“வைஷ்ணவி மா எந்திரிடா” மஹாலக்ஷ்மியின் குரல் கேட்டு படுக்கையின் அருகினில் கை வைத்து பார்த்த வைஷ்ணவிக்கு அப்பொழுது தான் இந்த நாளின் நிகழ்வே நினைவிற்கு வந்தது. இன்று சித்தார்த் சுபத்ராவின் திருமணம்.
இரண்டு வருடங்களில் பார்வையாலே சித்தார்த்தின் மனதை மொத்தமாய் அவள் பக்கம் சுபத்ரா ஈர்த்துவிட, அவர்களை கண்டுகொண்ட வைஷ்ணவி கணவனிடம் கூறி திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிடலாம் என வந்து நின்றாள்.
கார்த்தியோ, “வேணாம் இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் டா. ஆசிலேஷன்ல இல்லாம ஸ்டெடியா நிக்கட்டும் நானே அப்பாகிட்ட பேசுறேன்” என ஒரு வருடத்தை கிடத்திவிட்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் வீட்டினரிடம் பேசி திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளான்.
கண்களை கசக்கி அத்தையை பார்க்க அவரும் கிளம்பியிருந்தார்.
“கார்த்திக்” தலையணையை எடுத்து நெஞ்சோடு கட்டிக்கொண்டு அழைத்தாள் மனைவி அவன் சத்தமே இல்லை. குளியலறையை பார்க்க அதுவும் திறந்திருந்தது.
மணியை பார்க்க மணி ஆரை தாண்டியிருந்தது. பதறியடித்து எழுந்தவள், “கெழவி கத்துமே” என மட மடவென குளித்து புதிதாக எடுத்த பட்டு புடவையை உடுத்தி அவசரமாக கீழே வந்தாள். வீட்டில் சேர்மத்தாயை தவிர வேறு எவரும் இல்லை.
“பாட்டி என்ன யாரையும் காணல?”
எதுவும் தெரியாதது போல் கேட்ட பேத்தியை முறைத்தவர், “ஒரு பொம்பள புள்ள, வீட்டோட மருமக இப்படியா வீட்டுல கல்யாணம் நடக்குறப்ப இருப்பாங்க? மணி இப்பயே ஏழாச்சு, இந்நேரம் உன்ர மாமியாரோட சேர்ந்து வர்ற சொந்தத்த எல்லாம் வாசல்ல நின்னு வரவேற்கணும், அத விட்டுட்டு தூக்கம் என்னவாம் தூக்கம் அம்மணிக்கு?” எதுவும் பேசாமல் அமைதியாக சென்று சமயலறையினுள் நின்றுகொண்டாள் வைஷ்ணவி.
சேர்மத்தாய் வைஷ்ணவியை மனதார திட்டிவிட்டு, “என்ற பேரனுக்கு போன் போட்டு வர சொல்லு” என ஆணையிட்ட நொடியே வாசலில் அவர்கள் வாகனம் வந்து நின்றது.
இதற்காகவே காத்திருந்தவள் அவசரமாக வெளியில் நடந்தபடியே, “வாங்க பாட்டி கிளம்பலாம்”
“இதெல்லாம் யாரு உன்ர புருஷனா வந்து எடுப்பான்? வீட்டை பூட்டல உன் வாட்டுக்கு போற?” ஒரு பையை அவளிடம் கொடுத்தார்.
“அவரு இதெல்லாம் எடுத்துட்டு போகலையா பாட்டி?” “ம்ம்ம் புள்ளைய மட்டும் தான் அவனால பாத்துக்க முடியும், இதையும் அவனே பாத்துகுட்டா புள்ளைக்கு அம்மானு நீ எதுக்கு இருக்க?”
மேலும் அவர் தாக்கினார். திரு திருவென விழித்தவள் அமைதியாக வீட்டை பூட்டி சாவியை பத்திரமாக அந்த பையை எடுத்துக்கொண்டு வாகனத்தினை நெருங்கிய பொழுது டிரைவர் இருக்கையை பார்த்தாள்.
கணவனை எதிர்பார்த்து பார்த்தவளுக்கு ஏமாற்றமாய் அவன் ஏற்பாடு செய்திருந்த டிரைவர் தான் இருந்தார். அமைதியாக பின்னால் அமர்ந்துவிட்டாள்.
வீட்டிலிருந்து பத்து நிமிட பயணத்தில் இருந்த மண்டபத்தை அடைந்ததும் மணமகள் அறைக்குள் சென்று சுபத்ராவை பார்த்துவிட்டு சகோதரன் அறைக்குள் சென்றாள்.
மொத்தமும் தயாராகி நிம்மதியாக கைபேசியை பயன்படுத்தி கொண்டு இருந்தவன் அருகில் நண்பர்கள் நான்கு பேர் தங்களுக்குள் சிரித்துப்பேசிக்கொண்டிருந்தனர்.
இன்னும் அரை மணி நேரத்தில் திருமணம் இருக்க மகளை பார்த்துவிட்ட மஹேஸ்வரி, “வைஷு இங்க வா” அழைத்து அவள் கையில் ஒரு இரண்டு பெரிய பையை திணித்தார், “தட்டு ஜாமான் எல்லாத்தையும் எடுத்து வை, நான் தாலி, நகை எல்லாம் எடுத்துட்டு வர்றேன்”
நகர்த்தவரின் கையை பிடித்து தடுத்தவள், “அவரும் பாப்பாவும் எங்க ம்மா?”
“இப்ப தான் அந்த எண்ணம் வருதா உனக்கு? எல்லாம் உன் மாமனார், மாமியாரை சொல்லணும். அதுக்கும் மேல உன் வீட்டுக்கார் உன்ன செல்லம் குடுத்து வச்சிருக்கார்”
உள்ளுக்குள் அவர் உணர்ந்த கர்வம் வார்த்தைகளில் அடக்க முடியாதது, “மாப்பிள்ளை கீழ சமையல் மேற்பார்வை பாத்துட்டு இருக்காங்க, ஸ்ரீ உங்க மாமா கூட இருக்கா, நீ வேலைய பாரு”
“உனக்கு பொறாமை உன் மாமியார் உன்ன இப்டி பாக்கலைன்னு. ஆனா உன் மருமகளை என் அத்தை என்ன பாத்துக்குற மாதிரி பாக்கணும் சொல்லிட்டேன். சரியா?”
பொய் கோவத்தோடு கண்களை சுருக்கி கேட்ட மகளை பார்த்து, “அத விட நல்லா பாத்துக்குவேண்டி என் மருமகளை” சிரிப்போடு கடந்தார் மஹேஸ்வரி.
வைஷ்ணவி தட்டை எடுத்து வைத்து தேங்காய், வாழைப்பழம், புடவை, இனிப்பு என பதினாறு வகை தட்டுகளை எடுத்துவைத்து கொண்டிருந்த நேரம், “ம்மா” என மழலை மொழி கேட்டு சிரிப்போடு திரும்பினாள் வைஷ்ணவி.
அடர் சிகப்பு நிற கவுன், தலையில் அதே நிறத்தில் பேண்ட், கிளிப் என தேவதையாய் நின்ற இரண்டு வயது மகள் ஸ்ரீ லயாவை மடியில் அமர்த்தி, “என் பிள்ளை அழகா இருக்காங்க, அப்பா தானே பாப்பாக்கு டிரஸ் பண்ணிவிட்டாங்க?” தன் குழந்தையின் கன்னத்தில் முத்தம் வைத்தாள் காலையிலிருந்து பார்க்காததால்.
“ம்மா நோ நோ” கன்னம் தடவி அன்னையின் எச்சிலை துடைத்தாள் அந்த குட்டி வைஷ்ணவி.
“என்னடி தொடைக்கிற? நான் அப்டி தான் குடுப்பேன்” வைஷ்ணவி முறைப்போடு மீண்டும் ஒரு முத்தம் வைத்தாள், இந்த முறை வேண்டுமென்றே எச்சில் படுமாறு செய்தாள்.
மகளோ உதட்டை சுளித்து, “ம்மா நோ” என்றாள் சற்று அழுத்தமாக. அந்த கோவம் வைஷ்ணவியின் மகிழ்ச்சியை தூண்டிவிட மீண்டும் மீண்டும் வைஷ்ணவி மாறி மாறி இரு கன்னங்களிலும் முத்தம் வைக்க அன்னையின் விளையாட்டை கண்டுகொண்ட மகள், அன்னையின் விளையாட்டுக்கு இணங்கி சத்தமாக சிரிக்க துவங்கினாள்.
இவ்வாறே இருவரின் விளையாட்டு மனமேடையை பார்த்த அத்தனை மக்களின் கவனத்தையும் ஈர்த்தது.
“உன் அப்பாக்கு கிட்சன் பக்கம் போனா போதும் எல்லாத்தையும் மறந்துடுவார், அம்மா என்ன பன்றேன்னு பாக்க கூட வரல, கேட்டா பொண்ணோட அண்ணன், மாப்பிள்ளை என்னோட மச்சான்னு வித விதமா கதை சொல்லுவார்”
வைஷ்ணவி புலம்ப மகளோ, “ம்மா ம்மா சாக்கி சாக்கி” என தட்டிலிருந்த சாக்லேட்டை காட்டி கேட்க,
“அப்பாகிட்ட சொல்ல கூடாது” மகளுக்கொன்றும் தன்கொன்றும் சத்தமில்லாமல் வேலையை முடித்தனர்.
ஷெர்லின் திருமணம் நடந்த மூன்றே மாதத்தில் வைஷ்ணவி கருவுற்றிருப்பது உறுதியானது. அந்த நாள் முதல் வைஷ்ணவியை கண்ணில் வைத்து பார்த்துக்கொண்டான் கார்த்தி.
வளைகாப்பு கூட ஏழாவது மாதத்தில் நடத்த கார்த்தியிடம் அனுமதி வாங்கிவிட்டார்கள், ஆனால் வைஷ்ணவி தான் பெரிய ஆர்பாட்டம் செய்துவிட்டாள் கார்த்தியிடம். அவளை சமாதானம் செய்து அனுப்பி வைப்பதற்குள் போதும் போதும் என்றானது கார்த்திக்கு. அதனாலே தினமும் குற்றாலத்திற்கும், வீட்டிற்கும் வந்து செல்ல துவங்கினான்.
மருத்துவர் குறித்த நாளுக்கு முன்பே வைஷ்ணவிக்கு பிரசவ வலி வந்திட, பத்து மணி நேரம் மொத்த மருத்துவமனையையும் உலுக்கியே மகள் ஸ்ரீ லயாவை ஈன்றெடுத்தாள் வைஷ்ணவி. ஸ்ரீயை செவிலியர் கார்த்தி கையில் கொடுத்த பொழுது,
“எப்படி சார் இந்த பொண்ண கல்யாணம் பண்ணீங்க? ஒரு பிரசவம் பாக்குறதுக்குள்ள அத்தனை கேள்வி கேக்குது. பிரசவ வலிய கூட கண்டுக்காம ஏன் இந்த ஊசி, ஏன் டாக்டர் வரலன்னு கொடஞ்சு எடுத்துட்டாங்க சார்”
கார்த்தி சிரித்துக்கொண்டே, “அந்த குடைச்சல்ல தான் சிஸ்டர் என் சந்தோசமே இருக்கு”
குழந்தையின் பிஞ்சு நெற்றியில் இதழ் பதித்தவன், “வைஷ்ணவியை பாக்கலாமா?” ஏக்கமாக பிரசவ அறையை பார்த்தவனின் அன்பு அவள் வலியை விட அதிகமிருந்தது.
“இன்னும் ஒரு அரை மணி நேரம் வெயிட் பண்ணுங்க” என்றார் அந்த செவிலியர்.
“குழந்தைய வைஷ்ணவி பாத்துட்டாளா சிஸ்டர்?” கண்களை மகளிடமிருந்து அகற்றாமல் அவன் கேட்க, அவனிடமிருந்து குழந்தையை பெற்ற மஹாலக்ஷ்மி,
“வைஷ்ணவி பாத்துட்டு தான் நம்மக்கிடையே தருவாங்க ப்பா. குழந்தைய என்கிட்டே குடுத்துட்டு நீ எவ்ளோ கேள்வி வேணாலும் கேளு” என்றார்.
அடுத்த அரை மணி நேரத்தில் மனைவியை பார்க்க சென்ற கார்த்தியிடம், “உங்க பிடிவாதத்துல இந்த தடவ பொண்ணு ஓகே ஆனா நெக்ஸ்ட் டைம் குட்டி கார்த்திக் தான் வேணும்” செல்ல கட்டளை கொடுத்த மனைவியை நெஞ்சோடு மகிழ்ச்சியில் அணைத்துக்கொண்டான் வார்த்தைகள் இல்லாமல்.
நாட்கள் இனிமையாய் வளர, மனைவிக்கும் மகளுக்கும் அவனே தந்தையானான். இருவரும் கார்த்தியின்றி ஒரு நாளை கூட தாண்டுவது அரிதாகியது.
ஸ்ரீ கூட சில சமயங்களில் தந்தையை தேடுவதில்லை, ஆனால் வைஷ்ணவிக்கு எழுந்தவுடன் அவன் முகத்தை பார்க்க வேண்டும்.
“நீ மாடுன்னு எனக்கு தெரியும் வைஷு ஆனா சாப்பாட்டு வகைல மனுசனை மாதிரின்னுல நினைச்சேன்” – ஷெர்லின்
“மாடுனா கூட மதிப்பு இருக்கு, இந்த பன்னி கேள்வி பட்ருக்கியா ஷெரூ பேபி?” – வைஷ்ணவி
“மாட்டு கறியவிட பன்னி கறிக்கு மதிப்பு அதிகம் தோழி அவர்களே” – ஷெர்லின்
“நீ செத்தா தான் மதிப்பு, நான் உயிரோட இருந்தாலும் மதிப்பு செத்தாலும் மதிப்பு” என்ற வைஷ்ணவி, “சும்மா நிறத்துக்கு ரெண்டு வேலை செய்யலாம்ல? பாரு இதான் பன்னினு சொல்றது. அறிவே இருக்காது”
“சொந்த அண்ணன் கல்யாணத்துல வெறும் பைக்குள்ள இருக்குறத கொட்டி வந்ததுக்கு கூட மாட்டுக்கு ஆள் தேவையா?” – ஷெர்லின்
வைஷ்ணவி கையில் தங்க நகைகளை ஒப்படைக்க வந்த மஹேஸ்வரி இருவரின் பேச்சையும் கேட்டு, “நீங்க மாடு, பன்னி தான். என்கிட்ட கேட்ருந்தா நானே சொல்லிருப்பேன். வேலை இருக்கு வைஷ்ணவி, இன்னும் சின்ன புள்ளைங்களா நீங்க? கல்யாணம் ஆகி ஒரு கொழந்த இருக்கு”
திட்டி ஷெர்லின் கையில் பையை கொடுத்தார், “நகை இதுல தான் இருக்கு சூதானமா வை” என அடுத்த வேலையை பார்க்க சென்றார்.
“எங்கடி உன் புள்ள?” தோழி அருகே அமர்ந்த ஷெர்லின், “உன் புள்ள கூட தான் விளையாட போனா, அத கூட பாக்காம வெட்டி பேச்சு பேசிட்டு இருந்த”
ஸ்ரீ பிறந்து மூன்று மாதத்தில் சுந்தர் ஷெர்லின் இருவருக்கும் ரவீனி என்னும் பெண் குழந்தை பிறந்தது, திருமணம் முடிந்து சென்னையில் தஞ்சமடைந்த ஷெர்லின் தாய் வீடு வரும் பொழுதெல்லாம் ஸ்ரீ, ரவீனி அன்னையரை போலவே பலப்பட துவங்கியது.