அழகு தேவதையாக இருந்த அவளைப் பார்க்க பார்க்க மணிமாறனுக்கு அவளைச் சேர முடியவில்லையே என்ற தவிப்பு எழுந்தது. தவிப்புகள் பெருகி பெருகி பெரிய தாபமாக உருவெடுத்தது. அவளுடைய அறையில் வைத்து வெகு அருகாமையில் அவன் நுகர்ந்த அவளது வாசனையும், வெண்ணை போல இருந்த அவளது தேகமும் அவனை பெரிதும் தாக்கியிருந்தது.
இருவரும் சேர்ந்து வாங்கிய கிஃப்டை பரிசளித்தார்கள். பின் அவள் தேவகியுடன் அமர்ந்து உணவு அருந்த மணிமாறனோ கதிரவனுடன் அமர்ந்து உண்டான். கடைசி நேரத்தில் கதிரவனும் அங்கே வந்திருந்தார்.
பங்ஷன் முடிந்ததும் கதிரவனும் தேவகியும் நாளை வருவதாக சொல்ல பூங்கொடியை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான் மணிமாறன். திரும்பி வரும் போது அவன் எதுவும் பேச வில்லை. அவனால் பேச முடிய வில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும்.
அவளிடம் இருந்து ஒற்றை முத்தமாவது கிடைத்தால் தான் தன்னுடைய மயக்கம் தீரும் என்று அவனுக்கே புரிந்தது. அவளோ அவன் மனநிலை புரியாமல் பங்ஷன் வீட்டில் நடந்தவற்றைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள். வீட்டுக்கு வராததால் தேவகி திட்டியதையும் சொல்லிக் கொண்டிருந்தாள்.
வெகு நேரம் அவன் அமைதியாக வர “என்ன ஆச்சு உங்களுக்கு?”, என்று கேட்டாள்.
“ஒண்ணும் இல்லை”
“இல்லை, உங்க முகமே சரி இல்லை. என்ன ஆச்சுன்னு சொன்னா தானே தெரியும்?”, என்று அவள் கேட்க காரை நிறுத்தியே விட்டான்.
சுற்றிலும் இருளாக தெரிய அந்த இடமே அவளுக்கு பயமாக இருந்தது. “இப்ப எதுக்கு காரை நிப்பாட்டுனீங்க? என்ன ஆச்சுன்னு சொல்லப் போறீங்களா இல்லையா?”, என்று கேட்டாள்.
“என்ன டி தெரியணும் உனக்கு? இப்ப இந்த நிமிஷம் உன்னை கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுக்கணும் போல இருக்கு. அதான் இப்படி இருக்கேன் போதுமா? இப்ப என்ன செய்ய போற?”, என்று கேட்ட படி அவளைப் பார்த்தான்.
அவனை பெவென்று பார்த்தவள் அடுத்த நொடி தலை குனிந்து “ஆமா இத்தனை நாள் என் கிட்ட கேட்டுட்டு எல்லாம் செய்ற மாதிரி சொல்றீங்க? இப்ப மட்டும் என்னவாம்?”, என்று முணுமுணுத்தாள்.
அவள் சொன்னது அப்படியே அவன் காதில் கேட்க அடுத்த நொடி அவள் மீது பாய்ந்து விட்டான். முதலில் அவளுடைய உதட்டுக்கு மிக நீண்ட அழுத்தமான முத்தத்தைக் கொடுத்தவன் அதன் பிறகு அவள் முகம் முழுவதும் குட்டிக் குட்டி முத்தங்களால் அலங்கரித்தான்.
ஒவ்வொரு முத்தத்துக்கும் “கொடி… கொடி”, என்று அவன் பிதற்ற “ம்ம்”, என்ற முனகல் மட்டுமே அவளிடம் இருந்து வந்தது.
அவளின் அந்த ஒலி கூட அவனைத் தூண்ட அவள் கழுத்தில் பல் படும் படி கடித்து வைத்தான் காதல் கணவனாய். வலி தாங்க முடியாமல் அவள் “ஸ்ஸ்ஸ்”, என்று முணுமுணுக்க மீண்டும் அவள் இதழ்களை சிறை செய்தான்.
சேலை மறைக்காத வெற்றிடையில் அவன் கரம் பதிய அவன் செய்கையில் துடித்துக் கொண்டிருந்தாள் பூங்கொடி. அப்போது பார்த்து ஒரு வண்டி ஹாரன் சவுண்ட் கேட்க அவளிடம் இருந்து விலகினான் மணிமாறன். அவளும் உடையை சரி செய்து விட்டு நேராக அமர்ந்தாள்.
“தேங்க்ஸ் டி”, என்று சொல்லி அவன் சிரிக்க அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் “பேசாம காரை எடுங்க”, என்றாள் பூங்கொடி.
சந்தோஷமாக காரைக் கிளப்பினான். அவளுடைய வீட்டுக்கு வரும் போது அனைவரும் உறங்கி இருக்க கேசவன் மட்டுமே விழித்திருந்தார்.
மணிமாறன் அவளை விட்டுவிட்டு செல்லும் போது “நேரம் ஆச்சு மாப்பிள்ளை, நைட் இங்கேயே இருங்க”, என்றார் கேசவன்.
இன்று அவளுடன் இருந்தால் இரவில் தன்னைக் கட்டுப் படுத்துவது கடினம் என்று புரிய மறுத்துச் சென்று விட்டான். போகும் அவனையே பார்த்திருந்த பூங்கொடிக்கு “இன்னைக்கு ஒரு நாள் இங்க இருந்தா தான் என்னவாம்?”, என்று தோன்றி வைத்தது.
அவனைப் பற்றிய நினைவுடன் அவளுடைய அறைக்குச் சென்றாள். அவனைப் பற்றிய சுகமான நினைவுகள் அவள் மனதை நிறைக்க தூக்கம் வராமல் புரண்டாள்.
அவளுடைய நினைவில் வீட்டுக்குச் சென்றவன் உடையை மாற்றி விட்டு ஸ்டேஷன் சென்றான். அவனைக் கண்ட ராமர் “சார், நான் எல்லா உண்மையையும் சொல்றேன் சார். தயவு செஞ்சு என்னை இந்த கேஸ்ல இருந்து காப்பாத்துங்க. எனக்கு என் மனைவி கூட வாழனும் சார். என் பிள்ளைகள் கூட இருக்கணும். எனக்கு உதவுங்க”, என்று சொல்லி அவன் காலிலே விழுந்து விட்டான்.
“சரி என்னை மாட்டி விடச் சொன்னது யாரு?”, என்று நிதானமாக கேட்டான்.
“ரங்கசாமி தான் சார்”
“அவன் நேரடியா பேசினானா?”
“ஆமா சார், அவருக்கு ஜெயில்ல போன் எல்லாமே கிடைக்குது. உங்க டிப்பார்ட்மெண்ட்ல இருக்குற பல பேர் அவருக்கு விசுவாசி”
“இதை கோர்ட்ல வந்து சொல்லுவியா?”
“சொல்றேன் சார்”
“சரி, நீ விக்குற கஞ்சா எங்க இருந்து வருது?”
“சார், அது வந்து ரயில் வண்டி மாதிரி சார். என்னை மாதிரி பழம் விக்குறவங்க, ஐஸ்கிரீம் விக்குறவங்க எல்லாருமே கஞ்சா விக்குறாங்க. எங்களுக்கு சொர்ணம்னு ஒரு பொம்பளை கொடுப்பா. அவ வேற ஒருத்தர் கிட்ட இருந்து வாங்குவா”
“இது எல்லாம் எங்க இருந்து வருதுன்னு உனக்கு தெரியாதா?”
“தெரியும் சார். ஒரு நாள் என்னை இந்த தொழில்ல இழுத்து விட்ட ஒருத்தன் பேசினான்”, என்று ஆரம்பித்து அவனுக்கு தெரிந்ததைச் சொல்ல அடுத்த நாளே அந்த விசாரணையில் இறங்கி விட்டான் மணிமாறன். அடுத்த இரண்டு நாளில் ராமரிடம் கேட்ட தகவலை வைத்து கஞ்சா கும்பலையே பிடித்து விட்டான். ஆனால் அதற்கும் தலைவனாக ரங்கசாமி தான் இருப்பான் என்று அவனே எதிர் பார்க்க வில்லை.
அன்று கொய்யாப் பழ வியாபாரி ராமர் கேஸ் விசாரணைக்கு வருகிறது என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். விசாரணையில் பல உண்மையும் வெளியே வந்தது.
அடுத்த நாள் காலேஜ் விடுமுறை என்பதால் நிதானமாக எழுந்தாள் பூங்கொடி. கேசவன் பேப்பர் படித்துக் கொண்டிருக்க இவள் வரவும் “நீ பேப்பர் பாரு டா. நான் கடைக்கு கிளம்பனும்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.
பேப்பரை எடுத்துப் பார்த்த பூங்கொடி அதிர்ந்து போனாள். அந்த ராமர் மேல் எந்த தவறும் இல்லை என்று சொல்லி அவன் விடுதலை ஆகி இருந்தான். ஆனால் அதில் என்னல்லாமோ போட்டிருந்தது. அதைப் படித்து விட்டு அவளுக்கு குழப்பமாக இருந்தது. அவளால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.
அந்த ராமர் வெளியே வந்ததில் அவளுக்கு அதிக சந்தோஷம். உடனே ராமரின் மனைவியை அழைத்தாள். அந்த பக்கம் எடுக்கப் பட்டதும் “ஹலோ, பகவதியா?”, என்று கேட்டாள்.
“நான் பகவதி வீட்டுக்காரர் பேசுறேங்க. அவளை ஆஸ்பத்திரில சேத்துருக்கேன். குழந்தை பிறக்க போகுது”, என்றான் ராமர்.
“நீங்க வெளிய வந்துட்டீங்களாண்ணே?”
“பல வருஷம் களி திங்க வேண்டிய என்னை ஒரு புண்ணியவான் வெளிய விட்டுட்டான் மா. அவனும் அவன் குடும்பமும் நல்லா இருக்கணும். ஆமா நீங்க யாரு? என் பொண்டாட்டியை உங்களுக்கு எப்படி தெரியும்?”
“நான் மணிமாறனோட மனைவி பேசுறேன்”, என்று தயக்கத்துடன் சொன்னாள். பொய்க் கேஸ் போடப் பார்த்ததுக்கு மணிமாறனை அவன் திட்டுவான் என்றும் தன்னையும் அவன் திட்டி போனை வைப்பான் என்றும் அவள் எதிர் பார்த்தாள்.
ஆனால் அவனோ “அம்மா தாயே, எப்படி மா இருக்க? நீ மட்டும் இல்லைன்னா இந்நேரம் நான் களி தான் தின்னுருக்கணும். நீ நல்லா இருக்கணும் மா. உன் புருஷன் எனக்கு சாமி மாதிரி மா”, என்றான் ராமர்.
“என்ன சொல்றீங்க?”, என்று அவள் அதிர்ந்து போய்க் கேட்க “சொல்றேன் மா. உங்க கிட்ட பகவதி என்னை நல்லவன்னு சொன்னாளா மா?”, என்று கேட்டான்.
“ஆமா, கொய்யாப் பழம் விக்குறவர்னு சொன்னாங்க. ஆனா பேப்பர்ல ஏதோ போட்டுருக்கு”
“இல்லை மா, உண்மையிலே நான் ஒரு கஞ்சா வியாபாரி”
“என்ன சொல்றீங்க?”
“ஆமா, கொய்யாப் பழத்துக்கு அடியில கஞ்சா தான் இருக்கும். ஒரு நாள் எக்ஸ். மினிஸ்டரோட ஆள் ஒருத்தன் என்னைப் பாக்க வந்தான். பணத்தைக் காட்டி ஆசை காமிச்சு உன் புருசனோட வண்டில கட்டு கட்டா பணம் வைக்கச் சொன்னாங்க. மினிஸ்டரும் பேசினார்”
“என்னது பணமா?”
“ஆமா, அவர் மினிஸ்டரை மாட்டி விட்டதுக்கு அவரை மாட்டி விடவாம்”
“நீங்க என்ன செஞ்சீங்க?”
“பணத்துக்கு ஆசைப் பட்டு நான் செஞ்சேன் மா. அவர் லஞ்ச ஒழிப்புத் துறைல மாட்டப் பட்டார். ஆனா உங்க புருஷன் அதுல இருந்து தப்பிச்சிட்டார்”
“இவ்வளவு விஷயம் நடந்துச்சா? அதான் அவன் சரியாவே வீட்டுக்கு வரலையா?”, என்று எண்ணிக் கொண்டு “அப்புறம் என்ன ஆச்சு?’, என்று கேட்டாள்.