ஆனால் லட்சுமியோ எப்படியாவது இந்த வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் சரியாகிட வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தாள். கல்லூரி விட்டு வந்து மரகதத்தோடு பெசிக்கொண்டிருந்தவள், திடீரென்று,
“ஏன் அத்தை நீங்க இதெல்லாம் என்கிட்டே சொல்லவேயில்லை… மூணு கோடி அப்படியே ஏன் கொடுத்தீங்க…” என்றாள் வருத்தமாய்..
அவளுக்கு இவ்விசயம் மனதில் போட்டு அழுத்திக்கொண்டே இருந்தது.. கேட்க நினைத்து அடுத்து சந்தர்பங்கள் அமையாமல் போக, இன்றோ தோன்றவும் கேட்டுவிட்டாள்.
“உங்க மாமா கொடுக்கலாம்னு சொன்னதுக்கு அப்புறம் என்ன செய்ய லட்சுமி.. ஈசனுக்கும் மனசில்ல தான்.. ஆனாலும் நம்ம பேரை சொல்லித்தானே வேலு அண்ணே பணம் வாங்கிருக்கார்..” என்று மரகதமும் வருந்த,
“என்னத்தான் மனுஷங்களோ…” என்று லட்சுமி முணுமுணுத்தாள்..
“ஹ்ம்ம்.. இத்தனை வருஷம் ஒரே குடும்பமா பழகியும் கூட நமக்கு எதுவும் தெரியலை.. ஆனா ஏது எப்படியோ வேலு அண்ணா பண்ண ஒரே விஷயம், உன்னை ஈசனுக்கு கல்யாணம் பண்ண பேசினது…” என்றதும்,
“என்ன?? என்னத்தை சொல்றீங்க..??” என்று அதிர்ச்சியாய் கேட்டாள்..
இந்த விஷயம் யாருக்குமே தெரியாதே.. அதிலும் லட்சுமிக்கு, கஜேந்திரனும் மரகதமும் வந்து பெண் கேட்டது தான் தெரியும்.. அதற்குப்பின்னே என்ன நடந்தது என்றெல்லாம் தெரியாதல்லவா.
“என்ன லட்சுமி தெரியாத மாதிரி கேட்கிற..??” என்றவர், “வேலு அண்ணா தான், இவர்க்கிட்ட வந்து, நம்ம லட்சுமிய ஈசனுக்கு பேசினா என்ன மாமா.. நீங்க பார்த்து வளர்ந்த பொண்ணு அப்படின்னு சொன்னாரு.. எங்களுக்கும் மனசுக்கு பிடிச்சு இருந்துச்சு லட்சுமி..” என்று சொல்ல, லட்சுமிக்கு முதலில் இதை நம்பவே முடியவில்லை..
அப்படியா என்று மட்டும் கேட்டவள் அடுத்து கடைக்கு சென்றிட, அவள் மனமோ மரகதம் சொன்னதிலேயே நின்றது.. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்கு போடவா தெரியாது அவளுக்கு..
‘அப்…அப்போ… சித்.. சித்தப்பா எல்லாமே முன்னமே ப்ளான் பண்ணி தான் பண்ணிருக்கார்.. லாஸ்ட்ல என்னை வச்சு.. ச்சி…’ என்று அதற்குமேல் அவளால் நினைக்கக் கூட முடியவில்லை..
‘என்ன மனுஷன் இவரு… பிரச்னை வந்தா என்னை முன்னிட்டு சமாளிக்கலாம்னு இதெல்லாம் பண்ணிருக்காரா… ’ என்று நினைக்கையில் அவர் மீதிருந்த கோவம் போய் இப்போது முழுதாய் வெறுப்பு முளைத்தது..
உண்மையும் அது தான்.. வேலாயுதம் நினைத்திருந்தால், லட்சுமியை யாருக்கேனும் கூட பேசிருக்க முடியும்.. பேச்சியும் மகளுக்கு நல்ல வாழ்வு அமைந்தால் போதும் என்று இருந்திருப்பார்.. ஆனால் யாரிடமும் எதுவும் சொல்லாமல் கஜேந்திரனிடம் மட்டும் இதை சொல்லி எத்தனை அழகாய் காய் நகர்த்தி கடைசியில் இரண்டு குடும்பத்தையும் மொத்தமாய் ஏமாற்றி சென்றுவிட்டார்.. நினைக்க நினைக்க லட்சுமிக்கு ஆத்திரம் அடங்கவேயில்லை.
தனக்கு தெரியாமலே தன்னை இதில் இழுத்துவிட்டு சென்ற மனிதரை எப்படி அவளால் மன்னிக்க முடியும்??
இப்போது லட்சுமியின் சிந்தனை எல்லாம் எப்படியாவது வேலாயுதத்தை மீண்டும் காண வேண்டும் என்று தான் இருந்தது.. ஏன் இப்படி செய்தார் என்று தெரிந்துக் கொண்டே ஆகவேண்டும் போலிருந்தது..
அனைத்திற்கும் “மாமா… மாமா…” என்பவள், இப்போது தன் வேலைகளை ஓரளவு தானே செய்துகொள்ள, அவனை அவள் எதிர்பார்க்காமல் இருப்பதே ஏக கடுப்பாய் இருந்தது.
‘நான் எதுக்கிருக்கேன்… பெரிய இவளாட்டம் எல்லாதுக்கும் ஸ்கூட்டி எடுத்திட்டு போயிடுறா…’ என்று அவ்வபோது கடிந்துகொண்டான்.
இது இப்படி இருக்க, மரகதம் பிடிவாதமாய் லட்சுமியை கார் ஓட்ட பழக சொன்னார்..
“ஸ்கூட்டி பழகிட்ட அப்படியே காரும் பழகேன் லட்சுமி.. எங்கயாது நம்ம போகணும்னா இவங்களை எதிர்பார்க்க வேணாம் பாரு..” என்று மரகதம், ஈசனும் கஜேந்திரனும் இருக்கும் போதே சொல்ல, லட்சுமி முழித்தாள்..
அவளுக்குமே ஆசை தான்.. ஆனால் செமெஸ்டர் லீவில் பார்த்துகொள்வோம் என்று இருந்தாள். ஆனால் மரகதம் இப்படி சொல்ல, “அதில்ல அத்தை…” என்று தயங்க..
“ஏன்.. இந்த வாரம் முழுக்க மதியம் தானே காலேஜ் அதுவும் ரெண்டு மணி நேரம் தான்.. கடைக்கு சாயங்கலாம் போயிக்கலாம்.. காலையில் இவனே பாத்துக்கட்டும்.. நீ கார் பழகு…” என,
“அப்புறம் காலைல காலேஜ் வச்சிட்டா என்ன செய்வா…??” என்றார் கஜேந்திரன்..
“அப்போ சாயங்கலாம் வந்து பழகட்டும்.. ஒரு மணி நேரம் பழகுவாளா.. நம்ம பிரபுவோட அக்கா கார் ஓட்ட சொல்லிக் கொடுக்கிறா.. அதுனால நம்ம சொல்ற நேரத்துக்கு சொல்லி கொடுப்பா…” என்று மரகதமும் பேச்சை முடிக்க, அடுத்து லட்சுமி காரோட்ட பயில கிளம்பினாள்..
பேச்சி கூட “அவளை ரொம்ப ஏத்தி விடுறீங்க அண்ணி…” என்று சொல்ல,
“விடு பேச்சி.. சும்மா சும்மா எல்லாத்துக்கும் வீட்ல ஆம்பிள்ளைங்கள எதிர்பார்த்துட்டு இருக்க முடியுமா.. நம்மத்தான் இப்படி இருக்கோம். அவ பழகட்டும்..” என்றுவிட,
ஈசனுக்கோ தன்னிடம் யாருமே ஒன்றுமே இதை பற்றி கருத்து கேட்கவில்லை என்று கடுங்கோபம்..
‘அதென்ன.. வீட்ல நானும் இருக்கேன்.. அவங்க பாட்டுக்கு பேசுறாங்க.. முடிவு பண்றாங்க… அவ என் பொண்டாட்டி.. என்னை கேட்கவேணாமா…’ என்று எண்ணம் எழ, அன்றைய தினம் இரவில் லட்சுமி அறைக்கு வரவும்,
“லஷ்மி.. நீ இப்போ கார் பழக வேணாம்.. உனக்கு செமஸ்டர் லீவ்ல நான்.. நானே சொல்லித் தர்றேன்…” என்றான் முகத்தை உர்ரென்று வைத்து..
அவன் பேசியது , ‘அட…’ என்று இருந்தாலும், “எதுக்கு???” என்று மட்டும் கேட்டாள் லட்சுமி..
“எதுக்குன்னா??? இப்போ வேணாம்.. படிக்கிற வேலைய ஒழுங்கா செய்.. போதும்.. கடைக்கு லீவ்ல வந்தா போதும்.. இப்போ எனக்கும் கொஞ்சம் ப்ரீ தான்…” என்று சிடுசிடுக்க, அவனையே தலை சாய்த்து உருத்து பார்த்தவள்,
“ம்ம்ச் நான் என்ன சொல்றேன்.. நீ என்ன சொல்ற லஷ்மி..??” என்றான் எரிச்சலாய்..
“இப்போ நான் காரோட்ட பழகினா உங்களுக்கு என்ன பிரச்சனை???”
“எனக்கு என்ன பிரச்சனை..??? உனக்கு தான் தேவையில்லாமல் அலைச்சல்.. அம்மாதான் தெரியாம பேசுறாங்கன்னா.. நீயுமா???”
“அத்தை தெரியாம பேசல.. நாலு விஷயம் நானும் தெரிஞ்சுக்கானும்னு தான் பேசுறாங்க.. டைமிங் எனக்கு ப்ரீயா இருக்கும் போது தான் போவேன்.. அதுனால நீங்க கவலை படவேணாம்..” என்று பேச்சை முடிக்க,
“உனக்கு சொல்ல வந்தேன் பாரு.. போ டி.. என்னவோ பண்ணிட்டு போ…” என்று சொல்லி சென்றுவிட்டான்..
லட்சுமிக்கு இப்போதெல்லாம் ஈசனது பார்வை தன்மீது படிவது நன்றாகவே தெரிந்திருந்தது.. அதற்காக அவளாக எதுவும் பேசப்போவதில்லை.. அந்த வாரம் முழுக்க இப்படியே செல்ல, ஈசனுக்கு மனதில் மற்றொரு தெளிவு வந்திருந்தது..
‘கிட்டாததை வெட்டென மற…’ என்பது தான் அது.
அவனுக்கு இப்போதெல்லாம் தான் சுத்தமாய் தானாய் இருப்பதாய் தெரியவில்லை.. எதுவோ ஒரு அழுத்தம் தன்னை போட்டு அழுத்துவதாய் தோன்ற, அடச்சே என்று தான் ஆனது..
தேனி இடம் பற்றி கஜேந்திரன் கேட்க, ஈசனுக்கு எத்தனையோ வழிகளில் சிந்திந்துப் பார்த்தான்.. இதுநாள் வரையில் வீட்டு பெண்களின் நகைகளையோ இல்லை வீட்டு சொத்துக்களையோ அடமானம் என்று வைத்து பழக்கமில்லை.. ஆக அதெல்லாம் இனியும் செய்யவே கூடாதென்று உறுதியாய் இருந்தான்..
அதிலும் சொத்து என்பது பாலாவிற்கும் பங்கிருப்பது.. ஈசனது தனிப்பட்ட ஒரு விருப்பத்திற்காக, பாலாவிற்கும் பாத்தியப் பட்டதை அவன் எதுவும் கை வைக்க முடியாது..
என்ன செய்வது?? என்ன செய்வது?? என்ற எண்ணமே போட்டு அவனை பாடாய் படுத்த, எது வந்தாலும் பார்த்துகொள்வோம் என்று எண்ணியிருந்தவன், இப்போது எத்தனையை தான் பார்ப்பது என்று இருந்தது..
யோசித்து யோசித்து பார்க்க, ஒரு நிலையில் அப்படி யோசிப்பதே அவனுக்கு பாரமாய் போக, என்னை இத்தனை படுத்தும் இந்த இடம் எனக்கு வேண்டவே வேண்டாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டான்..
கஜேந்திரனிடமும் அதையே சொல்ல, “என்ன ஈசா சொல்ற… நான் வேணா பேசிப் பாக்குறேன்..” என்றார்.
“இல்லைய்யா.. வேணாம்.. அந்த இடம் எனக்கு கிடைக்கணும்னு இருந்தா எப்படினாலும் கிடைச்சிருக்கும்.. இப்போ வரைக்கும் நானும் நிறைய முயற்சி பண்ணிட்டேன்.. இதையே நினைச்சு நினைச்சு எனக்கு நிம்மதி போனது தான் மிச்சம்….” என்றான் தீர்மானமாய்..
“இல்ல ஈசா…” என்று கஜேந்திரன் தயங்க,
“இல்லய்யா.. இனி நம்ம இதை பத்தி பேசவேணாம்..” என்றவன் சண்முகத்திற்கும் அழைத்து சொல்லிவிட்டான் எனக்கு அந்த இடம் வேண்டாம் என்று..
வேண்டாம் என்று முடிவு எடுத்த பிறகு தான் ஈசனுக்கு கொஞ்சம் ரிலாக்ஸாக மூச்சு விட முடிந்தது போல் இருந்தது..
வேண்டும் வேண்டாம் என்று எதாவது ஒரு முடிவிற்கு வந்தபின் தான் யாருக்கேனும் மனம் அமைதியாய் இருக்கும். அதுபோலவே ஈசனுக்கும்.. வேண்டும் வேண்டும் என்று அதன் பின்னே ஓடி.. தன் நிம்மதியையும் இழந்து, தேடி போவதும் தள்ளிக்கொண்டே போக, இறுதியில் ‘நீ என்ன எனக்கு கிடைக்காமல் போவது.. நானே உன்னை வேணாம் என்கிறேன்…’ என்று பட்டென்று விட்டுவிட்டான்..