Skip to content
Post Views: 7,639
இரும்பில் ஓர் இதயம்…..23
மகேஸ்வரன் தான் பரிதியை பிடித்து கையெழுத்து போட சொல்லி அதை வாங்கி அங்கிருந்த நர்ஸிடம் கொடுத்தான்.
“சார் பணத்தை சீக்கிரம் கட்டுங்க….”என்றுவிட்டு அந்த நர்ஸ் சொல்லிவிட்டு செல்லவும் தான் பரிதிக்கு புத்தியில் உரைத்தது தான் இன்னும் பணம் கட்டவில்லை என்று அவன் தன் சட்டை பையில் தடவிக் கொண்டிருக்கும் போதே திவ்யா,
“மேடம் நான் வரேன் எங்க கட்டனும்….”என்றவள் அவருடன் சென்றுவிட்டாள்.அவளுடன் மகேஸ்வரனும் சென்றவன்,
Advertisement
“ஏய்….உனக்கு அறிவு இருக்கா….இப்படி தான் அவங்களை விட்டுட்டு போவியா….”என்று கோபமாக கேட்க,அவனை முறைத்தவள்,
“இதை நீங்க திருட்டு வேலை செஞ்சப்பவே யோசிச்சிருக்கனும்….தள்ளுங்க…பணம் கட்டனும்….”
“இரு என்கிட்ட இருக்கு….நானும் அதுக்கு தான் வந்தேன்….”என்றுவிட்டு அவளுக்கு முன் பணத்தை கட்டினான்.அதற்கும் திவி முறைக்க,
Advertisement
“சரிடீ….இனி அவங்களுக்கு தேவையானது வேற ஏதாவது வாங்கி கொடு…”என்று கூற அவள் எதுவும் கூறாமல் நகர,அவளின் கையை பிடித்து நிறுத்தியவன்,
Advertisement
“ஏய் அவன் பாவம்டீ எதுவுமே தெரியலை….நீ ஏன் இப்படி செஞ்ச…”என்று கேட்க,
“நீங்க இரண்டு பேரும் உங்களை மட்டும் தான் யோசிச்சீங்க….உங்களை சார்ந்தவங்க நீங்க பண்ண காரியத்தால எவ்வளவு பாதிக்கப்படுவாங்கனு யோசிக்கல…அதோட விளைவு தான் இது….எனக்கு அம்மா எவ்வளவு பிடிக்குமோ அதே அளவு அண்ணனையும் பிடிக்கும் ஆனா….”என்றவள் கலங்கி நிற்க,மகேஸ்வரனுக்குமே அவர்களின் தவறின் வீரியம் புரிந்தது.
“ஏய் சாரிடீ….நாங்க ஒண்ணு நினைச்சோம்…..ஆனா அது இப்படி கொண்டுவிடும்னு நினைக்கல….”என்று வருந்தி கூற,
Advertisement
“சரி விடுங்க….முதல்ல மிருதுவை பார்ப்போம்….”என்றுவிட்டு இருவரும் மிருதுளா இருக்கும் இடத்திற்கு செல்ல,அங்கு நாயகியும்,வைரமும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.
“ம்மா…மிருதுவை பார்க்கவிட்டாங்களா….”என்று திவ்யா கேட்க,நாயகி இல்லை என்று தலையாட்டினார்.அவருக்கு தான் தவறு செய்துவிட்டோம் குற்றவுணர்வு.அதுவும் பரிதியை காண காண அந்த குற்றவுணர்வு அதிகாமாகியது.மகேஸ்வரனின் அருகே வந்த வைரம்,
“டேய் கண்ணா….நீ அந்த பையன் பக்கத்துல இரு….பாரு எப்படி இடிஞ்சி போய் இருக்கான்னு….போ….”என்று கூற அவன் சரி என்று பரிதியிடம் சென்று அவனின் கைகளை பற்றிக் கொண்டு,
“டேய் ஒண்ணுமாகாது….பயப்படாத….”என்று கூற,பரிதி மகேஸ்வரனை கண்கள் கலங்க பார்த்தான்.இதுவரை பரிதியை அவ்வாறு பார்க்காத மகேஸ்வரனுக்கு மனது ஏதோ செய்தது.ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் பரிதியின் கையில் இறுக்கத்தை கூட்டியவன் வேறு எதுவும் பேசவில்லை.சிறிது நேரத்தில் மிருதுளாவை ஆப்ரேஷன் தேட்டருக்குள் அழைத்து செல்ல,பரிதி தான் அவளைக் காணவே பயந்து நடுங்கினான்.
கண்கள் இரண்டும் வீங்கி முகம் ரத்த பசையின்றி அவள் படுத்திருக்க,அதை பார்த்தவன் கண்கள் மங்க தொடங்கியது பக்கத்தில் இருந்த மகேஸ்வரனின் சட்டையை பிடித்தபடி அவனின் மீது மயங்கி விழுந்தான்.மிருதுளா அரை மயக்கத்தில் இருந்ததால் அவளிற்கு எதுவும் தெரியவில்லை.பரிதி மயங்கி சரியவும் அனைவருமே பயந்து தான் விட்டனர்.திவ்யாவிற்கும்,நாயகிக்கும் தான் மனது அத்தனை குற்றவுணர்வாகி போனது.
வைரத்திற்கு பரிதியை பற்றி கணவர் கூறி ஒரளவிற்கு தெரியும் தான் ஆனால் இன்று அவனை இப்படி உடைந்து போய் பார்க்க மனதிற்கு கஷ்டமாக இருந்தது.அதோடு அவர் இன்னொன்றையும் கண்டார் தன் மகன் பரிதியிடம் காட்டும் பாசம் அது இதுவரை அவன் யாரிடமும் இப்படி இருந்ததில்லை.கணவர் கூறியது போல இந்த பையன் என் மகனை ஏதோ செய்து தான் விட்டான் என்று நினைத்தாலும் மனதிற்குள் இவர்களின் நட்பு பிடிக்கத்தான் செய்தது.எதையும் நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது நேர்மறையாக நினைத்தால் அனைத்தும் நல்லதாகவே தெரியும் மாணிக்கம் தவறியதை வைரம் சரியாக்கினார்.ஆம் அவர் பரிதியை நல்லமுறையில் தான் நினைத்தார்.அவனின் மீது தவறு உள்ளது தான் இருந்தாலும் அதையும் மீறி ஏதோ ஒரு நல்லெண்ணமும் அவனின் மீது உருவானது உண்மை.
பிரசவறையின் முன் அனைவருமே பயத்துடன் காத்துக் கொண்டிருந்தனர்.பரிதியை மகேஸ்வரன் தான் தேற்றி தெளிய வைத்து அமர வைத்திருந்தான்.எப்போதும் உரிமையாக அவனிடம் உறவாடும் திவ்யா தள்ளி நின்று வேடிக்கை தான் பார்த்தாள்.நாயகிக்கு அத்தனை கஷ்டமாகி போனது இந்த நேரத்தில் மிருதுளாவை தனியாக விட்டு வந்திருக்க கூடாது என்று காலம் கடந்து உணர்ந்தார்.
சில மணிநேர போராட்டத்திற்கு பிறகு பரிதியின் மகன் இந்த பூவுலகிற்கு வந்தான்.மருத்துவர்கள் குழந்தையை எடுத்து வந்து அவனிடம் கொடுக்க,நடுங்கும் கரங்களால் வாங்கினான்.அவனின் ஒரு பக்கம் மகேஸ்வரனும்,மற்றொரு பக்கம் திவ்யாவும் அவனையும் குழந்தையும் தாங்கிய படி இருந்தனர்.மூவரின் கண்களும் குழந்தையின் மீது தான் குட்டி கை,கால்கள் ஒற்றை கரத்தால் முகத்தை மூடியபடி தூங்கிக் கொண்டிருக்க,
“டேய் என்னை மாதிரியே இருக்கான்டா….நான் இப்படி தான் தூங்குவேன்….”என்று தன் நண்பனிடம் கண்களில் நீர் மல்க கூற,மகேஸ்வரனுக்கு இதெல்லாம் புது அனுபவம் அந்த பிஞ்சு மலரை காண காண தெவிட்டவில்லை அவனிற்கு,
“ம்மா…இங்க பாரும்மா….ரொம்ப குட்டியா இருக்கான்ம்மா….”என்று பூரித்து கூற வைரத்திற்கு இந்த மகன் புதிது,மகிழ்ச்சியோ,துக்கமோ எதையும் அத்தனை எளிதில் காட்டமாட்டான் ஆனால் இன்று இப்போது இருப்பவன் முற்றிலும் வேறாக தெரிந்தான்.அவரும் மகனின் பேச்சிற்கு உம் கொட்டியபடி குழந்தையை தான் பார்த்தபடி இருந்தார்.இதில் எதிலும் படாமல் தூரமாக குழந்தையை ஏக்கத்துடன் நாயகி பார்த்துக் கொண்டிருந்தார்.அவரால் அத்தனை எளிதில் நெருங்க முடியவில்லை அதற்கு அவரின் மனசாட்சியும் அவரை விடவில்லை தான் சுயநலமாக இருந்துவிட்டோம் என்று கூறி அவரை தள்ளி நிறுத்தியது.
“கொடு என் மருமகனை….அத்தைகிட்ட வாடா குட்டி….”என்று பரிதியின் கைகளில் இருந்து திவ்யா அவனை வாங்கி கொள்ள முயல,பரிதியோ குழந்தையை இறுக்கமாக பிடித்திருந்தான்.
“கொடு…கொடுண்ணா….”என்று திவ்யா கேட்டும் அவனிடம் பதில் இல்லை.திவ்யாவிற்கு என்னவோ போல் ஆனது.பழைய திவ்யாவாக இருந்தால் எதையும் நினைக்கமாட்டாள் ஆனால் இப்போது அவளின் பக்கமும் தவறு இருக்கிறதே அதனால் தான் பரிதி குழந்தையை தரவில்லை என்று அவனிடம் இருந்து நகர பார்க்க அவளாள் நகரமுடியவில்லை அவளை நகரவிடாமல் பின் பக்கமாக அவளின் உடையை இழுத்து பிடித்தபடி இருந்தான் மகேஸ்வரன்.
திவ்யா விழியுர்த்தி அவனை பார்க்க அவனும் கண்கள் கலங்க போகாதே என்று கூற,திவி என்ன நினைத்தாளோ பரிதியின் பக்கத்தில் நின்று கொண்டாள்.பரிதி எதையும் உணரும் நிலையில் இல்லை இதோ தனக்கே தனக்கென்று வாழ்வில் முதன் முறை கடவுள் கொடுத்த பரிசு.அவன் மகனின் முகத்தையே பார்த்தான் பார்த்தான் பார்த்துக் கொண்டே இருந்தான்.இது எந்த வகை உணர்வு என்று அவனால் கூற முடியவில்லை ஆனால் பிடித்திருந்தது.முதல் முறையாக தன் தனிமையை போக்க வந்தவன்.மிருதுளா அவன் வாழ்வில் வந்த வசந்தம் என்றால் மகன் அவன் வாழ்வின் வரம்.
நெடுநேரம் பரிதி குழந்தை பார்த்தவண்ணம் இருந்தவன் பின் திடீர் என்று,
“சண்டகாரி….”என்று கத்த அனைவரும் ஏதோ மோன நிலையில் இருந்து விடுபட்ட மாதிரி முழித்து நின்றனர்.பரிதி சுற்றிமுற்றி மிருதுளாவை தேடி பார்த்துவிட்டு பின் திவ்யாவிடம்,
“ஏய் குட்டி பிசாசு…..என்ன பார்க்குற….நீ தான் உன் மருமகனை முதல்ல வாங்குவனு சொன்ன….இந்தா….”என்று நீட்டி பின் இழுத்தவன்,
“ஏய் ஒழுங்கா வச்சிக்க தெரியுமா….”என்று கேட்க அவன் முன் கையை ஆசையாக நீட்டியபடி நின்ற திவ்யா முறைக்க,
“ஓவரா பேசாத ராசா….அடிச்சிருவேன்….கொடு பிள்ளையை….”என்றவள் அவனிடம் இருந்து வாங்க முற்பட,
“போடி குட்டி பிசாசு….”என்று அவளை ஒற்றை கையால் தள்ளிவிட்டு நாயகியிடம் வந்து அவரிடம் குழந்தையை நீட்டி,
“முதல்ல நீங்க தான்….அப்புறம் தான் இந்த குட்டி பிசாசு…”என்று அவரிடம் நீட்ட,அதுவரை குற்றவுணர்வில் ஒதுங்கியிருந்தவர் முற்றிலுமாக உடைந்துவிட்டார்.
“என்ன….ஏய் குட்டி பிசாசு….என்னனு பாருடீ….”என்று பரிதி பதற,
“ம்மா…வாங்கும்மா….நம்ம குட்டிமா….வாங்கு….”என்று அவரை எழுப்பி தாங்கி அவரிடம் குழந்தையை வாங்க சொல்ல,வாங்கி கொண்டவருக்கு அத்தனை நிம்மதி.
“என்னை மன்னிச்சிடுப்பா….நான்….நான் தப்பு பண்ணிட்டேன்….”என்று கண்ணீர் விட பரிதிக்கு ஒன்றும் புரியவில்லை,
“முதல்ல குழந்தையை பாருங்க…நான் அவளை பார்த்துட்டு வரேன்….டேய் என்கூட வாயேன்….”என்று மகேஸ்வரனை அழைத்துக் கொண்டு சென்றான்.இருவரும் தனியாக வந்ததும் பரிதி மகேஸ்வரனிடம்,
“டேய்….எனக்கு கொஞ்சம் பணம் தேவைடா…”என்று கேட்க,தன் சட்டையில் இருந்த பணத்தை எடுத்து அவனின் சட்டை பையில் வைத்த மகேஸ்வரன்,
“முதல்ல தங்கச்சியை பாரு….அப்புறம் இதெல்லாம் பார்த்துக்கலாம்….”என்றுவிட்டு சென்றான்.உள்ளம் நெகிழ்ந்து போனது பரிதிக்கு நல்ல நட்பு கிடைப்பதெல்லாம் வரம் அது அவனிற்கு கிடைத்திருக்கிறது.பரிதி தயக்கத்துடன் தான் மிருதுளா இருக்கும் அறைக்கு சென்றான்.அவனுக்கு ஏனோ இப்போது அவளை எப்படி எதிர் கொள்ள என்று தெரியவில்லை.
முன்பு கோபம் தான் தன்னை புரிந்து கொள்ளாமல் இருக்கிறாளே என்று ஆனால் இன்று அவள் பட்ட கஷ்டங்களை நேரிடையாக பார்த்த பின் அவனிற்கு பயம் எங்கே தன்னை தண்டித்துவிடுவாளோ என்று.அவளிற்காக மட்டுமே திருந்த முயற்சி எடுத்தான் ஆனால் சில மாதங்கள் கூட அவனால் தன் உறுதியில் நிலைக்க முடியவில்லை என்று ஏதேதோ நினைத்துக் கொண்டு அவளின் அறைக்குள் வந்துவிட்டான்.
படுக்கையில் ஓய்ந்து போய் படுத்திருந்தாள் மிருதுளா.உள்ளே நுழையும் போது இருந்த தயக்கம்,பயம் இப்போது இல்லை வேகமாக அவளிடம் நெருங்கி,அவளை ஆராய்ந்தவன் அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் பதிக்க,அதில் அவளின் உடலில் சிறிய அசைவு கண்களை முழிக்க முயன்று மீண்டும் மூடிக் கொள்ள,
“ஏய்…சண்டகாரி….ஏய்….நான் பேசுறது கேட்குதா…”என்ற பரிதியின் குரல் மிக மெல்லிதாக அவளிற்கு கேட்டது.
“ஏய்….பேசு….எப்போதும் வாய் ஓயாம பேசுவ….இப்ப என்ன….பேசமாட்டேங்குற….”என்றவனின் குரல் என்ன முயன்றும் உடைந்துவிட்டது.
“நா…நான் ஒண்ணும் அழலை….ஆனா எனக்கு அழுகை வருதுடீ….என்னால முடியலை….நீ இப்ப கொஞ்ச நேர முன்ன உன்னை….நீ அழுத பாரு….என்னால என்னையே கட்டுப்படுத்த முடியலைடீ….அம்மானு ஒருத்தவங்க இருந்தாங்க எனக்கு நினைவு தெரிஞ்சு என்னை நிலை நிறுத்தும் முன்னே அவங்க இறந்துட்டாங்க…அதுக்கு அப்புறம் நீ வந்த எனக்கு புதுசா ஒரு வாழ்வு கிடைச்சிது….ஆனாலும் என்னால உடனே எல்லாம் மாற முடியலைடீ….எனக்கு கோபம் நான் அவ்வளவு தூரம் சொல்லுறேன் கேட்காம இருக்காரு அந்த சார்னு கோபம் அதான் அப்படி மகேஸ்வரனை தூண்டிவிட்டேன்…..ஆனா அது இப்படி முடியும்னு எனக்கு தெரியாது….இதுவரைக்கும் நான் மாட்டுன போதெல்லாம் இப்படி வருந்தினது இல்ல….ஆனா இந்த முறை அழுதேன் தெரியுமா….உன்னால,அந்த குட்டிபிசாசால…..எல்லாரும் என்னை ஒதுக்கிட்டீங்கல்ல….நான் தப்பு தான் அதுக்கு என்னை ஒதுக்குவீங்கலா…..தனியா இருந்தப்ப கூட தனியா இருந்தேன் நினைச்சது இல்லை இப்ப கொஞ்ச நாளா எல்லாரும் கூட இருந்தும் தனியா இருக்குற மாதிரி இருக்கு….நான் என்ன பண்ணட்டும்….என்ன செஞ்சா எல்லாரும் என்கிட்ட பழைய மாதிரி இருப்பீங்க….”என்று சிறு குழந்தை போல தேம்ப,
“இனி எந்த காரணத்தைக் கொண்டும் நீங்க திருடக்கூடாது….எனக்கு சத்தியம் பண்ணுங்க….இதை நீங்க மீறுனீங்க….உங்க சண்டகாரி உங்களுக்கு இல்லை….”என்று மிருதுளா மிக மெல்லிதாக கண்களை திறந்து பேசிக் கொண்டே அவனிடம் தன் ஒற்றை கரத்தை நீட்ட,
“ஏய் சண்டகாரி கேட்டுக் கிட்டு தான் இருந்தியா….”
“ம்ம்….சத்தியம் பண்ணுங்க…”என்று கையை காட்ட,
“ம்ம்….பண்ணுறேன்….ஆனா என்கிட்ட பேசனும்,எனக்கு சாப்பாடு ஊட்டனும்,எனக்கு எல்லாம் நீ தான் பண்ணும்….”என்று கேட்க,மிருதுளா கண்களை திறந்து மூட,
“சொன்னா தான்….”
“திருட மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணு…..”என்று அழுத்தமாக கேட்க,
“திருட மாட்டேன் திருட மாட்டேன்….உன் மேல என் புள்ள மேல சத்தியம் போதுமா…இனி நீ என்ன சொன்னாலும் கேட்குறேன்….பேசாம மட்டும் இருக்காத…ஒரு மணிநேரமா என் உயிரே என்கிட்ட இல்லைடீ….பயந்துட்டேன்….”என்று அவளின் நெற்றியில் மீண்டும் இதழொற்ற,மிருதுளாவின் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்து.
“ஏய் சண்டகாரி என் பையன் என்ன மாதிரியே இருக்கான் தெரியுமா….ஒத்த கையால முகத்தை மூடி தூங்குறான்டீ….”என்று அவளிடம் குழந்தை பற்றி கூற மிருதுளாவின் வரண்ட இதழ்கள் லேசாக விரிந்தன.
“போதும் ராசா நீ பேசுனது….”என்றபடி வந்தாள் திவ்யா அவளின் கையில் குட்டி பரிதி கை,கால்களை அசைத்தபடி இருக்க,பரிதி வேகமாக மகனிடம் சென்று,
“குட்டி அசையுறான்….முழிச்சிட்டானா….”என்று கேட்டுக் கொண்டே வாங்க முற்பட,
“தம்பி தம்பி….பார்த்துப்பா….தலையை விடக் கூடாது….குழந்தைக்கு வலிக்கும்….”என்று நாயகி திவ்யாவிடம் இருந்து அவர் வாங்கி கொண்டவர்,
“சரி….சரி எல்லாரும் வெளியில இருங்க….புள்ளைக்கு பசிக்கும்….”என்று கூறிக் கொண்டே பிள்ளையை தாயிடம் கொண்டுவர,பரிதி எதையும் காதில் வாங்கியது போல தெரியவில்லை அவன் குழந்தை முழித்துவிட்டான என்று நாயகியுடன் வந்தவன்,குழந்தை கண்களை சிறிது முழிக்கவும்,
“சண்டகாரி…..முழிக்கிறான்டீ….அச்சோ குட்டி கண்ணா இருக்கு….என்னை தான் பார்க்குறான்….”என்று தன்னையும் மீறி சத்தமிட,தகப்பனின் குரலில் நன்றாக முழித்துக் கொண்ட குழந்தை கண்களை கசக்கி,உடலை குறுக்கி என்று ஏதேதோ செய்ய அவன் செய்யும் அனைத்தையும் அவனின் தகப்பனும் பக்கத்தில் செய்ய பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்குமே அந்த காட்சி கவிதை போல இருந்தது.மிருதுளா கணவனை ரசித்தபடி இருக்க நாயகியோ அவனின் அலப்பறைகளை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்.திவ்யா இது தான் சமயம் என்று பரிதியையும்,குழந்தையும் தனது கைபேசியில் வீடியோ எடுத்துக் கொண்டாள்.
“என்….என்கிட்ட கொடுங்க….”என்று அவன் நாயகியிடம் கையை நீட்ட,அவர் குழந்தை கொடுக்க,
“டேய் குட்டி பையா….இங்க பாரு….என்னை பாரு….நான் தான் உன் அப்பா….இதோ இவங்க என்று நாயகியை காட்டி இவங்க தான் உனக்கு பாட்டி….இதோ நிக்குறாளே குட்டி பிசாசு இவ தான் உனக்கு அத்தை….அப்புறம் இதோ இவ தான் வாயாடீ உன்னோட அம்மா….பாரு….”என்றவுடன் குழந்தை நன்கு கண்களை திறந்து பார்க்கவும் மேலும் பேசினான்,
“டேய் எனக்கு தான் யாரும் இல்லை…ஆனா உனக்கு இங்க எல்லாரும் இருக்காங்கடா….நீ எல்லார் கிட்டேயும் இருக்கலாம்…..”என்று கூற,கேட்ட அனைவருக்கும் மனது நெகிழ்ந்து போனது.அதுவும் நாயகிக்கு கொஞ்சம் இருந்த தயக்கமும் முற்றிலும் விலகியது அவனின் உரிமையான அழைப்பில்.
“இது அந்நியாம்….”என்று திடீர் என்று மகேஸ்வரன் குரல் பின்னிருந்து கேட்கவும்,பரிதி திரும்பி,
“என்னடா….”என்று கேட்க,
“பின்ன எல்லாரையும் சொன்ன என்னை விட்டுட்ட பாரு….”என்றவன் தானே முன் வந்து குழந்தையிடம்,
“டேய் குட்டி பையா…நான் தான் உனக்கு மாமா…..”என்று திவ்யாவை பார்த்தபடி கூற அவளிற்கு வெட்கம் வந்துவிட்டது.அதைக் கண்ட மகேஸ்வரன்,குழந்தையிடம் இன்னும் நெருங்கி,
“டேய் உன் அத்தைக்கு வெட்கம் எல்லாம் வருதுடா….”என்று கூற,
“போதும் உன் ரொமான்ஸ் எல்லாம் உங்க அம்மா நிக்குறாங்க….”என்று பரிதியின் குரலில் அவனை முறைத்தவன்,
“நீ எனக்கு எப்போதும் வில்லன் தான்டா….”என்று மெதுவாக கூறிவிட்டு,மிருதுளாவிடம் திரும்பி,
“உடம்பை பார்த்துக்கோமா….நான் வரேன்….”என்று கூற வைரமும் அவனின் பின்னே வந்தவர் மிருதுளாவிடம்,
“பார்த்துக்கம்மா…வரேன்….”என்றுவிட்டு கிளம்பினார்.இருவரும் விடை பெற்றதும் குழந்தை சிணுங்க தொடங்கினான்.நாயகி பரிதியின் கையில் இருந்து குழந்தை வாங்கியவர்,
“நீ போப்பா….குந்தைக்கு பசிக்கும் பால் கொடுக்கனும்….”என்று குழந்தையை பரிதியிடமிருந்து வாங்கியவர் மிருதுளாவின் அருகில் போட்டு அவளை மெல்ல எழுப்பி அமர வைத்து குழந்தையை அவளிடம் கொடுத்தார்.மற்ற இருவரும் வெளியில் வந்து நின்றனர்.பரிதிக்கு மனதில் அத்தனை நிம்மதி இன்று தான் மீண்டும் பிறந்தது போன்றதொரு புத்துணர்வு.அவன் திவ்யாவை பார்க்க அவளோ எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.
“குட்டி பிசாசு….”என்று அவளின் அருகே பரிதி அமர,அவனைக் கண்டு மெல்ல முறுவலிக்க முயன்று தோற்றவள்,
“சாரி அண்ணனா…நான் தப்பு பண்ணிட்டேன்….நான் மிருதுவை விட்டு போயிருக்க கூடாது…”என்று அழுதபடி கூற,அவளின் தலையை செல்லமாக ஆட்டியவன்,
“விடு என்கூட இருந்தாலும் அம்மா நிம்மதியா இருந்திருக்க மாட்டாங்க….”என்றவன்,
“ஏய் குட்டிக்கு என்னெல்லாம் வாங்கனும்….எனக்கு எதுவும் தெரியாது….”என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே நாயகி வெளி வந்தார்,அவரைக் கண்டவுடன் எழுந்த பரிதி அவரிடம் செல்ல,
“இரண்டு பேரும் தூங்குறாங்கப்பா….”என்று கூற,பரிதி சரி என்று தலையாட்டியவன் பின் மிக தயங்கி,
“அது…நீங்க கொஞ்சம் மிருதுளாவை பார்த்துக்க முடியுமா….எனக்கு ஒண்ணும் தெரியலை…அப்படி உங்களால முடியலைனா எப்படி பார்த்துக்கனும் என்கிட்ட சொல்லுங்க….நான் பார்த்துக்குறேன்….”என்று கேட்க நாயகி பரிதியிடம் பதில் கூறாமல்,
“திவி….நம்ம வீட்டை அடுத்த மாசம் காலி பண்ணிடுறோம்னு சொல்லிடு…..நான் என் பையன் வீட்ல தான் இருக்க போறேன்….அதுவரைக்கும் அங்கைக்கும் இங்கைக்கும் இருந்துக்கலாம்….”என்றுவிட்டு பரிதியிடம் திரும்பி,
“என் பேரனை நான் பார்க்காம வேறு யாரு பார்த்துப்பா……முதல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வாப்பா…எனக்கு பசிக்குது….பிள்ளை தூங்கும் போதே நாம நம்ம வேலை முடிச்சிடனும்….”என்று கூற திவ்யா அவரைக் கட்டிக் கொண்டு,
“அம்மானா….அம்மா தான்….”என்று நெகிழ்ந்து கூற
“இதுக்கு தான இவ்வளவு வேலை செஞ்ச….உன்னை உதைக்கனும்டீ….”என்று மகளை செல்லமாக அவர் கடிய,
“பின்ன நான் சொன்னா நீ புரிஞ்சிப்பியா சண்டை தான் போட்டிருப்ப அதான் இப்படி பண்ணேன் இப்ப நீயே சொல்லிட்ட பார்த்தியா….”என்றவள் பரிதியை தேட அவன் எப்போதோ சென்றிருந்தான்.
“என் பிள்ளைக்கு எல்லாதிலேயும் வேகம் தான்….நான் சொன்ன உடனே போயிட்டான்….”என்று சிரித்துக் கொண்டே கூறினார்.அவர்கள் வாழ்வில் சிறு வசந்தமென வந்த குழந்தையின் வரவு விரிசல் விட்ட உறவுகளை ஒட்ட வைத்துவிட்டது.
error: Content is protected !!