உணவை முடித்து மொட்டை மாடியில் தன்னுடைய அறைக்கு அருகில் இருந்த துணியை காய வைக்க வேண்டி வைஷ்ணவியின் அன்னையின் வேண்டுதலின் பெயரில் போடப்பட்டிருந்த ஷெட்டில் அடம் பிடித்து ஒரு மூங்கில் நாற்காலியில் அமர்ந்து தீவிரமான யோசனையில் இருந்தாள்.
கூடவே இரண்டு முறை கீழே சென்று இரவு உணவை முடித்து கையில் ஒரு தண்ணீர் பாட்டிலுடன் தன்னுடைய அறைக்குள் நுழைந்த கார்த்தி வேறு அவளது யோசனையை பலப்படுத்திவிட்டிருந்தான். கைபேசியில் மணியை பார்த்தாள்… இரவு பத்து முப்பதை தாண்டி இருந்தது.
“தூங்கிருப்பாளோ” யோசித்தவள் உதட்டை சுளித்து, “எந்திரிக்கட்டும்” அழைத்துவிட்டாள் ஷெர்லின் எண்ணிற்கு.
இரண்டு ரிங்கிலே அழைப்பை ஷெர்லின் ஏற்ற உடன், “உள்ளம் மட்டும் நானே உசிரைக் கூடத்தானே என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்”
வைஷ்ணவி ராகம் இழுக்க அந்த பக்கம், “என் நண்பன் போட்ட சோறு உப்பு கரிக்கும் பாரு… நட்பை கூட தேர்வு செய்வதில் தவறினேன்…”
பல்லை கடித்து எச பட்டு பாடிய ஷெர்லின் எரிச்சல் இங்கு வைஷ்ணவிக்கு தெரிந்தாலும் காரியமே கண்ணாய் , “ஏன் ஏகாம்பரம் இந்த எதுத்த வீட்டு கார்த்திக் பத்தி நீ என்ன நினைக்கிற?”
“இப்ப தானே தெரியுது மாட்டுக்காரன் பட்டு பாடுறது மாட்ட சிரிக்க வைக்க இல்ல, மாட்டோட பால கறக்க-னு”
“ஆம்பள மாட்டுக்கு பால் கறக்க மாட்டாங்களே ஏகாம்பரம்” – வைஷ்ணவி
“அதுக்கு காளை மாடுன்னு பேர் இருக்கு இன்சு. இது கூட தெரியாம சில ஜீவன்கள் பி.ஈ டிகிரி வாங்கி கட்டடம் கட்ட போய்டுச்சுக” – ஷெர்லின்
“மனுசங்க மனச படிக்க தெரிஞ்சவங்க, உலகத்தை படிக்க மறந்துர்ரது தப்பா தான் இருக்கு பாரேன்… சரி ஆம்பள மாடு மேட்டர்க்கு வா நீ” பொறுமை இல்லை வைஷ்ணவிக்கு.
“ம்ம்ம் உனக்கு கொஞ்சம் கூட செட் ஆகாத அப்பாவி பையன்”
நெஞ்சை பிடித்து, “யோவ் ஏட்டு மனச செதச்சிடயா மனச செதச்சிட்ட” போலியாக நடித்தாள்.
“ஊரே இத தான் இன்சு சொல்லும்”
“ஊரு ஆயிரம் சொல்லும் ஏட்டு ஆனா அந்த பையன் மனசுல நான் இருந்தா?” கேள்வி எழுப்பி கையை காற்றில் நிறுத்தி வைத்தாள் வைஷ்ணவி.
“ஷூட்டிங் வந்த தனுஷ் கூட போட்டோ எடுத்து அவருக்கு என் மேல ஒரு இது இருக்குன்னு சொன்ன உன் பேச்சை எல்லாம் நம்ப நான் ஒன்னும் பிதாமகன் விக்ரம் இல்லங்க இன்ஸ்பெக்டர் அய்யா”
“தெரியும்டி நீ என்ன நம்ப மாட்ட-னு ஆனா சொல்றேன் கேளு. இன்னைக்கு அவர் எனக்கு டீ வாங்கி தந்து, பஸ்ல வர்றேன்னு தெரிஞ்சு சைட்ல இருந்து செங்கோட்டை வர நான் வர்ற பஸ்க்கு முன்னாடியே, அடிக்கடி பஸ் பின்னாடி தான் வருதான்னு பாத்துட்டே வந்தார்” – வைஷ்ணவி
“எதேச்சையா நடந்துருக்கும் ஒடனே நீ ஒரு கதையே கட்டிடு” – ஷெர்லின்
“நான் பஸ் ஸ்டாப்ல இருந்து வீட்டுக்கு வந்துட்டேன்னு வாசல்லயே நின்னு நான் பத்திரமா வந்துட்டேன்னு செக் பண்ணிட்டு தான் உள்ள போனான். அப்ப இது லவ் தானே ஜெஸ்ஸி?” எஸ்.டி.ஆர் போல் பேசியவளை எதை வைத்து அடிக்கலாம் என்று யோசித்தாள்.
“வேற ஏதாவது வேலையா வந்துருப்பார் உன்ன பாத்தது பயந்துட்டு உள்ள போயிருப்பார்”
“என்ன கமிட் ஆகவே விட மாட்டியா நீ?” பாவமாய் கேட்டாள் வைஷ்ணவி.
“லவ் பண்றதுக்கு இருக்குற எந்த சிம்டஸ்சும் உன்கிட்ட இல்லடி” புரியவைக்க நிதானமாய் பேசினாள் தோழி,
“கண்டிப்பா நீ மாடு மாதிரி சாப்புடுவ, கும்பகர்ணன் மாதிரி தூங்குவ, சுத்தி இருக்குற எல்லாம் அந்த பையனா தெரியணும், உனக்கு தெரியுதா? சாத்தியமா இருக்காது. இப்ப சொல்றேன் கேளு லவ் பண்ற தகுதி கூட உனக்கு வரல. பாவம்டி அவரை விற்று”
“ஷெரூ பாப்பா… நீ படம் பாத்து ரொம்ப கெட்டு போயிட்ட. திங்கிறது தூங்குறது மட்டும் லவ் அறிகுறி இல்லடி. எந்நேரமும் எப்ப அவன் நம்ம கண் முன்னாடி வந்து நிப்பான்னு யோசிக்க வைக்கும். இந்நேரம் அவன் என்ன செஞ்சிட்டு இருப்பான், நாம அவனை நினைச்சிட்டு இருக்குற மாதிரி அவனும் நம்மள ஒரு தடவையாவது நினைச்சு பாப்பானான்னு ஒரு ஆசை வரும் பாரேன் அது வெறும் ஒரு அட்ராக்க்ஷன்-னு விட முடியல” என்றவளுக்கு முகத்தில் தானாய் ஒரு சிரிப்பு.
“இல்ல இந்நேரம் அவனுக்கு லவ்-னு ஒரு பொண்ணு இருந்து அவ கூட தன்னோட எதிர்காலத்தை பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருப்பானோ-னு நினைக்கிறப வந்தது பாரேன் ஒரு வலி…” தலையை ஆட்டி அந்த எண்ணத்தை தூர வைத்தாள்.
“நான் சைட் அடிச்ச அந்த பசங்கள மாதிரி கார்த்திக் இல்ல…”
தீர்க்கமாக பேசியவள் தோழியை பதிலுக்காக காத்திருக்க, “எப்ப இருந்து இந்த எண்ணம் எல்லாம்?” சில நாட்களாகவே தோழியை நடவடிக்கையை கணித்தவள் உறுதிப்படுத்திக்கொள்ள கேட்டாள்.
“இப்போ ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி தான்” அலட்சியமாய் வைஷ்ணவி.
“அடிங்க நாயே… செருப்பாலேயே அடிப்பேன். எழவு வீட்டுல இருக்கேன்-னு அமைதியா இருக்கேன் அசிங்கமா பேச வச்சிடாத. போன வை”
இணைப்பு துண்டிக்க பட்டிருக்க மீண்டும் ஒய்யாரமாக ஊஞ்சலை காலை உதைத்து ஆட துவங்கியவளை இப்பொழுது தானே அழைத்தாள் ஷெர்லின்.
வெற்றி சிரிப்போடு அழைப்பை காதில் வைத்தவள் எதுவும் பேசாதிருக்க, “ஹீரோ மாதிரி எல்லாம் அவர் இருக்க மாட்டாரு” கடினமாக பேசினாள் ஷெர்லின்.
“பரவால்ல எதுத்த வீட்டு பையனோட தலையை கோத்திட்டே அவன் கண்ண ரசிச்சிட்டே இருந்துடுவேன்” – வைஷ்ணவி
“உனக்கு சமையலே தெரியாது, அவர் சமையல் மாஸ்டர்” – ஷெர்லின்
“ஊருக்கே சோறு ஆக்கி போடுறவர் எனக்கும் ரெண்டு கை பிடி போட மாட்டாரா என்ன?” – வைஷ்ணவி
“அவர் அமைதியானவர்” – ஷெர்லின்
“அவருக்கும் சேத்து நான் பேசிக்கிறேன்” – வைஷ்ணவி
“அவருக்கும் உனக்கும் ரெண்டு அடி ஹெயிட் வித்யாசம் இருக்கும்” – ஷெர்லின்
“ஹீல்ஸ் போட்டுக்கலாம்” – வைஷ்ணவி
நர நர என பற்களை கடித்தாள் ஷெர்லின், என்ன கேட்டாலும் அதற்கு ஒரு பதில் வைத்து பேசுகிறாள் இவள் என்று.
“அவரு நல்லவருடி… நீ ஒரு மொள்ளமாரி, முடிச்சவக்கி”
“தப்பில்லையே தோழி… ரெண்டுபேரும் நல்ல பிள்ளையா இருந்தா எப்படி கொழந்த பொறக்கும்? நா…”
“ஐயோ ஐயோ முட்டு சந்துல நின்னு புளியங்கா திருடுனதெல்லாம் காதல் வசனம் பேசுதே… இத கேக்க யாருமே இல்லையா யேசப்பா…”
இணைப்பு துண்டிக்கப்பட்ட சத்தம் வந்தது அதோடு அடுத்து குறுந்செய்தி வந்த சத்தமும்.
‘என்னமோ பண்ணி நாசமா போ. போ’ வந்த செய்தியை பார்த்து சிரித்துக்கொண்டாள் வைஷ்ணவி.
அப்பொழுது தன்னுடைய அறையை விட்டு வெளியில் வந்த கார்த்தி தன்னுடைய கைபேசியில் எவரிடமோ பேசுவதை பார்த்து, “இப்டி என்கிட்டே வந்து சிக்கிட்டியேடா கார்த்திக். ஹ்ம்ம் மஹாலக்ஷ்மி பெத்த பிள்ளை பாவம் தான் போல” அந்த அப்பாவி ஜீவனுக்காக பரிதாபப்பட மட்டுமே அவளால் முடிந்தது.
அவனை அப்படியே தன்னுடைய கைபேசியில் புகைப்படம் எடுத்து ஷெர்லின் எண்ணிற்கு அனுப்பிவிட்டாள். உடனே அதை பார்த்த ஷெர்லின் தனக்கு எதிரில் ஐஸ்பாக்ஸில் வைத்திருந்த தன்னுடைய ஆச்சியின் உடலை புகைப்படமாக எடுத்து அனுப்ப.
“ஆத்தி இவ மூஞ்சிய மாதிரியே இருக்கே” என ஓரமாக வைத்துவிட்டாள்.
அவன் அறைக்கு செல்லும் வரை அவனையே அமர்ந்து பார்த்தவள், கார்த்தி உள்ளே சென்று விளக்கை அணைத்ததும் தான் தன்னுடைய அறைக்குள் நுழைந்தாள்.
மறுநாள் காலை ஷெர்லின் வைஷ்ணவிக்கு அழைத்து வண்டியின் சாவி அவளுடைய வீட்டில் ஒரு பூந்தொட்டியின் அடியில் வைத்திருப்பதாக கூற, அன்னையிடம் வந்து, “அவ பதட்டத்துல சாவிய வீட்டுக்குள்ள வச்சிட்டு போய்ட்டா போலமா” பொய்யுரைத்து வேலைக்கு பேருந்தில் சென்று சேர்ந்தாள்.
மதிய உணவிற்கு மேல் தான் கார்த்தி வர, அவனோடு அவனுடைய தாய் தந்தை இருவரும் வந்திருந்தனர். வைஷ்ணவியை பார்த்ததும் மஹாலக்ஷ்மி அவளிடம் வர,
“ம்மா சைட் ஒருதடவை பாத்துட்டு வந்து வைஷ்ணவிகிட்ட பேசுங்க மா” என்கவும் அவரும் மகனுடன் சென்று ஒவ்வொரு இடமாக சுற்றி பார்கலானார்.
முதலில் அவன் கூறியதை வைத்து பார்க்கும் பொழுதே அந்த இடம் நிச்சயம் பிரமாண்டமாக இருக்கும் என்று கணித்தவருக்கு இந்த அளவு பெரிய இடமாக இருக்கும் என்று தோன்றவில்லை.
“தம்பி எல்லாம் நல்லபடியா தானபா நடக்கும்?” மகிழ்ச்சியை தாண்டி அன்னைக்கு பயம் வெளி வந்தது.
அன்னை தோளில் கை போட்டவன், “நடத்தி காட்டுறேன்மா. பயப்புடாதிங்க” தனயனின் தைரியம் அவர் முகத்தை சற்று தெளிந்தது.
“ஏன்டி இப்டி எல்லாம் பேசுற… பிள்ளைக்கு உறுதுணையா இருக்க பழகு” என்ற சுப்பிரமணி மகனிடம், “எந்த தொழில் பண்ணாலும் நேர்மை தான் தம்பி முக்கியம். அத மட்டும் என்னைக்கும் மறந்துடாத” தந்தையாய் தன்னுடைய கடமையை அவர் செவ்வனே செய்தார்.
“மாட்டேன் பா… உங்களுக்கு ஏதாவது மாத்தணும்னு தோணுதா?”
“இல்ல கார்த்தி. இத பத்தி எல்லாம் அப்பாக்கு பெருசா தெரியாது. வெளிய போற வர உங்களுக்கு தெரியாதா. நீ பாத்து செய் பா” – சுப்பிரமணி
“ஹலோ சார்” வெளியில் சென்றிருந்த சுந்தர் வந்ததும் கார்த்தியின் பெற்றோரை கண்டுகொண்டு அவர்களிடம் வந்து பேசினான்.
“பா இன்ஜினீயர்” கார்த்தி அறிமுகம் செய்தான்.
“பூமி பூஜை போட்ட அன்னைக்கு வந்துருந்தா அன்னைக்கே தெரிஞ்சிருக்கும் சார்”
அவனிடம் சிரிப்புடன், “சார் எல்லாம் வேணாம் அங்கிள். சுந்தர்-னு கூப்புடுங்க. அன்னைக்கு ஒரு சைட் இன்னாகுரேஷன் இருந்தது அதான் வர முடியல”
“தம்பி சொன்னான் பா” தலையசைத்து சுந்தர் கார்த்தியின் அன்னையிடமும் அறிமுகம் ஆகிவிட, ஆண்கள் மூவரும் பேச்சில் மும்முரமாகினர். அமைதியாக அவர்களிடமிருந்து விலகி வந்த மஹாலக்ஷ்மி வைஷ்ணவி இருக்குமிடம் சென்றார்.
“வாங்க ஆண்ட்டி… கட்டடம் எல்லாம் புடிச்சிருக்கா?”
“எனக்கு என்ன வைஷு தெரியும்? எல்லாம் கட்டம் கட்டமா இருக்கு” அவரின் பேச்சில் வாய்விட்டு சிரித்தவள்,
“எனக்கே அப்டி தான் தோணுது ஆனா இருங்க த்ரீ டி வியூல காட்டுறேன்” மடிக்கணினியை அவர் பக்கம் திரும்பியவள் சுந்தர் கொடுத்திருந்த கேட் CAD சாப்ட்வேர் திறந்து மொத்தத்தையும் தெளிவாக அவருக்கு விளக்கி கூறினாள். கை கொண்டு அதை வருடியவாறு முகத்தில் அத்தனை நிறைவு.
“என்கிட்டே அவன் இத காட்டவே இல்ல… இருக்கட்டும் கவனிச்சுக்குறேன்” செல்ல கோவம் அவருக்கு மகன் மேல்.