“என்ன சொல்லுவா? முடியாதுன்னு சொல்றா. என்ன செய்யன்னு தெரியலை”
“அவளுக்கு நாம எல்லாரும் சேந்து ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்போம். அதுக்கு முன்னாடி நான் உங்க கிட்ட பேசணும்; நீங்க எதுக்கு கல்யாணம் பண்ணலை?”
“அது வந்து தங்கச்சி..”
“எனக்கு காரணம் தெரியணும். காரணம் தெரியலைன்னா கூட இப்ப உங்க சம்மதம் வேணும். நீங்க ஒரு கல்யாணம் பண்ணிக்கணும்”
“அதெல்லாம் வேண்டாம் மா”
“உங்க கூட பிறந்த தங்கச்சி சொன்னா கேப்பீங்க தானே?”
“என் கூட பிறந்த தங்கையா இருந்தா கூட அவ உன்னை மாதிரி என் மேல இவ்வளவு அன்பு வச்சிருப்பாளான்னு தெரியாது மா. நீ அதுக்கும் மேல மா”, என்று அவன் சொல்ல அவன் பேச்சில் நெகிழ்ந்து போனாள்.
“அப்ப ஏன் இப்படி பிடிவாதமா இருக்கீங்க? கல்யாணம் அப்படிங்குறது கட்டாயம் தேவைண்ணா. என்ன தான் நாங்க உங்களை பாத்துக்கிட்டாலும் பொண்டாட்டி மாதிரி வராது”
“புரியுது மா. ஆனா என்னால முடியாது”
“அதான் ஏன்?”
“சின்ன வயசுல இருந்து இது தான் என் குடும்பம். இங்க ஒரு வேலைக்காரனா இருக்கணும்னு நினைச்சேனே தவிர எனக்குன்னு ஒரு குடும்பம் வரணும்னு யோசிக்கலை. ஆனா யோசிச்சப்ப எல்லாம் என் கையை விட்டு போயிட்டு”
“எதுவும் எங்கயும் போகலை. நான் இப்பவே அவர் கிட்ட சொல்றேன். உங்களுக்கு பொண்ணு பாக்கச் சொல்லி”
“வேண்டாம் மா”
“ஏன் அண்ணா?”
“என்னால அந்த பொண்ணுக்கு உண்மையா இருக்க முடியாது”
“ஏன் அப்படிச் சொல்றீங்க?”
“ஏன்னா…. எனக்கு கல்யாணம் முடியலை தான். ஆனா நான் பிரம்மச்சாரி இல்லை”, என்று சொல்லி விட்டு அவள் முகத்தைக் கூட பார்க்காமல் சென்று விட்டான்.
அவன் சென்றது கூட தெரியாமல் பிரம்மை பிடித்த படி அமர்ந்திருந்தாள் சுஜி. சத்தியமாக அவள் இதை எதிர் பார்க்க வில்லை. அவன் சொன்னதை ஜீரணம் செய்யவே அவளுக்கு சில பல நொடிகள் தேவைப் பட்டது. அவன் சொன்னதின் தாக்கம் சட்டென்று அவளை விட்டுச் செல்ல வில்லை.
“பரணி அண்ணனா இப்படி?”, என்று அதிர்ந்து போனாள். ஆனாலும் அவனை தவறாக நினைக்க முடியாமல் ஏதோ ஒன்று அவளைக் குடைய மீண்டும் மீண்டும் யோசித்தாள்.
ஒரு வேளை இதற்கு காரணம் வெண்ணிலாவாக இருப்பாளோ என்று ஒரு எண்ணம் அவள் மனதில் எழுந்தது. இவர்கள் இருவருக்கும் ஏதோ நடந்து அது தெரிந்து தான் வெங்கட் வெண்ணிலாவை வேண்டாம் என்றானா? இல்லை அந்த விஷயத்தை மறக்க முடியாமல் வெண்ணிலாவே வெங்கட்டை வாழ்க்கையில் இருந்து விலகிப் போக வைத்தாளா என்று மிகப் பெரிய கேள்வி எழுந்தது.
இதற்கு மேல் பரணியிடம் தன்னால் கேட்க முடியாது என்று அவளுக்கு தெரியும். இதற்கு விடை சொல்ல தோழியால் மட்டுமே முடியும் என்பதால் அவளைத் தேடிச் சென்றாள்.
பவித்ராவை மடியில் வைத்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்த பாரி “பரணி போய்ட்டானா மா?”, என்று கேட்டார்.
“ஆமா மாமா, டீ குடிச்சாங்க. வேலை இருக்குனு சொல்லிட்டு போயிட்டாங்க”, என்று சொல்லி விட்டு வெண்ணிலா அறைக்குச் சென்றாள்.
வெண்ணிலா அறையை தவிர வேறு யாரின் அறைக்கும் சுஜி செல்ல மாட்டாள். இவள் போன போது வெண்ணிலாவோ குப்புற படுத்து அழுது கொண்டிருந்தாள்.
பரணிக்கும் இவளுக்கும் இடையே பெரிய விஷயம் நடந்திருக்கிறது என்று தெளிவாக தெரிய “வெண்ணிலா”, என்றாள்.
கண்களைத் துடைத்து விட்டு அவள் இயல்பாக அவளைப் பார்க்க “நல்லா நடிக்கிற டி”, என்று சொல்லி அவள் அருகே அமர்ந்தாள்.
“என்ன சொல்ற லூசு? லேசா தலை வலி. அதான்”
“பரணி அண்ணா தான் அந்த தலை வலியா? அவங்க கிட்ட பேசினதும் தானே நீ இப்படி ஆகிட்ட?”
“அப்படி எல்லாம் இல்லை. கல்யாணம் பண்ணிக்கச் சொன்னாங்க. அதான் டென்ஷன்”
“அதுல என்ன தப்பிருக்கு? நாங்களே அதைப் பத்தி பேச தான் உன்னை இங்க வர வச்சோம்”
“மாமாவை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லணும்னு சொல்லி தானே அண்ணா என்னை வரச் சொன்னான்”
“நான் ஏன் சொல்லணும் சுஜி. என்னால முடியாது”, என்று சொல்லும் போதே வெண்ணிலா அழுது விட “உன் மனசுல என்ன தான் டி இருக்கு. சொல்லு டி”, என்று கேட்டாள் சுஜி.
“ஒண்ணும் இல்லையே? நான் இன்னைக்கே ஊருக்கு கிளம்ப போறேன்”
“கடை திறக்குறதுக்கு நீ இங்க இருக்கணும். உன்னை எங்கயும் விட மாட்டேன். சரி இப்ப உன் மனசுல உள்ளதைச் சொல்லு. எனக்கு உண்மை தெரியணும். இது நான் உன் பிரண்டா கேக்கலை. உன்னோட அண்ணியா கேக்குறேன்”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை டி சுஜி”
“உன் வாழ்க்கையைப் பத்தி கவலைப் பட்டு தான் உங்க அண்ணன் என் கிட்ட நெருங்காம இருக்கார். அது தானே உனக்கு வேணும்?”, என்று சுஜி கேட்க “இது என்ன புதுக்கதை?”, என்று கேட்டாள் வெண்ணிலா.
“அது தான் உண்மை. நாங்க பிரிஞ்சு இருக்க நீ தான் காரணம்”, என்று சுஜி சொல்ல அதிர்ந்து போனாள் வெண்ணிலா.
“சுஜி என் வாழ்க்கைக்கும் உங்க வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்?”
“தங்கச்சி நல்லா இல்லாம இருக்கும் போது அவர் எப்படி என் கூட சந்தோஷமா இருப்பார்?”
“ஓ காட், அவன் திருந்தவே மாட்டானா? நான் அண்ணா கிட்ட பேசுறேன்”
“இது பேசுன உடனே சரியாகுற விஷயம் இல்லை வெண்ணிலா. நீ சந்தோஷமா இருந்தா எங்க வாழ்க்கையும் சந்தோஷமா மாறும்”
“என்னை என்ன பண்ணச் சொல்ற? எல்லாரும் சொன்னீங்கன்னு தானே நான் ஒரு தடவை கல்யாணம் பண்னினேன். அதுல இருந்து வெளிய வரதுக்குள்ள நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும். திருப்பியும் இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்?”
“அதுல இருந்து வெளிய வந்த நீ மறுபடியும் அதே வாழ்க்கைக்குள்ள போக நினைக்கிற மாதிரி தானே இருக்கு? என்ன புரியலையா? நீ மறுபடியும் வெங்கட் கூட வாழ தானே ஆசைப் படுற?”
“ஏய் உனக்கு என்ன லூசா பிடிச்சிருக்கு? அவனுக்கு கல்யாணம் ஆகிருச்சு”
“அது தெரியுது வெண்ணிலா. ஆனால் கல்யாணம் ஆன உன் முன்னால் கணவன் கூட நீ அடிக்கடி பேச காரணம் என்ன?”
“சுஜி?”
“உன் போன் கால் ஹிஸ்ட்ரி பாத்தாச்சு. உண்மையைச் சொல்லு வெண்ணிலா”
“அது… அது வந்து….”
“எதையும் மறைக்காம உண்மையைச் சொல்லு வெண்ணிலா. எனக்கு இன்னைக்கு தெரியணும். உனக்கும் வெங்கட்க்கும் இடையிலே என்ன நடந்துச்சு?”
“சுஜி”
“எனக்கு தெரிஞ்சே ஆகணும். இல்லை சொல்ல முடியலைன்னா உங்க அண்ணன் கிட்ட எறிஞ்சு விழுற மாதிரி உன் வேலையைப் பாத்துட்டு போன்னு என் கிட்டயும் சொல்லிரு. நான் போறேன்”
“என்னால உன் மேல எப்படி டி கோபப் பட முடியும்?”
“அப்படின்னா உண்மையைச் சொல்லு. உனக்கும் வெங்கட்க்கும் இடையில நடந்த உண்மையை மட்டும் கேக்கலை. உனக்கும் பரணி அண்ணாவுக்கும் இடையில நடந்த உண்மையும் எனக்கு வேணும்”
“சுஜி”
“ரகசியங்கள் எப்போதும் ரகசியமா இருக்காது வெண்ணிலா. ஒரு நாள் வெளிய வந்தே தீரும்?”
“அது எப்படி வரும்? நான் தான் சொல்லக் கூடாதுன்னு சத்தியம் வாங்கிருக்கேனே?”, என்று உளறி நாக்கைக் கடித்துக் கொண்டாள். அவளை தீர்க்கமாக பார்த்தாள் சுஜி. அதற்கு மேல் மறைப்பது சரி கிடையாது என்பதால் சொல்ல ஆரம்பித்தாள்.