இருவரும் பேசிக்கொண்டே வேலையை முடித்து சுந்தரிடம் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு கணவனை காண கீழே இருந்த சமயலறைக்கு வைஷ்ணவி செல்லவிருந்த நிமிடம் மஹாலக்ஷ்மி மருமகளை அழைத்து மணமேடையில் நிற்க கூறினார்.
கையில் கைபேசியும் இல்லை. ஷெர்லினிடம் சென்றவள் அவள் கையிலிருந்த நகை பையை வாங்கி, “கார்த்திக்கு கால் பண்ணி மேடைக்கு வர சொல்லு ஷெர்லின்” அவசரமாக கூறி மேடையேறிவிட்டாள் சகோதரன் மணமேடைக்கு வருவதை பார்த்து.
தகவலும் சுந்தர் மூலம் கார்த்திக்கு சென்றாயிற்று. சித்தார்த் மேடைக்கு வந்ததும் மனைவியை சுந்தர் பார்க்க அவளோ கணவனை வெறுப்பேற்றவே கண் சிமிட்டாமல் பார்த்தாள்.
“என்ன அங்க பார்வை?” முழு நம்பிக்கையும் காதல் மனைவி மேல் இருந்தாலும் ஒரு புகைச்சல் மனதில் இருக்க தானே செய்யும் ஆணுக்கு?
“மேடையை பாக்குறேன் என்ஜினீயர் சார்” பார்வையை அகற்றாமல் ஷெர்லின். அவளை முறைத்தவன் ஷெர்லின் கையை தன்னுடைய கைகளோடு கோர்த்து கொண்டான் அமைதியாக.
அவன் பொறாமையில் உள்ளூர அவள் மனம் சிரிக்க, அவன் கைகளின் சூட்டில் அவள் பார்வையை தன் பக்கம் ஈர்த்தான்.
வெற்றிகரமாக மனைவி பார்வையை பெற்றவன் புருவத்தை உயர்த்தி, “என்ன பார்வை?” என கேட்க ஒன்றும் இல்லை என கூறி தன்னுடைய காதலை அவன் விரலோடு நெருக்கத்தை கூட்டி உணர்த்தினாள்.
மேடையை பார்க்க திரும்பிய சுந்தரின் இதழில் அசையாத புன்னகை… மேடையில் நின்ற வைஷ்ணவி இறுதி நேர பொறுப்பை தான் எடுத்துக்கொள்ள, வேலை செய்தாலும் கண் இரண்டும் கணவனை தேடியது அடிக்கடி.
“அத்தை அவங்கள வர சொல்லுங்க” மகாலட்சுமியும் கணவனிடம் கூற அவரும் கார்த்தியை அழைத்துப்பார்த்தார், வருவதாக கூறினான்.
தாலி எடுத்து சபையினரிடம் ஆசீர்வாதம் வாங்கி மேடைக்கு வைஷ்ணவி வந்த சமையல் கடைசியாக அவள் இடையை மெலிதாக பிடித்து பூவை எடுத்துக்கொள்ள அவன் கையேடு மகளின் குட்டி கையும் வந்தது.
முகம் பிரகாசமாக கணவனை கண்களில் பருகினாள் மனைவி. காலையிலிருந்து பார்க்காமல் இருந்த அவள் கண்களுக்கு வெளிச்சமாய் அவன் முகம்…
மனைவியின் இமை தட்டாத பார்வையில் வெட்கம் பிறக்கப்பட்டவனாக அவள் இடையில் சற்று அழுத்தத்தை கொடுத்து கண் சிமிட்ட, சிரிப்போடு கையிலிருந்த தட்டை தன்னுடைய அத்தையின் கைகளில் ஒப்படைத்து கணவனோடு சென்று நின்றுகொண்டாள்.
உற்சாகமாக சிகப்பு நிற பட்டுடுத்தி தன் அருகில் நின்ற மனைவியை ரசித்த கார்த்திக், “அழகா இருக்கடா வைஷ்ணவி” கிசுகிசுத்தான் அவள் காதில்.
தலையை உயர்த்தி அவனை சிரிப்போடு ஏறிட நெற்றி, கழுத்து என வியர்வை தான் அவனிடம். திருமணம் நிகழ்ந்து மூன்றரை வருடங்கள் ஆனாலும் கண் சிமிட்டாமல் தன்னை பார்க்கும் மனைவியை இப்படி பார்க்க வேண்டாம் என கூற மனம் வரவில்லை கார்த்திக்கு.
இடுப்பில் சொருகியிருந்த கைக்குட்டையை எடுத்து மகளிடம் கொடுத்து, “அப்பாக்கு தொடச்சு விடுடா ஸ்ரீகுட்டி” என்க, சமத்தாக வாங்கி தந்தையின் நெற்றியில் கைக்குட்டையை ஒற்றி எடுத்தாள் குழந்தையும்.
“ஓகே ப்பா” என அன்னையிடம் கைக்குட்டையை ஒப்படைத்து தந்தையிடமிருந்து விடுபட்டு தாத்தாவோடு சென்று நின்றுகொண்டாள்.
குழந்தை சென்றதும் யார் கவனத்தையும் கவராமல் மனைவியின் கை பிடித்து தன்னோடு நெருங்கி நிறுத்திக்கொள்ள, அமைதியாக அவன் ஆசைக்கு ஈடுகொடுத்து வந்தாள்.
“அப்டி என்ன வேலை?” – வைஷ்ணவி
“சரியா வேலை நடக்குதான்னு பாக்க கூடயே நிக்கனும்லடா?” – கார்த்தி
“எல்லாத்தையும் பாப்பிங்க என்ன ஒரு எட்டு வந்து பாக்க தோணல?” குற்றம் சாட்டிய மனைவியை பார்த்து மெல்ல சிரித்தான்.
“நீயும் ஷெர்லினும் மனமேடைல தட்டு எடுத்து வச்சிட்டு பேசிட்டு இருந்திங்கள்ல?” – கார்த்தி
“ஆமா உங்களுக்கு எப்படி தெரியும்?” – வைஷ்ணவி
“ஸ்ரீ வந்து அம்மா சண்டை போடுறாங்கனு சொன்னா, வந்து பாத்தா ஷெர்லின்” மெல்லிதாக சிரித்தான், “கொழந்தை நீங்க பேசுறத சண்டைன்னு நினைச்சிடா போல” என்க மனைவியும் கணவனோடு சேர்ந்து சிரித்தாள்.
“வைஷ்ணவி” தாலி அணிவிக்கும் நேரம் வந்ததால் மஹாலக்ஷ்மி மருமகளை அழைக்க, “வந்துட்டேன் த்தை”
கணவனிடமிருந்து கையை பிரித்து செல்ல எத்தனிக்க அவனோ வேண்டும் என்றே மனைவியை விடவில்லை. விழிகள் விரித்து கணவனை பார்க்க கள்ள சிரிப்போடு நின்றான் அவன்.
“வைஷ்ணவி” இந்த முறை மஹேஸ்வரி அழைக்க, கார்த்தி விடவே இல்லை.
“கார்த்திக்” அவள் சிணுங்களில் மனம் இறங்கியவன் அவள் கையை விட வேகமாக சுபத்ராவின் பின்னால் வந்து நின்றுகொண்டாள்.
திருமணம் நல்ல விதத்தில் முடிய சுபத்ராவின் அருகிலே நின்று வைஷ்ணவி பார்த்துக்கொள்ள, கார்த்தி பந்தியை விட்டு நகலவில்லை. பொறுப்பான சகோதரனாக வந்தவர்களை நல்ல விதமாக கவனித்து அனுப்பி வைத்தான் கார்த்தி.
இரவு உணவை முடித்து வைஷ்ணவி மேலே வந்த நேரம் தந்தையும் மகளும் மெத்தையில் படுத்திருந்தனர். கார்த்தியின் நெஞ்சில் ஸ்ரீலயா படுத்திருக்க அவளை அணைத்தவாறு கண்களை வலது கை வைத்து மூடி படுத்திருந்தான் கார்த்தி.
கணவனுக்கு இருந்த அலுப்பில் உறங்கியிருப்பான் என தோன்ற மெதுவாக கதவை மூடி இரவு உடைக்கு வைஷ்ணவி மாறி குளியலறையிலிருந்து வந்து பார்த்த பொழுது ஸ்ரீ அவளுக்காக சுப்பிரமணி செய்திருந்த சிறிய கட்டிலில் நிம்மதியாக துயில்கொண்டிருந்தாள்.
“படுங்க கார்த்திக் நான் ரூமை கொஞ்சம் கிளீன் பண்ணிட்டு வர்றேன்” என்றவள் மேலும்,
“இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருந்திங்க கார்த்திக், நம்ம கல்யாணம் ஆனப்ப வேஷ்டி சட்டை போட்டது அடுத்து இப்ப தான் போடுறீங்க” கணவனை பார்க்கும் ஆசையில் ஏதாவது ஒரு சாக்கோடு பந்தி நடக்கும் இடத்திற்கு சென்றவள் தண்ணீர் குடிக்கும் சாக்கில் ஒரு ஓரத்தில் நின்று அவனை வைத்த கண் வாங்காமல் ஆசை தீர பார்த்துவிட்டு தான் சென்றாள்.
அவனோ அவளை நெருங்கி, “நீ வாடா வைஷ்ணவி, அத நாளைக்கு பாத்துக்கலாம்” மனைவியின் கரம் பற்றி கட்டிலுக்கு இழுத்தான்.
கணவனின் ஆசைக்கிணங்க வந்து படுத்தவளை அவன் நெஞ்சில் அள்ளி போட்டுக்கொண்டான்.
“என்ன இன்னைக்கு இப்டி பக்கத்துல இழுக்குறீங்க?” கேலியாக அவன் முகம் பார்த்து கேட்க, அவள் இடையோடு கைகளை கோர்த்தவன், “இதுக்கு முன்னாடி இழுத்தது இல்லையா? ஏன் இந்த கேள்வி?”
நெற்றி முட்டி கேட்டான். “இழுத்திங்க, உரிமையா இழுத்தது எல்லாம் உங்க பொண்ணு பொறக்குறதுக்கு முன்னாடி தானே, அதுக்கு அப்றம் எப்போவாவது அதுவும் தயக்கத்தோட”
சுருங்கிய முகத்தோடு குற்றம் சாட்டியவள் முகம் நொடியில் பிரகாசமானது, “கார்த்திக்..” என்றாள் ப்ரகாசத்தோடு.
சிதறியிருந்த அவள் கூந்தலில் விளையாண்டவன், சிரிப்போடு, “எதையோ என் பொண்டாட்டி யோசிச்சிட்டா” என்றான்.
“ஸ்ரீ குட்டிக்கு தம்பி ரெடி பண்ண தான?”
மனைவியின் தலையில் வலிக்காமல் கொட்டியவன், “ஏன் என் பொண்டாட்டிய அதுக்கு மட்டும் தான் நான் நெருங்கணுமா?” என்கவும் வைஷ்ணவியின் முகம் வாடியது.
கணவன் மனைவியாய் கூடி கழித்தாலும் மீண்டும் ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஆசை சில மாதங்களாக துளிர்த்திருந்தது பெண்ணுக்கு.
“குழந்தைக்கு ஒரு மூணு வயசு ஆகட்டும்டா” – கார்த்தி
“எனக்கே பிரச்சனை இல்லை, உங்களுக்கு என்ன?” – வைஷ்ணவி
“உனக்கு ஒன்னுமில்ல, எனக்கு தான் உன்னோட வலிய தாங்க முடியல” அவளை இன்னும் நெருங்கி வந்து மனைவியின் நெற்றியில் முட்டினான்.
வைஷ்ணவிக்கு பேச்சே வரவில்லை ஆனாலும், “பர்ஸ்ட் ப்ரக்னன்சி மட்டும் தான் ரொம்ப கஷ்டமா இருக்குமாம், கார்த்திக், அடுத்தது ரொம்ப வலிக்காதாம்” – வைஷ்ணவி
“யோவ் சமயலு… என்ன பழைய வைஷ்ணவியா பாக்கணுமா?” மனைவி மிரட்டவும் சிரிப்பு தான் வந்தது கணவனுக்கு.
“எந்த வைஷ்ணவி வந்தாலும் எனக்கு பயமில்லை” – கார்த்தி
“ஓ அப்ப உங்க பையன் வரட்டும். ஸ்ரீகுட்டி, அப்றம் உங்க பையன்கிட்ட உன் அப்பா என்ன உன் வீட்டுக்கு போன்னு அடிச்சு அனுப்பிவிட்டாரு, அம்மாகிட்ட ஒரு மாசம் பேசவே இல்ல, உன் தாத்தாவை, ஆச்சிய, மாமாவை திட்டுனாரு டா. ஓங்கி அடிச்சாரு, ஒரு வருஷம் சாப்பாடு கூட போடலன்னு சொல்றேன் பாருங்க” – வைஷ்ணவி
“என் பையனும் என் பொன்னும் நான் சொல்றத தான் கேப்பாங்க” கர்வமாக கார்த்தி
“இப்ப மட்டும் என்ன பையன்னு உரிமை கொண்டாடுறிங்க?” – வைஷ்ணவி
கலகலவென சிரித்தான், “சரி உனக்காக ஆறு மாசம் கம்மி பண்றேன்” என கூறிய கணவனின் முகத்தை கைகளில் ஏந்தி ஒரே நொடியில் அவன் இதழ்களை மனைவி சுவைத்திட, அவளது அதிரடியை சிறிதும் எதிர்பார்த்திராதவன் அவள் செய்கையை தன்னுடையதாகிக்கொண்டான்.
அதன் பிறகான நேரம் கணவன் மனைக்கே ஒதுக்கிவைக்க அழகான அவர்கள் நிமிடங்கள் முடிந்ததும் சோர்வாக உறங்கும் மனைவியின் நெற்றியில் இதழ் பதித்து மீண்டும் அவள் முகத்தில் கண்களை நிலைத்தான்.
எத்தனை நிறைவான வாழ்க்கை? இவளின் பிடிவாதம் மட்டும் இல்லை என்றால் இந்த பொக்கிஷத்தை, சந்தோசத்தை இழந்திருப்போம் அல்லவா?
தன்னை விட தன்னுடைய மனைவியையே அதிகம் நேசிக்கும் அளவிற்கு தன் பெற்றோர்கள் மேல் அவள் வைத்த அன்பு, அனைவர் முன்பும் வைஷ்ணவியை திட்டினாலும் மூன்றாம் நபர் முன்பு வீட்டின் மருமகளை விட்டுக்கொடுக்க மாட்டார் சேர்மத்தாய் என அவன் குடும்பம் மொத்தமும் அவள் பக்கம் தான்.
விளையாட்டு குணம் அதிகமிருந்தாலும் அவள் சேட்டை தான் அந்த குடும்பத்திற்கு தேவை. குழந்தை ஸ்ரீ கூட அதிகம் சேட்டை செய்ததில்லை, பிள்ளைக்கும் சேர்த்து அன்னை செய்யும் சேட்டை, குறும்பு எல்லாமே அழகு தான் அவ்வீட்டினருக்கு.
கார்த்தியின் வேலை காரணமாக குற்றாலத்திலிருந்து திருநெல்விக்கு வீட்டை மாற்றியிருந்தான். வாரம் ஒருமுறை வரவில்லை என்றால் கூட பரவாயில்லை, மருமகளை பார்க்காமல் பதினைந்து நாட்கள் கூட இருக்க முடியாதென மஹாலக்ஷ்மி இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வரவேண்டும் என்று கட்டளையிட்டார்.
எப்பொழுதுமே அமைதியாக இருக்கும் அவன் தந்தை கூட அதிகம் பேசுவது பேதிக்கு அடுத்து வைஷ்ணவியிடம் தான். காரணம் அவள் அவன் குடும்பத்தை தன்னுடையதாக்கியது.
‘எல்லாத்தையும் பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி தூங்குறத பாரு… ராங்கி’ மனதில் செல்லமாக திட்டியவன் பல நாட்களாக மனதில் அரித்துக்கொண்டிருந்த வார்த்தையை அவள் தூக்கத்திலிருக்கும் பொழுதே கூறிவிட முடிவெடுத்தான்.
எதற்கும் உறக்கத்தை உறுதிப்படுத்த அவள் கன்னம் கிள்ள, அசையவில்லை மனைவி.
சிரித்தவன் வார்த்தைகளுக்கு வலிக்காமல், “ஐ லவ் யூ டா வைஷ்ணவி” மெதுவாக சொல்ல, அந்த வார்த்தைக்காக காத்திருந்த மனைவி வேகமாக கண்களை திறந்தாள் அரை தூக்கத்தில்.
“கார்த்திக்…” அவன் விழித்தான், “ஏதாவது சொன்னிங்களா?” கேட்டாள் பெண்.
விழித்தவன், “ம்ம்? ம்ம்ஹ்ம்ம்” என தலையை ஆட்ட அவனை வித்தியாசமாய் பார்த்து அவன் நெஞ்சில் தலை வைத்து அவன் இடையோடு கை போட்டு,
“தூங்குயா கடலைமிட்டாய்” என்ற கட்டளையோடு உறங்கிவிட அவளை இறுக்கமாக அணைத்தவன் தானும் சந்தோசமாக உறங்கினான்.