“என்னங்க, நம்ம பையன் அப்படி எல்லாம் நினைக்கிறவன் இல்லைங்க”, என்றாள் சுந்தரி.
“நீ சும்மா இரு டி. இவன் சம்பாதிக்கிறான்ல? அந்த திமிர் தான் இவனை இப்படி செய்யச் சொல்லுது. இப்ப இப்படி பேசுறவன் நாளைக்கே ஒரு பொண்ணை இழுத்துட்டு வந்தாக் கூட ஆச்சர்ய படுறதுக்கு இல்லை”
“நாளைக்கு என்ன? இன்னைக்கே கூட்டிட்டு வரட்டுமா? ஆமா நான் ஒரு பொண்ணை லவ் பண்ணுறேன். அவளைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன். ஆனா அவளை இழுத்துட்டு எல்லாம் வர மாட்டேன். நீங்களா கல்யாணம் பண்ணி வைக்கும் போது பண்ணி வைங்க”, என்று தன்னுடைய காதலைப் பற்றியும் அப்போதே வீட்டில் சொல்லி விட்டான் மதன். அவன் காதலிக்கிறான் என்பது சுஜிக்கு கூட வியப்பு தான்.
“நான் சொல்லலை. இவன் நம்ம பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கலை டி. இவன் லவ் பண்ணுற பொண்ணை கல்யாணம் பண்ணிக்க என் பொண்ணை கல்யாணம்னு பேர்ல எங்கயோ தள்ளி விடப் பாக்குறான். ஏன்னா தங்கச்சி இருக்கும் போது இவன் கல்யாணம் பண்ணா நாலு பேர் கேள்வி கேப்பாங்களே? அதுக்கு தான்”, என்று மகனை திட்டினார் தணிகாச்சலம்.
“என்ன டா மதன் இதெல்லாம்? நீயாடா இப்படி?”, என்று கேட்டாள் சுந்தரி.
“அம்மா எதையும் யோசிக்காம நான் பேசலை. சுயநலமாவும் நான் இருக்க மாட்டேன். எல்லாத்துக்குமே ஒரு காரணம் இருக்கு. அது உங்களுக்கே தெரிய வரும் போது தெரிஞ்சிக்கோங்க. நாளைக்கு அவங்க வீட்ல இருந்து பொண்ணு பாக்க வரோம்னு சொன்னாங்க. நான் சரின்னு சொல்லிட்டேன். அதுக்கு மேல வரவங்க கிட்ட நீங்களே பேசிக்கோங்க. அதுக்கு முன்னாடி உங்க பொண்ணு கிட்ட ஒரு வார்த்தை விருப்பமான்னு கேட்டுக்கோங்க. ஏன்னா வாழப் போறது அவ தான்”, என்றான் மதன்.
“அவ கிட்ட என்ன டா கேக்குறது? அவ சின்ன பொண்ணு. நாளைக்கு அவங்க வரட்டும். அசிங்கப் பட்டு தான் போவாங்க பாரு”, என்று தணிகாச்சலம் குதிக்க அமைதியாக நின்றாள் சுஜிதா.
இப்படி ஒரு வாய்ப்பை இழப்பதா என்பது அவளது எண்ணம்? அவளால் நிச்சயம் அவனைத் தவிர வேறு ஒருவனுடன் நிம்மதியாக வாழ முடியாது.
மகள் முகம் ஒரு மாதிரி இருக்கவும் திருமண விஷயம் அவள் மனகை பாதித்து விட்டது என்று புரிந்து கொண்ட சுந்தரி “பாப்பா, இதையெல்லாம் பெருசா எடுத்துக்காத. உள்ள போ டா”, என்றாள்.
“நாளைக்கு அவங்க வரும் போது நான் எந்த சேலை மா கட்டட்டும்?”, என்று சுஜி கேட்க அனைவரும் திகைத்துப் போனார்கள். தணிகாச்சலம் மகளையே கூர்மையாக பார்த்துக் கொண்டு நின்றார்.
“இப்ப நீ என்ன சொன்ன?”, என்று அதிர்ச்சியாக கேட்டான் ரகு.
“இல்லை…. நாளைக்கு அவங்க வரும் போது… டிரஸ்”, என்று தடுமாற்றத்துடன் சுஜி உரைக்க “நீ அவனை லவ் பண்ணுறியா டி? அதான் உன் அண்ணன் வந்து இப்படி பேசிட்டு இருக்கானா?”, என்று கேட்டாள் சுந்தரி.
“ஐயோ, அப்படி எல்லாம் இல்லை மா”, என்று சுஜி அவசரமாக மறுத்தாள். ஏனென்றால் அவளே இது வரை அது காதல் என்றெல்லாம் நினைக்க வில்லை. அவள் மறுத்ததும் அனைவர் மனதிலும் நிம்மதி வந்தது. அப்போது “ஆனா அவரையே கட்டி வைங்க மா, பிளீஸ்”, என்று கெஞ்சினாள் மகள். அனைவரும் திகைத்துப் போனார்கள் .
“உன் மகனுக்கும் மகளுக்கும் கல்யாணம் ஆசை வந்துருச்சு சுந்தரி. அதுக்கு தானே இவ்வளவு கஷ்டப் பட்டு படிக்க வச்சோம்? விடு நடக்குறது நடக்கட்டும். இனி பேசி பயன் இல்லை. நாளைக்கு அவங்க வரும் போது மாப்பிள்ளை எப்படி இருந்தாலும் சம்மதம் சொல்லிறனும். இல்லைன்னா நாளைக்கு இழுத்துட்டு போய் கல்யாணம் பண்ணினாலும் பண்ணுவாங்க. ஆனா ஒண்ணு. கல்யாணம் முடிச்சு வைக்கிறதோட சரி. அதுக்கப்புறம் கண்ணைக் கசக்கி கிட்டு இங்க வந்து நிக்க கூடாது”, என்றார் தணிகாச்சலம்.
தந்தையின் ஒட்டாத பேச்சைத் தாங்கிக் கொள்ள முடியாமல் “அப்பா”, என்று அழைத்தாள் சுஜி. “என் கிட்ட யாரும் பேச தேவை இல்லை”, என்று பட்டென்று அவர் சொல்ல ஏங்கி ஏங்கி அழுதாள் சுஜி.
இந்த கலவரத்தில் தன்னை எப்படி புவி வீட்டில் பெண் கேட்டார்கள் என்று சுஜிக்கு தெரியாமலே போனது. அன்று முழுவதும் சுஜி வீடு ஒரு மாதிரி தான் இருந்தது. யாரும் யாரிடமும் பேச வில்லை.
இரவு தன்னுடைய அறையில் இருந்து மைதிலியை அழைத்தான் மதன். அவன் அழைப்புக்காக காத்திருந்தவள் உடனே அழைத்து விட்டாள்.
“சாப்பிட்டியா டி?”, என்று அவன் காதலுடன் கேட்க “ம்ம், அதெல்லாம் சரியான நேரத்துக்கு வேலைக்காரி கொண்டு வந்து கொடுத்துருவா. ஏன்னா அதுக்கப்புறம் அவ எங்க அப்பாவுக்கு பரிமாறணுமே?”, என்று கசப்புடன் சொன்னாள் மைதிலி.
அதில் இருந்த மறை பொருளை கண்டு கொண்டவனுக்கு அவள் வேதனை புரிந்தது. “இன்னும் கொஞ்சம் நாள் மட்டும் பொறுத்துக்கோ மயூ. அப்புறம் உன் எல்லா கஷ்டத்துக்கும் தீர்வு வந்திரும். உனக்கு நான் இருக்கேன்”, என்று ஆறுதல் சொன்னான்.
“சரி வீட்ல பேசுனீங்களா? என்ன ஆச்சு? வெண்ணிலா வீட்ல இருந்து கால் வந்துச்சா?”
“பேசினாங்க டி. அப்பா என்னை சத்தம் போட்டார். நான் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக சுஜியை எங்கயோ தள்ளி விடுறேன்னு பேசினார். நான் அப்படி நினைக்கிறவன் இல்லைன்னு அவருக்கு புரியவே இல்லை பாரேன்”
“அப்புறம் என்ன ஆகும்? ஆமா நானும் ஒரு பொண்ணை விரும்புறேன். அவளைத் தான் கட்டிப்பேன். ஆனா இழுத்துட்டு எல்லாம் வர மாட்டேன். நாளைக்கு பொண்ணு பாக்க வரவங்க கிட்ட நீங்களே பேசிக்கோங்க. அதுக்கு முன்னாடி சுஜி கிட்ட கேளுங்கன்னு சொன்னேன்”
“என்னது? என்னைப் பத்திச் சொல்லிட்டீங்களா?”
“ஆமா, இதுல என்ன இருக்கு? கொஞ்ச நாள் முறைப்பாங்க. அப்புறம் சரியாகிருவாங்க”
“என்னால தானே உங்க குடும்பத்துக்குள்ள விரிசல்?”
“லூசு, நீயும் இனி இந்த குடும்பம் தான். நம்ம குடும்பம்னு சொல்லு”, என்று மதன் சொல்ல அந்த வார்த்தையே அவளுக்கு இனித்தது.
“அப்புறம் என்ன ஆச்சு? சுஜி என்ன சொன்னா?”
“அவ என்ன சொல்லுவா? திருட்டு முழி முழிச்சிட்டு நின்னா. அவ மனசு புரியாம அம்மா அவளை ஆறுதல் படுத்த அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா? அம்மா நாளைக்கு அவங்க வரும் போது நான் என்ன டிரஸ் போடன்னு கேட்டா பாரு. எனக்கு சிரிப்பே வந்துருச்சு”
“அப்படியா? உங்க வீட்ல அவளை தப்பா நினைச்சிருப்பாங்கல்ல? நான் அவளுக்கு ஒரு கெட்ட பேர் வரக் கூடாதுன்னு நினைச்சேன்”
“அப்படி இல்லை மயூ. அவளும் காதலுக்காக ஏதாவது போராடனும்ல? அப்ப தான் அந்த காதல் ஸ்ட்ராங்க் ஆகும்”
“சரி அப்புறம் என்ன ஆச்சு?”
“அப்புறம் என்ன? அப்பா எங்க ரெண்டு பேரையும் திட்டினார். நாளைக்கு வர மாப்பிள்ளை எப்படி இருந்தாலும் சரின்னு சொல்லணும்னு பேசினார். ஆனா என் கிட்டயும் சுஜி கிட்டயும் முகம் கொடுத்து கூட பேசலை. அம்மாவும் தான். நாளைக்கு என்ன ஆகப் போகுதோ?”
“எல்லாம் நல்ல படியா நடக்கும்?”, என்று அவள் சொல்ல அவன் அதற்கு பதில் பேச என்று அவர்கள் உரையாடல் நீண்டு கொண்டே இருந்தது.
அடுத்த நாள் காலை அனைவருக்கும் பரபரப்பாகவே விடிந்தது. வெண்ணிலா அன்று அவ்வளவு சந்தோஷமாக இருந்தாள். பெண் பார்க்க சுஜி வீட்டுக்கு ரேணுகா, ரோஹினி, ரஞ்சித் அனைவரும் வந்திருந்தார்கள். பாரி, பரணி, வெண்ணிலா மூவர் முகத்தை தவிர மற்ற யார் முகத்திலும் சிரிப்பே இல்லை. மற்ற அனைவரும் இறுக்கத்துடன் தான் அமர்ந்திருந்தார்கள். அது சுஜி மிடில் கிளாஸ் என்பதால் கூட இருக்கலாம். சுஜி வீட்டுக்கு வந்ததும் அவர்களை பேருக்கு கூட வரவேற்காமல் தணிகாச்சலம் நிற்க மதன் தான் அனைவரையும் வரவேற்றான்.