இதை வெளியே சொல்லலாமா வேண்டாமா என்று புரியாத குழப்பத்தில் இருந்தாள் பவித்ரா. அன்று மாலை இரண்டு மனைவிகளுக்கும் புடவை எடுத்துக் கொண்டு வந்திருந்தார் ராதாகிருஷ்ணன்.
கோதையிடம் ஒன்றைக் கொடுத்த ராதாகிருஷ்ணன் பவித்ராவிடம் மற்றதைக் கொடுக்கப் போக “என் கிட்ட கொடுங்க, நானே கொடுத்துறேன்”, என்றாள் கோதை.
“ஏன் நான் கொடுத்தா என்ன? அவளும் என் பொண்டாட்டி தான். என்னால என்னோட கடமைல இருந்து மாற முடியாது”
“நான் கொடுக்க வேண்டாம்னா சொன்னேன்? நான் கொடுத்துறேன்னு தானே சொல்றேன்?”
“நீ கொடுக்குறதுக்கும் நான் கொடுக்குறதுக்கும் நிறைய வித்தியாஸம் இருக்கு கோதை. உனக்கு உன் அம்மா அப்பா வாங்கிக் கொடுக்காத புடவைகளா? ஆனா அதை எல்லாம் விட நான் இப்ப கொடுத்தப்ப நீ எவ்வளவு சந்தோஷப் பட்ட? அதே சந்தோஷத்தை பவித்ராவும் பட வேண்டாமா?”, என்று கேட்டவர் பவித்ராவைத் தேடிச் சென்றார். கோதையின் முகம் விகாரமாக ஆனது.
ராதாகிருஷ்ணன் எண்ணியது போல அவர் அந்த புடவையைக் கொடுக்கும் போது பவித்ரா முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். வெகு நாட்கள் கழித்து கணவரை நெருங்கி அவரை இறுக அணைத்துக் கொண்டாள்.
அவளுடைய இறுகிய அணைப்பில் அவள் முகத்தில் இருந்த காதலில் அவரது உணர்வுகள் மீட்டப் பட அவளுடன் சந்தோஷமாக வாழ்ந்தார். அது தான் பவித்ரா அவருடன் கடைசியாக கூடியது. சிறிது நேரம் கழித்து திருப்தியாக அவள் நெற்றியில் முத்தமிட்டவர் மூத்த மனைவியைத் தேடிப் போக “ஒரு சேலையை கொடுத்துட்டு வர இவ்வளவு நேரமா?”, என்று கோபமாக கேட்டாள் கோதை.
“லூசு மாதிரி பேசாத, பேசாம படு”, என்று சொன்ன ராதாகிருஷ்ணன் இரண்டாம் மனைவியுடன் கூடிய களைப்பில் நிம்மதியாக தூங்கினார். ஆனால் கோதை தூங்க வில்லை. அடுத்த நாள் அவர் அலுவலகம் கிளம்பிச் சென்றதும் அவர் முந்தைய நாள் வாங்கிக் கொடுத்த புடவையை பவித்ராவிடம் கேட்டாள் கோதை.
“அக்கா அது மட்டும் இருக்கட்டுமே?”, என்று பவித்ரா கண்ணீருடன் கெஞ்ச அவள் கண்ணீர் கோதையை பாதிக்க வில்லை. அவள் கண்ணீரைப் பொருட்படுத்தாமல் அந்த புடவையை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள். பவித்ரா ஏங்கி ஏங்கி அழுதாள். ஒரு புடவை போனதுக்கு அவள் அழ வில்லை. கணவன் மீது அவளுக்கு இருந்த உரிமையும் அல்லவா போய் விட்டது.
தன் வாழ்க்கையை எண்ணி, கணவனை எண்ணி, எதிர்காலத்தை எண்ணி, காதலை எண்ணி ஏங்கி ஏங்கி அழுதவளுக்கு என்ன முயன்றும் எந்த முடிவும் எடுக்கத் தோன்ற வில்லை.
அன்று மாலை வீட்டுக்கு வந்த ராதாகிருஷ்ணன் ஏதோ ஒரு பைலைத் தேட கோதையின் பீரோவைத் திறந்தார். திறந்தவர் அதிர்ந்து தான் போனார். அங்கே லாக்கருக்குள் பதுங்கி இருந்தது அவர் பவித்ராவுக்கு வாங்கி தந்த புடவை.
“கோதை”, என்று அவர் கத்திய கத்தலில் வீட்டில் இருந்த அனைவருமே அங்கு கூடி விட்டார்கள்..
“என்ன இது?”, என்று அவர் புடவையைக் காட்டி கேட்க உள்ளுக்குள் குளிர் எடுத்தாலும் “அது எனக்கு சொந்தமானது. என்னால யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது”, என்று திடமாய்ச் சொன்னாள் கோதை. ஒரு ஓரமாக நடப்பதை வேடிக்கைப் பார்த்த படி நின்றாள் பவித்ரா.
“பாத்தீங்களா மாமா உங்க பொண்ணு பேசுறதை? இது நான் பவித்ராவுக்கு வாங்கிக் கொடுத்த புடவை. அதை பிடுங்கி வச்சிருக்கா. நீங்களே உங்க பொண்ணைக் கேளுங்க”, என்று மாமனாரிடம் பேசினார் ராதாகிருஷ்ணன்.
“இதுல தப்பு என்ன இருக்கு மாப்பிள்ளை? அவ புருஷன் அவளுக்கு வேணும்னு நினைக்கிறதுல என்ன தப்பு இருக்கு?”, என்று அவர் கேட்க அதிர்ந்து போனார் ராதாகிருஷ்ணன்.
“நாங்களும் உடைச்சு பேசுறோம் மாப்பிள்ளை. இந்த பொண்ணுக்கு பணத்தைக் கொடுத்து செட்டில் பண்ணி அனுப்பிருவோம். பிள்ளைக்காக தானே அவளைக் கல்யாணம் பண்ணி வச்சோம். இப்ப தான் என் மகளே உண்டாகிட்டாளே?”, என்று கேட்டாள் உமா.
“சீ நன்றி கெட்ட ஜென்மங்களா. உங்க சுயநலத்துக்கு ஒரு அப்பாவி பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டீங்களே?”, என்று ராதாகிருஷ்ணன் கேட்க “அதான் பணத்தைக் கொடுத்து…”, என்று கோதை சொல்ல அவளை ஒரு அறை விட்டார்.
“ஐயோ வயித்து பிள்ளையை போய் அடிக்கிறீங்களே?”, என்று உமா கதற “ஒரு நிமிஷம், நான் பேசலாமா?”, என்று கேட்டாள் பவித்ரா.
அவளது உணர்வுகள் துடைத்த முகத்தை பார்த்த படி இருந்தார் ராதாகிருஷ்ணன். “நான் இந்த வீட்டை விட்டுப் போறேன். என்னாலயும் இங்க இருந்து போராட முடியாது. எல்லாம் தெரிஞ்சு தானே நானும் வந்தேன்? அப்படின்னா நான் விலகி போறது தான் சரி. எங்க சித்தியும் அப்பாவும் பணத்துக்காக இந்த கல்யாணத்தில் என்னை கட்டாயப் படுத்தும் போது நான் உயிரை விட்டுருக்கணும். ஆனா என் தம்பி தங்கச்சிக்காக கோதை அக்கா வாழ்க்கையை பங்கு போடணும்னு நினைச்சதுக்கு எனக்கு இது தேவை தான். அதனால நான் போறேன். இனி உங்க வாழ்க்கையில் நான் வரவே மாட்டேன்”, என்று சொல்லி முடித்தாள். அனைவரும் அமைதியாக இருந்தார்கள். கோதை முகம் மலர்ந்தது.
“அதான் அவளே சொல்லிட்டால்ல? அப்பா அவளுக்கு பணம் கொடுத்து எங்கயாவது அனுப்பிருங்க”, என்றாள் கோதை.
“அப்படி என்னால பவித்ராவை விட முடியாது. எனக்கு ரெண்டு பேரும் முக்கியம்”, என்றார் ராதாகிருஷ்ணன்.
“நீங்க அப்படி நினைக்கலாம். ஆனா என்னால ரெண்டுல ஒண்ணா இங்க இருக்க முடியாது. நான் போகத் தான் போறேன்”, என்று பிடிவாதம் பிடித்தாள் பவித்ரா.
அவளது பிடிவாதம் வென்றது. தன்னுடைய பையைத் தூக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள். மாணிக்கம் அவளிடம் பணத்தை நீட்ட அவரை நேருக்கு நேர் பார்த்தவள் “நான் என் புருஷன் கையால தாலி வாங்கி முறையான வாழ்க்கையை தான் வாழ்ந்தேன். இந்த பணத்தைக் கொடுத்து என்னை விபச்சாரி ஆக்கிடாதீங்க”, என்று சொல்ல அவள் பதிலில் மாணிக்கமே திகைத்துப் போய் கையை தன் பக்கம் இழுத்துக் கொண்டார். தவறு செய்த உறுத்தல் அவருக்கு வந்தது. ஆனாலும் அந்த நிமிடம் மகள் வாழ்க்கை மட்டுமே அவருக்கு முக்கியமாக பட்டது.
அடுத்து யார் முகத்தையும் பார்க்காமல் அவள் வீட்டை விட்டு வெளியே செல்ல ராதாகிருஷ்ணன் அவள் பின்னேயே சென்றார். “அப்பா அவரும் போறார் பா”, என்றாள் கோதை.
“மாப்பிள்ளை வந்துருவார் மா. பவித்ரா அவரை நம்ம கிட்ட அனுப்பிடுவா. நீ தைரியமா இரு”, என்றார் மாணிக்கம்.
வெளியே சென்ற ராதாகிருஷ்ணன் மனைவியின் கையில் இருந்த பேகை வாங்கி காரில் போட்டார். அவளையும் காரில் அமர வைத்தார். கார் வீட்டை விட்டுச் சென்றது. அவர் நேராக சென்றது கோயம்புத்தூர்க்கு தான். தன்னுடைய வீட்டுக்கு தான் அவளை அழைத்துச் சென்றார்.
“வா கிருஷ்ணா, வா மா மருமகளே”, என்று வரவேற்றார் ராதாகிருஷ்ணனின் தாய் ஈஸ்வரி.
மகனும் மருமகளும் வந்ததும் பிள்ளைகளுக்கு வாய்க்கு ருசியாக சமைத்துப் போட்டாள். ஆனால் அதை உண்ண தான் இருவருக்கும் மனது இல்லை. இறுகிப் போய் இருந்தார்கள்.
“சாப்பிட முடியலைன்னா வச்சிருத்தா”, என்று ஈஸ்வரி சொல்ல கை கழுவச் சென்றாள் பவித்ரா. கை கழுவி விட்டு திரும்பும் போது தலை சுத்தி விழப் போக அவளைப் பிடித்துக் கொண்ட ஈஸ்வரி “என்ன ஆத்தா செய்யுது?”, என்று கேட்டாள்.
“தலை சுத்துது அத்தை”
“தலை சுத்துதா? நாள் தள்ளிப் போயிருக்கா கண்ணு?”
“ஆமா அத்தை, அம்பது நாள் ஆகுது”
“ஆத்தா என் குலத்தைக் காப்பத்துப்பா”, என்று வேண்டியவர் “அவனுக்கு தெரியுமா மா?”, என்று கேட்டாள்.
“தெரியாது அத்தை”
“வா, அவன் கிட்ட சொல்லுவோம். கேட்டா ரொம்ப சந்தோஷம் படுவான்”, என்று சொல்லி அவள் கை பற்றி அவளை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல “அம்மா நான் கிளம்புறேன். பவித்ராவை நீங்க தான் இனி பாத்துக்கணும்”, என்றார் ராதாகிருஷணன்.
ஏதோ தன்னைக் காண தான் இருவரும் வந்திருக்கிறார்கள் என்று ஈஸ்வரி நினைக்க ராதாகிருஷ்ணனின் பேச்சு அவருக்கு திகைப்பைக் கொடுத்தது.