Skip to content
Post Views: 6,730
இரும்பில் ஓர் இதயம்…. 7
மாற்றங்கள் ஒன்றே மாறாதது இந்த வரிகள் பரிதி மிருதுளாவிற்கும் பொருந்தும்.பரிதிக்கு தன்னில் ஏற்பட்ட மாற்றத்தை ஏற்றுக் கொள்ள மனமில்லை ஏதோ தன்மீது ஏறி அமர்ந்து அழுத்துவது போல் ஒரு பிரம்மை இருந்து கொண்டே இருந்தது.அதற்கு காரணம் அவன் கடந்த வந்த பாதைகள் என்று கூறினால் மிகையாகாது.வாழ்வில் அன்பு,பாசம் இவற்றை எல்லாம் அவன் கடந்தே இல்லை என்பது தான் உண்மை.அதனாலே அவன் மிருதுளாவிடம் இருந்து ஓடக் காரணம்.
இதோ ஒரு வாரக் காலம் ஓடிவிட்டது அன்றைய நிகழ்விற்கு பின் பரிமளம் தான் சற்று பரிதியிடம் இருந்து ஒதுங்கி கொண்டார்.ஆனால் மிருதுளாவிடம் எப்போதும் போல் தான் இருந்தார்.பரிதி முன்பு போல் இப்போது எல்லாம் வீடு வருவது இல்லை மீறி வரும் சமயங்கள் எல்லாம் மிருதுவிற்கும் அவனிற்கும் வாக்குவாதங்கள் அதிகரிக்க தொடங்கின.அவன் அவனது முடிவில் உறுதியாகி இருக்க மிருதுளாவும் அவனை விட்டேன பார் என்று தான் அவன் கண்டு கொண்டாலும் இல்லைனாலும் அவனிடம் பேசி புரிய வைக்க முயல்வாள்.
ஆனால் அவளின் முயற்சியின் பலன் என்னவோ பூஜியமாக தான் இருக்கும்.பரிதியும் அவளை அடித்து பார்த்துவிட்டான் ஆனால் அவள் எதையும் கருத்தில் கொள்ளாமல் அவனிடம் வாதம் புரிய அவனிற்கு கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை பறந்தது கொண்டிருந்தது.
Advertisement
இப்போதெல்லாம் பரிமளமே வாய்பிளக்கும் அளவிற்கு பரிதியிடம் அவள் வாய் வம்பு வளக்கும் அளவிற்கு வளந்துவிட்டாள்.
“என்னைக்கு நீ அவன் கிட்ட வாங்க போறியோ….”என்று பரிமளம் கிண்டலாக கூறிவிட்டு செல்லுவார்.
அன்றும் அது போல் வீடு வந்தவனிடம் மிருதுளா திருடாதே என்று பக்கமாக பக்கமாக கட்டுரை சொல்ல கோபத்தில் அவனும் கண்டபடி கத்திவிட்டு சென்றுவிட்டான்.இது எப்போதும் நடப்பது தான் என்று மிருதுளாவும் கண்டு கொள்ளாமல் தனது வேலைகளை பார்க்க சென்றுவிட்டாள்.ஆனால் அன்று இரவு முழுவதும் பரிதி வீடு திரும்பவில்லை மிருதுளாவிற்கு சில நேரங்களில் கோபம் அதிகமானால் இப்படி தான் அன்று வீட்டிற்கு வரமாட்டான் என்று தெரியுமாதலால் உறங்கிவிட்டாள்.
Advertisement
ஆனால் மூன்று நாட்கள் கடந்த நிலையிலும் அவன் வராமல் போக மிருதுளாவிற்கு சற்று பயம் பிடித்துக் கொள்ள ஆரம்பித்தது.எப்போதும் போல் தான் கத்திவிட்டு சென்றிருந்தான் அதனால் வந்துவிடுவான் என்று இருந்தவளுக்கு அவன் வராமல் இருக்கவும் ஏதோ சரியில்லை என்று தோன்ற அதை பரிமளத்திடமும் கூறினாள்.
Advertisement
“என்னானு தெரியலையே கண்ணு…..யாருக்கிட்ட கேட்க….டீ கடையில விசாரிக்க சொல்லுறேன்….அங்க தான் அடிக்கடி போவான்…..நீ மனச குழப்பிக்காத கண்ணு…..”என்று அவர் கூற மிருதுளா தலையை ஆட்டி வைத்தாள்.ஆனால் மனது எண்ணவோ சரியில்லை என்று எடுத்துரைத்துக்கொண்டே இருந்தது.அவள் நினைத்தது போல் தான் நடந்தது.
“கண்ணு இந்த பய இரண்டு நாளாவே அங்க வரலையாம்….அதோட கணக்கு பாக்கி எல்லாம் தீத்துதிட்டு போயிருக்கான்…..எங்க போய் தொலைஞ்சான்…..”என்று பரிமளம் கூற,மிருதுளா பயத்தில் எச்சில் விழுங்கினாள்.அவளிற்கு சரியாக நான்கு நாள் முன் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.
அன்று அவன் பணத்தை எண்ணியபடி இருக்க மிருதுளா,
Advertisement
“ஏன் இப்படி திருடுறீங்க….ஏன் நான் சொல்லறதையே புரிஞ்சிக்காம இருக்கீங்க….”என்று பழைய பல்லவியை பாட பணத்தை எண்ணி தனது சட்டை பைக்குள் வைத்தவன் அவளை அழுத்தமாக பார்த்துவிட்டு,
“வர வர உன் பேச்சு ஓவரா போயிகிட்டு இருக்கு…நான் அமைதியா போறது உனக்கு நல்லதுனு நினைச்சுக்காத……என்னைக்காவது உன்னை இப்படியே விட்டுட்டு போயிட்டே இருப்பேன் பார்த்துக்கிட்டே இரு….அப்புறம் நீ நடுதெருவுல தான் நிக்கனும்….”என்று விட்டு சென்றிருந்தான்.மிருதுளாவிற்கு அவன் கூறிய வார்த்தைகள் மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும் அவன் அவ்வாறு செய்யமாட்டான் என்று சிறு நம்பிக்கை இருந்தது.ஆனால் இன்று நடப்பவை அனைத்தையும் பார்த்தால் அவன் கூறியது போல் சென்றுவிட்டானோ என்று ஒரு மனது நினைக்க மற்றொரு மனமோ அப்படி இருக்காது என்று தனக்குள் கூறிக் கொண்டிருந்தது.
மிருதுளாவிற்கு பயம் பிடித்துக் கொண்டது அவளின் முகவாட்டத்தை கண்ட பரிமளத்திற்கு நெஞ்சம் விம்ம தான் செய்தது இருந்தும் அவரால் எதுவும் செய்யமுடியாதே.எப்போதும் இது போல் கோபமாக சென்றால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து தான் வீட்டுக்கு வருவான் ஆனால் இம்முறை இதோ ஒரு வாரம் கடந்துவிட்டது அவன் வீடு வந்து சேரவில்லை.மிருதுளா கொஞ்சம் கொஞ்சமாக உடைய தொடங்கினாள்.
“உண்மையில் தன்னை விட்டு சென்றுவிட்டானா…..எங்கு சென்றிருப்பான்….” என்று அவனை பற்றியே எண்ணங்கள் சுழல அவளின் மனமும்,உடலும் சோர்ந்து போயின.பரிமளத்திற்கு அவளின் மாற்றம் நன்கு தெரிய பிடித்து வருத்தெடுத்துவிட்டார் அவளை.
“இந்தா கண்ணு….நீ இப்படி இடிஞ்சி உட்கார்ந்தா எல்லாம் சரியாகிடுமா….இல்ல போன புண்ணியவான் தான் வந்துடுவானா….அந்த பய உன்னைய போக சொன்னது கூட சரி தான்னு எனக்கு இப்ப தோணுது…..இந்தமாதிரி விளங்காதவனோடு எப்படி நீ வாழ்க்கை ஓட்ட முடியும்….பாவி பய கண்ணுக்கு லட்சணமா பொண்டாட்டி இருக்கு எங்க போய் தொலைஞ்சான் தெரியலை நீ இங்கு இருந்து மனசையும்,உடம்பையும் வருத்திக்கிற…..முதல்ல எழும்பு…..”என்றவர் தன் கரத்தை நீட்ட மிருதுளாவோ கண்கள் கலங்க அவரை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.அந்த கோலம் அவரை மேலும் வாட்ட,
“இந்தா கண்ணு….எனக்கு இப்படி அழதா பிடிக்காது….என்னை கோபப்படுத்தி பார்க்காத…..எழுந்திரி…..அட எழுந்திரினு சொல்லுறோம்ல….”என்று ஒரு அதட்டல் போடவும் தான் அவள் எழ,
“போய் முகத்தை கழுவிட்டு வா…..”என்று அவளை அனுப்பிவிட்டு,தனது கூடையில் தொடுத்த மலர்களை அழகாக அடுக்க தொடங்கினார்.மிருதுளா முகம் கழுவி வரவும் அவளுக்கும் தனக்குமான உணவை எடுத்துக் கொண்டு அமர்ந்தவர்,
“வா சாப்பிடலாம்….நேரம் வேற ஆச்சு….”
“இல்ல மா….பசிக்கல….நீங்க சாப்பிடுங்க…..”என்றவளை முறைத்து பார்த்தவர்,
“இங்க பாரு கண்ணு….சுவருனு ஒன்னு இருந்தா தான் அதுல சித்திரம் வரைய முடியும்…..உனக்கு அவன் கூட போராடுனாதான் வாழ்க்கைனு ஆகி போச்சு…..அப்புறம் எதுக்கு அப்பப்ப சோர்ந்து போய் உட்காருர….போராடிக்கிட்டே இரு….அதுக்கு மனசுல தெம்பு இருந்தா மட்டும் போதாது உடம்புலேயும் தெம்பு வேணும்…..நான் அவ்வளவு தான் சொல்லுவேன்…..”என்றுவிட்டு தனது உணவை உண்ண தொடங்க மிருதுளாவும் அவருடன் இணைந்து கொண்டாள்.அவளுக்குமே அவர் கூறுவதில் உள்ள நியாயம் புரிய தான் செய்கிறது ஆனாலும் மனது அடித்துக் கொள்கிறதே அவனிற்காக.
“அது நல்ல பிள்ளைக்கு அழகு…..ம்ம்….சீக்கிரம் கிளம்பு…..கொஞ்சம் வேலை இருக்கு….”என்று அவளை அவசரப்படுத்த,மிருதுளா பொம்மை போல் அவர் சொல்வது அனைத்தையும் செய்தாள்.ஆனால் மனது பரிதியின் நினைவில் இருந்து வெளிவர மறத்தது.எங்கேனும் திருடி மாட்டிக் கொண்டானோ என்ற எண்ணம் எழ அதுவே அவளை நிலை கொள்ளமால் அலைக்கழிக்க வீ்ட்டில் இருந்தாள் மேலும் பைத்தியம் தான் பிடிக்கும் என்று எண்ணி பரிமளத்துடன் சென்றாள்.
பரிமளமும்,மிருதுளாவும் பூ விற்கும் இடத்திற்கு செல்ல அங்கு அவர்களுக்கு முன்பே நாயகி தனது இட்லி கடையை திறந்திருந்தார். நாயகி பரிமளம் பூ விக்கும் இடத்தின் பக்கத்தில் தான் சிறிய இட்லி கடை வைத்திருந்தார்.அவருக்கு திவ்யா என்ற ஒரு மகளும் உண்டு.கணவன் ஒரு விபத்தில் இறந்துவிட திவ்யாவுக்கு அனைத்துமாகி போனார் நாயகி.
திவ்யாவிற்கும் படிப்பு ஏறாமல் போக அவள் ஒரு பல்பொருள் அங்காடியில் வேலைக்கு செல்கிறாள்.அவ்வபோது கடைக்கும் வருவாள் அவ்வாறு வரும் போது தான் அவள் மிருதுளாவுடன் பழக்கமானது.அதுவும் பரிமளத்தின் மூலம் மிருதுளாவின் கதையை கேட்டவளுக்கு அவளை நினைத்து பரிதாபம் எழுந்தது அதனாலே மிருதுளாவை எப்போது பார்த்தாலும் அவளுடன் கலகலத்துவிட்டு தான் வருவாள்.நாயகி இவர்களை பார்த்தவுடன்,
“வா பரிமளா…என்ன இன்னைக்கு லேட்டு…..”என்று கேட்ட படியே இட்லியை ஊற்றிக் கொண்டிருக்க,பரிமளம் வீட்டில் நடந்தவற்றை கூறிக் கொண்டிருந்தார்.அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த நாயகிக்கு மனதிற்கு கஷ்டமாக தான் இருந்தது மிருதுளாவை நினைத்து என்ன செய்வது நல்ல பெண் வாழ்க்கை அவளை இப்படி அலைக்கழிக்கிறதே என்று நினைத்துக் கொண்டார் அதை தவிர அவராலும் என்ன செய்ய இயலும் என்று தன் எண்ணப்போக்கில் இருந்தவரை களைத்தது பரிமளத்தின் குரல்,
“நாயகி….நான் திவிக்கிட்ட கேட்க சொல்லி சொல்லியிருந்தேனே….திவி ஏதாவது சொல்லுச்சா….”என்று பரிமளம் கேட்க,
“ஆங்….சொல்லிருக்கேன் பரிமளா…..அவ முதலாளிக்கிட்ட கேட்டு சொல்லுறேன்னு சொன்னா….ஆனா ஒத்துக்கிட்டா தொடர்ந்து வரனும் சொன்னா அதை மட்டும் நீ அந்த பொண்ணுக்கிட்ட கேட்டு சொல்லு…..”என்று விட்டு தன் வேலையை தொடர,பரிமளம் மிருதுளா நோக்கி திரும்ப அவளோ எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.
“போச்சு….இவளை இப்படியே விட்டா நல்லதுக்கு இல்ல…..”என்று நினைத்துக் கொண்டு,அவளின் தோள்களை தொட அதில் சொரனை வந்தவள்,
“என்னமா….”என்று கேட்க,
“ம்ம்….நீ இப்படியே இருந்தா நல்லதுக்கு இல்ல கண்ணு…..நான் ஒண்ணு சொல்லுவேன்….நீ யோசிச்சு பதில் சொல்லு….இங்க பாரு கண்ணு….அவன் எங்க போய் தொலைஞ்சானு தெரியலை நீ என்னடான இப்படி எதையோ பறிகொடுத்தவ மாதிரி உட்கார ஆரம்பிச்சிட்ட…..என்றவர் சற்று நிறுத்திவிட்டு பின் தொடர்ந்தார்,
“இங்க பாரு கண்ணு நான் எது செஞ்சாலும் உன் நல்லது தான் செய்யுவேனு நீ நம்புற தான….”என்று அவளிடம் கேட்க,
“ம்ம்ம்மா…..ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க…..நான் உங்களை நம்பாமலா இருப்பேன்….. சொல்லுங்க….”என்று ஒருவித பரிதவிப்புடன் தான் கேட்டாள்.அவளுக்கு பயம் எங்கே தன்னை ஊருக்கு போ என்று கூறிவிடுவாரோ என்று.
“இதுல எனக்கும் ஆதாயம் இருக்கு…அதனால தான் சொல்லுறேன்….”என்று அவர் பீடிகை போட மிருதுளா மொத்தமாக பயந்து தான் போனாள் இவர் தன்னை ஊருக்கு தான் அனுப்ப போகிறார் என்று அவளின் கலங்கிய கண்களை கண்டவர்,
“இந்தா எதுக்கு இப்ப கண்ணை கசக்குற…..உன்னை ஊருக்கு போக சொல்லிடுவேன்னு பயப்படுறியா…..”என்று சரியாக அவளை ஊகித்து கேட்டக,அவளின் தலை தன்போல் ஆம் என்று ஆட,அவளின் தலையில் செல்லமாக தட்டி,
“அதான் சொன்னேன்ல…..நீ கொஞ்ச நாளா நீயா இல்லைனு…..நான் உன்னை ஏன் ஊருக்கு போக சொல்ல போறேன்….”என்று கூறவிட்டு அவளின் கண்களை துடைத்துவிட மிருதுளாவிற்க்கு அப்போது தான் மூச்சே வந்தது போல் இருந்தது.
“கழுதை…..முகமே ரத்தபசை இல்லாம போச்சு…..ஏன் கண்ணு இப்படி இருக்க…இந்தா இந்த தண்ணிய கூடி….”என்று கூற மறுக்காமல் வாங்கி குடித்தவள் முகம் சற்று தெளிய,
“ஆங் இப்ப தான் உன் முகமே கொஞ்சம் தெளிஞ்சிருக்கு….ப்பா கொஞ்ச நேரத்துல என்னைய பயமுறித்திட்ட…..”என்று தன் நெஞ்சில் கை வைத்து நீவிக் கொண்டார்.அவரும் பாரத்துக் கொண்டு தானே இருக்கிறார் கொஞ்ச நாளாக அவள் படும் அவஸ்தைகளை என்ன தான் பரிதியின் மீது கோபம் போல காட்டிக் கொண்டாலும் எங்கு சென்றிருப்பானோ என்று ஒரு மனம் அவனுக்காக பரிதவிக்க தான் செய்கிறது.
“சொல்லுங்கமா….”என்று மிருதுளாவின் குரலில் நிகழ்வுக்கு வந்தவர்,
“ஆங்….கண்ணு…நான் உனக்கு நல்லது தான் செய்யுவேன்னு நம்புற தான….”என்று மீண்டும் கேட்க,
“நான் என்ன செய்யனும் சொல்லுங்க….”என்று கேட்க,
“ஆங்….இது என் கண்ணு….இப்ப பேசின பார்த்தியா இது மாதிரி முன்னாடியே கேட்டிருந்தா நான் ஏன் பயப்பட போறேன்……நம்ம திவி கண்ணு வேலைக்கு போகுதுல்ல மளிகை கடை அங்க உனக்கு வேலைக்கு கேட்க சொல்லிருக்கேன்….நீ போறியா….”என்றவர் மிருதுளா ஏதோ கூற வரும் முன் தடுத்து,
“இரு கண்ணு நான் முழுசா பேசிடுறேன் அதுக்கு அப்புறம் நீ உன் முடிவ சொல்லு…..அந்த பய எங்க போய் தொலைஞ்சான்னு தெரியலை….நீ இப்படியே இருந்தா உனக்கு நல்லதுக்கு இல்ல….அதோட அவன் இருந்த வரைக்கும் வாடகை கொடுத்துடுவான்…இப்ப உனக்கு நான் கொடுக்குற பணம் உன்னோட செலவுக்கே போயிடும்….அதனால தான் நான் திவி கிட்ட கேட்டேன்……நீ என்னயை தப்பா நினைக்காத என்னடா இவ பணத்துக்காக இப்படி சொல்லுறானு…..என்னோட பொழப்பும் அந்த பணத்தை நம்பி தான் ஓடுது……நீ தப்பா நினைக்கல தான…..”என்று தயங்கி தயங்கி சொல்லி முடிக்க,மிருதுளா அவரை கட்டிக் கொண்டவள்,
“ம்மா…நீங்க எப்போதும் எனக்கு நல்லது தான் செய்வீங்க…..நான் வேலைக்கு போறேன்….நீங்க சொல்லுறது சரி தான் நான் இப்படி வீட்டுலேயே இருந்தா பைத்தியம் ஆகிடுவேன்….அதனால நான் போறேன்மா….”என்று கூற பரிமளத்திற்கு இப்போது தான் மனது நிம்மதியானது எங்கே மிருதுளா தன்னை தவறாக எண்ணிவிடுவாளோ என்று நினைத்திருந்தவர் அவள் தன்னை புரிந்து கொண்டதில் அத்தனை நிம்மதி.
பரிமளம் கூறியபடி மிருதுளாவும் திவ்யாவுடன் வேலைக்கு செல்ல தொடங்கினாள்.காலை வேலைக்கு சென்றால் இரவாகும் வீடு வர.வீடு வந்தால் ஏதாவது சமைத்து உண்டுவிட்டு படுக்கையில் விழுந்தால் பரிதியின் முகம் தான் கண் முன்னே வரும்.அவன் ஏதோ பிரச்சனையில் மாட்டியுள்ளான் என்று மிருதுளாவின் மனது அடித்து கூறியதே தவிர அவன் தன்னை விட்டு சென்றிருப்பான் என்ற எண்ணமெல்லாம் இல்லை அத்தனை நம்பிக்கை அவனின் மீது.அதனால் அவனின் வருகைக்கு தினமும் காத்து கொண்டு இருக்கிறாள்.மிருதுளாவின் இந்த நம்பிக்கையை பரிதி காப்பாற்றுவானா.
error: Content is protected !!