“சின்னத் தாத்தா”, என்ற படி பவித்ரா பரணியிடம் செல்ல அவனும் அவளை வாரித் தூக்கி கன்னத்தில் முத்தமிட்டான்.
வெண்ணிலா அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் பவியை கொஞ்சிக் கொண்டிருப்பதைக் கண்டு தங்களின் குழந்தையை அவன் இப்படித் தூக்கினால் எப்படி இருக்கும் என்று யோசனை ஓடியது அவளுக்குள்.
அப்போது “பாப்பு பால் குடிக்கணும், இங்க வா”, என்று மகளை அழைத்தாள் சுஜி. பரணி வருவதையும் வெண்ணிலா அவனைப் பார்ப்பதையும் பார்த்ததை கண்டதால் தான் சுஜி மகளை அழைத்தாள். இருவரும் தனியே பேசினால் ஏதாவது விடை வரும் என்று எண்ணினாள் சுஜி.
“அம்மா கூப்பிடுதா”, என்று சொல்லி விட்டு அந்த சின்னக் குட்டி வீட்டுக்குள் ஓட இருவர் மட்டும் இருந்தார்கள்.
எப்போதும் தான் இருந்தால் அங்கிருந்து சென்று விடும் பரணி இன்று அவளையே யோசனையாக பார்த்துக் கொண்டிருக்கவும் “என்ன ஆச்சு இவனுக்கு?”, என்று தான் பார்த்தாள் வெண்ணிலா.
அவன் அவளையே பார்க்கவும் அவளுக்குள் சில பல தடுமாற்றம். இருவருக்கும் நடந்த கூடலை அது நினைவு படுத்த தன்னாலே அவள் முகம் சிவந்தது.
தன்னுடைய மனம் புரியாத அவனுக்கு தன்னுடைய வெட்கத்தைக் காட்ட மனதில்லாமல் வீட்டுக்குள் செல்ல எழுந்தாள்.
“நிலா ஒரு நிமிஷம்”, என்று பரணி சொன்னதும் நின்று அவனைப் பார்த்தாள். நிலா என்ற அவனின் அழைப்பு அவளைக் கட்டிப் போட்டது.
“இங்க உக்காறேன். உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்று சொல்லி அங்கிருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர சிறு குழப்பத்துடன் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தாள்.
என்ன தான் பேச முடிவு செய்து விட்டாலும் அவனால் சட்டென்று பேசி விட முடியவில்லை. இருவருக்கும் இடையே பின்னப் பட்டிருக்கும் உறவு வலை அப்படிப் பட்டது. அதை எப்படி சிக்கல் எடுக்க என்று அவனுக்கு புரிய வில்லை.
அவளை மொத்தமாக களவாடி, தன்னுடையாய் உணர்வு பசிக்கு அவளை உணவாக்கி விட்டு அவளுடைய மொத்த வாழ்வையும் நிர்மூலமாக்கி விட்டு அவளிடம் எப்படி வேறு ஒரு வாழ்வை அமைத்துக் கொள் என்று சொல்வானாம்?
அவன் அமைதியாக இருக்கவும் “என்ன மாமா? பேசணும்னு சொல்லிட்டு அமைதியா இருக்க?”, என்று கேட்டாள் வெண்ணிலா.
“நீ ஏன் இப்படி இருக்க நிலா?”
“எப்படி இருக்கேன்?”
“நீ சந்தோஷமா இருக்கியா?”
“ஏன் என்னோட சந்தோசத்துக்கு என்ன குறைச்சல்? எனக்கு பிடிச்ச வேலை? நல்ல சம்பளம். அதுக்கு மேல வேற என்ன வேணும்?”
“இது மட்டும் ஒரு பொண்ணுக்கு போதுமா? கல்யாணம் குழந்தைகள்ன்னு வேண்டாமா?”
“எனக்கு தான் கல்யாணம் முடிஞ்சிருச்சே. என் கழுத்துல தாலி கிடக்குது தானே? குழந்தைங்க…. கொஞ்ச நாள் கழிச்சு தத்து எடுக்கலாம்னு பாக்குறேன்”, என்றாள். வெங்கட் கட்டிய தாலியை கழட்டி இருந்தாலும் தாலிசெயினை மட்டும் போட்டிருந்தாள்.
“என்னால தானே இதெல்லாம்?”, என்று குற்ற உணர்வுடன் கேட்டான் பரணி.
“சத்தியமா இல்லை. எல்லாமே என்னால தான் மாமா. நீ உன்னையே குற்றம் சுமத்திக்காத. நீயா என்னை ஏமாத்தின? நீ என்னைப் பிடிக்கலைன்னு விலகித் தானே போன? நீ நல்லவன் மாமா. என் வாழ்க்கையைப் பத்தி கவலைப்படாதே”
“இதுக்கு தீர்வு தான் என்ன நிலா? நீ இப்படி இருக்குறது எனக்கு கஷ்டமா இருக்கு. என்னைப் பத்தி தெரிஞ்சதுனால தானே அந்த வெங்கட் உன்னை வேண்டாம்னு சொன்னான். உன் கல்யாண வாழ்க்கை கேட்டுப் போக நான் தான் காரணம்”
“அப்படி எல்லாம் இல்லை மாமா. நான் என் மனசுல இருக்குற விருப்பத்தை வெங்கட் கிட்ட சொன்னேன். ஆனா அவன் அதை புரிஞ்சிக்கலை. என்னைப் பொறுத்த வரைக்கும் அது விடுதலை தான்”, என்று கதை கட்டினாள்.
“அடுத்து என்ன பண்ணப் போற?”
“வேற எதுவும் இல்லை. இது தான் என் வாழ்க்கை. இப்படியே போகட்டும்”
“அது எப்படி சரியா வரும்?”
“நீ என்ன தான் சொல்ல வர மாமா?”, என்று கேட்டவளுக்கு தன்னை திருமணம் செய்ய அவன் கேட்டு விட மாட்டானா என்று ஏக்கமாக இருந்தது. அவன் மீதிருந்த கோபத்தை எல்லாம் அவளுடைய மானங்கெட்ட மனது மறந்திருந்தது.
“நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ நிலா”, என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான்.
“ஏன் மாமா, நான் கல்யாணம் பண்ணினா நீ எந்த குற்ற உணர்வும் இல்லாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சு சொல்றியா?”, என்று அடக்கப் பட்ட கோபத்துடன் கேட்டாள். மற்ற யார் சொன்னாலும் அமைதியாக கடந்து போனவளுக்கு அவன் அப்படிச் சொன்னதும் எரிச்சலாக வந்தது.
“லூசா டி நீ? எனக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு எந்த எண்ணமும் இல்லை. இப்ப என்னோட நினைப்பெல்லாம் உன் வாழ்க்கையை வம்பாக்கிட்டோமேன்னு தான்”
“அப்படி ஒரு நினைப்பிருந்தா நீயே என்னைக் கட்டிக்கோ மாமா”, என்று அவள் சொல்லி விட “நிலா”, என்று அதிர்வாக அழைத்தான்.
“உன்னைப் பத்தி தெரிஞ்சும் மூணாவது முறை உன் கிட்ட பிச்சை கேக்குறேன் மாமா என்னைக் கட்டிக்கோன்னு. என் நிலைமையைப் பாத்தியா? இதுக்கு மேல என்னால கெஞ்ச முடியாது”, என்று விரக்தியாக சொன்னவள் “நீ மாறவே மாட்ட மாமா. உன் மனசுல இருக்குற தாழ்வு மனப்பான்மை ஒரு நாளும் உன்னை விட்டு போகாது. பரவால்ல நீ இப்படியே இரு. ஆனா தயவு செஞ்சு என்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோன்னு மட்டும் உன் வாயால சொல்லாத”, என்றாள்.
“எத்தனை நாள் இப்படி தனியாவே இருப்ப நிலா?”
“ஆயுள் முழுமைக்கும்”, என்று சொன்னவள் அதற்கு மேல் அங்கே இருந்தால் அழுது விடுவோம் என்பதால் உள்ளே எழுந்து சென்று விட்டாள்.
தோழி இறுகிய முகத்துடன் உள்ளே செல்வதையும் அதை விட இறுக்கமாக பரணி தோட்டத்தில் அமர்ந்திருப்பதையும் கண்ட சுஜி அவனுக்கு டீ எடுத்துக் கொண்டு தோட்டத்துக்கு வந்தாள்.
அவள் வரவைக் கூட அவன் உணர வில்லை. வானத்தை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். “அண்ணா”, என்று அழைத்த பிறகு தான் அவளைப் பார்த்தான்.
“இந்தாங்க டீ, என்ன யோசனை, நான் வந்தது கூட தெரியாம?”, என்று சொல்லி அவனிடம் நீட்டினாள்.
“நிலாவைப் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன் மா”
“அவளைப் பத்தி என்ன யோசனை?”, என்று கேட்ட படி அவனுக்கு சற்று இடைவெளி விட்டு அமர்ந்தாள்.
அவன் அமைதியாக இருக்கவும் “வெண்ணிலா விஷயம் பேசுறதுக்கு முன்னாடி நான் உங்களுக்கு நன்றி சொல்லணும் அண்ணா”, என்றாள் சுஜி.
“எதுக்கு மா?”
“என்னோட உயிரையே காப்பாத்திருக்கீங்க? உங்க உயிரைக் கூட பெருசா நினைக்காம நீங்க செஞ்ச இந்த காரியம் எனக்கு எவ்வளவு பெருசு தெரியுமா?”
“இது பெரிய விஷயமா? இந்த வீடு இல்லைன்னா இந்த பரணி இல்லை மா. இந்த வீட்ல யாருக்கு என்ன ஆனாலும் என்னை தாண்டி தான் அது நடக்கணும். அப்புறம் நன்றி சொல்லி என்னை அன்னியப் படுத்தாத. நீ என்னோட தங்கச்சி”
“சரிண்ணா. அப்புறம் வெண்ணிலா என்ன சொன்னா?”
“இன்னைக்கு புவி வெண்ணிலா கிட்ட அவளை வேற கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி என்னைப் பேசச் சொன்னான் மா”