உன் சுவாசம் என் மூச்சில் ……3
போலீஸ் ட்ரைனிங் முடிந்து புதுக்கோட்டையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கதிருக்கு அவனின் வீட்டில் தீவிரமாக பொண்ணு தேடிக் கொண்டிருந்தனர்.
“ அப்பா கதிர் இந்த வாரம் வரப்போ பேசுவோமா???” என ஸ்வாமிநாதனிடம் கேள்வி கேட்ட கணேஷிடம்
“ என்ன பேசப்போற??…” என குழப்பத்துடன் கேட்டார் ஸ்வாமிநாதன்
“ அதான்ப்பா அம்மா சொன்னாங்களே ஒரு பொண்ணு. அதுகூட நல்லா படிச்சுருக்கு. நல்ல குடும்பம் நானும் கூட விசாரிச்சுட்டேன்ப்பா”
“ எது அந்த ராஜன் குடும்பமா??”
“ ஹ்ம்ம் ஆமப்பா”
“ அது குடும்பமாடா??… அந்த பொண்ணோட அம்மாக்காரி வாயைதொறந்தா மூடவே மூடாது. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசும். அது வீட்டுக்காரனை சுத்தமா மதிக்காது. இதுல அந்த பொண்ணை பத்தியும் விசாரிச்சுட்டியாக்கும்” என கேட்க கணேஷ் திரு திருவென முழிக்க
“ நீ முழிக்குறத பார்த்தா குடும்பத்தைக்கூட நீ விசாரிகல ஹ்ம்ம்… உன் அம்மா சொன்னதை நம்பி இங்க வந்து பேசுறியாக்கும்” என கடுப்புடன் கூறிய ஸ்வாமிநாதனிடம்
“ இல்லப்பா அது….. அது….” என அம்மா மனைவி பேச்சை நம்பி அப்பாவிடம் பேசிய தன் மடத்தனத்தை எண்ணி கொண்டு திணற
“ ஹ்ம்ம் இங்க பாரு கணேஷா முன்ன சொன்னது தான் நான் பார்த்துக்கறேன் கதிர் விஷயத்தை நீ உன் குடும்பத்தை மட்டும் பாரு. எனக்கு தெரியும் எதை எப்போ பண்ணனும்ன்னு சரியா”
“ ஹ்ம்ம் சரிப்பா” என கூறி சென்றவுடன் கதிரின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஸ்வாமிநாதன் ஜோசியரிடம் சென்றார்.
“ வணக்கம் நல்லசிவம்”
“ ஹ்ம்ம் வணக்கம் ஐயா. என்ன இம்முப்புட்டு தொலைவு வந்துருக்கீங்க”
“ எல்லா நல்ல விசயமாத்தான். நம்ம கதிருக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு இருக்கோம். அதான் கல்யாண யோகம் வந்திருச்சான்னு பார்க்கணும்” என கூறிய ஸ்வாமிநாதனிடம்,
“ நல்லா பார்த்திடலாம் ஐயா” என கூறிய நல்லசிவம் ஜாதகத்தை வாங்கி கணிக்க,
ஏதோ யோசனையில் இருந்த நல்லசிவத்தை கண்ட ஸ்வாமிநாதன்,
“ என்ன ஜோஸியரே என்ன பலத்த யோசனை எதுவும் பிரச்சனையா??… ஏதும் பரிகாரம் பண்ணனுமா??… எதுனாலும் சொல்லுங்க பண்ணிடலாம்” என படபடப்புடன் கேட்ட ஸ்வாமிநாதனிடம்
“ இல்ல இந்த ஜாதகாரருக்கு ரெண்டு தாரம்ன்னு இருக்கு அதான்…..” என கூறிய நல்லசிவத்தை கண்டு
“ என்ன!!…. என்ன சொல்றிங்க ஜோஸியரே??… நல்லா பாருங்க அப்படி எல்லாம் இருக்காது” என தவிப்புடன் கூறிய ஸ்வாமிநாதனிடம்
“ நல்லா பார்த்துட்டேன் ஐயா இவரு ஜாதகத்துக்கு ரெண்டுதாரம்தான் போட்டுருக்கு”
“ அப்போ ஏதும் பரிகாரம்…..”
“ அது எல்லாம் இல்ல ஆனா உங்க குலசாமியையும் இந்த ஜாதகக்காரரோட இஷ்டதெய்வத்தையும் நல்லா வணங்கிட்டு கல்யாண ஏற்பாட்டை பண்ணுங்க. அதுக்கு மேல ஆண்டவன் விட்ட வழி தான்” என கூறிய நல்லசிவத்திடம் ஏதும் கூறாது அமைதியாக எழுந்த ஸ்வாமிநாதனிடம்
“ ஐயா எதுக்கும் நல்ல ஜாதகம் அமைஞ்சுச்சுன்னா பாப்போம். அது ஒத்துபோனாக்கூட எதுவும் மாறும்” என கூற ஒரு சிறு நம்பிக்கையுடன் எழுந்து சென்றார் ஸ்வாமிநாதன்.
ஜாதகம் பார்த்து வந்ததில் இருந்து அமைதியாக இருக்கும் சுவாமிநாதனை கண்ட தெய்வானை,
“ என்னங்க என்ன ஆச்சு??…. ஏன் ஒரு மாதிரியாவே இருக்கீங்க??… என கேட்க
“ ஒன்னும் இல்லை தெய்வா. கதிர் கல்யாண விசயமாத்தான் யோசிக்குறேன். கதிர் எப்போ வர்றான்”
“ இன்னிக்கு சாயந்தரம் வந்துட்டு நாளைக்கு காலையில பத்து மணிக்கு போகணுமாம் ஏதோ பந்தோபஸ்தாம்”
“ ஓ!!…. சரி சரி தெய்வா நான் கொஞ்சம் அம்மன் கோவில் வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்” என கூறி அம்மன் கோவிலுக்கு ஸ்வாமிநாதன் சென்றுவிட,
“ என்னவா அத்தை. மாமா ஏதோமாதிரி இருக்காங்க???” என கேட்ட சாரதாவிடம்
“ தெரியல ஜாதம் பார்த்துட்டு வந்ததுல இருந்து ஒருமாதிரி இருக்காரு ஏதும் பிரச்சனையான்னு தெரியல.”
“ அப்போ அந்த ஜாதகத்தை எடுங்க அப்பாகிட்ட குடுத்து என்னன்னு பார்க்க சொல்லுவோம்”
“ அவரு அதை எடுத்து பத்திரப்படுத்தி வச்சுட்டாரு. எங்க இருக்குன்னு தெரியல” என கூறி தெய்வானை சென்றுவிட
“ என்னவா இருக்குனு தெரியலையே??….” என சாரதாவும் சிந்தனையுடன் நின்றுகொண்டிருந்தாள்.
முதல் நாள் மாலை வந்துவிட்டு காலையில் கதிர் வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தான் கதிர் வாசலில் செய்தித்தாளுடன் அமர்ந்திருந்த சுவாமிநாதனை,
“ அண்ணே… அண்ணே….” என அழைத்துக்கொண்டு வந்த தன் சித்தப்பா மகன் வீரநாயகத்தை கண்டு
“ வாடா வீரா என்ன காலையில காத்து இந்த பக்கம் வீசுது” என கேட்க
“ அது ஒரு உதவி அதான்….” என சிறு அசட்டு சிரிப்புடன் கேட்ட வீரநாயத்தை கண்டு
“ என்ன உதவிடா ????”
“ அது என் பொண்டாட்டி மதுரைக்கு போ றா அதுக்கு கொஞ்சம் பணம் வேணும் அண்ணே”
“ யாரு கனகம் மதுரைக்கு போகுதா!!!…..” என ஆச்சிரியதுடன் கேட்ட ஸ்வாமிநாதனிடம்
“ என்ன அண்ணே அவ அவ அம்மா வீட்டுக்குத்தானே போற இதுல என்ன உங்களுக்கு அதிர்ச்சி”
“ ஏண்டா சொல்லமாட்டா. உன் பொண்டாட்டி வருசத்துக்கு ஒரு தடவை போனா பரவா இல்லை. அந்த பிள்ளை அது பிறந்தவீட்டுக்கு போயே நெருக்கி பத்து வருஷம் இருக்கும்ல” என கூறிய ஸ்வாமிநாதனிடம் எதுவும் கூறாது அமைதியாக நின்ற வீரநாயகத்திடம்
“ ஏன் சித்தப்பா கனகு சித்தி அவங்க வீட்டுக்கு போயி பத்து வருஷம் ஆகுதா???…” என ஒரு சிறு ஆச்சர்ய விழிப்புடன் கேட்ட கதிரை கண்டு வீரநாயகம் ஒரு நிமிடம் பதறிவிட்டார்.
‘ ஆத்தி இந்த பைய இங்குனதான் இருக்கான்னா!!!…. இது தெரியாம வந்துட்டேனே. எப்பிடியும் ஒருவழி ஆகிடுவான் நம்மள. பேசாம நாம அப்புறமா வருவோம்’ என எண்ணிக்கொண்டு வீரநாயகம்
“ அடடே!!…. கதிரு தம்பி எப்போ ஊருக்கு வந்தப்பா??… வேலை எல்லாம் எப்பிடி போகுது??….எங்கையோ வெளிய கிளம்பிட்ட போல வேலைக்கா??…” என கதிரை பேச விடாது வீரநாயகம் கேள்வியாக கேட்க
“ சித்தப்பா நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்டேன் நீங்க அத தவிர எல்லாம் பேசுறீங்க ஹ்ம்ம்”
“ அட அது பழைய கதைப்ப அது எதுக்கு உனக்கு. நீ ஆயிரம் சோலி இருக்குற ஆளு நீ அதை பாருய்யா” என கூறிய வீரநாயகத்தை கதிர் தன் அழுத்தமான பார்வையால் பார்க்க
‘ ஐயையோ பாக்குறானே பாக்குறானே பார்த்து பார்த்து நம்மள பஞ்சர் ஆக்கிருவான் போல. நாம இப்போ கிளம்புனா பணம் வாங்க முடியாது. பதில் சொன்னா நம்ம மானத்தை பேசியே ஒன்னும் இல்லாம ஆக்கிடுவான் என்ன பண்ணலாம்’ என எண்ணிக்கொண்டு
“ ஹீஈ….. ஹீஈ…..” என அசட்டு சிரிப்பொன்றை சிரிக்க அதே நேரம்,
“ என்ன கதிரு என்னப்பா நேரம் ஆச்சுன்னு சொன்ன பஸ் போயிடபோதுப்பா” என பேசிக்கொண்டு வந்த தெய்வானை அங்கு நின்ற வீரநாயகத்தை கண்டு
“ அட நம்ம கொழுந்தனாரு. என்ன வீரரே என்ன இந்த பக்கம் ரொம்ப நாளு ஆளையே காணோம்” என தெய்வானை கேட்க
‘ ஐயையோ இந்த மதனி வேற’ என மனதில் கடுபடித்துக்கொண்டு
“ இல்ல மதனி சும்மாதான்”
“ சும்மாவா நான் கூட எங்க வீடு மதுரைல இருக்குபோல அதான் வீரரை இங்குட்டு காணலைன்னு நினைச்சேன்”
“ என்னம்மா கனகு சித்தி அவுங்க அம்மா வீட்டுக்கு போறது இல்லையாமே. ஏனாம்??..” என கேட்ட கதிரை கண்டு பதில் கூறாது அதிசயமாக பார்த்த தெய்வானையை கண்டு
“ என்னமா பதில் சொல்லாம என்ன அப்படி பார்க்குற??” என கேட்ட கதிரிடம்
“ இல்ல இந்த விஷயம் ஊரு முழுக்க தெரியும் உனக்கு தெரியலன்னு சொல்றியே அதான்” என கூறிய தெய்வானையிடம் ஒன்றும் கூறாது பார்க்க
“ அது சரி நீ நம்மவீட்டு விஷயத்தையே அடுத்தவீடு விசயமாதிரிதான் கேட்ப. இதுல ஊரு விஷயத்தையா கேட்க போற”
“ அதான் இப்ப கேட்குறான்ல சொல்லு” என கதிரிடம்
“ என்னமோ போ டா நீ வேலைக்கு சேர்ந்ததுல ஆளே மாறிட்ட. முன்ன எல்லாம் நின்னு பேச மாட்ட….”
“ இப்போ என்ன உட்கார்ந்துட்டு பேசுறது உனக்கு கண்ணு உருத்துதாக்கும்” என கதிர் கடுப்படித்தான்.
வீராயகமும் ஸ்வாமிநாதனும் பேசியதை எதார்த்தமாக கேட்ட கதிரும் ‘ என்ன பொண்டாட்டி அம்மா வீட்டுக்கு போய் பத்து வருசமா ஆகுதா அப்படியும் பெண்கள் இருக்காங்களா’ என எதார்த்தமாகத்தான் கேள்வி கேட்டான்.
ஆனால் அதற்கு என்ன பிரச்சனை என்று கூறாது வீரநாயகம் முழித்ததில் என்னவாக இருக்கும் என மனிதன் மனதில் ஏற்படும் குறுகுறுப்பும் போலிஸ்க்கே உண்டான சந்தேகமும் கதிரை என்ன விஷயம் என அறிய அவனின் இயல்பில் இருந்து மாற வைத்தது.
“ அட இது என்ன ரகசியமாக்கும். கனகு கூட பிறந்தது ரெண்டு அண்ணன்க. பத்து வருஷத்து முன்னாடி கொழுந்தன் கடை வைக்க பணம் வேணும்ன்னு வாங்கிட்டு வர சொல்லிருக்காரு. அப்போ கணக்கோட ரெண்டாவது அண்ணன் கொஞ்சம் கஷ்டமா இருக்கு ஒரு ஆறு மாசத்துல தரோம்ன்னு சொல்லிருக்காங்க.
நீ சொல்லு கதிரு வீட்டு மாப்பிள்ளை கேட்டா உடனே செய்யணுமா இல்லையா அது என்ன அப்புறம் தரேன்னு சொல்லறது. அதான் மாப்பிளையை மதிக்கல அது இதுன்னு ஒரே சண்டை ஆகிப்போச்சு. அப்புறம் பேச்சு வார்த்தையே இல்ல அங்க” என கூறிவிட்டு தெய்வானை சென்றுவிட,
‘ இந்த அம்மா மாதிரி ஆளுங்க இருக்குற வரைக்கும் ஒருத்தரையும் திருத்த முடியாது’ என பல்லைக்கடித்துக்கொண்டு வீரநாயகத்தை கேவலமான பார்வையுடன் பார்த்துக்கொண்டு தனது ஷூவை மாட்டிக்கொண்டிருதான் கதிரவன்.
அதனை கண்டு ஒரு நிமிடம் ஜெர்க்கானவர் பேசாம போயிடலாம் என எண்ணிக்கொண்டு எழுந்திருக்கும் போது,
“ நீ சொல்லு வீரா எம்புட்டு பணம் வேணும்??…” என கேட்ட ஸ்வாமிநாதனிடம்
“ ஒரு ஆயிரம் ரூபாய் போதும் அண்ணே. என் மாமியாருக்கு கண்ணுல ஆப்ரேஷன் பண்ணி இருக்கு அதான் ஒரு ஆயிரம் ரூபாய் குடுங்க போதும்” என வீரநாயகம் பேசிக்கொண்டிருக்கையில்
“ ஆமா…. ஆமா….. இவரு வாங்கிக்குடுக்குற அந்த ரெண்டு சாத்துக்குடி பழத்துல தான் உடனே எந்திருச்சு இவருக்கு இவரு மாமியாரு விருந்து வைக்கபோகுது” என கதிர் கடுப்புடன் கூற வீரநாயகம் முகம் கன்றி எழுந்துவிட உடனே ஸ்வாமிநாதன்,
“ கதிர் இது என்ன பேசாம வேலைக்கு கிளம்புற வழிய பாரு வீட்டுக்கு வந்தவர்களை மனசு நோக்குறமாதிரி பேசாம” என கடிய
அதற்கு கதிர் ஒரு பார்வை பார்க்க அவனின் பார்வையே கூறியது,
‘ நான் வீட்டில் உள்ளவர்களை நோகடிப்பதிலையே கவலை கொள்வதில்லை இதில் வீட்டிற்கு வந்தவர்கள் என்ன போனவர்கள் என்ன’’ என திமிரான பார்வையில் ஸ்வாமிநாதன் பின்வாங்கி,
“ நீ வா வீரா நாம வயலுக்கு பேசிக்கிட்டே போவோம்” என வீரநாயகத்தை வெளியே அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
“ வீரா கதிர் பேசுவதை மனசுல வச்சுக்காத இந்தா இதுல ரெண்டாயிரம் ரூபாய் இருக்கு சரியா” என கூறி ஸ்வாமிநாதன் காசை வீரநாயகத்திடம் குடுக்க
பணத்தை அதுவும் கேட்டதைவிட கூட கிடைத்ததில் சற்று முன்னதை மறந்து பணத்தை வாங்கிக்கொண்டே,
“ அதனால என்ன அண்ணே நம்ம பையன்தான அவனை எனக்கு தெரியாத” என சிரிப்புடன் வீரநாயகம் கூற சுவாமிநாதனும் தலையை அசைத்துக்கொண்டு
“ அப்புறம் வீரா நீ எனக்கு ஒரு உதவி செய்யணுமே??” என கேட்க
“ என்ன அண்ணே சொல்லுங்க செஞ்சுப்புடுவோம்”
“ அது பொண்ணு பார்க்கணும்”
“ யாருக்கு அண்ணே???”
“ நம்ம கதிருக்கத்தான்”
“ ஏதே!!!….” என அதிர்ந்த வீரநாயகத்திடம்
“ ஹ்ம்ம் ஆமா வீரா நல்ல பொண்ணை பார்க்கணும். நீயும் உன் பக்கம் சொல்லிவை சரியா??” என ஸ்வாமிநாதன் கேட்க
‘ இந்த கதிர் பயலுக்கு பொண்ணு பார்த்து கட்டி வச்சு எதாவது பிரச்சனை வந்தா சித்தப்பான்னுகூட பார்க்க மாட்டான். நம்மள சிதைச்சுடுவானே’ என மனதில் பயந்துகொண்டு வெளியே தலையை மட்டும் அசைத்தார் வீரநாயகம். ஆனால் மனதில் இந்த பாடல் ஓடிக்கொண்டே இருந்தது.
செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா, வஞ்சகன் கண்ணனடா