“அப்புறம் எங்கயோ கிடைச்ச வீடியோ வச்சு என்னை பிடிச்சி விசாரிச்சார். என் கஞ்சா தொழிலையும் கண்டு பிடிச்சார். யார் கிட்ட இருந்து கஞ்சா வாங்குறேன்னு கேட்டு மிரட்டினார். பொய்க் கேஸ் போடப் போறேன்னு சொன்னார். (Alprazolam) என் பொண்டாட்டி என்னைப் பாக்க வந்தப்ப அவ கிட்ட பொய்ச் சொன்னேன். அவ பூ மாதிரி மா. அவளுக்கு நான் கஞ்சா வித்தது தெரிஞ்சா உயிரையே விட்டுருவா. என்னை அப்படி நம்புவா. அவளைக் காப்பாத்த தான் நானும் அந்த பாழாப் போன தொழிலை செஞ்சேன். அப்புறம் தான் அவ உன்னை வந்து பாத்துருக்கா. அடுத்த நாளே உன் புருஷன் என் கிட்ட சொன்னார் மா. பகவதி உன்னைப் பாத்ததும், நீ அவளுக்காக பேசியதையும். கேஸே இல்லாம செய்றேன் உண்மையைச் சொல்லுன்னு சொன்னார். என் குழந்தைகள் அனாதையாகிரும்ன்னு எடுத்துச் சொன்னார். அதான் அப்ரூவர் ஆகிட்டேன்”
……
“உண்மையான கஞ்சா கும்பலை பிடிச்சிட்டாங்க. சாரும் சொன்ன மாதிரி என்னை வெளிய விட்டுட்டார். அதுவும் எப்படி தெரியுமா மா? அந்த கஞ்சா கும்பல் என்னை மிரட்டி கஞ்சா விக்கச் சொன்னதாவும் நான் அதை போலிஸ்க்கு தெரியப் படுத்தி அவங்களைப் பத்தி சொன்னதாவும் என்னைப் பத்தி பெருமையா சொல்லிட்டார் மா. எனக்கு கவர்ன்மெண்ட்ல இருந்து ரூபாயும் வாங்கிக் கொடுத்துருக்கார். பிள்ளை பிறந்ததும் எங்களை வேற ஊருக்கு அனுப்பி வைக்கிறேன்னு ஐயா சொன்னார் மா. நான் இனி இந்த தப்பை செய்ய மாட்டேன் மா. இது என் பொண்டாட்டி, பிள்ளை மேல ஆணை. அம்மா ஒரு நிமிஷம் இரு மா. நர்ஸ் வராங்க”, என்று அவன் சொல்ல சற்று நேரத்தில் அவன் கையில் குழந்தையைக் கொடுத்தார்கள்.
அவன் ஆசையோடு அதைக் கொஞ்ச, குழந்தைக்கு பாலூட்ட நர்ஸ் குழந்தையைக் வாங்கிக் கொண்டு சென்றாள்.
“அம்மாடி, எனக்கு பொண்ணு பிறந்திருக்கா மா. என் பிள்ளையைப் பாப்பேனான்னு கனவு கண்டேன். இப்ப பாத்துட்டேன். உன் புருஷன் நல்லா இருக்கணும் மா”, என்றான்.
“சரிங்க, நீங்க உங்க மனைவியை பாத்துக்கோங்க”
“சரி மா, அப்புறம் உன் பேர் என்ன மா?”
“பூங்கொடி”
“உன் பேரைத் தான் மா என் குழந்தைக்கு வைக்க போறேன். நல்லா இரு மா”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டான்.
இங்கே அவளுக்கு சிலிர்த்துப் போனது. தன்னையும் சேர்த்து பெருமைப் படுத்திய கணவனை எண்ணிப் பார்த்தாள். உடனே அவனிடம் போகத் தோன்றியது அவளுக்கு. ஆனால் குற்ற உணர்வு தடுத்தது. எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவனைப் பார்ப்பாளாம்?
அவன் அவ்வளவு சொன்ன போது அவன் பக்கம் நியாயம் இருக்கும் என்று அவள் ஏன் எண்ண வில்லை? அந்த பகவதி கணவனை அப்படி நம்பும் போது தான் ஏன் நம்பாமல் போனோம் என்று எண்ணி உள்ளம் குமுறினாள்.
கதிரவன் மற்றும் தேவகி சொன்னதையும் நம்பவில்லையே. அவர்கள் பேசுவதையும் கேட்கவில்லை. அவர்கள் போனையும் எடுக்காமல் அவர்களை மதிக்கவும் இல்லை.
தான் நல்ல மனைவியாகவும் இல்லை, நல்ல மருமகளாகவும் இல்லை என்று உள்ளுக்குள் நொந்து போனாள்.
அவனிடம் மன்னிப்பு கேட்க கூட தனக்கு தகுதி இல்லை என்று எண்ணினாள். காலேஜ் சென்ற போது “இப்ப என்ன டி பிரச்சனை?”, என்று ரேவதி கேட்க அனைத்தையும் சொன்னாள்.
“அண்ணாவோட கண்ணுலே நேர்மை இருக்கு டி. நீ எப்படி அவங்களை சந்தேகப் பட்ட?”, என்று ரேவதி கேட்க அவளுக்கு அழுகையாக வந்தது.
“சரி மன்னிப்பு கேளு. அழுதுட்டே இருக்காதே”, என்று ரேவதி எளிதாக சொல்லி விட்டாள் தான். ஆனால் அதைச் செய்ய தான் பூங்கொடியால் முடிய வில்லை.
காலேஜ் முடிந்து வீட்டுக்கு வந்தாலும் அவளால் யாரிடமும் சரியாக பேச முடியவில்லை. வீட்டில் உள்ளவர்கள் அவனை புகழ்ந்து தள்ள அவளுக்கோ மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அவனது நினைவுகளே அவளை ஆக்ரமித்தது.
அவன் தன்னை அழைப்பானா என்று கூட ஏங்கினாள். ஆனால் அங்கிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. அவனும் அதே நேரம் அவளைப் பற்றி தான் நினைத்துக் கொண்டிருந்தான்.
அவளிடம் இருந்து அழைப்பு வருமா என்று ஏங்கினான். பேப்பரில் வந்ததைப் பார்த்து ராமரை வெளியே விட்டதுக்கு என்னைப் பாராட்டுவாளா, இல்லை ஒரு நல்லவனை ஜெயிலில் பிடித்து வைத்து விட்டாய் என்று திட்டுவாளா என்று குழம்பினான்.
ராமர் நல்லவன் என்று சொல்லி அவனுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது அவன் தான். ஆனால் அதை அவள் சரியாக புரிந்து கொள்வாளா என்று குழப்பமாக இருந்தது அவனுக்கு.
அது அந்த ராமரே வந்து சாட்சி சொன்னால் தான் நம்புவாள் என்று அவனுக்கே புரிந்தது. ஆனாலும் ஒரு ஆசை அவள் வந்து விட மாட்டாளா என்று? என்றாவது ஒரு நாள் அவளே என்னைத் தேடி வருவாள் என்று அவனே அவனை ஆறுதல் படுத்திக் கொண்டான்.
அன்று இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்குள் வந்த பூங்கொடி கட்டிலில் அமர்ந்து அவனை நினைத்து தேம்பி தேம்பி அழுதாள். அப்போது அவளது நீள பின்னல் கண்ணில் பட அதை எடுத்துப் பார்த்தாள். தலை முடியைப் பார்த்ததும் முன்பு ஒரு நாள் நடந்தது நினைவில் வந்தது.
திருமணம் ஆன புதிதில் ஒரு நாள் அவனுடைய மேலதிகாரி ஒருவர் அவனை விருந்துக்கு அழைத்திருந்தார். அதற்காக இருவரும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். குளித்து முடித்த பூங்கொடி சேலையை அணிந்து கொண்டு அவளது நீண்ட கூந்தலை உதறி காய வைத்துக் கொண்டிருந்தாள்.
குளித்து முடித்து வந்த மணிமாறன் அவள் தலை முடியைப் பார்த்து அப்படியே நின்று விட்டான். இத்தனை நாள் அவள் தலையை விரித்துப் போட்டதை அவன் பார்க்கவே இல்லை.
குறுகுறுப்போடு அவனைத் திரும்பி பார்த்தவள் அவன் பார்வை புரியாமல் “என்ன ஆச்சு?”, என்று கேட்டாள்.
அவள் அருகே வந்தவன் அவளது ஈரக் கூந்தலை வருடி “உண்மையான முடியா டி இது?”, என்று கேட்டான்.
“ஆமா, பின்ன ஒட்டு முடியா வைப்பாங்க?”, என்று கேட்டு விட்டு அவள் மீண்டும் தலையை துவட்ட ஆரம்பிக்க அவன் அவளை பின்னிருந்து அணைத்து அவள் கூந்தலில் முகம் புதைத்தான்.
“என்ன பண்ணுறீங்க? நேரம் ஆச்சு விடுங்க”, என்றாள் பூங்கொடி.
“அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்தப்பவே உன் கொண்டையை விரித்து காட்டுன்னு கேக்க வந்தேன் டி. இன்னைக்கு தான் உன் முடியை பாக்க சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. அப்படியே பட்டு மாதிரி மயில் தோகை மாதிரி இருக்கு”, என்று பிதற்றிய படியே அவள் கூந்தலை வாசம் பிடித்தான்.
“எனக்கு என்னவோ போல இருக்கு”, என்று அவள் குரல் குழைய அவளுடைய முதுகில் பரவிக் கிடந்த அவளது கூந்தலை விலக்கி அவளுடைய ஜாக்கெட் மறைக்காத கழுத்தை குட்டிக் குட்டி முத்தங்களால் அர்ச்சனை செய்தான்.
அவனுடைய மூச்சுக் காற்றின் வெப்பம் அவள் முதுகைச் சுட படக்கென்று திரும்பி நின்றாள். இப்போது அவன் இதழ்கள் அவளுடைய இதழ்களை முற்றுகையிட இதற்கு திரும்பியே நின்று இருக்கலாமோ என்று எண்ணினாள்.
பழைய விஷயங்களை எல்லாம் யோசித்த படி இருந்த பூங்கொடிக்கு அவனுடைய அருகாமை வேண்டும் போல ஏக்கமாக இருந்தது. அழுது கொண்டே இருந்தாள்.
அப்போது வேலை முடிந்து வீட்டுக்கு வந்தான் மணிமாறன். அவன் முகத்தில் இருந்த சோர்வைக் கண்டார் கதிரவன். அந்த சோர்வு வேலையால் வந்தது அல்ல என்று அவருக்கு புரிந்தது. மகனின் மனக்கவலை அவருக்கு தெரியாதா என்ன?
“மாறா, குளிச்சிட்டு சாப்பிட வா”
“அத்தை எங்கப்பா?”
“பத்மாக்கு உடம்பு சரியில்லையாம். தேவகியை வரச் சொன்னா. நான் தான் கூட்டிட்டு போய் விட்டுட்டு வந்தேன்”
“நீங்க சாப்பிட்டீங்களாப்பா?”
“சப்பாத்தி செஞ்சு வச்சிட்டு தான் போனா. நான் சாப்பிட்டேன். நீ சாப்பிட வா”
“வேண்டாம் பா, எனக்கு பசிக்கலை”
“டேய் இப்ப தான் அந்த ராமரை வெளிய விட்டாச்சுல்ல? நீ மருமகளுக்கு உண்மையைச் சொல்லி அவளை இங்க கூட்டிட்டு வா டா. அவ இல்லாம வீடு வீடாவே இல்லை”
“அவளைக் கூப்பிட போக நான் ரெடி தான் பா. ஆனா அவ வருவான்னு தெரியலை”
“எதை வச்சு அப்படிச் சொல்ற?”
“விஷயம் இந்நேரம் அவளுக்கு தெரிஞ்சிருக்குமே பா. ஒரு போன் கூட அவ பண்ணலை”
“எதுக்கும் நீ போய் பாரேன் டா”
“அவ என் கூட வர மாட்டேனு சொல்லிட்டா என்னால தாங்க முடியாது பா”
“புருஷன் பொண்டாட்டிக்குள்ள இதெல்லாம் பாக்க கூடாது டா”
“அவளே வருவாப்பா. ஒரு போனாவது பண்ணட்டும். நான் போறேன்”
“ஏன் டா பிடிவாதம் பிடிக்கிற? இத்தனை நாள் அவ வீட்டுக்கு போயிட்டு தானே இருந்த?”
“அப்ப இந்த கேஸ் முடியலைப்பா. அதனால அவளை என்னால பாக்க முடிஞ்சது. ஆனா இப்ப கேஸ் முடிஞ்சு அவன் வெளிய வந்துட்டான். இப்ப பூங்கொடி மனசுல என்ன இருக்குனு தெரியலை. அப்புறம் இது பிடிவாதம் இல்லைப்பா. என்னோட ஏக்கம். இத்தனை நாள்ல அவளால என்னை நல்லவனா கெட்டவனான்னு கூட புரிஞ்சிக்க முடியலைல? அப்ப இத்தனை நாள் வாழ்ந்ததுக்கு என்னப்பா அர்த்தம்?”, என்று சொன்னவனின் குரலில் இருந்த வலி அவருக்கு புரிந்தது.