Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

En Nila Thozhikku

En Nila Thozhikku 18 2

அப்போதும் அவன் பதில் பேசாமல் காரைச் செலுத்த, “இப்ப நீ வண்டியை நிறுத்தப் போறி..!” என்று கேட்க வந்ததைக் கேட்காமல் பாதியில் நிறுத்தினாள். ஏனெனில் அவன் கார், அவள் பள்ளிக்குச் செல்லும் பாதையில் சென்று கொண்டிருந்தது.

     அதற்காக “தாங்க்ஸ்!” என்று அவள் சொல்ல வாயெடுக்க, “தாங்க்ஸ்” என்று அவன் குரல் ஒலித்தது.

     அவள் வியந்து அவன் விழி நோக்க, “உனக்குதான்! என் மேல அக்கறை எடுத்து என்னை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு வந்ததுக்கு…!” என்றான் மென்மையான குரலில்.

     எப்போதுமே அவளிடம் சிடுசிடுத்து ஒலிக்கும் அவனின் குரலில் இத்தனை மென்மை குடிபுகுந்ததை எண்ணி அவள் மனம் சிறகில்லாமல் பறந்தது.



Advertisement

     அவன் நன்றியை சிறு புன்னகையோடு ஏற்றுக்கொண்டவள், ‘எப்ப உன் கையைப் பிடிச்சு அக்னியை வலம் வந்தேனோ, அப்பவே உன்னோட எல்லா சுக துக்கத்திலயும் எனக்கும் பங்கிருக்குடா…! ம்! அதென்னமோ தெரியல! உனக்கும் எனக்கும் கல்யாணம் முடிவாகுற வரைக்கும் உன்னை பார்த்தாலே கோபம் கோபமா வர எனக்கு, கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு இனம் புரியாத உணர்வு…! இதுக்கு பேர்தான் தாலி மேஜிக்கோ?!’ என்று எண்ணம் போன போக்கில் யோசித்தவளின் இதழ்க்கடையோரம் மெல்லிய சிரிப்பு எட்டிப் பார்த்தது.

     ‘உனக்கொன்னு தெரியுமா ரஞ்சு… இப்பல்லாம் நீ என்னோட அன்பா பேசமாட்டியான்னு கூட என் மனசு ஏங்க ஆரம்பிச்சிடுச்சு…! உன்னோட கோபத்தைக் கூட இப்பல்லாம் என் மனசு ரசிக்குதுடா…! ஒருவேளை நான் உன்னைக் காதலிக்க ஆரம்பிசிட்டேனோ…?!’ என்று புரியாத நேசத்திற்கு தன்னுள்ளத்தில் வினா எழுப்பி நாணத்தை விடையாக்கினாள் தலைவனின் நாயகி.  

     இரவு நிலா தனது லேப்டாப்பில் ஏதோ மும்முரமான வேலையில் இருந்தாள்.

Advertisement

   

Advertisement

இளமாறன் சொன்னது போல் இரவு படுக்கப் போகுமுன் ஒரு குளியலைப் போட்டுவிட்டு வந்தவனுக்கு, நிலா இன்னும் தூங்காமல் விழித்திருப்பதைக் கண்டு ஆச்சர்யம் எழுந்தது.

     ‘மணி பதினொன்னு ஆகப் போகுது… எப்பவும் பத்து மணிக்கெல்லாம் படுத்துடுவாளே!’ என்று நினைத்தபடியே, இரவு உடையை எடுத்து அணித்து கொண்டு கட்டிலில் அமர்ந்தான்.

     அப்போதுதான் அவன் வந்ததை கவனித்த நிலா, “ரஞ்சு… அங்க ஒரு வாழைப்பழமும், சுடச் சுட பாலும் வைச்சிருக்கேன் எடுத்து சாப்பிட்டு படு…!” என்றாள்.

Advertisement

     “இதென்ன புதுப் பழக்கம்?!” என்றான்.

     “நல்லா தூக்கம் வரும்னு சொன்னங்க அதான்…!” என்றாள்.

     “ப்ச்!” என்று அவன் சலித்துக் கொள்ள,

     “ப்ளீஸ் ரஞ்சு… ட்ரை பண்ணிதான் பாரேன்…!” என்றாள்.

     விதியே என்று சாப்பிட்டு முடித்துவிட்டு படுக்கப் போனவனின் மனம் மாத்திரையைத் தேடத் துவங்கியது.

     “ரஞ்சு இங்க வாயேன்…!” என அழைத்தாள் நிலா.

     “என்னடி பிரச்சனை உனக்கு சும்மா நைநை ன்னு கிட்டு!” என்று அவன் சீற,

     “ப்ளீஸ் ரஞ்சு…!” என்று அவள் கெஞ்சலாக அழைக்க, தலையிலடித்துக் கொண்டு எழுந்து சென்றான்.

     “இங்க பாரு இந்த டிசைன்ல ஏதோ குறையுதுன்னு தோணுது…! உனக்கு ஏதாவது புது ஐடியா கிடைக்குதான்னு பாரேன்..!” என்று அவள் தன் மடிக்கணினியை அவன்புறம் திருப்ப,

     அதில் ஒரு சேலைக்கான புது டிசைன், மிக அழகாக உருவாக்கப் பட்டிருந்தது.

     “வாவ்! இது யார் டிசைன் செய்தது….?! ரொம்ப அற்புதமா இருக்கு! மார்வெலஸ்!” என்றான் வியந்து.

    அவள் அவனை முறைக்க, “யார் செய்ததுன்னு தானே கேட்டேன்! அதுக்கு ஏன் முறைக்கற?!” என்றான்.

     “ம் கிட்டத்தட்ட ஆறு மணி நேரமா உட்கார்ந்து டிசைன் பண்ணியிருக்கேன்! யாரு செய்ததுன்னு கேட்டா?!” என்றாள் முறைப்புடன்.

    “ரியல்லி… நீயா இதை டிசைன் செஞ்ச? நோ நாட் அட் ஆல்..! சான்ஸ்லஸ்…!” என்றான் அவநம்பிக்கையுடன்.

     “நம்பாட்டி போ! எனக்கென்ன…!” என்று அவள் தன் மடிக்கணியை அவன்புறமிருந்து தன் புறம் திருப்பிக் கொள்ள,

     “நிஜமா இதை நீதான் செஞ்சியா?!” என்றான் வியப்பு மாறாமல்.

     அவள் மறுபடியும் முறைக்க, “ஓகே! ஓகே! இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?! கிளாஸ் போயிருக்கியா?!” என்றான் தொடர்ந்து.

     “ம்ஹும்… நான் ப்ளஸ் ஒன் படிக்கும் போதிலிருந்து, காலேஜ் முடிக்கிற வரைக்கும், ஒரு டெக்ஸ்டைல்ல பார்ட் டைம் ஜாப் போயிட்டு இருந்தேன். அங்க கத்துகிட்டேன்!” என்றாள்.

     “ஓ!”

     “ரஞ்சு நீ சின்ன வயசில ரொம்ப அழகா பெயிண்டிங்ஸும், புது புது டிசைன்ஸும் க்ரியேட் பண்ணுவ இல்லை…!” என்றாள் ஆர்வத்துடன்.

     “ம்! ஆனா அதெல்லாம் விட்டு ரொம்ப வருஷமாச்சு…!” என்றான்.

     “நீ என் மறுபடியும் முயற்சி பண்ணக் கூடாது…?! நம்ம கடைக்கு வர்ற பட்டு புடவைகளில் அந்த டிசைன்சை போடலாம் இல்ல….?!” என்றாள் ஆர்வமாக.

     “நான் போடற டிசைன்சை?! புடவையிலா?! சான்சே இல்லை…! ஒருத்தர் கூட புடவை வாங்க மாட்டாங்க!” என்றான்.

     “ப்ச் அப்படி எல்லாம் சொல்லாத ரஞ்சு… உன்னோட திறமை உனக்குத் தெரியாது…! நானும், நிருவும் உன்னோட பெயிண்டிங்சை பத்தி எவ்வளவு ரசிச்சு பேசியிருக்கோம் தெரியுமா?!” என்றாள்.

     அவன் அமைதியாக இருக்க, “முயற்சி பண்ணிதான் பாரேன்!” என்றாள் நிலா.

     “சரி பார்க்கலாம்…. நேரம் கிடைக்கும் போது ட்ரை பண்றேன்!” என்று அவன் சொல்ல,

     “நேரம் கிடைக்கும் போது என்ன இப்பவே… முயற்சி பண்ணேன் ப்ளீஸ்… ப்ளீஸ்!!” என்றாள் ஆவலுடன்.

     சில நொடிகள் யோசித்தவன், “வித்தியாசமா ஏதாவது ட்ரை பண்ணனும்!” என்று சொல்ல, நிலாவும் அதை ஆமோதித்தாள்.

     இருவரும் சில நிமிடங்கள் யோசனையில் மூழ்க, அதைக் கலைக்கும் வகை நிலாவின் மனதில் ஓர் யோசனை தோன்றியது.

     “ரஞ்சு நீ பொன்னியின் செல்வன் படிச்சிருக்கியா??!” என்றாள் திடிரென்று.

     “ம், ஸ்கூல் டேஸ்ல படிச்சது…! அதுக்கும் புடவை டிசைனுக்கும் என்ன சம்மந்தம்?!” என்றான்.

     “அந்தக் கதையோட முக்கியமான காட்சிகளை, பார்டர்ல டிசைன் பண்ணா செமையா இருக்கும் இல்ல…?!” என்றாள் நிலா ஆர்வமாக.

     “இதெல்லாம் சாத்தியமா?!” என்றான் ரஞ்சன்.

     “ஏன் முடியாது?! ஏற்கனவே கிருஷ்ணர் உருவம், ராஜா உருவம் எல்லாம் இருக்க மாதிரி டிசைன்ஸ் வந்திருக்கே… நாம கொஞ்சம் வித்தியாசமா கதையோட காட்சிகளை கொடுக்கப் போறோம்! ரொம்ப ட்ரேடிஷனலா இருக்கும்! நிறைய பேர் விரும்பி வாங்குவாங்க ரஞ்சு..! முயற்சி பண்ணிதான் பார்ப்போமே!” என்றாள்.

     அவன் சற்று யோசிக்க, “ரொம்ப யோசிக்காத ரஞ்சு…. நீ கம்பியூட்டர்ல டிசைன் பண்ணிக் கொடுத்தா அதை அப்படியே நெய்து கொடுத்துடுவாங்க இல்லையா?!” என்றாள்.

     “ம்!” என்று அவன் தலையசைக்க,

     “அப்போ இப்பவே ட்ரை பண்ணேன்…!” என்றாள்.

     காலை மருத்துவமனை அழைத்துச் சென்றது முதல், இப்போது தன் மனதை திசை திருப்ப முயல்வது வரை, தனக்காகதான் ஒவ்வொன்றையும் அவள் யோசித்து யோசித்துச் செய்கிறாள் என்று அவன் மூளை அவனுக்குச் சுட்டிக் காட்ட, ‘நான் அவளை அவ்ளோ தூரம் வெறுத்துப் பேசியும் அவ ஏன் என்மேல இவ்வளவு அக்கறை எடுத்துக்கறா?!’ என்று அவன் மனம் யோசிக்கத் துவங்கியது.

     ஆனால் அவனை யோசிக்க விடாமல், “ப்ளீஸ் ரஞ்சு…!” என்று அவள் மீண்டும் கெஞ்ச,

     “இப்பவேவா?!” என்றான் அவன்.

     “ம்! ம்!” என்று அழகிய புன்னகையுடன் தலையாட்டினாள் மீன் விழியாள்.

     முதன் முதலாக அவளின் அழகிய புன்னகையை ரசித்த அவனின் கண்கள், இதயத்திற்கு தூது போய், உடனே “சரி!” என தலையசைக்க வைத்தது.

     சில நிமிடங்களில் அவன் ஆர்வத்துடன் வேலையில் ஈடுபடத் துவங்க, அவள் அவனுக்கு உதவி புரிந்தாள்.

     நெடுநேரம் கண்விழித்து வேலை பார்த்த சோர்வு தானாக உறக்கத்தை வரவழைக்க, நெடு நாட்களுக்குப் பின் தூக்க மாத்திரையின் உதவியின்றி, சோபாவில் சாய்ந்தபடியே ரஞ்சன் உறக்கத்தைத் தழுவினான்.

     அவன் உறங்கியதும், மடிக்கணியை அணைத்து எடுத்து வைத்துவிட்டு, கீழே போர்வை விரித்து படுத்த நிலாவும் நிம்மதியாக உறக்கத்தைத் தழுவினாள்.

     நாட்கள் செல்ல செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக கலைநயத்தோடு கூடிய அழகிய புடவையுடன் அவர்களின் அழகிய நட்பும் அரும்பத் துவங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!