ஏழாம் நாள், ஒன்பதாம் நாள், பதினோராம் நாள் என ஒற்றைப் பட்டையில் கணக்கு வைத்து சங்கரியின் உடல் நிலையைப் பொறுத்து வீட்டிற்கு அழைக்கும் பங்ஷன் வைக்கலாம் என்று முடிவு செய்திருந்தார் குமரேசன்…
அழகனிடமும் அது பற்றி கேட்க, “அப்பா பங்ஷன் வைக்கிறது பெரிய விஷயம் கிடையாது நம்ம பாப்பாவுக்கு அது கம்ஃபர்டபிளா இருக்கா, இல்ல அன் கம்ஃபர்டபிளா இருக்கான்னு கேட்டுக்கோங்க அப்பா” என்றதும்,
“என்ன தம்பி இப்படி சொல்ற. எல்லா பக்கமும் இது நடக்கிறது தானே, பொண்ணு வயசுக்கு வந்ததும் வீட்டுக்கு அழைக்கிற பங்ஷன் வைப்பாங்க தானே. அதுவும் நம்ம பொண்ணு ரொம்ப நாள் கழிச்சு பெரிய மனுசியாகியிருக்கா அப்படி இருக்கும் போது ஊருக்கே அதை தெரியப்படுத்துறது நம்மளோட கடமை இல்லையா”
“அப்பா நீங்க சொல்றது எல்லாம் சாதாரண பொண்ணுங்களுக்கு நடந்தா ஓகே, ஆனா நம்ம பொண்ணு லேட்ட தானே வந்திருக்கா, ஏற்கனவே அவளோட மனநிலை இப்ப எப்படி இருக்கும்னு தெரியாதுப்பா. புதுசா இருக்கிற இந்த சூழ்நிலை அவளுக்கு என்ன மாதிரியான மனநிலையைக் கொண்டு வந்துருக்குன்னு தெரியல. இப்ப இந்த மாதிரி ஒரு பங்ஷன் தேவையான்னு எனக்கு தோணுது. ஏன் நம்ம வழக்கத்துலை கல்யாணத்துக்கு முதல் நாள் சடங்கு செஞ்சிட்டு அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணுவாங்களே அது மாதிரி கூட செஞ்சுக்கலாம்பா. பாப்பாக்கிட்ட முதல்ல கேட்கலாம்” என கூற,
குமரேசனுக்கும் அது சரி என்று பட்டதால் சங்கரியின் முடிவே இறுதியானது என்று இவர்கள் எண்ணிக் கொண்டிருக்க,
அவளோ, “எனக்கு அண்ணா சொல்றது தான் சரின்னு தோணுதுப்பா. இந்த டைம்ல எனக்கு இது தேவையில்லை, இவ்வளவு நாள் கழிச்சு நான் பெரிய பொண்ணு ஆனதனால எல்லோரும் ஒரு மாதிரி தான் நினைப்பாங்க, இதுல பெருசா பங்ஷன் வச்சி இவ்வளவு நாள், நான் வயசுக்கு வரலைன்னு எல்லாரும் என்னைக் கேலி கிண்டல் பண்ற மாதிரி பண்ணாதீங்கப்பா” என்றதும் மகளின் மனநிலையை, மகன் எவ்வாறு கணித்திருக்கிறான் என்று எண்ணி பெருமிதம் கொண்டார்..
சங்கரி வயதிற்கு வந்து கிட்டத்தட்ட 11 வது நாள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை மட்டும் அழைத்து சிறிதாய் சடங்கு சுற்றி அவளை வீட்டிற்கு அழைத்தார்கள். பெண் இல்லாத வீடு என்பதால் அனைத்தையும் பக்கத்து வீட்டு விமலா தான் பார்த்து பார்த்து செய்தார. அனைத்தும் முடிந்து வந்திருந்தவர்கள் சென்ற பிறகு, “ஐயா உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்” என்று தயங்கி நின்றாள் விமலா.
“என் மனைவி மட்டும் இல்ல, எங்க வீட்டுல இதை எடுத்து நடத்த பெண்களே இல்லாத நிலையில இப்படி ஒரு நிகழ்ச்சியை எங்களுக்கு நடத்தவும் தெரியாது. ஆனா நீங்க உறுதுணையா இருந்நதால தான் இந்த அளவுக்கு இதை எங்களால செய்ய முடுஞ்சுது. அப்படி இருக்கும் போது நீங்க எதுவா இருந்தாலும் தாராளமா சொல்லலாம், தயங்கி நிக்கணும்னு அவசியம் இல்லம்மா” என்றிட,
“இல்லைங்கையா பொண்ணு பெரிய மனுசி ஆயிட்டா இப்போ எல்லாருக்கும் அது தெருஞ்சுருச்சு. அதே மாதிரி பெரிய பையனுக்கும் சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணிடலாமே ஐயா. ஏன்னா அடுத்தடுத்து பசங்க கல்யாணத்துக்கு நிக்கும்போது பெரியவனுக்கு முடிச்சா தானே அடுத்தடுத்து எல்லாருக்கும் செய்ய முடியும்.”
“நானும் இதைப் பத்தி யோசிச்சேன்மா. ஆனா பெரியவன் பிடி கொடுக்க மாட்டேங்கிறானே, அது தான் யோசனையா இருக்குது..”
“தம்பி அப்படித்தான் ஐயா சொல்லும் அதுக்காக நாம அப்படியே விட்டுட முடியுமா என்ன? எனக்கும் கூட தூரத்து சொந்தத்துல தங்கச்சி முறையில ஒரு பொண்ணு இருக்கா, ஜாதகம் போட்டோ எல்லாம் வாங்கி கொண்டு வந்து தர்றேன் பிடிச்சிருந்தா பாருங்க மேற்கொண்டு பேசலாம். தம்பி மாதிரி ஒரு பையன் கிடைச்சா அவங்க குடும்பமும் நல்லா இருக்கும் இல்லையா.”
“சரிமா எதுக்கும் வாங்கிட்டு வா பேசிக்கலாம்” என்று சொல்லி அனுப்பி வைத்தவர் இது தொடர்பாக அழகனிடம் பேச முயற்சி செய்ய, அவனோ இரண்டு தினங்கள் கடைக்கு செல்லாததால் வேலை தலைக்கு மேல் குவிந்திருப்பதை கண்டு விட்டு இவர் உறங்கிய பிறகு வீட்டிற்கு வந்தான். அதேபோல அவர் அதிகாலை எழும் முன்னே கடைக்கு செல்பவன் உறங்கிய பிறகு வீட்டிற்கு வர, அவனை கையில் பிடிக்க முடியாமல் திணறித்தான் போனார் குமரேசன்.
அதிலும் கடைக்கு செல்லாததில் பெருமளவு பணம் குறைந்து இருப்பது அழகனுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. வீடு மட்டுமின்றி புதிதாக ஆரம்பித்திருந்த கடைகளும் கூட சேமிப்பு பணத்தை வைத்தும், கடன் பட்டும் தான் உருவாக்கியிருந்தான். அப்படி இருக்கும் போது வரவு செலவில் எப்படி இத்தனை பெரிய அடி வாங்கியது என்று குழம்பிப் போனான்.
தம்பியிடம் கேட்கவும் தயக்கம், ‘என்ன நம்பிக்கை இல்லாமல் என்னிடம் கேட்கிறாயா?’என்று அவன் ஒருவார்த்தை கூறிவிட்டால் முற்றிலும் உடைந்து விடுவான், என்பதால் தம்பியிடமும் கேட்க முடியாமல் திணறிய அழகன் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி இருக்க, சரியாக ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் திடீரென்று வீட்டில் பூகம்பம் ஒன்று வெடித்தது..
ஓயாது வேலை செய்ததன் விளைவாகவும், அலைச்சலின் காரணமாகவும் அழகனுக்கு சற்றே காய்ச்சல் கண்டிருக்க, விடிந்து வெகு நேரமாகியும் எழாமல் இருந்தான்.
கடைக்கு வர வேண்டிய காய்கள் வராததால் மற்ற இரண்டு கடைகளையும் பார்த்துக் கொள்பவர்கள் வீட்டிற்க்கே வந்து விசாரித்ததும், மகனின் அறைக் கதவை தட்டி விட்டு காத்திருந்தார் குமரேசன்.
அப்போதும் அவன் எழாமல் இருப்பதை கண்டு விட்டு, ‘பையனுக்கு என்னாச்சோ, ஏதாச்சோ’ என்று தெரியாமல் பயந்து போனார். அந்த பயம் அனைவரையும் தொற்றிக் கொள்ள, அனைவரும் சேர்ந்து கதவைத் தட்ட ஒரு வழியாக சோர்வோடு எழுந்து வந்து கதவைத் திறந்தவன் அனைவரையும் கண்டு குழம்பினான்.
“என்னாச்சுங்கப்பா? ஏன் எல்லாரும் ஒரு மாதிரி இருக்கீங்க?”
“தம்பி இப்ப மணி ஒன்பதுய்யா” என்றதும் அதிர்ந்து, திரும்பி சுவர் கடிகாரத்தைப் பார்க்க மணி 9.10 என்று காட்டியது.
‘இவ்வளவு நேரம் தூங்கிட்டனா?’ என்று நினைத்துக் கொண்டு, ”தெரியலப்பா ரொம்ப அசதி எழவே முடியல” என்றதும் சட்டென்று மகனின் கழுத்தைத் தொட்டுப் பார்த்தார் குமரேசன். காய்ச்சலில் அவன் உடல் கொதித்தது.
“என்னப்பா காய்ச்சல் இப்படி அடிக்குது?”
“நைட்டே உடம்பு சுட்டுச்சுப்பா. ஒருவேளை அலைச்சலால இருக்குமோன்னு நெனச்சு விட்டுட்டேன்பா”
“சரி ஹாஸ்பிடல் போலாம் வா” பரிவுடன் மகனை அழைத்தார்
“இல்லப்பா இப்பவே 9 ஆயிடுச்சு இன்னும் எந்த வேலையும் ஆகி இருக்காது, அதான் யோசனையா இருக்குது” என்றவன் அவசரமாக பீரோவில் இருந்து சிறிது பணத்தை எடுத்து அவர்கள் இருவரிடமும் கொடுத்து, “எப்படியும் நமக்கான காய்கள் அங்க தான் இருக்கும். நீங்க போய் மாணிக்கம் அண்ணன் கடையில எடுத்துட்டு வந்துருங்க போங்க” என்றதும் கடைகளை பார்த்துக் கொள்ளும் நபர்கள் இருவரும் அங்கிருந்து செல்ல,
வேலைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்த அகிலிடம், “ஏன் அகில் நான் தான் உடம்பு சரியில்லாததால எழல, நீயாவது காய்கனி கமிஷன் மண்டிக்கு போய் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துருக்கலாம்ல. அந்த வேலை நின்னா இன்னைக்கு பொழப்பே நின்னு போயிடுமே” எதார்த்தமாகக் கேட்டான்.
“அந்த மாதிரி இடத்துக்கு நான் போகணும்னு அவசியமே இல்லை. ஏதோ எப்பவாவது அர்ஜென்ட்னா கடையில போய் உட்காரலாம் அது வரைக்கும் ஓகே. இன்னும் சொல்லப்போனா அதுவே எனக்கு அசிங்கமா தான் இருக்குது, அப்படி இருக்கும் போது என்னைப் போய் மார்க்கெட்டுக்கு எல்லாம் போக சொல்ற? என்ன பாத்தா எப்படி தெரியுது உனக்கு வேலைக்காரன் மாதிரியா?” என்று சுள்ளென்று எரிந்து விழவும் அழகன் விக்கித்துப் போனான்.
அழகனோ, “நாம உழைச்சு தான் சம்பாதிக்கிறோம் வேற எதுவும் செஞ்சு சம்பாதிக்கலை. அப்படி இருக்கும் போது இதைப் போய் இவ்வளவு அசிங்கமா பேசுற? இந்த வேலையைப் பார்த்து தாண்டா உங்களை எல்லாம் இவ்வளவு தூரம் வளர்ந்து கொண்டு வந்துருக்கேன். அது நெனைப்புல இருக்கா இல்லையா?” என்றதும் கையில் இருந்த நோட்டு ஒன்றை சுவரில் விசிறி அடித்தான் அகிலன்.
அனைவரும் அதிர்ந்து விழித்த வேளையில், “என்ன நெனைச்சுட்டு இருக்கிற உன் மனசுல? என்னமோ நீ மட்டும் தான் சம்பாதிச்சு எங்களைக் காப்பாத்துன மாதிரி பேசுற. ஏன் அப்பா சம்பாதிக்கலையா, நீ மட்டும் தான் சம்பாதிச்சியா? நீ மட்டும் தனியாளா சம்பாதிச்சு சொத்து சேர்த்த மாதிரி பேசுற. அம்மாவுக்கு அவங்க வீட்டுல இருந்து வர வேண்டியதை கேஸ் போட்டு வாங்குனோம், அதே மாதிரி அப்பா பக்கமும் இருந்த நிலத்தை வித்து வந்த பணம் இருந்துச்சு, எல்லாத்தையும் சேர்த்ததால தானே இந்த சொத்தெல்லாம் வந்துச்சு. என்னமோ நீ ஒருத்தன் மட்டும் இந்த நாலு வருஷத்துல சம்பாதிச்சு எல்லாத்தையும் கட்டிட்ட மாதிரி பேசுற” என்று எடுத்தெறிந்து பேசியவனை உணர்ச்சி துடைத்த முகத்தோடு அழகன் பார்த்தான். அவன் கண்களில் உயிர்ப்பில்லை.
“இல்லன்னா என்ன பண்ணுவீங்க. அடிப்பீங்கலா, எங்க அடிங்க பார்க்கலாம்” நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு எகிறியவனின் கன்னத்தில் பட்டென்று அறைந்திருந்தான் அழகன்.
அகில் தன்னை மட்டம் தட்டி பேசிய போது கூட பல்லைக் கடித்துக்கொண்டு கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்து நின்றவனால், தன் தந்தையை இவ்வாறு பேசியதைக் கேட்டுக்கொண்டு கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
வந்த கோபத்தில் ஓங்கி அறைந்து விட்டான். அதன் பிறகே தான் அடித்ததை உணர்ந்தவன் காற்றில் கைகளை வீசித் தன் கோபத்தை மட்டுப்படுத்தியவன், “எதுக்காக இப்படி பேசுற அகில்?” ஆற்றாமையாய் வெளிவந்தது அவன் குரல்.
“என்ன பேசுனேன் உண்மையைத் தானே பேசுனேன். நீ வளர்த்தா கை நீட்டி அடிப்பியா? என்னமோ எவனோ ஒருத்தனுக்கு செஞ்ச மாதிரி சொல்லிக்காட்டுற. நாங்க உன் தம்பி தானே, பெரிய இவனாட்டம் நான், எல்லாரையும் பார்த்துக்கிறேன்னு அம்மா சாகும்போது சொன்ன, அப்படி சொன்னா மட்டும் பத்தாது ஒழுங்கா எங்களுக்கு தேவையான எல்லாத்தையும் செய்யணும்..”
“சரி இப்போ உனக்கு என்ன தேவைன்னு, என்னைக் குத்தி காட்டுற?” என்று கைகளை மார்பின் குறுக்கை கட்டிக் கொண்டு உறுத்து விழித்துக் கேட்டவனை கண்டு உள்ளுக்குள் அச்சம் பிறந்தாலும் கூட ‘இன்று அதை சொல்லியே’ ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்ந்த அகில், “எனக்கு என்ன வயசு ஆகுது?” என்று கேட்டான்..
“ஏன் கேக்குற 24 வயசு ஆயிடுச்சு..”
“ நானும் வேலைக்கு போய் உன்கிட்ட சம்பாதிச்சு கொடுத்துட்டு தானே இருக்கேன். அப்படி இருக்கும் போது என்னமோ அடிமை மாதிரி ட்ரீட் பண்ற?” என்றவனை என்னவென்று பிரித்தெடுக்க முடியாத உணர்வோடு பார்த்து வைத்தான் அழகன்.
“இப்ப என்ன சொல்ல வர்ற, தெளிவா சொல்லு. எதையும் மறைமுகமாக பேசி புரிய வைக்க முடியாது, என்ன சொல்லணுமோ தெளிவா சொல்லு.”
“எதுக்கு மறைச்சு பேச போறேன். உன்கிட்ட பேசறதுக்கோ இல்ல நான் சொல்ல வந்ததை சொல்ல தயங்கவோ இதுல வேலையே கிடையாது. உனக்கு பயப்படணும்னு எனக்கு அவசியமும் கிடையாது. இப்ப இந்த வீட்டை விட்டு வெளியில போனா கூட என்னால சம்பாதிச்சு என்னை பார்த்துக்க முடியும்”
“சரி உன்னால முடியும் தான், நான் இல்லன்னு சொல்லலையே. நீ என்ன சொல்ல வந்தியோ அதை சொல்லு” என்ற அழகனுக்கு அவன் சொல்ல வருவது ஓரளவுக்கு புரிந்து போனது.
“எனக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்குது ”
“சரி அதுக்கு என்ன பண்ணலாங்கிற”
“என்ன பண்ணலாம்னா என்ன அர்த்தம்? கல்யாணம் பண்ணி வை.” அலட்சியமாய் உரைத்தான் அகிலன்.
“அகில் என்னடா பேசிட்டு இருக்கிற, உனக்கு மூத்தவன் ஒருத்தன் இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கான். அப்படி இருக்கும் போது அவனுக்கு அடுத்த பிறந்த நீ, எனக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்குது கல்யாணம் பண்ணி வைங்கிற. உங்களுக்காக உழைத்து உழைத்து ஓடா தேஞ்சு இருக்கான்டா. அவனுக்கு 27 வயசு ஆகுது, இன்னும் சொல்லப்போனா இன்னும் ரெண்டு மாசத்துல 28 வயசாகப் போகுது. இன்னமும் தனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்காம உங்களுக்காகவே உழைச்சிட்டு இருக்கான்டா. அப்படி இருக்கும் போது அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கணும்னு உங்க யாருக்கும் தோணலல்ல, எப்படிடா இவ்வளவு சுயநலமா உன்னால யோசிக்க முடியுது.” மனதுடைந்து அவர் கேட்க,
“இதுல என்ன இருக்குது. நான் கொஞ்சம் பார்க்க அழகா இருக்கேன், கொஞ்சம் வெள்ளையா இருக்கேன் சோ என்னை எந்த பொண்ணும் லவ் பண்ணும், கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படும். ஆனா உங்க பையன் கலர் அப்படி கிடையாதே. கலராக இருக்கிற பையனுக்கு பொண்ணு கிடைக்கிறதே பெரிய விஷயம், இதுல இவரை எல்லாம் யார் விரும்புவாங்க. என்னப்பா பேசிட்டு இருக்கீங்க, இவருக்கு எப்ப கல்யாணம் ஆகும்னு நாங்க வெயிட் பண்ணிட்டு உட்கார்ந்திருக்கணுமோ? ஒருவேளை இவருக்கு கல்யாணமே ஆகலைன்னா, இவரை மாதிரி நாங்களும் சன்னியாசியா சுத்த முடியுமா?” என்று கேட்ட அகிலை நிமிர்ந்து கூட பார்க்க தோன்றாமல் அப்படியே சிலையென சமைந்து நின்று விட்டான் அழகன்.
குமரேசனோ துடிதுடித்தார். “உங்க அம்மா போனதுக்கப்புறம் உங்களை வளர்த்து ஆளாக்குறதுக்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்டா. அப்ப எல்லாம் எனக்கு துணையா இருந்தது இவன் தான். உங்களுக்காகவே பார்த்து பார்த்து ஒவ்வொண்ணையும் செஞ்சான். எனக்கு தெரிஞ்சு இவன்கிட்ட நல்லா போட்டுக்க நாலஞ்சு டிரஸ் கூட கிடையாது. உங்களுக்கு தான் ஒவ்வொண்ணும் செஞ்சான். நீ காலேஜ் போகும் போது தங்க செயின் போட்டுட்டு போனதுல இருந்து, இப்ப உங்க எல்லாருக்கும் செஞ்சு குடுத்திருக்க வசதிகள், ஆளாளுக்கு வச்சாருக்கிற பைக் வரை அவன் தான் வாங்கி கொடுத்துருக்கான். சங்கரிக்கு அப்பவே நகை சேர்த்து வெச்சவன்டா அவன்.
இதோ உன் தங்கச்சி பெரிய பிள்ளையாகிட்டா. புள்ள வயசுக்கு வந்துருச்சு அடுத்து அந்த பிள்ளையை நல்லா படிக்க வச்சு நல்ல இடத்துல கட்டி கொடுக்கணும்னு தான் அவன் மனசுல ஓடிட்டு இருக்குமே தவிர தனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைச்சுக்கணும், தனக்கு ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி தனக்கொருத்தியை கொண்டு வரணும்னு இதுவரைக்கும் நினைச்சு கூட பார்த்திருக்க மாட்டான்டா. அவனைப் பாத்து எப்படி உன்னால இப்படி பேச முடியுது. இதுதான் நீங்க அவனுக்கு காட்டுற நன்றியா” என்று உள்ளம் நொறுங்கி போய் கேட்டார்.
அகிலோ அப்போதும் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், “சும்மா சும்மா அதையே சொல்லிக் காட்டாதீங்க. இதே உங்க பையன் ஆம்பளையா இருந்தா இந்நேரம் யாரோ ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி இருப்பாரு, அவருக்கு என்ன குறையோ யார் கண்டா. அதனால தான் இவ்வளவு நாள் அமைதியா இருக்காரோ என்னவோ. எனக்கு தெரிஞ்சு அவர விட சின்ன பசங்க பசங்க எல்லாம் கல்யாணம் பண்ணி லைஃப்ல செட்டில் ஆயிட்டாங்க, நான் கூட அப்பப்போ யோசிப்பேன் நமக்காக தான் இப்படி இருக்காரோன்னு. ஆனா உங்க பையனுக்கு அந்த தகுதி இல்லை அதனால தான் கல்யாணத்தை தட்டி கழிக்கிறாருன்னு அப்புறம் தான் புருஞ்சுக்கிட்டேன்” என்று வாய் கூசாமல் பேசியவனைப் பார்த்து அனைவருமே அதிர்ந்து தான் போனார்கள்.
அழகனா ஒரு வார்த்தை கூட பேசாமல் அங்கிருந்து நகர்ந்தவன், அறைக்குள் நுழைந்து கதவை அடித்து சாத்தினான். அந்த சத்தத்தின் வேகத்திலேயே அவன் மனநிலையை அறிந்து கொண்டார் குமரேசன்.
ஆனால் அகிலோ அவன் சென்றதைக் கூட பொருட்படுத்தாமல், “நீங்க என்னப்பா சொல்றீங்க, நீங்களா கல்யாணம் பண்ணி வச்சீங்கன்னா நல்லது. இல்லன்னா நானா வீட்டை விட்டு வெளியே போய் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்குவேன். ரெண்டு பேருமே சம்பாதிக்கிறோம் எங்களால் எங்களை பார்த்துக்க முடியும்” என்று சொல்ல.
“சரிடா உன்னால உன் லைஃபை பார்த்துக்க முடியும்னு சொல்றியே. உனக்கு அப்புறம் மூணு பேர் இருக்காங்க அவங்களை யார் பார்ப்பா?”
“அதான் இவ்வளவு வசதி இருக்குல்ல செய்யிங்க. எனக்கு அப்புறம் பொறந்தவங்களுக்கு எல்லாம், எல்லாத்தையும் செய்யணும்னு எனக்கு ஒண்ணும் அவசியம் கிடையாது. அதையெல்லாம் செய்யணும்னு எனக்கு என்ன தலையெழுத்தா?” என்று சொல்லி விட்டு அவனும் கிளம்பி சென்று விட, அவனது அந்த வார்த்தைகள் அறைக்குள் இருந்த அழனுக்கும் கேட்டது. அந்த நேரத்தில் அவனது எண்ணத்தில் வந்து சென்றது முதல்முறை அவளுடனான அறிமுகம்…