“வேணாம்….நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்…எதுவும் சொல்ல வேண்டாம்…”என்றவள் உடைந்து அழ,கயல் அவளின் முதுகை தடவியவள்,
“அனுமா….எதுவும் பேச வேண்டாம் படுத்துக்கடா….”என்று கயல் கூற,
“இல்ல….இல்ல…கயலக்கா…என்னை பேச விடுங்க….இன்னைக்கு பேச விடுங்க….நான் இன்னைக்கு பேசனும் பேசியே ஆகனும்…”என்று அனு பிடிவாதமாக கூறிவிட்டாள்.அவளின் அந்த உறுதியைக் கண்டு கயலும் அமைதியாகிவிட்டாள்.
“என்னடீ…அனு என்ன பேசிக்கிட்டு இருக்க…இப்படி மூணாவது மனுஷங்க முன்னாடி என்ன பேசுற….”என்று ஆர்த்திக்கு இன்னும் ஆத்திரம் குறையவில்லை.ஏற்கனவே தன்னை மகள் நெருங்க விட வில்லை என்பதில் கோபம் இதில் இப்போது தங்களை எதிர்த்து பேசுகிறாள் என்பதில் மேலும் கோபம் ஏறியது.ராஜேஷுக்கு மகள் நெருங்காதே என்பதிலேயே சிலை போல நின்றுவிட்டான்.
“யாரு மூணாவது மனுஷங்க….யாரு இவங்களா….இவங்க இல்லைனா இன்னைக்கு நீங்க என்னை பார்த்திருக்க கூட முடியாது….”என்றவள்,
“சின்ன வயசுலேந்து எத்தனை நாள் எத்தனை நாள் உங்க கிட்ட பேச வந்திருப்பேன்….ஒரு வார்த்தை என்கூட பாசமா பேசியிருக்கீங்களா நீங்க???எப்ப கேட்டாலும் எனக்கு நேரமில்லை,வேலை அதிகமா இருக்குனு தான் சொல்லுவீங்க….எனக்கு அழுகையா வரும்….”என்றவள் கண்களில் கண்ணீர் கசிந்த வண்ணம் இருக்க,கயல் அதனை துடைத்துவிட்டாள்.
“அப்புறம் கொஞ்ச நாள் வரைக்கும் என்னை தாத்தா,பாட்டி வீட்ல விட்டிருந்தீங்க….முதல்ல நான் போகமாட்டேன்னு தான் சொன்னேன் உங்க கூடவே இருக்கேன்னு தான் சொன்னேன் நீங்க தான் பிடிவாதமா கொண்டு போய் விட்டீங்க….அங்க போனதுக்கு அப்புறம் தாத்தா,பாட்டி இரண்டு பேரும் என்னை அப்படி பார்த்துக்கிட்டாங்க,நான்,தாத்தா,பாட்டி மூணு பேரும் பேசுவோம்,விளையாடுவோம்,கதை எல்லாம் சொல்லுவாங்க…..எவ்வளவு நல்லா இருக்கும் தெரியுமா…நான் சந்தோஷமா இருந்தேன்….ரொம்ப சந்தோஷமா இருந்தேன்…ஆனா….ஆனா….”என்றவள் கேவ தொடங்க,கயல் அவளின் முதுகை நீவிட்டாள்.
சற்று நேரத்திற்கு பின் மீண்டும் அனு தொடங்கினாள்,
“ஆனா….நீங்க திரும்பியும் வந்து என்னை அவங்க கிட்டேந்து கூட்டிக்கிட்டு வந்துட்டீங்க…..எனக்கு உங்க கூட வரவே பிடிக்கலை….நீங்க தான் வலுகட்டாயமா கூட்டிக்கிட்டு வந்தீங்க….அப்ப கூட நான் பாட்டிக்கிட்ட போகவேமாட்டேன் சொன்னேன்….அங்க போனா என்கூட பேச,விளையாட,கதை சொல்லனு யாருமே இருக்கமாட்டங்க பாட்டி நான் போகலைனு சொன்னேன்…”
“தாத்தா தான் உங்க இரண்டு பேருக்கிட்டேயும் பேசியிருக்கேன்….அதனால உன்கூட விளையாடுவாங்க,கதை எல்லாம் சொல்லுவாங்கனு சொல்லி என்னை உங்க கூட அனுப்பினார்….நான் வந்து ஒரு மாசம் வரை தாத்தா சொன்ன மாதிரி தான் இருந்தீங்க….அப்புறம் திரும்பியும் என்னை தனியே விட்டுட்டீங்க….அப்புறம் எனக்கு ஸ்கூல்ல இருக்குற நேரம் தான் ஜாலியா இருக்கும்….வீட்டுக்கு வந்தாலே ஏதோ கூண்டுகுள்ள இருக்குறது போல இருக்கும்…அப்ப அப்ப தான்….”என்றவள் கயல்விழி நிமிர்ந்து பார்த்துவிட்டு,
“அப்ப தான் கயலக்கா நம்ம அப்பார்ட்மெண்டுக்கு குடி வந்தாங்க….என்கூட நல்லா பேசுனாங்க….எனக்கு நல்லா படிப்பு சொல்லிக் கொடுத்தாங்க….தாத்தா,பாட்டிக்கு அப்புறம் நான் கயலக்கா கிட்ட தான் ரொம்ப கிளோஸா இருந்தேன்….அது கூட உங்களுக்கு பிடிக்காது….என்னை திட்டுவீங்க….ஆனா நான் அதை பெரிசு படுத்தினது இல்ல…எனக்கு என்கூட பேச,என் பேச்சை கேட்க யாராவது வேணும் தோணுச்சு….எல்லாம் நல்லா தான் இருந்தது….”என்றவள் கயலின் கைகளை பிடித்துக் கொண்டு,
“க்கா….க்கா…நீங்க அன்னைக்கு சரியா தான் சொன்னீங்க….அவன் அவன் நல்லவன் இல்லைக்கா….”என்று தேம்பி தேம்பி அழ,கயலும்,சத்யாவும் தங்கள் காதுகளை கூர்மையாக்கி கேட்க,
“யாரு….யாருடீ…யாரு அவன்….ஆங்….இவகிட்ட சொல்லிருக்க…..என்கிட்ட சொல்லை…யாரு???”என்று ஆர்த்தி அப்போதும் கோபத்துடன் தான் கேட்டாள்.அவளுக்கு தன் மகள் அனுபவித்த கஷ்டம் எல்லாம் பெரிதாக தெரியவில்லை.ஆர்த்தி என்பவளுக்கு அவள் நேசித்த வேலை,கணவன்,அதோடு பெயருக்கு ஒரு குழந்தை அதுமட்டுமே முக்கியமாக இருந்தது.
பணம் இருந்துவிட்டால் போதும் மத்தது எதுவும் அவளின் கண்களுக்கு பெரிதாக தெரியவில்லை.அதனால் தான் கணவனிடம் சண்டையிட்டு தனிகுடித்தனம் வந்தது.அவளுக்கு அவள் கூறுவதை கேட்கும் நபர்களை தான் பிடிக்கும் அதாவது அடிமைகள் அவளை யார் எதிர்த்து கூறினாலும் அவர்கள் அவளுக்கு எதிரிகள் தான்.அதில் அவளின் மாமனார்,மாமியாரும் அடக்கம்.
ஆர்த்தி அகங்காரமாக கத்த அதுவரை சிலை போன்ற நின்றிருந்த ராஜேஷ் வேகமாக ஆர்த்தியை நெருங்கி,
“ஏய்….என் பொண்ணுக்கு நான் நல்லது பண்ணலையேனு தவிச்சிக்கிட்டு இருக்கேன்….நீ….ச்சீ….நீ எல்லாம் என்ன மனுஷிடீ…ஒழுங்கா அமைதியா இரு…..இல்லை….”என்று தன் ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தவன்,அனுவின் புறம் திரும்பி,
“ப்பா….”என்ற அனுவின் அந்த ஒற்றை அழைப்பே ராஜேஷ்க்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியது,ஆம் தன் மகளை முதன் முதலில் வாங்கும் போது இருந்த இன்பம் அது மீண்டும் அவனிடம் வந்தது போல் இருந்தது.இதை தானே தொலைத்துவிட்டு வெளியில் தேடிக் கொண்டிருந்தான்.இந்த மனநிறைந்த நிம்மதியை தானே தேடினான்.
“அப்பா….”என்ற மகளின் குரல் மீண்டும் கேட்க,இந்த ஒரு வார்த்தை அத்தனை நிம்மதியை தரும் என்பது கூட இந்த முட்டாள் தகப்பனுக்கு இன்று தான் புரிந்தது போலும்.நீ எவ்வளவு பெரிய பணம் வசதி படைத்தவன் ஆனாலும் உன்னை அப்பா என்று அழைக்க ஒரு குழந்தை இல்லை என்றால் நீ ஏழை தான் என்று ஒருமுறை தன் அன்னை கூறியது அவன் நினைவில் இப்போது வந்தது.மெல்ல நிமிர்ந்து அனுவை பார்த்தான் அழகிய வட்ட முகம் இன்று சோர்ந்து போய் ஒளியிழந்து இருந்தது,ஆனால் கண்களோ தங்களிடம் அன்பை யாசித்தது.அந்த அன்பை யாசித்த கண்களையே பார்த்துக் கொண்டு நின்றான்.
“அப்பா….”என்ற அழைப்பு மிண்டும் மகளிடம் இருந்து வர தன்னுர்வுக்கு வந்தவன் அவளை பார்க்க அவளோ ஒரு கையை நீட்டி அவனை தன்னருகே அழைத்தாள்.வேகமாக அவளிடம் போக அனுவோ தன் தந்தையை கட்டிக் கொண்டு அழுதாள்,
“ப்பா….எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் ப்பா…..என் பிரண்ட்ஸ் எல்லாரும் அவங்க அப்பாவை பத்தி சொல்லும் போதெல்லாம் எனக்கும் நீயும் அதே மாதிரி என்கிட்ட அன்பா,பாசமா இருக்கமாட்டியானு உன்கிட்ட எத்தனை தடவை ஏங்கியிருக்கேன் தெரியுமா….ஏன்பா ஏன் என்கிட்ட பேசகூட உனக்கு நேரமில்லை….ஏன் என்னை உனக்கு பிடிக்காதா????”என்று மகள் கேட்ட கேள்வியில்,
“இப்ப தான் தெரியுதா நான் உங்க குட்டிமானு….எத்தனை நாள் இப்படி கூப்பிடமாட்டீங்களானு அழுதுருக்கேன் தெரியுமா????”என்று மேலும் மேலும் மகள் தான் கடந்து வந்த வலிகளை கூற அவனால் தாங்க முடியவில்லை.வளர்ந்த ஆண்மகன் என்னால் இதை கேட்கும் போதே தாங்க முடியவில்லையே என் மகள் சிறுவயதில் இருந்து எப்படி தாங்கியிருப்பாள் என்று நினைத்தவன்,
“அய்யோ….குட்டிமா….என்னை மன்னிச்சிடுடா…என் தப்பு தான்….நான் பெரிய தப்பு தான் பண்ணியிருக்கேன் தான் குட்டிமா…ஆனா இனி பண்ணமாட்டேன்டா என்னை நம்பு….”என்று மகளை கட்டிக் கொண்டு கதறிவிட்டான்.தந்தை,மகளின் பாச பிணைப்பு மட்டுமே சற்று நேரம் அந்த அறையை நிறைத்தது.
“சாரி….எனக்கு இப்ப சில விஷயங்கள் தெரியனும்….ப்ளீஸ்…”என்று சத்யா கேட்க,ராஜேஷோ நடுங்கிய தன் மகளின் கைகளை இறுக பிடித்துக் கொண்டு,
“கேளுங்க சார்….என் பொண்ணு சொல்லுவா…அவளுக்கு நான் இருக்கேன்….அனு சொல்லுடா…அன்னைக்கு என்ன நடந்ததுனு….சொல்லு…”என்று கூற அனுவின் கை,கால்களில் மீண்டும் ஒருவித நடுக்கம் அதே நேரம் அவளின் கண்கள் சற்று தொலைவில் இருந்த கயல்விழியை தீண்டியது.கயல்விழி ராஜேஷ் அருகே வரவும் நகர்ந்துவிட்டாள்.
“கயலக்கா….”என்று அனு அழைக்க,
“சொல்லு அனு…பயப்படாத…நாங்க எல்லாரும் இருக்கோம் உனக்கு….சொல்லு….”என்று கயல்விழி அனுவின் அருகில் வந்து கூற…அவளின் கையை பிடித்துக் கொண்டவள் மற்றொரு கையால் தன் தந்தையின் கைகளை இறுக்கமாக பிடித்திருந்தாள்.ராஜேஷிற்கு மகளின் மனது இப்போது புரிந்திருந்தது அவளின் கைகளை இறுக்கமாக தன்னுடன் பிடித்துக் கொண்டான் இனி விடப்போவதில்லை என்பதை போல.
அனுவிற்கு மனதில் நடுக்கம் இருந்தது தான் இருந்தாலும் தன் தகப்பன் தன்னை நம்புகிறான் என்பதே அவளுக்கு மிகப் பெரிய தைரியத்தை தர,அன்று நடந்ததை கூற தொடங்கினாள்.
“அது….அன்னைக்கு ஸ்கூல் முடிஞ்சி வீட்டுக்கு வந்துகிட்டு இருக்கும் போதே விமல் வந்தான்…”என்றவள் தந்தையின் முகத்தை காண ராஜேஷ் மெல்ல மகளின் முதுகை தட்டிக் கொடுத்து,
“நீ சொல்லுடா…எனக்கு புரியுது….எங்க தப்பு தான்….”என்றவன் பார்வை மனைவியை துளைத்தது.ஆர்த்தியோ கணவனின் பார்வையில் ஒடுங்கி போனாள்.இதுவரை அதிர்ந்து பேசியிறாதவன் இன்று கை ஓங்கிவிட மொத்தமாக அவளின் ஆணவம் வீழ்ந்தது.
அனு விமலை முதன் முதலில் பார்த்தில் இருந்து அனைத்தையும் கூறியவள்,
“அன்னைக்கும் அதே போல என்னை ஸ்கூல்ல பார்க்க வந்தான்…ஏன் என்கிட்ட முன்ன மாதிரி பேச மாட்டேங்குறனு ரொம்ப அழவும் எனக்கு மனசுக்கு கஷ்டமா போச்சு…அதனால நான் படிப்பு முடியுற வரை என்னால பேசமுடியாதுனு சொன்னேன்…அதுக்கு அவன் நீ இல்லனா நான் செத்துடுவேன்னு சொன்னான்…எனக்கு ரொம்ப பயமா போச்சு அதனால நான் அவன்கிட்ட இப்போதைக்கு பரிட்சை இருக்கு பரிட்சை முடியவும் பேசுறேன்னு சொன்னேன்..ஆனா அவன் இன்னைக்கு ஒருநாள் என்கூட பக்கத்தில இருக்குற கடைக்கு வானு கூப்பிட்டான்….”என்றவள் மீண்டும் தயங்கி அனைவரையும் பார்க்க,
“தயங்காம சொல்லுடா….”என்று ராஜேஷ் கூற,
“அப்பா…சாரி…ப்பா…நான் தெ….தெரியாம….இனி இப்படி எல்லாம் பண்ணமாட்டேன்….என்னை நம்புங்க….நான் அவன் நல்லவன்னு நினைச்சு தான் பழகுனேன்….எனக்கு…..எனக்கு தெரியாது….அவன் இப்படி….”என்று அவள் மேலும் கூற முடியாமல் வெடித்து அழ,ராஜேஷின் முகம் வேதனையில் வாடியது.
“ப்பா…ப்பா…”என்று மகள் அழைக்க,
“ஆங்…என்ன குட்டிமா….என்ன??”என்று கேட்க
“நீங்க என்னை வெறுத்துடமாட்டீங்கல்ல…நான் தப்பு பண்ணிட்டேன் சாரிப்பா….நீங்க என்னை….”என்று மேலும் பேசவிடாமல் அனுவின் வாயை மூடிய ராஜேஷ்,
“என்ன பேச்சுடா பேசுற….நீ எதையும் நினைக்காம நடந்தத சொல்லு….இந்த அப்பா உன் கூட இருக்கேன் சொல்லு….”என்று திடமாக கூற,தன்னை சற்று தேற்றிக் கொண்டு மீண்டும் ஆரம்பித்தாள்.
“அவனும்,நானும் எப்போதும் பக்கத்தில இருக்குற ஒரு ரெஸ்டாரன்ட்டுக்கு அடிக்கடி போவோம்…அதனால அங்க தான் கூப்பிடுறான் நினைச்சு சரி சொன்னேன்….ஆனா அவன் வேறு எங்கேயோ அழைச்சிக்கிட்டு போனான்….”என்றவளை இடைமறித்த சத்யா எந்த இடம் என்று கேட்டு விபரங்களை வாங்கியவன் உடனே சண்முகத்திற்கு அழைத்து விபரத்தை சொல்லி அங்கு சென்று பார்க்குமாறு கூறினான்.பின் மீண்டும் அனுவிடம் மேற்கொண்டு கூறுமாறு பணிந்தான்.
“அந்த இடத்தை பார்த்தாலே எனக்கு பிடிக்கலை…அதனால நான் வரலைனு சொன்னேன்….ஆனா அவன் வற்புறுத்தி கூப்பிடவும் போனேன்…அங்க போய் நாங்க ஜீஸ் சாப்பிட்டோம்….அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு எனக்கு மயக்கம் வரது போல இருந்துச்சு….நான் உடனே வீட்டுக்கு போகலாம்னு சொன்னேன்….ஆனா அவன் அதை காதிலே வாங்கல….எனக்கு கொஞ்சம் கொஞ்சமா நினைவு போக ஆரம்பிச்சுது….அப்போ….அப்போ…”என்று அனுவின் கை,கால்கள் நன்கு நடுங்க தொடங்கியது.அன்றைய நாளின் தாக்கம் இன்று கண்முன்னே விரிய அவளால் அதில் இருந்து வெளிவர முடியவில்லை.
“அனு….அனு….இங்க பாரு….இங்க என்னை பாரு….”என்று கயல் அவளின் கவனத்தை தன்னிடம் வலுக்கட்டாயமாக திருப்பி,
“நான் சொல்லுறத கேளு….அங்க என்ன நடந்திருந்தாலும்…பயப்படாம சொல்லு….அவனை போல ஒருத்தன் வெளில சுத்தக்கூடாது….அவனுக்கு தண்டனை கிடைக்கனும்…சொல்லு….பயப்படாத…உன்னோட மனசை தளரவிடாத….எதிர்த்து நில்லு….காதுல விழுதா அனு…..அனு….”என்று அவளை கயல்விழி உலுக்கி மீண்டும் பேச தூண்டினாள்.அதில் சற்று தெளிந்தவள் மீண்டும் ஆரம்பித்தாள்.
“நான்…நான் எழுந்து நடக்க முயற்சி பண்ணேன்…என்னால முடியல….ஒருகட்டத்தில நான் மயங்கிவிழுந்தேன்….அப்போ…அவன் என்னை…. என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணான்….நான் அவன்கிட்டேந்து அப்போதும் பேராடுனேன்….அப்போ பக்கத்தில இருந்த ஒரு கிளாஸ் ஜக்கால அவன் மண்டையை உடைச்சுட்டேன்….அவன் கோபத்தில என்னை அடிச்சிட்டுடான்…எனக்கு சுயநினைவு போயிடுச்சு…..எனக்கு அவ்வளவு தான் தெரியும்….”என்று அனு கூற சத்யா அவளிடம் விமலின் புகைபடத்தை கேட்க,அனு தன்னிடம் அவனின் புகைபடம் எதுவும் இல்லை என்றவள் அவன் படிக்கும் கல்லூரியின் பெயர் மற்றும் சில விபரங்களை கூறினாள்.
“நீ எதுக்கும் பயப்படாத….ஓகே…நான் இனி பார்த்துக்குறேன்….”என்று அனுவிற்கு தைரியத்தை கொடுத்துவிட்டு வெளியில் செல்லும் போது பக்கத்தில் நின்றிருந்த கயலின் கையையும் பிடித்து இழுத்துக் கொண்டே சென்றான்.
“சத்….சார்….சார்….விடுங்க….”என்ற கயலின் அழைப்பை எல்லாம் அவன் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை,நேராக தன் வாகனத்தின் உள்ளே அவளை ஏற்ற போக,அவளோ பிடிவாதமாக நின்றாள்.
“ஒழுங்கா ஏறிடு….இல்லை…”என்று அவன் மிரட்ட,
“முதல்ல கையை விடுங்க….எதுக்கு இப்படி இழுத்துகிட்டு வரீங்க….நான் எங்கேயும் வரலை….நீங்க போங்க….போய் அவனை பிடிங்க…ராஸ்கல்…சின்ன பொண்ணை போய்…அவனை எல்லாம் கொல்லனும்…..”என்று கயல்விழி கொந்தளிக்க,அவளை அழுத்தமாக பார்வை பார்த்தவன்,
“உன்னை என்ன செய்யலாம்….என் மனசை கொன்ன உன்னை என்ன செய்யலாம்….”என்று சத்யா கேட்க,
“நான்…நான் தப்பு தான்….எனக்கான தண்டனையை நான் அனுபவிச்சுகிட்டு தான் இருக்கேன்….நீ….நீங்க எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்க நான் தயார்….நான் பண்ண தப்பு என்னை விடாம துரத்து….”என்று கூறியவள் சத்யாவின் முகத்தை ஏறிட்டு,
“எனக்கு…நான் திருந்திட்டேன் சொல்ல போறது இல்லை வாழ்ந்து காட்டுவேன்….நிறையா அனுபவிச்சிட்டேன் இனியும் அனுபவிக்க தான் போறேன்…ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம்….மன்னிப்பு கிடைக்கிற வரைக்கும் ஓய மாட்டேன்…”என்றுவிட்டு அவனின் வாகனத்தில் ஏறி அமர்ந்தாள்.சத்யா அமைதியாக மறுபுறம் ஏறி வண்டியை எடுத்தான்.ஒரு அமைதியான பயணம்.அவனும் பேசவில்லை அவளும் பேச முயலவில்லை.வண்டி நேராக அவளின் அப்பார்ட்மெண்ட் இருக்கும் தெருவில் நின்றது.
“நீ இங்கே இறங்கிக்கோ…யாராவது பார்த்தா…பிரச்சனை வரும்…போ….”என்று அவன் கூற,கயல்விழி எதுவும் கூறாமல் இறங்கி நடக்க தொடங்கினாள்.
“கயல்….”என்று சத்யா அழைக்க திரும்பி,என்ன என்று கண்காளாலே வினவ,
“இது எல்லாம் இந்த கேஸ் முடியுற வரைக்கும் தான்…அதாவது நம்ம பேச்சுவார்த்தை எல்லாம்…நீ உன் மனசுல எதையும் வளர்த்துக்காத…..எனக்கு கல்யாணம் நிச்சயமாகிடுச்சி….”என்று அவளை காயப்படுத்தும் நோக்குடன் கூற,அவளோ மெல்ல புன்னகை சிந்தி,
“வாழ்த்துக்கள் சத்யா சார்….”என்று அழுத்தமாக கூறிவிட்டு போய்விட்டாள்.அவளை புலம்ப விட வேண்டும் நினைத்து அவன் கூற கடைசியில் இவன் தான் காவல் நிலையம் வரும் வரை புலம்பி கொண்டே வந்தான்.
“சும்மா ஒரு பேச்சுக்கு எனக்கு நிச்சியம்னு சொன்னா…..எனக்கு வாழ்த்து சொல்லிட்டு போறா….திமிரு பிடிச்சவ….இருடி…உன்னை…ஆஆஆஆ…என்னடா சத்யா இப்படி அவகிட்டேயே போய் விழற….இதுக்கும் இருக்குடி உனக்கு….”என்று அனைத்திற்கும் அவளை தான் காரணம் காட்டினான்.ஆனால் அவளுக்கு எதற்கு டிரைவர் உத்தியோகம் பார்த்தான் என்பதை வசதியாக மறந்து போனான்.அவனுள் உறங்கி கொண்டிருந்த காதல் மெல்ல மீண்டு கொண்டிருந்தது.ஆனால் அவன் அதை ஏற்க முற்படவில்லை என்பதைவிட கயலை நம்ப முடியவில்லை என்பது தான் நிஜம்.காயம்பட்ட இதயம் குழந்தை போல அல்லாடிக் கொண்டிருந்தது.
காவல் நிலையத்திற்குள் நுழையும் வரை தான் கயலின் நினைவு எல்லாம் அதன் பின் அவன் முழுமையாக தன்னை பணிக்கு அற்பணித்துவிடுவான்.சத்யா தனக்கு கிடைத்த தகவல்கள் அனைத்தையும் வைத்து ரத்னம் தான் இதில் மூல காரணகர்த்தா என்பது வரை கண்டுபிடித்துவிட்டான்.ரத்னம் சத்யா தன்னை நெருங்கிவிட்டான் என்று தெரிந்து தலைமறைவாகி விட்டான்.அவன் அனன்யாவை நெருங்குவான் என்று அவளுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்று சத்யா பாதுகாப்பை பலப்படுத்தி வைத்திருக்க ரத்னமோ கயல்விழியை தூக்கியிருந்தான்.