“ஆமா அவ வயித்துல இருக்குற குழந்தை இந்த வீட்டோட வாரிசு. கண்டிப்பா கண்மணி இந்த குழந்தையை பெத்தெடுப்பா. அவளுக்கும் இளாவோட மகனுக்கும் நான் துணையா இருப்பேன். ஆனா குழந்தை பிறந்த பிறகு பேரப் பிள்ளைன்னு சொல்லி நீங்க பாசம் காட்டக் கூடாது. அந்த குழந்தையை நீங்க கண்ணால பாக்க கூட விட மாட்டேன்”
“சிவா”
“என்ன மா? மகன் வேண்டாம் மருமக வேண்டாம்னு சொன்னப்ப கலங்காத நீங்க பேரன்னு சொன்னதும் திகைச்சு போய் நிக்குறீங்க? அண்ணன் வீட்ல இருந்து ஓடிப் போனது தப்பு தான். ஆனா அவங்க பக்கம் என்ன நியாயம் இருக்கும்னு பாக்கணும்ல? அதை மன்னிக்க வேண்டாம். கண்மணியையும் நீங்க மன்னிக்கணும்னு சொல்லலை. ஆனா நம்மளை நம்பி அவளை விட்டுட்டு போயிருக்கான். அவனை ஏமாத்த என்னால முடியாது. இப்ப முடிவை நீங்க சொல்லுங்க. இளாவோட குழந்தையை நீங்க பேரனா ஏத்துக்குறீங்களா இல்லையா? அப்படி உங்க பேரன் வேணும்னு நினைச்சா நீங்க கண்மணியை ஏத்துகிட்டு தான் ஆகணும். அப்படி இல்லைன்னா அவளை என்னால பாத்துக்க முடியும். இத்தனை பேரை பாத்துக்க முடிஞ்ச எனக்கு அவளையும் அவ குழந்தையையும் பாத்துக்க தெரியாதா? உடனே அவ கூடவே போயிருவேன்னு நினைக்காதீங்க. என்னோட சம்பாத்தியம் உங்களுக்கு தான் வரும்”, என்று சொல்ல பார்வதி அவனை வேதனையாக பார்த்தாள்.
அன்னையின் பார்வை புரிந்தது. ஆனாலும் கல் போல நின்றான். பார்வதி மெதுவாக கண்மணி அருகில் வந்தாள். கண்மணி அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்களே பேசட்டும் என்று எண்ணி சிவன் அமைதியாக நின்றான்.
கருப்பட்டிக்கு மட்டும் கண்மணியை நினைத்து மனம் மேலும் மேலும் வேதனை அடைந்தது. எப்படியும் சிவன் அவளை விட்டு விட மாட்டான் என்று அவனுக்கு தெரியும். இதற்கு மேல் அங்கே நின்று கண்மணி படும் துயரத்தைக் காண சகிக்காமல் வெளியே சென்று விட்டான்.
“இப்ப எத்தனை மாசம் மா?”, என்று கேட்டாள் பார்வதி.
தன்னிடமா பேசினார்கள் என்பது போல ஒரு பார்வை பார்த்த கண்மணி “மூணு மாசம்”, என்று தயக்கத்துடன் சொன்னாள்.
“நான் பேசினதை மனசுல வச்சிக்காத மா. இப்பவும் ஒரு அம்மா வா எனக்கு உன் மேலயும் என் மகன் மேலயும் கோபம் இருக்கு மா. ஆனா அதே அம்மாவா என்னால என் பேரனை இழக்க முடியாது. இனி நீயும் இந்த வீட்ல ஒருத்தி தான். உள்ள வா. இனி நான் உன்னை பாத்துக்குறேன்”, என்று சொல்லி வீட்டுக்குள் அழைத்து சென்றாள்.
கண்களில் கண்ணீருடனும் உதடுகளில் சிரிப்புடனும் அந்த வீட்டுக்குள் சென்றாள் கண்மணி. சிவாவுக்கு அவளை அன்னை ஏற்றுக் கொண்டதே போதுமானதாக இருந்தது. இந்த அம்மாவுக்கு எதுக்கு வேண்டாத வேலை என்று கோபமாக வந்தது செல்விக்கு. ஆனால் இப்போது தான் எது சொன்னாலும் தவறாக முடியும் என்பதால் வாயை மூடிக் கொண்டாள்.
“பாத்துக்கோ மதி”, என்று சொல்லி விட்டு ஸ்டூடியோவுக்கு சென்றான் சிவன். அவன் மனது கொஞ்சம் நிம்மதி அடைந்தது.
அதே நேரம் வீட்டுக்கு வந்த கருப்பட்டியிடம் என்ன விஷயம் என்று கேட்டுக் கொண்டிருந்தாள் சுந்தரி. அன்னையிடம் அனைத்தையும் சொன்னவன் “பாவமா இருக்கு மா அந்த பொண்ணைப் பாக்க. இந்த சின்ன வயசுல கடவுள் அவளுக்கு இவ்வளவு பெரிய கஷ்டத்தைக் கொடுத்துருக்க வேண்டாம்”, என்று சொன்னான். அதைக் கேட்டு அமைதியாக இருந்தாள் சுந்தரி.
“என்ன மா அமைதியா இருக்க?”
“அவ வயித்துல வளர குழந்தையைப் பத்தி யோசிச்சேன் டா? அந்த பொண்ணு எப்படி அப்பா இல்லாம அந்த குழந்தையை வளக்கும்னு யோசிச்சேன்?”
“நாம எல்லாரும் பாத்துக்கிட்டாலும் அப்பா மாதிரி வருமா?”, என்று சுந்தரி கேட்க கருப்பட்டியும் அப்போதைக்கு அந்த பேச்சை விட்டு விட்டான். ஆனால் அவன் மனதில் அந்த விஷயம் பதிந்து தான் போனது.
அடுத்த நாள் இரவு உணவு முடிந்ததும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தாள் கண்மணி. அவள் கண்களில் சோகம் இல்லை என்றாலும் வானத்தை வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அப்போது கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு வந்த கருப்பட்டி மற்றும் சிவனுக்கு அந்த காட்சியைப் பார்த்து கஷ்டமாக இருந்தது.
ஏனோ அவள் சிரிப்புடன் உலா வர வேண்டும் என்ற எண்ணம் வந்தது கருப்பட்டிக்கு. “கண்மணி ரொம்ப உடைஞ்சு போய் இருக்குற மாதிரி இருக்கு டா. போய் என்னன்னு கேளு. ஏதாவது பேச்சுக் கொடுத்து தூங்க அனுப்பு. மணி பத்தரைக்கு மேல ஆகிருச்சு”, என்று சொல்லி விட்டு தன்னுடைய வீட்டுக்குச் சென்றான் கருப்பட்டி.
“கண்மணி”, என்ற படி அவள் அமர்ந்திருந்த திண்ணையில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தான் சிவன்.
“ஆன் வந்துட்டியா சிவா? சாப்பாடு எடுத்து வைக்கவா? மத்த எல்லாரும் தூங்கிட்டாங்க. அத்தை நீ வந்ததும் என்னை சாப்பாடு எடுத்து வைக்கச் சொன்னாங்க”
“நீ சாப்பிட்டியா கண்மணி?”
“சாப்பிட்டேன்”
“அம்மா தங்கச்சி எல்லாம் உன் கிட்ட நல்லா பேசுறாங்களா?”
“செல்வியைத் தவிர எல்லாரும் நல்லா பேசுறாங்க”, என்று சிறு சிரிப்புடன் சொன்னாள். அந்த சிரிப்பே அவனுக்கு நிறைவாக இருந்தது.
“அவ எப்பவுமே கொஞ்சம் அப்படி தான். சில நேரம் மெண்டல் மாதிரி நடந்துக்கும். சில நேரம் ரொம்ப பாசமாவும் இருப்பா. கொஞ்ச நாள்ல உன்னை புரிஞ்சிக்குவா. சரி அம்மா மேல உனக்கு கோபம் இருக்கா கண்மணி?”
“அது கஷ்டமா இருந்தது தான். ஆனா அது எதார்த்தம் தானே சிவா? பொதுவாவே லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டா ஏத்துக்காத பெத்தவங்க ஒரு குழந்தை பிறந்ததும் சேந்துருவாங்க. அது தான் என் விசயத்துலயும் நடந்துருக்கு. என்ன உங்க அண்ணன் இருந்திருந்தா நல்லா இருந்துருக்கும்”
“இளாவை ரொம்ப மிஸ் பண்ணுறியா?”
“ம்ம், ஆனா எல்லாம் கடந்து வரணும்ல? யாருக்குமே இந்த வாழ்க்கை நிரந்தரம் இல்லை தானே? நானும் கூட ஒரு நாள் போய்த் தான் ஆகணும்”
“உண்மை தான். ஆனா இருக்குற வரைக்கும் இந்த வாழ்க்கையை சந்தோஷமா வாழலாம்ல?”, என்று அவன் கேட்க அவனை திகைப்பாக நிமிர்ந்து பார்த்தாள் கண்மணி.
“நீ தைரியமான பொண்ணு கண்மணி. ஆனாலும் உடனே எல்லாத்தையும் மறக்க முடியாது தான். ஆனா கொஞ்சம் மாற முயற்சி பண்ணு. எப்பவும் வானத்தை வெறிச்சு பாத்துட்டு உக்காராம உன் பிள்ளை எப்படி வளரனும்? அவனை எப்படி வளக்கணும்? எங்க அம்மா மாதிரியா? உங்க அம்மா மாதிரியா? எப்படி அவன் வரணும்னு சந்தோஷமான கற்பனையை உன் மனசுக்குள கொண்டு வா. யு பீல் பெட்டர்”
“ஹிம், இது கூட நல்ல ஐடியா வா தான் இருக்கு. டிரை பண்ணுறேன். தேங்க்ஸ்”
“நான் உனக்கு ஒரு நல்ல நண்பன் கண்மணி. பிரண்ட்ஸ்குள்ள தேங்க்ஸ் எல்லாம் வரக் கூடாது”
“சரி சிவா”
“சரி உனக்கு வேலைக்கு போகணும்னு ஆசை இருக்கா? நான் ஏதாவது ஏற்பாடு பண்ணவா?”
“இப்போதைக்கு வேண்டாம் சிவா. முதல்ல குழந்தை நல்ல படியா பிறக்கட்டும். அப்புறம் அதை பத்தி யோசிக்கிறேன். ஆனா இப்படியே சாக்கடையா தேங்கிற மாட்டேன். கண்டிப்பா என் பிள்ளைக்கு நான் முன் உதாரணமா இருப்பேன்”
“குட், சரி நான் குளிச்சிட்டு சாப்பிட்டுக்குறேன். நீ தூங்கப் போ”
“இல்லை, உனக்கு சாப்பாடு எடுத்து வச்சிட்டே தூங்கப் போறேன். எனக்கு தூக்கம் வரலை. நீ குளிச்சிட்டு வா”
“சரி”
“சிவா”
“என்ன கண்மணி?”
“திருப்பூர் போகணும். வீடு காலி பண்ணனும். திங்க்ஸ் எல்லாம் அங்கயே இருக்கு. அப்புறம் உங்க அண்ணா வேலை பார்த்த கம்பெனிக்கு சொல்லணும்”
“முடியும் சிவா. என் குழந்தைக்கு எதுவும் ஆகாது. நாம போக தான் செய்யணும்”
“உன்னை கவனமா பாத்துக்க வேண்டியது என்னோட கடமை கண்மணி. நாளைக்கு ஒரு கார் பிடிக்கிறேன். போயிட்டு வந்துறலாம்”, என்று சொல்லி விட்டு குளிக்கச் சென்றான்.
அடுத்த நாள் காலையில் எழுந்ததும் அந்த விஷயத்தை அவன் பார்வதியிடம் சொல்ல அவளோ “இப்ப போல கண்மணியை அலைய வைக்கணுமா டா? அது அவ குழந்தைக்கு நல்லது இல்லை”, என்று சொன்னாள்.
“அம்மா, அவ இல்லாம நாங்க போய் என்ன பண்ண முடியும்? எங்களை திருடங்கன்னு கூட நினைக்க வாய்ப்பு இருக்கு. அதெல்லாம் உங்க மருமகளை…. சாரி சாரி உங்க பேரப் பிள்ளையை பத்திரமா திருப்பிக் கொண்டு வந்துருவோம். உங்களுக்கு மருமகளை விட பேரப் பிள்ளை தானே முக்கியம்?”, என்று அன்னையைக் குத்திக் காட்டவும் அவன் மறக்க வில்லை.
அவனை முறைத்துப் பார்த்து விட்டு “சரி பத்திரமா போயிட்டு வாங்க. அப்புறம் எனக்கு என் மருமகளும் பத்திரமா வரணும். நல்ல பொண்ணா இருக்கா டா. ஒரு வார்த்தை அதிர்ந்து பேசுறது இல்லை. இளாவுக்கு தான் கொடுத்து வைக்கலை”, என்று பார்வதி சொல்ல அன்னையின் மனது மாறியது சிவனுக்கும் நிம்மதியாக இருந்தது.
சொன்னது போல கார் வந்ததும் கருப்பட்டி, சிவன், கண்மணி மூவரும் கிளம்பினார்கள். போகும் போதே டிரைவரிடம் தெளிவாக சொல்லி விட்டான் மெதுவாக போக வேண்டும் என்று.
திருப்பூர் சென்று ஒரு டெம்போ பிடித்து வீட்டைக் காலி செய்தார்கள். திரும்பி வரும் போது கருப்பட்டி டெம்போவில் வந்தான். இவர்கள் இருவரும் காரில் கிளம்பினார்கள். திருப்பூரில் இருந்து கிளம்புவதற்கு முன் இளவரசன் வேலை செய்த கம்பெனிக்கு சென்று விஷயத்தை தெரிவித்தார்கள்.
இளவரசன் லீவில் இருக்கிறான் என்று தான் அவர்கள் நினைத்திருந்தார்கள். அவன் உயிருடன் இல்லை என்ற விஷயம் கேட்டு அனைவருக்கும் அதிர்ச்சி தான்.
அனைவருமே கண்மணிக்காக வருந்தினார்கள். அங்கிருந்த மேனேஜர் கூடிய விரைவில் இளாவுக்கான செட்டில்மெண்ட் பணத்தை அவளது அக்கவுண்டுக்கு அனுப்புவதாகச் சொன்னார்.
கூடவே என்றாவது அவளுக்கு வேலைக்கு வர விருப்பம் என்றால் வேலை தருவதாகவும் சொன்னார். யோசித்து சொல்கிறோம் என்று சொல்லி கண்மணியை அழைத்துக் கொண்டு வந்தான் சிவன்.
சிறிது தூரம் வந்த பிறகு தான் அவள் கையில் ஒரு புகைப்படம் இருப்பதைக் கண்டான். “இது யார் போட்டோ கண்மணி? உங்க கல்யாண போட்டோவா?”, என்று கேட்டான் சிவன்.
“கல்யாண போட்டோ ஆல்பம் பேக்ல இருக்கு சிவா. இது வேற”, என்ற படி அதை அவனிடம் நீட்டினாள்.
அதை வாங்கிப் பார்த்து விட்டு “இவங்க தான் உன்னோட அம்மா அப்பாவா?”, என்று கேட்டான்.
“ஆமா”
“உங்க அம்மா ரொம்ப அழகு. உங்க அப்பாவும் தான்”
“அழகு இருந்து என்ன செய்ய? எங்க அம்மா எல்லாம் பிறந்துருக்கவே வேண்டாம். அதிர்ஷ்டமே இல்லாதவங்க”, என்று தளர்வுடன் சொன்னாள் கண்மணி.