Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் சுவாசம் என் மூச்சில்

உன் சுவாசம் என் மூச்சில்….16

உன் சுவாசம் என் மூச்சில்….16

 

  அறையில் கண்மூடி  தனது வலது கையை வயிற்றின் மீது வைத்து தாய்மை அடைந்த செய்தி  அறிந்து அது தந்த மகிழ்ச்சியில்  உதட்டில் புன்னகையுடன் அசந்து உறங்கிக்கொண்டிருந்த எழில்விழியை  கண்டு ரசித்து கொண்டிருந்தான் கதிரவன்.

   அவனும் எழிலும் இந்த புதிய வரவை எதிர்பார்க்கவே இல்லை. கதிரவனுக்கு வேலை பளுவில் மனைவியை நினைக்கவே   நேரமில்லை, எழில்விழிக்கோ கணவனை சமாளிப்பதும் அவனின் கோவத்திற்கான காரணங்களை தேடுவதிலும் காலம் செல்ல எங்கனம் இதை பற்றி யோசிக்க.



Advertisement

   அதனால் இந்த திடீர் புதுவரவு ரெண்டு பேருக்குமே சந்தோஷத்தையும் எதிர்காலம் பற்றிய சிந்தனையும் சிறு பயத்தையும் குடுத்தது. கதிரவனுக்கோ ஒரு படி மேல் பொறுப்புணர்வும் கூட வர இன்னும் விஷயங்களை  ஆழமாக சிந்திக்க ஆரம்பித்தான்.

   எழில்விழி மயங்கிவிழவும் சத்தத்தில் அரக்க பறக்க  ஓடிவந்த கதிரவன் எழில்விழி மயக்கம் கண்டு தண்ணீர் வைத்து எழுப்பி ஒரு ஆட்டோவை பிடித்து மருத்துவமனைக்கு அழைக்க இடையில் எழில்விழி சாதாரண  மயக்கம் என கூறி மருத்துவமனைக்கு வர மறுக்க,

   வழக்கம் போல தன் சொல் அம்புகளால் அவளை தாக்க அதில்  அவளின் மறுப்புகளை தள்ளி வைத்துவிட்டு கணவனோடு அமைதியாக மருத்துவமனைக்கு செல்ல அங்கு அவர்களின் நாற்பது நாள் சிசுவின் வளர்ச்சியை அறிந்து இன்பமாக அதிர்ந்தனர்.

Advertisement

    பின் மருத்துவரிடம் மருந்துகளை சாப்பிடும் முறைகளை தெரிந்து கொண்டு வீடு வந்து சேர எழில்விழி உண்டு விட்டு உறங்கிக் கொண்டிருந்தாள். 

Advertisement

   எழில்விழி கருத்தரித்திருப்பதை முதலில் அன்னலெட்சுமி வெங்கடேசனுக்கு தெரிவித்தவன், பின் சுவாமிநாதனுக்கு அழைத்தான்.

“  கதிரு என்னப்பா எப்பிடி இருக்க??.. மருமக நல்லா இருக்கா??… ” என அழைப்பை ஏற்றவுடன் சுவாமிநாதன் நலம் விசாரிக்க

“ ஹ்ம்ம் நாங்க நல்லா இருக்கோம் உங்க பேர பிள்ளையும் நல்லா இருக்கு ”

Advertisement

“ என்னது பேர பிள்ளையா!!… ” என ஒரு நிமிடம் அதிர்ந்தவர்,

“ கதிரு நான் தாத்தா ஆகப்போறேனா??… ” என மகிழ்ச்சியுடன் கேட்டவரிடம்

“ ஹ்ம்ம் நீங்க எப்பவோ தாத்தா   ஆயாச்சுப்பா ” என கூறியவனிடம்

“ டேய்!!… நான்  என்ன கேட்குறேன் நீ என்ன சொல்லுற போடா.  இந்தா அம்மாகிட்ட கொடுக்குறேன் பேசு ” என கூறி மகிழ்ச்சியாக தெய்வானையிடம் அலைபேசியை சுவாமிநாதன் குடுக்க

“ என்னடா அப்பா ஆகிட்டியாமே ரொம்ப சந்தோசம்டா கதிரு ”  என சந்தோசமாக தெய்வானை பேச

“ ஏன் நீ அப்பத்தா ஆகிட்டன்னு சொல்ல மாட்டியா?? ” என கதிரவன்  கேட்க

“ டேய் ஏன்டா  உங்க அப்பா பேசும்போது நான் பக்கத்துல தான்  இருந்தேன் அவரு   பெரிய சத்தத்துல போட்டுருந்தாரு ”

“ பெரிய சத்தமா?… ஓ!!.. ஸ்பீக்கரா ”

“ ஹ்ம்ம் அதுலதான். அவரு தாத்தா ஆகிட்டேன்னு சொன்னதுக்கு ஏற்கனவே தாத்தான்னு சொன்ன அதான் நான் நீ அப்பா ஆகிட்டியான்னு கேட்டேன் ”

“  அதுசரி. நீ எப்பிடிம்மா இருக்க எல்லாரும் சவுக்கியமா?? ”

“ ஹ்ம்ம் எல்லாரும் நல்லா  இருக்கோம்  எப்ப வரீங்க??.. பேசாம எழிலை இங்க கொண்டு வந்துவிடேன் ”

“ எதுக்கு???.. ”

“ என்னடா எதுக்குன்னு கேட்குற. மாசமா இருக்குறா நீ வெளிய வேலைக்கு போயிட்டு எப்பவருவன்னு தெரியாது. அதான் நாங்கன்னா இங்க இத்தனை பேரு இருக்கோம் நல்லா பார்த்துக்குவோம்…. ” என தெய்வானை பேசிக்கொண்டிருக்கையில்

“ ஹ்ம்ம் கிளிப்பிங்க ” என கதிரவன் கத்த   

    அந்த சத்தத்தில் எழில்விழி முழிக்க ஆரம்பித்தாள். ஆனால் அவளின் விழிப்பை உணராது கதிரவனோ தன் தாயிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“ என்னடா!!.. எதுக்கு இப்படி கத்துற??.. ” என தெய்வானையும் எகுற

“ பின்ன  நீ பார்த்துக்குற லட்சணம் தெரியாது. உங்களை நம்பி ஒரு வாரம் விட்டதுக்கே அவளுக்கு தெரியாத வேலை செய்ய வச்சு படுத்தியாச்சு நீயும் உன்  மூத்த  மருமகளும்.  சரி அதுக்கப்புறமாது நல்லா பேசுனியா அவகிட்ட. சும்மா எரிஞ்சு எரிஞ்சு விழுவ. நானும் எதுவும் காட்டிக்காம இருந்தா எனக்கு ஒன்னும் தெரியாது நினைச்சியா ”

“ டேய்!!… அதுக்காக மாமியா மருமக பேசாமலே இருக்கா முடியுமா ”

“ அவ்வளவு யோசிக்கறன்னா இங்க வந்து ரெண்டு மாசம் கிட்டக்க ஆச்சு.  எத்தனை தடவை அவகிட்ட பேசுன விடு  எத்தனை தடவ என்கிட்டே விசாரிச்சுருப்ப உன்  மருமகளை பத்தி. சும்மா கடுப்பேத்தாத ”

“ டேய் போனா போது ஒரு உதவி செய்வோமேன்னு இங்க கூட்டிடு வர சொன்னா ரொம்ப குதிக்குற. உன்  பொண்டாட்டிய நீயே பார்த்துக்க ”

“  நாந்தான் பார்த்துக்க போறேன் உன்னைய நம்பியா கல்யாணம் பண்ணுனே இல்ல உன்னைய நம்பிதான் நாங்க பிள்ளைய  பெத்துக்க போறோமா. உனக்கு உண்மையான அக்கறைன்னா நீ இங்க வந்து பார்த்துக்கோ. அப்பாகிட்ட சொல்லிடு நான் வைக்குறேன் ” என  அலைபேசியை வைத்தவன் திரும்பி பார்க்க எழில்விழி ஆவென கதிரவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

   அதனை கண்டு,

“ என்ன முழிக்குற எதுவும் வேணுமா??… ”

“ ஹம்ம்ஹும் ஒன்னும் வேணாம்ங்க ”

“  என்ன வேணாம் டாக்டர் நல்லா தண்ணி பழசாறு எல்லாம் குடிக்க சொன்னாருல்ல இரு  எதாவது எடுத்துடுவறேன்  ஒழுங்கா நான் வேலைக்கு  போனாலும் என்ன வேணுமோ  நல்லா சத்தா சாப்புடு. சும்மா எதையாவது  இழுத்து வச்சு  எனக்கு காசை தண்டமாக்கிட்டாத ” என கூறி அடுக்கலைக்குள் கதிரவன் செல்ல

   கதிரவன் கூறி சென்றது மனதை சுணங்க செய்தாலும் அவன் தன் மேல் அக்கறையில் கூறுவதை எண்ணி அந்த சுணக்கத்தையும் நிமிடத்தில் மறந்து விட்டாள்.

    தனது புகுந்த வீட்டிற்கு வரும் எந்தவொரு பொண்ணும்  அந்த வீட்டின் பெண்ணாக அங்கீகாரமும் சுய மரியாதையும்  எதிர்பார்ப்பது இயல்பு. அது மறுக்கப்பட்டு ஒரு வித ஒதுக்கம் காட்டும் போது கணவனின் அன்பு  மலையளவு இருந்தாலும் மனதில் ஒரு நெருடல் இருந்து கொண்டே தான் இருக்கும்.

   அதனை  எதிர்த்து பேசி சண்டை இட்டாவது அந்த ஒதுக்கத்தை களைய  எண்ணுவர் சிலர். ஆனால் எழில்விழிக்கோ கணவனிடம் பேசவே பயம் எங்கு புகுந்த வீட்டினரை பேசுவது 

   அதனால்  சற்று முன் தெய்வானையிடம் கதிரவன் பேசியதை ரொம்ப நாட்களாக தனது  மனதில் கற்பனையாக  பேசிகொண்டுருந்தது.  இன்று தனக்காக அவனது அம்மாவிடம் பேசி தனது கற்பனைக்கு  நிஜத்தை குடுத்த கணவனின் மீது அந்த நிமிடம் நேசம் வேகமா வளர்ந்து எழிலின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தான் விழியின் கதிரவன்.

இரண்டு நாள் கடந்த நிலையில் கதிரவன் காலையில் அறையில் கிளம்பிக்கொண்டிருக்க திடீரென,

“ ஆ….ஆ….. ” என்ற எழில்விழியின் அலறலில் பதறிக்கொண்டு வேகமாக வெளியே வர அங்கு வாசலில் பயத்துடன் நெஞ்சில்  கை வைத்து பெருமூச்சினை விட்டுக்கொண்டிருந்த எழில்விழியை கண்டு வேகமாக அவளிடம் சென்று,

“ என்ன… என்ன… ஆச்சு விழி??.. ஏன் கத்துன??.. ஏதும் வலிக்குதா கீழ எதுவும் விழுந்துட்டியா??… ” என பதற்றத்துடன் கதிரவன் கேட்க

   அதற்கு பதில் கூறாது  பதட்டத்தில் எச்சில் விழுங்கி கொண்டிருந்தாள் எழில்விழி.

“  என்ன??… என்னமா ஏன் ஒரு மாதிரி இருக்க உள்ள வா முதல்ல. நாவேனா தூக்கிட்டு போவா. கால் எதுவும் வலிக்குதா??.. ” என கதிரவன் கேட்டுக்கொண்டிருக்க

“ இல்லங்க.. அது…. அது… தண்ணி ”

“ தண்ணி வேணுமா கொண்டுவரவா??.. ” என கேட்க

“ இல்லைங்க தண்ணி என் மேல விழுந்தாப்புல இருந்துச்சு அதான் பயத்துல கத்திட்டேன் ”  என மெதுவாக கூறியவளை  கண்டு பல்லை கடித்தவன் 

“ என்னது தண்ணிக்கு கத்துனியா??…. ”  என கேட்டவன் வேகமாக சத்தமாக,

“ உனக்கு கொஞ்சமாது அறிவு இருக்கா??.. அறிவு கெட்டவளே  பிள்ளையை வயித்துல வச்சுக்கிட்டு இப்படி சின்ன விஷயத்துக்கு எல்லா கத்துற. என்ன மனுசி நீ??… இப்படியா பயந்தக்குளியா இருப்ப.  இப்படி ஒன்னத்துக்கும் இல்லாததுக்கு எல்லாம் கத்துனா பிள்ளை  எப்பிடி தைரியமா  இருக்கும். ச்சை உன்னால எனக்கு இன்னைக்கு வேலைக்கு நேரமானது தான் மிச்சம் ” என கூறி கதிரவன் வேகமா சென்றுவிட

   கதிரவனின் பேச்சில் அதிர்ந்து கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டே எதிர்த்த வீட்டை நோக்க அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு இருபத்தி ஐந்து வயது  திருமணமான பெண்  கதிரின் பேச்சில் பயந்துகொண்டிருக்க அதனை  கண்டு,

“ இப்போ மட்டும் இவுங்களை பத்தி சொன்னோம் நாளைக்கே இவுங்க வீட்டை காலி பண்ணி போற அளவுக்கு பேசிட்டு தான் மறு வேலை  பார்பாரு ” என எண்ணிக் கொண்டே எழில்விழி வீட்டிற்குள் நுழைய,

     அதற்குள் கதிரவன் அவளிடம் சொல்லாது முறைப்புடன் சென்றுவிட அதில் அகமும் முகமும் சோர்வுற போய் கட்டிலில் படுத்துக் கொண்டு சற்றுமுன் நடந்த விசயத்தை மனது அசைபோட்டது.

   காலை உணவை கதிரவன் முடித்து கிளம்ப ஆரம்பித்ததும் வெளியே  காய்கறி வண்டி நிற்க கீரை வாங்க சென்றாள் எழில்விழி. கதிரவனும் எழில்விழியும் இந்த வீட்டிற்கு குடிவந்த இத்தனை நாட்களில் ஒரு நாளும் பக்கத்துக்கு வீட்டில் எதிர்த்த வீட்டில் என எங்கும்  நின்று பேசமாட்டாள்.

   அனைவரிடமும் ஒரு புன்னகையுடன் கடந்து விடுவாள். அதே நேரம் சில பேர் தேவை ஏற்பட்டால் எழில்விழி வீட்டின் வாசலின் நின்று பேசிவிட்டு சென்றுவிடுவர் அதற்கு எழிலின் தயக்கம் ரெண்டாவது காரணம் முதல் காரணம் நம் கதாநாயகன்.

    குடிவந்த அன்றே கூறிவிட்டான்,

“ விழி இந்தா அங்க நின்னு பேசுறேன் இங்க நின்னு பேசுறேன்னு பொம்பளைங்க மாநாட்டுல இருந்தன்னு வை அப்புறம் தெரியும் பார்த்துக்க ” என கூறி வைக்க அதனால் அதிகம் பேசமாட்டாள்.

   இன்று கீரை வாங்க வெளியே செல்லும் போது எழில்விழியின் வீட்டின் அருகில் இருந்த குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த எதிர்த்த வீடு பெண் எழிலோடு விளையாட எண்ணி கப்பில் இருந்து தண்ணீரை எழிலின் மீது தெளிக்க எண்ணி கப்போடு வீச கைதவறி தண்ணீர் கப் அவள் மீது விழ தீடிரென தன் மேல் கப்  விழுந்ததில்   ஏற்கனவே  கர்ப்பகால சோர்வில் இருந்த எழில்விழி  என்னமோ எதோ என்று ஆவென அலறிவிட்டாள்.

   இதை சொன்னால் நிச்சயம் ஒரு சண்டை வரும் என எண்ணி எழில்விழி மறைக்க அதில் எழில்விழி வாங்கிக் கட்டிக் கொண்டாள். 

   அந்த நிகழ்வுக்கு பின் இரு வாரம் கடந்த நிலையில் அன்னலெட்சுமியும் வெங்கடேசனும் பெரிய பை மூட்டைகளுடன் மதுரையில் இருந்து  எழில்விழியின் வீட்டிற்கு   வந்து  இறங்கினர்.

அவர்களை பார்த்த எதிர்த்த வீட்டு பெண்,

“ நீங்க யாரு??… ” என தண்ணீரை பிடித்துக்கொண்டு விசாரிக்க வெங்கடேசன் வீட்டின் அழைப்பானை அழுத்திக் கொண்டிருக்க அன்னலெட்சுமியோ எதிர்த்தவீட்டு பெண் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

“ நாங்க எழிலோட அம்மா அப்பா பிள்ளைய பார்க்க  வந்துருக்கோம் ” என அன்னலெட்சுமி கூற

“ ஓ!!…  ம்மா  உங்களுக்கு தெரியுமா ஒரு பத்து பதினஞ்சு நாளைக்கு முன்னாடி உங்க மருமகன் உங்க மகளை அடிச்சு  போட்டாரு ” என கூற வெங்கடேசன் அதிர்ந்து அன்னலெட்சுமியை காண

 அவரோ அந்த பெண்ணை தீர்க்கமாக பார்த்து,

“ நீங்க எங்குன இருக்கீங்க??.. ” என கேட்க

“ இதோ எதிர்த்த வீடுதான்ம்மா ஏன்?? ” என அந்த பெண் கேட்டாள்.

 அதற்கு அன்னலெட்சுமியோ,

“ இங்க பாருமா என் மகளை அவ புருஷன் தானே அடிச்சது அது அவுங்க பிரச்சனை  அதை  எதுக்கு என்கிட்டே சொல்லிக்கிட்டு இருக்கீங்க. எனக்கு என் மருமகனையும் தெரியும் என் மகளையும் தெரியும் போங்க தண்ணீ நிறஞ்சுடுச்சு ”  என கூறி வீட்டிற்குள் நுழைந்தனர்.

   வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த கதிரவன் அவர்களை வரவேற்று விட்டு அவர்களிடம் விடைபெற்று கிளம்பிவிட எழில்விழி தாய் தந்தையிடம் நலம் விசாரித்துவிட்டு உணவு உன்ன அமர்ந்தனர் அனைவரும்.

“ ஏத்தா  வாந்தி எல்லாம் வருதா??… ” என அன்னலெட்சுமி எழில்விழியிடம் கேட்க

“ ஹ்ம்ம் இப்பதான் ஆரம்பிக்குது ம்மா. ரெண்டு நாளா இருக்கு ”

“ ஓ!!… அப்போ ஒரு ரெண்டு மாசம் வாந்தி எல்லாம் நிக்குற வரை அங்கு வந்து இருக்குறியா மருமகன் கிட்ட நான் வேணா கேட்கவா ”

“ ஹ்ம்ம் வேணாம் ம்மா வளைகாப்பு பண்ணி அங்கதான் வரப்போறேன்  அதுவரைக்கும் அவுங்ககூட இருக்கேன்ம்மா ”  என புன்னகையுடன் கூறிய எழிலின் முகத்தில் இருந்த பொலிவு  அன்னலெட்சுமியை மேலும் வற்புறுத்த விடவில்லை.

“ சரிதான் உனக்கு எங்க வசதியோ அங்கையே இருந்துக்கோ. மனசையும் சந்தோசமா வச்சுக்க உடம்பையும் பார்த்துக்கோ ” என அன்னலெட்சுமி கூற,

    வந்ததிலிருந்து தன்னை நலம் விசாரத்ததோடு அமைதியாக முகமே வாடி சோர்வுடன் இருந்த வெங்கடேசனை கண்ட எழில்விழி,

“ என்னப்பா ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க??.. ” என கேட்க அதற்கு ஒன்றும் கூறாது அமைதியாக பாவமாக  வெங்கடேசன் அன்னலெட்சுமியை காண அவரோ

“ ஹம்ம்ஹும்….. ” என கழுத்தை நொடித்து முகத்தை திருப்பிக் கொண்டார்.

     அதனை  கண்டு புரியாது,

“ என்னமா உனக்கு அப்பாவுக்கும் சண்டையா??.. ”  என  எழில்விழி கேட்க

“ ஹ்ம்ம் அதை ஏன் கேட்குற. நீ மாசமா இருக்கன்னு உனக்கு அதிரசமும் முறுக்கும் செஞ்சு எடுத்துட்டு வருவோம்ன்னு உன் சரசு அக்காகிட்ட மாவு அரைச்சு தயாரிச்சு கொண்டு வா நம்ம வீட்டுல சுட்டு எடுத்துக்கலாம்ன்னு சொன்னேன் .

   அவளும் எல்லாத்தையும் தயார் பண்ணிட்டு எனக்கு போனை போட்டு ஒரு எட்டு ரைஸ் மில்லுல போய் மாவை வாங்கிட்டு வாம்மான்னு சொன்னா. நானும் உங்க அப்பா வீட்டுலதான் இருக்காருன்னு போய்ட்டேன் ரைசு மில்லுக்கு ” என கூறி அன்னலெட்சுமி வெங்கடேசனை முறைக்க

“ ஹ்ம்ம் என்னம்மா ஆச்சு??? ” என எழில்விழி கேட்க

“ ஹ்ம்ம் நான் போன அப்புறம் அந்த நொள்ளை கண்ணு கண்ணாயிரம் வீட்டுக்கு வந்து உங்க அப்பாவை டீ  குடிக்க  கூப்புட இந்த மனுஷனும் வீட்டை பூட்டாம நான் வந்துடுவேன் போய்ட்டாரு ”

“ அச்சச்சோ அப்புறம் ”

“ அப்புறம் என்ன நான் வந்து பார்த்தா வீடு  பப்பரப்பான்னு  தொறந்து கிடக்கு. அப்பவும் எனக்கு சந்தேகம் இல்ல ”

“ ஹ்ம்ம் ”

“ போய் உள்ள பார்க்குறேன்  பீரோவை ஒரு பொம்பள நோண்டிகிட்டு இருக்கா ”

“ அச்சச்சோ!!… அம்மா ”

“ ஹ்ம்ம் நானும் பதறி யாரு என்னன்னு விசாரிச்சா என்னைய வெங்கட்டுத்தான் வரசொன்னாருன்னு சொன்னா பாரு என் ஈரக்குலையே நடுங்கிடுச்சு ”

  ஆவென எழில்விழி தனது தந்தையை நோக்க அவரோ பாவமா பார்த்துக் கொண்டிருந்தார்.

“  அங்க என்ன பார்க்குற உன் அப்பா   என்னைய கட்டிகிட்டே மூணு மாசம் ஆச்சு என்கிட்டே பேச இதுல இதுக்கு எல்லாம் சரி வர மாட்டார்ன்னு தெரியும். இருந்தாலும் அந்த சுருக்க பேருல தான் கடுப்பாயிட்டேன் ” என அன்னலெட்சுமி  வெங்கடேசனை முறைக்க

“ அதுக்கு நான்  செய்வேன் அன்னம் ” என வாயை திறந்த  வெங்கடேசனை கண்டு மீண்டும் அன்னலெட்சுமி முறைக்க

“ அம்மா நீங்க அப்புறம் முறைங்க இப்போ சொல்லி முடிங்க ” என எழில்விழி அவசரப்படுத்த

“ என்னத்த சொல்ல. போட்டேன் ஒரு அடி அப்புறம் சொல்லுறா வெளில இந்த அரசாங்கத்துக்காரு பேரை எழுதி போடு ஒன்னு வச்சுருக்காருல அத பார்த்துதான் செல்ல பெரு வச்சுருக்கா அந்த திருட்டு நாயி”

“ அப்புறம் அவளை என்ன பண்ணுணிங்க??? ”

“ என்ன பண்ணுவாங்க மருமகன்கிட்ட  கேட்டோம் அவரு போலீஸ்ல புடுச்சுக்குடுக்க சொன்னாரு. அந்த பிரச்சனைல தான் உடனே உன்னைய பார்க்க வரமுடியல ” என அன்னலெட்சுமி கூற 

“ பாருமா உன் மருமகன் என்கிட்டே சொல்லவே இல்லை. அதுசரி ஏன் அப்பாவை முறைக்குறிங்க. அவ பேரை பார்த்து சொன்னதுக்கு அப்பா என்ன பண்ணுவாங்க ” என புரியாது கேட்டவளிடம்

“ ஹ்ம்ம் என்னவா ஒழுங்கா டீ குடிக்க போகாம இருந்தா இந்த பிரச்சனை தலைவலி எல்லாம் தேவையா.  பத்தாததுக்கு அந்த பேரு பலகையை எடுக்க கூடாதாம் ” என கூறி முணுமுணுத்த அன்னலெட்சுமியை  பாவமாக பார்த்த வெங்கடேசனையும் ஒரு வழியாக எழில்விழி சமாதானம் படுத்தினாள்.

   பின் அன்னலெட்சுமியும் எதிர்த்த வீட்டு பெண் கூறியதை கூற அதற்கு எழில்விழியோ தண்ணீர் கதையை கூறி,

“ அவுங்க உங்க மாப்பிள்ளை கோவத்தை நேர்ல பார்த்துட்டு என்னைய அடிச்சதா சொல்லிருக்காங்க. ஆனா உங்க மருமகன் சத்தம் போடுறதோட சரிம்மா கை எல்லாம் நீட்ட மாட்டாங்க ” என கூறினாள் எழில்விழி.

   ஒரு வழியாக இரண்டு நாள் இருந்து அன்னலெட்சுமியும் வெங்கடேசனும் கிளம்பி விட்டார்கள்.

  ஒரு ரெண்டு நாள் கடந்து எழில்விழி மதிய உணவு  உண்ணும் பொழுது வாந்தி வந்துவிட வேகமாக கழிவறை சென்று வாந்தி எடுத்து முகம் கழுவி வந்து அமர அதனை கண்ட கதிரவன்,

“ என்ன விழி சாப்பிடல?? ” என கேட்க

“ இல்லைங்க எனக்கு முடியல ஒரு மாதிரி வருது. வாந்தி வேற எடுத்ததால் தொண்டை  எல்லாம்  எரியுது ”

“ அதனால சாப்புடாம  இருக்க போறியா?? ”

“ இல்லைங்க மறுபடியும் வாந்தி வரும் ”

“ வந்தா பார்த்துக்கலாம் ” என கூறி கையை கழுவிவிட்டு நன்றாக உணவை பிசைந்து ஊட்ட அதில் விழியின் விழிகளில் மின்னல் வர சந்தோசமாக உணவை வாங்கினாள்.

   அவள் நினைவோ சற்று ஒரு மாதம் முன் சென்றது. மதிய சாப்பாட்டின் போது கதிரவன் சாப்பிட்ட பின் அவன் தட்டில் சாப்பாட்டை போட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

   அப்பொழுது திடீரென விக்கல் எடுக்க அருகில் தண்ணீரை தேட தண்ணீர் காலி ஆகி இருந்தது. அதில் எதார்த்தமாக கதிரவனை காண அவனும் ஒன்றும்  கூறாது தண்ணீர் எடுத்து வந்து அவளின் கையில் குடுத்து விட்டு,

“ நான் இருந்ததால தண்ணீ குடுத்தேன். நான்  வெளிய இருந்தா என்ன பண்ணிருப்ப இல்ல இவன் தான் இருக்கான்ல நமக்கு இளிச்சவாய் செய்வான்னு சாப்புடுறப்போ  தண்ணீ இல்லாம சாப்புட உட்கார்ந்தியா??? ” என கதிரவன் கேட்க அதில் தண்ணீர் இல்லாமலையே எழில்விழியின் விக்கல் நின்றது.

             அதை எண்ணிக் கொண்டு சிறு சிரிப்புடன் இன்று உணவை ஊட்டி விடும் கணவனை காதலோடு பார்த்துக் கொண்டே உணவை உண்ண  கதிரவன் மேல் உள்ள பயத்திலோ இல்லை அன்னையின் புரியாத காதலிலோ கருவில் இருந்த அவர்கள் குழந்தை உணவை வெளியே தள்ளவில்லை.

 

நிலங்கள் உடைந்து போனாலும் நிழல்கள் உடைவதில்லை
நேசம் பாசம் நிஜமானது
மழையில் கிளிகள் நனைந்தாலும் சாயம் போவதில்லை
அன்பே நம் காதல் அது போன்றது
பெண்ணுக்கு பேராசை வேறொன்றும் இல்லை
சொன்னதை செய்தாலே நிகரேதும் இல்லை
நீ உறுதியானவன் என் உரிமையானவன்
பசி ருசியை பகல் இரவை பகிர்ந்து கொள்ளும் தலைவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!