உணவு முடிந்ததும் அனைவரும் கிளம்பப் போக “சுதா மாப்பிள்ளைக் கிட்டயும் எல்லார்க் கிட்டயும் சொல்லிட்டு கிளம்பு”, என்றார் மகேஸ்வரன்.
“எங்க பா?”
“நம்ம வீட்டுக்கு தான் டா”
“நான் அங்க வரலை”, என்று அவள் சொல்ல அனைவரும் அதிர்ந்து தான் போனார்கள்.
“சுதா, ஏன் மா?”, என்று கலக்கமாக கேட்டார் மகேஸ்வரன்.
“நான் நம்ம வீட்டுக்கு வந்தா நீங்க உங்க மகனையும் மருமகளையும் வீட்டை விட்டு அனுப்பிருவீங்களாப்பா?”, என்று அவள் கேட்க என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் திணறினார்.
“உங்களால அவனை அனுப்ப முடியாது பா. அவனும் அவன் பொண்டாட்டியும் இருக்குற வீட்டுக்கு நான் வர மாட்டேன்”
“வளைகாப்பு முடிஞ்சு நீ இங்க இருக்க கூடாது டா”, என்றாள் வள்ளி.
நேராக மணிமாறன் அருகில் சென்ற சுதா “அண்ணா”, என்று அழைத்தாள்.
“சொல்லு மா”
“நான் உங்க தங்கச்சி தானே?”
“ஆமா மா”
“அப்படின்னா உங்க வீடும் எனக்கு தாய் வீடு தானே?”
“நிச்சயமா”
“அப்படின்னா என்னை உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போறீங்களா? நாளைக்கு என்னை இங்கயே கொண்டு வந்து விட்டுடுங்க”, என்று சொல்ல அனைவரும் நெகிழ்ந்து போனார்கள்.
“கண்டிப்பா மா, பிரசவம் வரைக்கும் கூட நீ நம்ம வீட்லயே இருக்கலாம்”, என்றார் கதிரவன்.
“ஆமா கண்ணு. உன்னை நான் பாத்துக்குறேன்”, என்றாள் தேவகி. வள்ளி மற்றும் மகேஸ்வரன் கண்கள் கலங்கிப் போனது. “நீங்க போயிட்டு வாங்கப்பா. இனி நான் அங்க வர மாட்டேன். குழந்தை பிறந்தா சொல்லி அனுப்புறோம். நீங்களும் அம்மாவும் மட்டும் வந்து பாத்துட்டு போனா போதும். அப்புறம் என் பிள்ளைக்கு தாய் மாமன் மணிமாறன் அண்ணா தான். அவங்க எல்லாம் செஞ்சிக்குவாங்க. இப்ப எல்லாரையும் அழைச்சிட்டு கிளம்புங்க”, என்று சுதா சொல்ல கண்ணீர் மல்க அவர்கள் கிளம்பினார்கள்.
சுதாவின் உறவினர்கள் அனைவரும் வெளியே செல்ல அவர்களை வழி அனுப்ப மற்ற அனைவரும் சென்றார்கள். யாருக்கும் தெரியாமல் மனைவியை அறைக்குள் தள்ளிக் கொண்டு வந்த வரதன் அவள் முகமெங்கும் முத்த மழை பொழிந்தான்.
அவன் முத்தத்தில் கிறங்கியவள் “ஐயோ என்ன இது? விடுங்க. யாராவது வரப் போறாங்க”, என்றாள்.
“நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டி. ஏதோ மனசுல இருந்த கவலை எல்லாம் போன மாதிரி இருக்கு. நம்மளால பூவுக்கும் மாப்பிள்ளைக்கும் அவமானம் வந்துருச்சேன்னு இருந்துச்சு. இப்ப அதை நீ சரி பண்ணிட்ட. அந்த வடு மனசுல இருந்தாலும் அந்த காயம் ஆறுற மாதிரி செஞ்சிட்ட? ஐ லவ் யு டி”
“சரி சரி ரொம்ப கொஞ்சினது போதும். ஒழுங்கா நாளைக்கு என்னைக் கூப்பிட வந்துறணும்”
“அவங்க நல்லாப் பாத்துக்குவாங்க தான். ஆனா எனக்கு உங்க தோள்ல சாஞ்சி தூங்கினா தான் நல்லா தூக்கம் வரும். உங்க மகனுக்கும் உங்க சத்தம் கேட்டுட்டே இருக்கணும். அதுக்கு நான் உங்க கூட இருக்கணும்”, என்று அவள் சொல்ல அவன் சந்தோஷமாக சரி என்று சொன்னான்.
அதன் பின் சுதாவை தேவகியும் பூங்கொடியும் சேர்ந்து அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அன்று இரவே மணிமாறன் வேலையைப் பார்த்து கிளம்பி விட்டான். அடுத்த நாள் காலையிலே அசடு வழிய வந்து நின்றான் வரதன்.
சுதாவை அவனுடன் அனுப்ப மறுப்பு தெரிவித்தாள் தேவகி. அதை எப்படி மறுக்க என்று எண்ணி வரதன் மற்றும் சுதா முகம் சோர்ந்து போனது.
அதைப் பார்த்து விட்டு “அம்மா அவர் இல்லாதது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு? அதே மாதிரி தானே அண்ணன் இல்லைன்னா அண்ணிக்கும் இருக்கும். அவங்க அங்கயே இருக்கட்டும்”, என்று பூங்கொடி சொல்ல சந்தோஷமாக அவர்களை அனுப்பி வைத்தாள் தேவகி.
ஒரு மாதம் கழித்து சுதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு வாசுதேவன் என்று பெயர் வைத்தார்கள். அவன் பிறந்ததும் வள்ளி மற்றும் மகேஸ்வரன் வந்து பார்த்தார்கள். அத்தை என்ற முறையில் குழந்தைக்கு செயின் வாங்கிப் போட்டாள் பூங்கொடி.
ஒரு வழியாக படிப்பை முடித்தாள் பூங்கொடி. இன்று தான் கல்லூரி கடைசி நாள் என்று மணிமாறனுக்கு ஏற்கனவே சொல்லி விட்டாள். அன்று புராஜெக்ட் வைவா என்பதால் காலை பத்தறை மணிக்கே கல்லூரி முடிந்தது.
மணிமாறன் எப்போது வருவான் என்று எண்ணிக் கொண்டே தான் வீட்டுக்குச் சென்றாள். ஆனால் அவளை வரவேற்றதே அவன் தான்.
“நீங்க எப்ப வந்தீங்க? நீங்க நாளைக்கு தான் வருவீங்கன்னு நினைச்சேன்?”, என்று சந்தோஷமாக கேட்டாள் பூங்கொடி.
“அது எப்படி டி இன்னும் அங்க இருப்பேன்? சரியான டைமுக்கு வந்து சேர வேண்டாம்?”
“இப்பவாது என் கூடவே இருப்பீங்களா?”
“அதை விட எனக்கு என்ன வேலை? பத்து நாள் லீவ் போட்டுருக்கேன்”
“பத்து நாள் தானா?”
“சொல்றதை முழுசா கேளு டி. பத்து நாள் லீவ் முடிஞ்சு நீயும் என் கூட கான்பூர் வர”
“நானா?”
“ஆமா, இனியும் என்னால உன்னை விட்டு பிரிஞ்சு இருக்க முடியாது. அங்க வீடு எல்லாம் செட் பண்ணிட்டேன். பத்து நாள் லீவ் முடிஞ்சு அங்க தான் போறோம். அப்பா அத்தை எல்லாம் சரின்னு சொல்லிட்டாங்க”
“சரி இந்த பத்து நாள் என்ன பண்ணப் போறோம்?”, என்று அவள் புன்னகையுடன் கேட்க “அது சஸ்பென்ஸ். இப்ப வா வரதன் மச்சான் குழந்தையைப் பாத்துட்டு வருவோம்”, என்றான்.
பெரியவர்களிடம் சொல்லி விட்டுக் கிளம்பினார்கள். வெகு நாட்கள் கழித்து ஜோடியாக வந்த பூங்கொடி மற்றும் மணிமாறனுக்கு எப்போதும் போல நன்றாகவே வரவேற்பு கிடைத்தது.
அங்கே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு “கிளம்புறோம்”, என்றான் மணிமாறன்.
“அதுக்குள்ளயா மாப்பிள்ளை? ரெண்டு நாள் இங்க இருக்கலாம்ல?”, என்று கேட்டார் கேசவன்.
“என்னது ரெண்டு நாளா?”, என்று அவன் அலற பூங்கொடி வாயை மூடி சிரித்தாள்.
“அண்ணே மாப்பிள்ளையும் தங்கச்சியும் இன்னொரு தடவை வரும் போது இங்க தங்குவாங்க. இப்ப போகட்டும்”, என்றான் வரதன். அவனை நன்றியோடு பார்த்தான் மணிமாறன்.
“ஏன் டா இப்படிக் சொல்ற? நீயே அவங்களை விரட்டி விடுவ போல”, என்று கேசவன் கேட்க “அவங்க போகட்டும் கேசவா விடு”, என்றார் மணியம்மை.
“அம்மா நீயுமா?”, என்று கேசவன் கேட்க மங்களம் அவரைக் கண்டு தலையில் அடித்தார். மனைவி தலையில் அடிக்கவும் விஷயத்தைப் புரிந்து கொண்ட கேசவன் “சரி மாப்பிள்ளை, சந்தோஷமா போயிட்டு வாங்க. அடுத்த தடவை வரும் போது கண்டிப்பா நாலஞ்சு நாள் தங்கணும்”, என்று சொன்னார்.
இருவரும் காரில் ஏறியதும் மணிமாறன் காதில் எதுவோ சொன்னான் வரதன். மணிமாறன் சிறு சிரிப்புடன் பூங்கொடியைப் பார்க்க அவள் ஆர்வமாக அவர்களைப் பார்த்தாள். பின் மணிமாறன் ஏதோ சொல்ல அதற்கு சந்தோஷமாக சிரித்தான் வரதன்.
அனைவரிடமும் விடை பெற்று கார் கிளம்பி சிறிது தூரம் சென்றதும் “வரதண்ணா என்ன சொல்லுச்சு?”, என்று கேட்டாள் பூங்கொடி.
“மாப்பிள்ளையும் மச்சானும் ஆயிரம் பேசுவோம். அதை எல்லாம் உன் கிட்ட சொல்ல முடியுமா?”, என்று அவன் சீண்ட “பிளீஸ் சொல்லுங்க”, என்று அவன் தாடையைப் பிடித்து கொஞ்சினாள்.
“இப்படி கொஞ்சினா எப்படி சொல்லாம இருக்குறது? ஒரு முக்கியமான விஷயம் பத்தி தான் மச்சான் பேசினாங்க டி”
“அது என்ன முக்கியமான விஷயம்?”
“அவங்க பையனுக்கு….”
“வாசுவுக்கு என்ன?”, என்று பதறினாள்.
“பதறாத டி. அவங்க பையனுக்கு கல்யாணம் பண்ண சீக்கிரம் ஒரு பெண்ணைப் பெத்துக் கொடுக்கணுமாம்”, என்று அவன் சொல்ல அவள் முகம் சிவந்து போனது.
“அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க? அவன் அப்படிச் சிரிச்சான்?”
“அதுக்கு தான் மச்சான் போயிட்டு இருக்கேனு சொன்னேன்”, என்று சொல்ல அவள் முகம் இன்னும் சிவந்தது.
“சீ”, என்று சொல்லி வெட்கப் பட்டாள்.
“என்ன டி சீ? கடும் பசியில் இருக்கேன். எப்ப டான்னு இருக்கேன் தெரியுமா?”, என்று சொல்ல அவளுக்கு வெட்கமாக வந்தது.
வீட்டுக்கு வந்ததும் “நாம ஊருக்கு போகணும் கொடி. எல்லாம் எடுத்து வை”, என்றான் மணிமாறன்.
“எங்க போறோம்?”, என்று கேட்டாலும் எல்லாம் எடுத்து வைத்தாள் .