Skip to content
Post Views: 3,260
கற்பனை 13
மறுநாள் காலையில் ஜான்வியும் சாகேத்தும் கிளம்பி கீழே வந்தார்கள். ஜான்வி சொல்லிவிட்டாள் ,இன்னும் ஒரு வாரம் தான் அலுவலகத்திற்கு விடுப்பு என்று. சாகேத்துக்கு அவ்வளவு நாட்களுக்கு விடுப்பு எதற்கு என்ற எண்ணம் தான். பொங்கல் முடிந்து பத்து நாட்களில் இவர்களது திருமணம் ஏற்கனவே இருவரும் இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்தும் விட்டார்கள்.
Advertisement
ராஜம் – துரை இருவருமாக மகனும் மருமகளும் கிளம்புவதற்கு முன்னால் முடிக்க வேண்டுய பிரார்த்தனைகளை பட்டியலிட்டாள் . சாகேத் மனதுக்குள் தன் திருமணம் பற்றி அம்மா எவ்வளவு ஆசை வைத்திருந்திருக்கிறாள் என்றுத் தோன்றியது. அதற்காகவாவது இந்த திருமணத்தை சரியாக கொண்டு செல்ல வேண்டும் என்று மனதுக்குள் முடிவு செய்துக்கொண்டான்.
அன்று மறுவீடு சென்று வந்தார்கள் மணமக்கள் இருவரும்.. மறுநாள் குல தெய்வ வழிபாட்டுக்கு என்று செல்ல ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினார்கள் ராஜம் தம்பதிகள். இவர்களது பூர்வீகம் கேரளம்.குல தெய்வ கோவிலும் அங்கே தான். மூன்று தலைமுறைகளுக்கு முன்பே தமிழகம் வந்து விட்டாலும் வருஷம் ஒருமுறை அங்கே சென்று வருவதை வழக்கமாக கொண்டிருக்கும் குடும்பம்.
Advertisement
Advertisement
துரை தங்களது இன்னோவாவிலேயே சென்று வரலாம் என்று சொல்லிவிட்டார். அதனால் ட்ரெயின் டிக்கெட் எடுக்கும் வேலை இல்லை. மறுவீடு சென்றவர்கள் அன்று மாலையில் திரும்பிவிட்டார்கள். ஜான்வி ஏற்கனவே கோவிலில் கட்டிக்கொள்ளவென்று கூரை சேலையையும் ,தேவையான மற்றவர்களையும் தனியே பேக் செய்து வைத்துவிட்டதால் அவளுக்கு பெரியதாக ஒன்றும் வேலையில்லை.சாகேத் மாடியில் சென்று தனக்குத் தேவையானவற்றை எடுத்து வைத்துக்கொண்டான்.
ஜான்வி தொலைக்காட்சியில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு கவனம் முழுவதும் சாகேத்திடம் தான் இருந்தது. காலையிலிருந்து கொஞ்சமாய் சிரித்தாலும் மலர்ச்சியுடன் இருக்கும் அவன் முகம் அவளை இம்சித்தது. பூனை நடை நடந்து மெல்ல படிகளில் காலை வைத்தவளை ராஜம் தனது அறையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தாள். ராஜத்தின் முகத்தில் சந்தோஷம் கூடியது.
Advertisement
ராஜத்தின் மனதில் சாகேத் இந்த திருமணம் வேண்டாம் ,நிறுத்தி விடலாம் என்று சொன்னதும், இன்றுக் காலையிலிருந்து மகன் முகம் புன்னகை பூத்திருப்பதும் தோன்றி மறைய இருவருக்குள்ளும் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டார்.
மேலே மெதுவே தங்களரைக்கு வந்த ஜான்வி சூட்கேசில் தனது உடைகளை அடுக்கிக்கொண்டிருந்த சாகேத்தை பின்னாலிருந்து அணைத்தாள். ஒரு கணம் உடல் விறைத்தவன் சட்டென சூழ்நிலையை புரிந்து கொண்டவனாக நிதானமாக அவளது கரங்களைப் பிடித்துக்கொண்டு அவள் புறமாகத் திரும்பினான் அவளது கண்களில் அவனுக்கான ஏக்கம் தெரிய அவளிடம் புன்னகை புரிந்தவன்,”நாளைக்கு நாம கோவிலுக்குப் போகணும். திரும்ப வர மூணுநாள் ஆகும்.போயிட்டு வந்து வாழ்க்கையை தொடங்கலாமா?”கிசுகிசுப்பாய் அவள் காதுமடல்களில் குறுகுறுப்பாய் ஒலித்த அவனது குரலை அவளால் மறுக்க முடியவில்லை.
மெதுவே தலையை ஆட்டியவள் அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள். அவளுடன் மௌனமாய் சிறிது நேரம் நின்றிருந்தவனுக்கு மனதின் ஓரத்தில் லேசான வலி. இனி,இவளுடன்தான் என் வாழ்க்கை என்று அவன் உள்மனம் மீண்டும் ஒருமுறை சொல்லிக்கொண்டது.
கோவிலுக்கு சென்று திரும்பியபிறகு தனது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்.அதை இனிமையானதாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்றும் முடிவு செய்துக்கொண்டான். அந்த மூன்று நாட்களும் வெளியே சென்று வந்தது இருவருக்குள்ளும் கொஞ்சமே கொஞ்சமாய் நெருக்கத்தைக் கொண்டுவந்ததும் நிஜம்.
மூன்று நாட்கள் நிமிஷங்களாய் கரைந்து போனது.
துரையின் குடும்பம் மீண்டும் சென்னை வந்து சேர்ந்து விட்டார்கள்.
இதோ நாளை மறுநாள் காலையிலேயே சாக்கேத் தனது புது மனைவியுடன் பெங்களூருவுக்கு கிளம்பிவிடுவான். திங்களன்று இருவரும் வேலைக்கு கிளம்பியாக வேண்டும்.
ராஜம் துரை மனதில் திரும்பவும் பாரம் ஏறிக் கொண்டது.
மகனை விட்டு எவ்வளவு காலம் இப்படியே இருக்க முடியும்?
‘சில வருஷங்கள் தனியாக இருந்து வேலை பார்க்கட்டும். எங்கே போய்ட போறான்.. எப்படியும் திரும்ப வருவான். ‘என்ற தைரியம் சமீப காலமாக அவர்களை விட்டு சென்றுக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே அங்கே வீடு வாங்கியபொழுது இனி இங்கு தானா.. என்று அவர்களுக்குத் தோன்றாமல் இல்லை. இப்போது சாக்கேத் சென்னை வருவது பற்றி பேசத் தொடங்கும் பொழுதே. ஜான்வி உஷாராக ” எனக்கு இங்கே சென்னையை விட பெங்களூரு தான் ரொம்ப புடிச்சிருக்கு. பாக்குற மாப்பிள்ளை வேற இடமா இருந்தா என்ன பண்ணுறதுன்னு ரொம்பவே பயந்தேன்.
நல்லவேளை, சாகி அங்கேயே வேலை செய்யுறான். அதோட அங்க ட்ரிபிள் பெட்ரும் பிளாட் வேற வாங்கிட்டான். அம் லக்கி.
அத்தே – மாமா நீங்க கூட நேரம் கிடைக்கும் பொழுது அங்கே வந்து டு த்ரீ டேஸ் தங்கிட்டு வாங்க ” என்றாள்.
அவளது வார்த்தைகள் சொன்னது,’இனி நீங்க ரெண்டுபேரும் எங்களுக்கு வெறும் விருந்தாளிகள் மட்டும் தான். விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் தான் ” என்று.
ஜான்வி பேசும் பொழுது சாக்கேத் கொஞ்சம் வேலைகள் இருக்கிறதேன வெளியே சென்றிருந்தான். அந்த தைரியம் தான் அவளை அப்படி பேச வைத்தது.
இல்லாவிட்டாலும் அவள் பயப்படும் ரகம் இல்லை.
மாமியார் மாமனார் அங்கே வரும் சமயத்தில் சொல்லி இருக்கக் கூடும்.
தன் பெற்றவர்களிடமும், “உன்னே அங்கே மாப்பிள்ளை வீட்டுல கொண்டுவிட நாங்களும் வரோம் ” என்றவர்களிடம்,
” உங்களை விட உங்க மாப்பிள்ளையையும், பெங்களூருவையும் எனக்கு நல்லாவே தெரியும். ஸோ.. நானே பார்த்துக்கிறேனே..ப்ளீஸ்.. ” என்று முடித்து விட்டாள்.
அவள் சொன்ன விதம்,
” எனக்கு திருமணம் ஆகி விட்டது. உங்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை. இனி, என் வாழ்க்கையை நானே பார்த்துக் கொள்வேன் ” என்ற செய்தி ஒளிந்து இருக்க அவர்களும் ஒதுங்கிக் கொண்டார்கள்.
ஜான்வி காதல் திருமணம் செய்து கொள்ளாமல் தாங்கள் பார்த்த வரனை திருமணம் செய்து கொண்டதே அவர்களுக்கு பெரியதாகப்பட்டது.
ஆகக் கூடி சாக்கேத்தின் காதுகளில் எட்டாத படிக்கு, தனது பெற்றோரையும், புகுந்த வீட்டினரையும் ஆரம்பத்திலேயே ஒதுக்கி வைக்கும் திறமை அவளுக்கு நிச்சயம் இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
வீட்டில் பெரியவர்கள் யாராவது இருந்தால் அவளது சுதந்திரத்திற்கு பெரிய தடையாக இருக்கும். கணவனும் மனைவியாக இருக்கும் இடத்தில், இருவருமாக வேலைகளை பகிர்ந்து செய்து விடுவார்கள். அத்துடன் இவள் எந்த நேரத்திற்கு வந்தாலும், சாக்கேத் அதிகம் குடைந்தெடுக்கும் ரகம் அல்ல.
வார இறுதி நாட்களில் கண்டிப்பாக பப்புக்கு சென்றாக வேண்டும். சாக்கேத் உடன் வந்தால் சரி. இல்லாவிட்டாலும் அவளை கேள்வி கேட்காமல் இருந்தாலே போதும். அவன் தன்னுடன் வரவேண்டும் என்றெல்லாம் அவள் எதிர்பார்க்கவில்லை.
வீட்டில் யாராவது பெரியவர்கள் இருந்தால் ஏதாவது கேள்வி கேட்பார்கள் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும். இஷ்டப்படி இருக்க முடியாது. பெரியவர்கள் தன் வீட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி.. கணவன் வவீட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி.. மொத்தத்தில் இவளது சுதந்திரம் பறிபோய் விடக்கூடும்.
இப்படியெல்லாம் யோசித்து தான் அவள் இருபக்க உறவுகளையும் ஆரம்பத்திலேயே தூரத்தில் நிறுத்தி வைத்தாள்.
அவள் மனதில் அவளையும் அறியாமல் வினிதனின் முகம் வந்து சென்றது.
” இப்போது அவன் என்ன செய்து கொண்டிருக்க கூடும்? என்னை நினைப்பானா? என் கழுத்தில் தாலி ஏறும் போது அவன் முகம் சுணங்கியதே.. என்ன காரணமாக இருக்கக் கூடும்? என்றெல்லாம் யோசிக்க தொடங்கி விட்டாள்.
அவர்கள் இருவருமாக கழித்த நாட்கள் அவள் முகத்தில் புன்னகையை கூட அரும்பச் செய்தது.
சில சமயங்களில் தேவையில்லாத நபர்களை தேவையில்லாத நேரத்தில் யோசிக்கும்போது வாழ்க்கையின் பாதையை மாற்றிவிடக்கூடும். அதையெல்லாம் உணரும் நிலையில் ஜானவி கண்டிப்பாக இல்லை.
திருமணத்திற்கு முன்பு எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருந்தாலும் கூட, திருமண பந்தத்திற்குள் நுழைந்த பிறகு ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தன் துணைக்கு நேர்மையாக இருப்பது முக்கியமல்லவா?
சாக்கேத் தனது ஒரு தலைக்காதலை மறந்துவிட்டு மனைவியுடன் குடும்பம் நடத்த மனதளவில் தயாராகி விட்டான். ஜான்வியுடனான திருமணத்தில் அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. நிஜ திருமணம் தான். அந்த திருமணத்திற்கு உண்டான மரியாதையை கொடுப்பதற்கும் மனைவியின் குறைகளையும் நிறைகளையும் அப்படியே ஏற்றுக் கொண்டு திருமண உறவை நிலைத்து நிற்க செய்வதற்கும் அவன் மனம் என்றோ தீர்மானம் செய்து விட்டது. இருவருக்கும் இனி எப்படி போகப்போகிறது என்று பார்க்க வேண்டும்.
துரையும் ராஜமும் கூட தங்கள் மகனின் திருமண வாழ்வு சந்தோஷமாக இருப்பதற்காகவே, தாங்கள் எட்டி நிற்க முடிவு செய்தாயிற்று.
ஒருவேளை இதுதான் பாதை,இதுதான் பயணமோ!
திருமகள் அம்மா வீட்டில் இருந்து கிளம்பி வந்தவள் வேகமாக கணவன் வீட்டுக்குள் நுழைந்தாள். ஹாலிலேயே நிவாஸ் யாருடனோ மெதுவாக பேசிக் கொண்டிருக்கும் குரல் கேட்டது. வந்திருந்தவர் அட்வகேட் தான்.
இருவரும் திருமகளுடைய விசா பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.
மனைவியை கண்ட நிவாஸ்” வா திரு.. இன்னும் ட்வேன்ட்டி டேஸ் ல உனக்கு விசா கிடைச்சுடும். முதல்ல நான் மட்டும் தனியா போறதா இருந்த பிளான் கேன்சல் நாம ரெண்டு பேரும் சேர்ந்து தான் யூஸ் போறோம். ஆர் யூ ஹேப்பி நவ் ” என்றான்.
திருமணமான புதிதிலேயே கணவன் மீது ஒரு பயம் உண்டாகி விட்ட காரணத்தினாலோ என்னவோ அவனுடன் தனியாக யூ எஸ் சென்று குடும்பம் பண்ண வேண்டும் என்ற எண்ணமே அவளுக்கு அவளுக்கு நடுக்கத்தை அதிகரிக்க போதுமானதாக இருந்தது. இதில் இரண்டு நாட்களுக்கு முன்பாக நடந்த கூடல் வேறு தன் கணவனின் இன்னொரு முகத்தை காட்டி இருக்கிறதோ என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, அமெரிக்காவே சென்றுவிடலாம்., என்று சொன்னதும் வேப்பங்காயாக கசந்தது.
இதுவே ஒரு ஆறு மாதத்திற்கு முன்பு என்றால் குதித்துக் கொண்டு இருந்திருப்பாள். இப்போது அவள் மனம் முழுவதும் இருப்பது வெறும் குழப்பம் மட்டும்தான்.
தன் பிறந்த வீட்டிற்கு வாய்விட்டு சொல்லி தன் எண்ணங்களைப் பற்றி கேட்பதற்காக தான் சென்றாள். தேவையில்லாத ஈகோவினால் திரும்ப வந்துவிட்டாள்.
‘இப்போது நான் வரமாட்டேன்‘ என்று எப்படி நிவாசிடம் சொல்ல முடியும்?
மனைவி தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் பிறந்த வீட்டிற்கு சென்று விட்டது நிவாஸின் ஆண் என்ற எண்ணத்திற்கு மனைவியால் கொடுக்கப் பட்ட அடியாகவே நிவாஸ் நினைத்தான்.
அவளை இந்தியாவில் விட்டுச்செல்ல அவன் தயாராக இல்லை. அப்படி தனியாக தான் மட்டும் சென்றால் மனைவி அங்கே வருவது பற்றி யோசிக்கக் கூடும் என்று எண்ணித்தான் அவன் தன் டிக்கெட்டை கன்செல் செய்தான்.
முதல் நாளே ‘ நாளை வருகிறேன் ‘எண்டு திரு தன் மாமியாருக்கு தகவல் சொல்லிவிட்டுட்டிருந்தாள். அவள் வரும் நேரம் கணக்கிட்டு தான் அட்வக்கேட்டை அவன் வரச் சொல்லி இருந்தான்.
இதையெல்லாம் புரிந்துகொள்ளும் சூட்சுமம் திருவுக்கு இல்லை. அவள் மனதில் ஒருபுறம் எப்படியும் சமாளித்துக்கொள்ளலாம் என்று சொன்னாலும், உடல் ரீதியாக அவள் கஷ்டப்பட்டது இல்லை என்று சொல்ல முடியாது. சந்தோஷமாக இருக்கவேண்டிய முதல் அனுபவம் அவளைப் பொறுத்தவரை கடுமையான நிகழ்வு.அதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?
“செத்து விட மாட்டாளா“..
அவளது எண்ணப் போக்கை புரிந்துகொண்டவனாக,அவளை தோளுடன் அணைத்து அமர்ந்து கொண்டான் நிவாஸ். அவன் கண்கள் அவளிடம் மன்னிப்பைக் கேட்டது.
error: Content is protected !!