத்தமான வார்த்தையில் உள்ளுக்குள் ஏதோ தடம்புரள சமைந்துப்போய் நின்றிருந்த கௌசியின் பின்னே,
“இங்க நின்னு என்ன செய்யுற?” என்ற வார்த்தைகள் வர, சட்டென திரும்பியவளின் முன்னே தலை நிமிர நின்றிருந்தான் அவன்…மனோகர்…!
அவனிடம் மனதில் தோன்றியதெல்லாம் தயக்கமின்றி அதுவரை பேசி பழகியவளுக்கு முதல்முறையாய் அவன் கழுத்துக்கு மேல பார்க்க முடியாது கூச்சம் போன்ற வகையறியா ஏதோ ஒன்று குறுக்கே வந்து தடுத்தது.