மனோகரன் தங்கள் பூர்வீக வீட்டில் நிம்மதியாக படுத்திருந்தான். அப்பா அம்மா அக்காள் என குடும்பமாய் அவன் கூடி களித்த நாட்களின் நினைவுகள் எல்லாம் அங்கே தானே மிதந்துக்கொண்டிருக்கிறது.
தன் இடம்… தன்னது… தன்னுடையது… என்ற உரிமை உணர்வு எழுவது அவரவர் இடத்தில் தானே!? அந்த நிம்மதியை, ஆசுவாசத்தை ரசித்தபடி படுத்திருந்தான்.
கண்மூடி கிடந்தவனின் விழிகள் பட்டென திறந்தது. செவிகளும் சற்று கூர்மை பெற, “ஏய்….” என்றான் கண்டுபிடித்து விட்டதன் அடையாளமாய்.
கதவுக்கு வெளியே நின்ற உருவம் அவன் கத்தியதும், “ப்ச்! ஐயோ… எப்டி மாமா கண்டுப்பிடிச்சீங்க?” என்று சிணுங்கிக்கொண்டே எதிரே வந்து நின்றது.
மல்லாந்திருந்தவன் ஸ்ரீரங்கநாதனைப்போல அப்படியே ஒருக்களித்து படுத்து, “ஆள் நட்மாட்டமே இல்லாத வீட்ல கொலுசு சத்தம் கேட்டா கண்டுப்பிடிக்க முடியாதா?” என்றான் வந்தவளின் தோற்றத்தை உள்ளுக்குள் ரசித்துக்கொண்டே.
‘ம்ஹும்…ம்ஹும்…” கழுத்தை வெட்டி சிணுங்கிக்கொண்டே கட்டியிருந்த புடவையை அங்கும் இங்குமாய் தொட்டு தொட்டு காட்டினாள்.
‘அவள் புடவை கட்டியிருப்பதற்கு அவன் கமென்ட் சொல்ல வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு!’
அதை உணர்ந்தும் நகைப்பை மறைத்த இதழ்களை மேற்பற்களால் கடித்தபடி அப்படியே படுத்திருந்தான் அவன்.
இதற்குமேல் வெட்கம் விட்டு ‘நான் அழகா இருக்கேனா?’ என்று கேட்க வாய் வராமல் போக, காலை தரையில் உதைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே போனாள் கௌசி.
அவள் போனதும் நமட்டு சிரிப்புடன் எழுந்தவன் சட்டையை மாட்டிக்கொண்டு, கட்டிருந்த வேட்டியை தூக்கி மடித்துக்கட்டிக்கொண்டே வெளியே வந்தான்.
நான்கு தூண்கள் வைத்து அமைந்த அகண்ட முற்றம், அதை சுற்றிலும் நான்கு அறைகள். வாசலுக்கு நேரே கடைகோடியில் பத்து நேர் நின்றாலும் தாராளமாய் இருக்கும் சமையலறை. அதைத்தாண்டி வெளிப்பக்கம் விசாலமான தோட்டம், பராமரிக்க ஆள் இல்லாததால் புதரென மண்டிக்கிடந்தது. மொத்தத்தில் கச்சிதமாய் இருந்தது அந்த வீடு.
முற்றத்தின் திட்டில் அமர்ந்திருந்தவளிடம் வந்தவன், எதிரே இருந்த திட்டில் அமர்ந்து, “முறையா ஆரத்தி கரைச்சு நல்ல நாள் பாத்து வரணும்! இப்படி சொல்லாம கொள்ளாம வந்து நிக்கலாமா?” என்றான்.
அவன் முகத்தில் கோபம் தெரிகிறதா என்று ஆராய்ந்து, அது ‘இல்லை’ என்றதும், “சொன்னா வர வேண்டாம்ன்னு சொல்லுவீங்கன்னு தான் சொல்லாம வந்தேன்” என்றவள்,
“கையை பிடிச்சுட்டு அப்படியே விட்டுட்டு போயிட்டீங்க! ஒரு வாரம் ஆச்சு பாத்து! பாக்கணும்ன்னு தோணாதா? உங்களை மாதிரி எல்லாம் இருக்க முடியுமா என்னால?” என்றான் மறைமுகமாய் அவனை குற்றம் சாட்டி!
அதை உணர்ந்தும் காட்டிக்கொள்ளாதவன், “வீட்ல எப்படி இருக்காங்க எல்லாரும்?” என்று வேறு பேச்சுக்கு தாவ,
“நல்லா இருக்காங்க” என்று முனகினாள் அவள்.
“எப்படி உங்கம்மா என்னை பார்க்க வர விட்டாங்க உன்னை?”
“அவங்க எங்க விட்டாங்க? நானே கிளம்பி வந்துட்டேன்”
“நம்ப முடியலையே!” என்று அவன் சொல்ல, “அன்னைக்கு நீங்க போன பிறகு அம்மா என் கழுத்துல இருக்க தாலியை பார்த்துட்டு ஒண்ணுமே பேசாம ரூமுக்குள்ள போய் உட்காந்துக்கிட்டாங்க! இப்போவரைக்கும் வெளில வரவே இல்லை… படையப்பா நீலாம்பரி மாறி என்ன செய்யுறாங்கன்னே தெரியல!” இலகுவாய் சொன்னாள் கௌசி.
“உங்க அப்பா?”
“அவர் பாவம் மாமா! நீங்க இல்லாததால எல்லா இடத்துக்கும் அவரே போறாரு! வேலை அதிகம்… வீட்டுக்கே நடு ராத்திரி தான் வராரு! வந்தாலும் ஆத்தா ரூம்ல தான் தூங்குறது!” என்றாள்.
“நான் அதை கேட்கல! உங்க அம்மா கிட்ட அவர்க்கூட பேசுறது இல்லையா?”
“இல்ல மாமா! அன்னைக்கு நீங்க பேசிட்டு போனதும், அம்மாக்கிட்ட போய் ‘உன் பேச்சை கேட்டு தலையாட்டிட்டு இருந்த மாதிரியே இனியும் என் பொண்ணு விஷயத்துல இருப்பேன்னு நினைக்காத! அவளுக்கு நான் செஞ்சு வச்ச கல்யாணம் தான் கடைசிக்கும்! மனோ தான் எனக்கு மருமகன்… அது உனக்கு பிடிக்கலன்னாலும் பரவால்ல! ஏத்துக்க பழகு, இல்லன்னா வீட்டை விட்டு கிளம்புன்னு சொல்லிட்டாரு!” என்றவள்,
“அம்மா அவரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசல தெரியுமா? எனக்கே ஆச்சர்யம்” என்றாள்.
“நீ பேசலாமே உங்கம்மாட்ட…”
“இல்ல மாமா! நான் பேசுனா என்னை எதாவது சொல்லி மிரட்டி மனசை மாத்துவாங்கன்னு அம்மா இருக்க பக்கமே போகக்கூடாதுன்னு அப்பா சொல்லிட்டாங்க!”
“அதனால நீயும் போகல?” என்றவனின் குரலில் கோபம் எட்டிப்பார்த்தது.
“ஒருவேளை அம்மா உங்கக்கூட நான் போகக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டா? அதான் நானும் பயந்துக்கிட்டு போய் பாக்கல!”
அவள் அப்படி சொல்ல, அவளது பயம் நியாயம் என்பதால் சற்று அமைதியாக இருந்தான். அதை கோபம் என்றெண்ணிய கௌசி, “உங்களுக்கு தான் அவங்களை பிடிக்காதே? அப்பறம் என்ன மாமா?” என்றாள்.
“பிடிக்காதா? நான் எப்போ சொன்னேன் அப்படி?” என்றான்.
இவளுக்கு ஏக ஆச்சர்யம்!
எந்நேரமும் கரித்துக்கொட்டிக்கொண்டே இருப்பவரை நியாயமாய் பிடிக்காமல் தானே போக வேண்டும்?!
அவள் பேசும்முன்னே, “சரி நீ வீட்டுக்கு கிளம்பு, நேரமாச்சு!” என்றான்.
“நம்மளை பத்தி பேச என்ன இருக்கு?” வேண்டுமென்றே சீண்டினான்.
“ஒ…ஒண்ணுமே இல்லையா?” முகம் சுண்டிப்போனது அவளுக்கு.
“எதுவும் இருக்குற மாதிரி தெரியலையே எனக்கு? சரி நீ சொல்லு! நம்மள பத்தி பேச என்ன இருக்குன்னு!”
அவன் இப்படி சொல்லிவிட, வீம்புக்கு ‘எதுவும் இல்லை’ என்று சொல்லிவிட்டால், இதான் சாக்கென்று கிளம்ப சொல்லிவிடுவானோ என்றஞ்சி,
“உங்களுக்கு என்னை எப்போ பிடிக்க ஆரம்பிச்சுதுன்னு சொல்லுங்க” என்றாள்.
“இதென்ன கேள்வி? அந்த வீட்லயே உன்னைதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்! உன் பத்து வயசுல இருந்தே பிடிக்குமே!”
சோர்ந்துப்போனாள்.
‘யோவ்… நான் இதையா கேட்டேன்?’ என சட்டையை பிடிக்க வேண்டும் போலிருந்தது.
மூடிய வாய்க்குள் அவனை போட்டு மென்றுக்கொண்டு அமைதியாய் இருந்தாள்.
“அவ்ளோதானா? அப்போ கிளம்பு” என்றான் அவன்.
நேராய் அவனை முறைத்தவள், “பிடிக்கும்ன்னா? என்னை எப்போ லவ் பண்ண ஆரம்பிச்சீங்கன்னு கேட்குறேன் மாமா?” என்றாள் மீண்டும் கிளம்ப சொன்ன கடுப்புடன்.
இருகைகளாலும் வாயை பொத்தியவன், “ஐய்யய்ய… லவ்வா? அதுவும் உன்னையா?” என்று அதிர, மறுகணம் வெடுக்கென எழுந்தவள், வாசல் நோக்கி திரும்பி ஓட பார்க்க, கண்ணிமைக்கும் தருணத்தில் அவள் கரத்தை பிடித்திழுத்து தன் நெஞ்சோடு முட்ட வைத்தான்.
முட்டி நின்றவள் திமிறி ஒடப்பார்க்க, இரு கைக்கொண்டு இறுக்கமாய் அணைக்கட்டினான்.
அவள் அவன் அணை’க்கட்டில் இருந்து திமிறி வெளியேற வெகுவாய் முயன்றாள். அவனும் அசராது தடுத்தான்.
“விடுங்க … என்னை விடுங்க நான் போறேன்!!” சொல்லிக்கொண்டே திமிறியவளுக்கு அழுகை தொண்டை அடைத்தது.
அவன் சிரித்துக்கொண்டே அவளை மேலும் மேலும் அவனோடு நெருக்கினான்.
அவன் நெருக்கத்தை உணர்ந்துக்கொள்ளாதவளுக்கு ஏதேதோ நினைத்து கண்ணீர் முட்ட, “விடுங்க மாமா! இரக்கப்பட்டு ஒன்னும் என்னை கல்யாணம் பண்ண வேணாம்! நீங்க வேற எதாவது ஒழுக்கமான பொண்ணா பார்த்து கட்டிக்கோங்க!” தேம்பிக்கொண்டே அவள் சொன்ன நிமிடம் மனோகரின் முகத்தில் இருந்த சிரிப்பு மொத்தமாய் தொலைந்தது.
சட்டென பிடியை தளர்த்தினான். இதை எதிர்ப்பாராதவள் இரண்டடி தள்ளி சென்று தள்ளாடி நிற்க, அப்போது தான் இறுகி இருந்த அவன் முகத்தை கவனித்தாள்.
அவளுக்கு அவன் சினத்துக்கான காரணம் விளங்கவில்லை.
“ஒழுக்கமான பொண்ணுன்னா? என்ன சொல்ல வர?” என்றான்.
“…..”
“இரக்கப்பட்டு கல்யாணம் பண்ற அளவுக்கு அப்படி என்ன குறை உனக்கு?”
அப்போதுதான் அவள் பேசியது உரைத்தது அவளுக்கு.
“உனக்கு நான் பல வருஷம் முன்னாடியே சொல்லிருக்கேன்! இந்த மாதிரி உன்னை நீயே தாழ்த்திக்குற பேச்சோ, எண்ணமோ உனக்கு வரவே கூடாதுன்னு!!!”
“……”
“சொன்னேனா இல்லையா?” என்ற அவன் கணீர் குரலில் அவள் தலை தன்னால் ‘ஆம்’ சொன்னது.
“நான் சொல்றது எதையுமே நீ எப்பயுமே மதிச்சதே இல்லல? என் வார்த்தை, நான் சொல்றதை… எல்லாமே குப்பை… அப்படிதானே?” அவன் இப்படி கோபப்படும் அளவுக்கு தான் என்ன செய்தோம் என யோசித்தவளுக்கு, இந்த கோபம் இந்த நிமிடத்திற்க்கானது மட்டுமல்ல என்பது விளங்கவில்லை.
“நான் அப்படி நினைக்கலையே மாமா?”
“என்ன அப்படி நினைக்கல? அவனை பாக்காத, பேசாதன்னு சொன்னேன்… கேட்டியா?
பிரச்சனைன்னு அழுதுட்டு இருந்தப்போ எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன், நீ ஒன்னும் செய்யாதன்னு சொன்னேனே… கேட்டியா?
என் பேச்சை எதுல தான் கேட்டுருக்க நீ? அப்படி கேட்டுருந்தா நீ அவ்ளோ கஷ்டப்பட்டுருக்க வேண்டிய நிலைமை வந்துருக்குமா? சொல்லு…?” என்றவன்,
“இனி ஒருமுறை தப்பு பண்ணிட்டேன், கெட்டு போயிட்டேன்னு பேசாதன்னு அவ்ளோ சொல்லியும் அது இன்னும் உன் மனசை விட்டு போகலன்னா என்ன அர்த்தம்? சொல்லு என்ன அர்த்தம்? இவன் என்ன சொல்றது நம்ம என்ன கேட்குறதுன்னு தானே இருக்க நீ?”
மனோவிடம் இப்படி ஒரு அதட்டலை அவள் எதிரிப்பார்க்கவில்லை.
‘இல்லவே இல்லை’ என அவள் மறுக்கும்முன்னே விறுவிறுவென மச்சு படிகளில் ஏறி சென்றான் அவன்.
பார்த்த கணம், “ப்ச்… இப்படி உட்காராதீங்க மாமா! டேஞ்சர்” என அவன் கைசந்தை பிடித்து அவள் இழுக்க,
“நான் டேஞ்சர் சொன்னதெல்லாம் நீ கேட்டியா? நீ சொல்றதெல்லாம் மட்டும் நான் கேட்கணும்…இல்ல?” வெடுக்கென கேட்டான் அவன்.
“ஏன் மாமா இப்படி?” அவன் பிடிவாதத்தில் அவள் அலுத்துக்கொள்ள,
“உன்னை அந்த நிமிஷம் அப்படி… ரத்தத்தோட பார்த்தப்போ… ஷ்…. என் உயிரே என்கிட்ட இல்ல தெரியுமா? எதையுமே சரி பண்ண முடியாம கையாலாகாத என் நிலைமை…! என்மேல பயங்கர கோபம் எனக்கு! அந்த கோபத்துல தான் உன்னை பாக்கவே இல்ல அதுக்கு பிறகு! உங்க அப்பா மேலயும் செம்ம கோபம்… என்னதான் அவர் தெரிஞ்சே உன்னை தள்ளி விடலன்னாலும்… என்னால முடில! அவர்ட்ட முகம் கொடுத்து பேசுறதையே நிறுத்திட்டேன்!” பலநாள் மனத்தாங்கலை எல்லாம் தன்போக்கில் சொல்லிக்கொண்டிருந்தான்.
“சரி மாமா! உங்க பேச்சை கேட்க்காதது தப்பு தான்… இனி அப்படி இருக்க மாட்டேன்! ப்ராமிஸ்! நான் சொல்றேன்ல… இந்த பக்கம் இறங்குங்க” அவன் கையைத்தாண்டி இப்போது முன்புறமாய் கிட்டத்தட்ட தழுவியபடி தன்னோடு இழுக்க முயன்றுக்கொண்டிருந்தாள்.
“சொல்றதெல்லாம் கேட்ப்ன்னா? இந்த மாடில இருந்து குதின்னு சொல்றேன்… குதிக்குறியா?”
அவனை இழுக்கும் முயற்சியை சில நொடிகள் நிறுத்தியவள், வெளியே எட்டிப்பார்த்தாள். விழுந்தால் செம்ம அடி விழும் என தெரிந்தாலும், “ம்ம்… குதிப்பேன்” என்றாள் அவளிடம்.
அவள் சொல்லி முடிக்கும்முன்னே ‘நங்’கென கொட்டினான் அவளை.
‘ஸ்ஸ்… மாமா?’
“என்ன ஓமா!? நல்லதுன்னு சொல்றதை மட்டும் தான் கேட்டுக்க சொல்றேன்! இப்படி கிறுக்குத்தனமா பேசுறதை எல்லாம் இல்ல! புரிஞ்சுதா?” என்றவன் அவள் ‘மாங்கு, மாங்’கென தலை உருட்டவே உள்பக்கம் கால்போட்டு திரும்பி அமர்ந்தான்.
அப்போதும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு இருக்க, “நீங்க இப்டியெல்லாம் பேசவே மாட்டீங்களே மாமா? என்னாச்சு இன்னைக்கு?” என்றாள்.
“இவ்ளோ நாள் உரிமை இல்ல… இப்போ அப்படியா?” என்றவன் குரல் கடுமை இழந்து வர,
அதை சரியாய் உணர்ந்துக்கொண்டவளும், “ஓஹோ… இப்போ என்ன உரிமை இருக்காம்?” என்றாள் அவனை நெருங்கி நின்று.
அவள் விழிகளை நேராய் பார்த்து, “எல்லா உரிமையும் இருக்கு!” அழுத்தமாய் சொன்னான் அவன்.
அவனை போல் அவன் கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியாது நாணம் எழ, வெட்கம் பூசும் முகத்தில் எழுந்த குறுஞ்சிரிப்பை அவனுக்கு காட்டாது மறைக்க எண்ணி வேறுப்பக்கமாய் திரும்பி வேடிக்கை பார்ப்பதை போல நின்றுக்கொண்டாள்.
அவனும் அவளை சீண்டவில்லை.
முதலில் பற்றின்றி பார்த்தவள், சில நிமிடங்களுக்கு பிறகு ஊன்றி கவனித்தாள்.
“சுத்தி இருக்க இடத்துல சின்னதா பேக்டரி செட்டப் பண்ணிட்டு இருக்கேன்! இன்னும் பத்து நாள்ல மெஷின் வந்துடும்! வேலைக்கு ஆளுங்களும் வந்துடுவாங்க! முதலாளி அம்மா வந்து திறந்து வச்சுட்டா, நானும் வேலையை பார்க்க ஆரம்பிச்சுடுவேன்!” அவள் தோளில் கைப்போட்டு சின்ன சிரிப்புடன் சொன்னவனை விளங்காமல் பார்த்தாள்.
“எக்ஸ்போர்ட் பிசினஸ் பண்ண போறேன்! தேங்காய் னார் எக்ஸ்போர்ட்” என்றான்.
“அப்பா செய்யுற மாதிரியா?”
“இல்ல… உங்கப்பா கயிறு தான் செய்யுறாரு! நான் அந்த கயிறு செய்யும்போது வீணாகுற தூளை வச்சு எக்ஸ்போர்ட் பண்ணப்போறேன்…”
“அந்த உமியை தண்ணில ஊறவச்சு உலர்த்திட்டா அதுல இருக்க உப்புத்தன்மை போய்டும்… அந்த அன்சால்டட் வெரைட்டிக்கு காசு அதிகம்!
அந்த உமியை ‘கேக்’ மாதிரி கெட்டியாக்கன்னே மெசின் இருக்கு! அப்படி கேக்’கேக்கா திரட்டி அனுப்புனா அதை அவங்க உதிர்த்து போட்டு செடி வளர்க்க, புல்தரை அமைக்கன்னு நிறைய விஷயத்துக்கு யூஸ் பண்ணுவாங்க!
அது நிறைய நீர் உறிஞ்சுங்குறதால பெட் அனிமல்ஸ்க்கு படுக்கையா, கால்மிதியா… இன்னும் ஏன், தட்டு டம்பளர் ஸ்ட்ரா கூட அதுல செஞ்சு யூஸ் பண்ணுவாங்க!” என்றவனை ‘ஆ’வென பார்த்தாள்.
“மனசுல இது செய்யணும்ன்னு ரொம்ப நாளா இருந்துச்சு! சைடுல எல்லாம் விசாரிச்சுக்கிட்டே இருந்தேன்! இப்போ எடுத்து செய்ய நேரமும் வந்துடுச்சு! முதலாளியும் வந்துட்டீங்க!” என்றான் தோளணைத்து இருந்தவளை இன்னும் நெருக்கி.
முற்று பெறாத அந்த ‘செட்டப்’பை அவள் பார்த்துக்கொண்டே நிற்க, “நான் செய்யுறது எந்த விதத்துலயும் உங்க அப்பாவுக்கு போட்டியா வந்துடாதும்மா!” என்றான் கிண்டல் போல…
“ப்ச்! போங்க மாமா! நான் அப்படி ஒன்னும் நினைக்கல!”
“ஹாஹா! நினைக்கலன்னாலும் சொல்லணுமே!” என்றவன் அடுத்து சில நேரம் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க, அவளும் அவனுக்கு ஈடுகொடுத்து கலகலத்து கொண்டிருந்தாள்.
‘இதற்குமேல் தாமதிக்க முடியாது!’ என்றதால் அவளும் தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.
“பார்த்து பத்திரமா போனும்! ஓவர் ஸ்பீடோ, கனவு கண்டுக்கிட்டே வண்டி ஓட்டுறதோ இருக்கக்கூடாது!” கண்டிப்பு போல சொல்ல,
“உத்தரவு அரசே!” என வண்டியில் அமர்ந்த வாக்கிலேயே இடைவரை குனிந்து சொன்னாள் அவள்.
சத்தமாய் சிரித்தவன், “வாலு! சரி நான் ஒன்னு சொல்லுவேன்… நீ கேட்கணுமே!?” என்றான்.
“உத்தரவிடுங்கள் மன்னா! நாய் வாலாகினும் நிமிர்த்திவிட்டு வருகிறேன்” என வீரவசனம் பேசியவளுக்கு அவன் சொன்னதை கேட்ட பிறகு, ‘ஐயோ இதுக்கு நான் நிஜமாவே நாய் வாலை நிமிர்த்துடுவேனே!’ என்றிருந்தது.
ஆயினும் ‘சரி’ என மண்டையை உருட்டிவிட்டு கிளம்பினாள். வரும் வழி நெடுகிலும் யோசனையே!
‘முடியுமா? முடியுமா?!’ என்று…!
வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தவள் நேரே அன்னை இருந்த அறை கதவை தட்டினாள்.
மனதிற்குள்ளோ, “உங்கம்மாக்கிட்ட பேசி நம்ம கல்யாணத்தை ஒத்துக்க வை! அவங்க இஷ்டப்பட்டு உன்னை இங்க அனுப்பனும்! இல்லன்னா அவங்க சரின்னு சொல்றவரைக்கும் நீ அங்கேயே தான் இருப்ப!
என்னால நீ இல்லாம இனி ரொம்ப நாள் ஓட்ட முடியும்ன்னு தோணல! உன்னை அனுப்பவே மனசில்லாம தான் அனுப்புறேன்!
சீக்கிரமா என்கிட்ட வரணும்! அதுக்கு உங்க அம்மா ஒத்துக்கணும்! எல்லாம் உன் கைல தான் இருக்கு!!!” கிளம்பும்போது மனோ சொன்னதும் ஒலிக்க,
‘கடவுளே அம்மாவை சம்மதிக்க வை!!!’ என பிராத்தித்துக்கொண்டே அவர் அறைக்கதவை திறந்தாள் கௌசல்யா.