பரிதியின் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் கடந்திருந்தது.மிருதுளா இப்போது தான் தேறிவருகிறாள்.நாயகியும்,திவ்யாவும் கூடவே இருப்பதால் மிருதுளாவின் உடல் நிலையில் எந்த பாதிப்பும் இல்லை.பரிதி இப்போதெல்லாம் கேரேஜிற்கு செல்லவதில்லை.மிருதுளா தான் இனி அங்கு செல்ல வேண்டாம் என்றுவிட்டாள்.அதனால் பரிதி இப்போது வேறு வேலை தேடிக் கொண்டிருக்கிறான் அதுவும் மகேஸ்வரனிற்கு தெரியாமல்.
அன்று காலையும் அவன் வேலை தேட கிளம்பிக் கொண்டிருக்கும் போது மகேஸ்வரன் வேகமாக வந்து பரிதியின் முன் நிற்க,முதலில் பரிதிக்கு ஒன்றும் புரியவில்லை.அவன் தினமும் காலை நேரம் குழந்தையை வந்து பார்த்துவிட்டு செல்லுவான் தான் அப்படி தான் இன்றும் வந்திருக்கிறான் என்று பரிதி நினைத்திருக்க அவனோ,
“வேலை தேடுறியாமே….”என்று கோபமாக கேட்க,பரிதி எந்த அலட்டலும் இல்லாமல் ஆம் என்றுவிட்டான் எவ்வளவு நாள் அவனிடம் மறைக்க என்றாவது ஒரு நாள் தெரிந்து தான் ஆக வேண்டும் என்று நினைத்து கூறிவிட,
“ஓஓ…அப்போ கேரேஜ்க்கு வர மாட்ட அப்படி தான….”என்று மேலும் கோபமாக மகேஸ்வரன் கத்த,சமையலறையில் இருந்த நாயகி எட்டி பார்த்துவிட்டு என்ன என்று கேட்க வரும் முன்,
“ஏன் கத்திக்கிட்டு இருக்கீங்க…இப்ப தான் குட்டி தூங்கினான்….”என்று திவ்யா மிருதுளாவின் அறையில் இருந்து வெளி வந்து கூற,மகேஸ்வரன் முயன்று தன்னை அமைதிப்படுத்திக் கொண்டான்.ஆனால் மனதில் அத்தனை கோபம் இன்னும் இரண்டு நாட்களில் தங்களின் கனவு நிறைவேற உள்ளது இப்போது பரிதி இப்படி செய்வது பிடிக்கவில்லை.
“ஏய் வா வெளில போய் பேசலாம்….”என்று பரிதி மகேஸ்வரனை அழைக்க,அவனோ பிடிவாதமாக அமர்ந்திருந்தான்.
“ண்ணா….அவரு வரமாட்டாரு…நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்….அவரை திட்டாதீங்க….”என்று மிருதுளா அறையிலிருந்து வெளிவந்து கூறினாள்.
“ஏன்மா…அவனும் பணம் போட்டிருக்கான்….அது அவனோட உழைப்பு…….அவன் தப்பு பண்ணலாமா…நான் தான் தப்பு பண்ணேன்….”என்று மகேஸ்வரன் மிருதுளாவிற்கு புரிய வைக்கும் நோக்குடன் கூற,
“என்ன தான் அண்ணன் திரும்பி உங்க கிட்டேயே வந்தாலும் அங்க யாரும் இனி அண்ணனை நம்ப மாட்டாங்க…அதனால வேண்டாம் அண்ணனை வெளில வேலை தேடட்டும்….”என்று திவ்யாவும் கூற,
“டேய் இங்க பாரு…நீயும்,நானும் சேர்ந்து தான் அந்த கேரேஜை திறக்குறோம் இல்லைனா அது திறக்கவே போறதில்லை….அவ்வளவு தான்….”என்று மகேஸ்வரனும் தன் முடிவை தெளிவாக கூறிவிட்டு சென்றுவிட்டான்.பரிதிக்கு கஷ்டமாக தான் இருந்தது ஆனாலும் அவனால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தவன் தன் வேலை தேடும் படலத்தை தொடர்ந்தான்.
திவ்யா வேலைக்கு சென்று கொண்டிருப்பதால் வீட்டில் பணப் பிரச்சனை இல்லாமல் இருந்தது இல்லையேல் நினைத்து பார்க்கவே பயம் தான் பரிதிக்கு முன்பெல்லாம் எதையும் சிந்திக்காதவன் இப்போதெல்லாம் அனைவரை பற்றியும் சிந்திக்க தொடங்கிவிட்டான்.அவனின் இரும்பு இதயத்திலும் சிறிது சிறிதாக மாற்றங்கள் வந்து கொண்டிருந்தது.
இங்கு தனது வீட்டிற்கு வந்த மகேஸ்ரவன் தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தான்.மாணிக்கம் அவனை பார்ப்பதும் தனது உணவை உண்பதுமாக இருக்க,வைரம் தான்,
“டேய் கண்ணா சாப்பிடுறியானு கேட்டு எவ்வளவு நேரமாச்சு….பதிலே காணும்….”என்றபடி சமையலறையில் இருந்து எட்டி பார்க்க,அவனோ எதுவும் காதில் வாங்காமல் ஏதோ யோசனையில் இருக்க,வேகமாக சமையலறையிலிருந்து வந்து அவனின் தலையில் தட்டினார் வைரம்.
“ஆஆஆஆ….ஏன்மா அடிச்ச….”
“பின்ன என்னடா எவ்வளவு நேரம் கேட்டுகுறேன் பதிலே இல்லை அதான் அடிச்சேன்….என்ன இன்னைக்கு அதிசயமாக உட்கார்ந்திருக்க எப்போதும் இந்த நேரத்துக்கு கேரேஜிக்கு ஓடுவ இல்லை அந்த குட்டியை பார்க்க ஓடுவ….”என்று கேட்டபடி அவனின் அருகே அமர,மாணிக்கமும் அங்கே தூரத்தில் நாளிதழ் படித்தபடி இருவரின் உரையாடலையும் கேட்ட படி தான் இருந்தார்.அவரும் கடந்த சில தினங்களாக பார்க்கிறார் தானே தனது மகனின் கவலை தோய்ந்த முகத்தை.ஆனால் அவனிடம் அதை கேட்கவில்லை மனதில் இன்றும் கோபம் இருக்கிறது மகனின் மீது.
“என்னடா உன் குட்டியை பத்தி கேட்டா உடனே ஓயாம பேசுவ….இன்னைக்கு வாயே திறக்கமாட்டேங்குற….”என்று வைரம் மகனை உலுக்காத குறையாக கேட்க,
“ஒண்ணுமில்லமா….நான் அப்புறம் சாப்பிடுறேன்….எனக்கு பசிக்கலை….”என்று விட்டு மகன் எழ முற்பட அவனின் கைகளை பிடித்து அமர வைத்த வைரம்,
“என்னடா என்ன பிரச்சனை…இப்ப…”என்று கேட்டார்.அவருக்கு மகனின் கலங்கிய முகம் ஏதோ செய்ய,
“இல்லமா எனக்கு….”
“டேய் நீ இப்ப சொல்லபோறீயா இல்லையா…..”
“பரிதி வேறு வேலை தேடுறான்மா…..தங்கச்சி கேரேஜிக்கு போக வேண்டாம்னு சொல்லிட்டாம்….நானும் அவனும் சேர்ந்து தான எல்லாம் செஞ்சோம் ஆனா அவன் இப்ப நீயே எல்லாத்தையும் பார்த்துக்கனு சொல்லுறான்…..எனக்கு கஷ்டமா இருக்குமா….தப்பு நாங்க இரண்டு பேரும் தான் செஞ்சோம் ஆனா தண்டனை அவனுக்கு மட்டும்…..அது இன்னும் என் மனசை குத்துது…..அதான் ஒருமாதிரி…ப்ச்….ம்மா எனக்கு சொல்ல தெரியலை ஆனா ரொம்ப கஷ்டமா இருக்கு….”என்றுவிட்டு மகேஸ்வரன் சென்றுவிட,வைரம் மாணிக்கத்தை பார்க்க அவரோ எனக்கு எதுவும் தெரியாது என்பது போல தோளை குலுக்கினார்.
“என்னங்க என்னனு தான் கேளுங்களேன்….அவன் இவ்வளவு கலங்கி எல்லாம் நான் பார்த்ததே இல்லை….அந்த பையன் வீட்டை காலி பண்ணின அன்னைக்கே இரண்டு நாள் சரியா சாப்பிடல….என்கிட்ட சரியா பேசல….”என்று வைரம் கவலையாக கூறினார்.ஆம் குழந்தை பிறந்து மிருதுளாவை மருத்துவமனையில் இருந்து புதியதாக வாடைகை வீடு பிடித்து தான் அழைத்து சென்றான் பரிதி.மகேஸ்வரன் எவ்வளவு கூறியும் பரிதி கேட்கவில்லை அதுவே மகேஸ்வரனிற்கு அத்தனை கோபம் வருத்தம் அதை வீட்டிலும் காட்டினான்.
மாணிக்கம் கேரேஜிற்கு வந்து தனது அறையில் அமர அப்போது ராம் உள்ளே வந்து,
“சார்…சின்ன சார் வரலீங்களா….”என்று தயக்கத்துடன் கேட்க,
“ஏன்பா எதுக்கு கேட்குற….”என்று கேட்க,
“அது சார் சின்ன சாருக்கு ஏதோ சாமான் வந்திருக்கு அதை அவர் தான் கையெழுத்து போட்டு வாங்கனுமாம்….நான் சாருக்கு போன் பண்ணிட்டேன் அவர் எடுக்கவேயில்லை அதான்….”என்று கூற,மாணிக்கம் தனது அறையில் இருந்து வெளியில் வந்தார் அங்கு ஒரு மினி டெம்போ வேன் நின்றது அதில் சில சாமான்கள் இருந்தன அதனை ஏற்றி வந்த டிரைவர்,
“நான் அவன் அப்பா தான்….என்கிட்ட கொடுங்க…”என்று மாணிக்கம் கேட்க,
“இல்ல சார் இது கம்பெனி கொரியர் அவர் கையெழுத்து வேணும்….”என்றுவிட வேறு வழியில்லாமல் மகனிற்கு அவரே அழைத்தார்.வெகு நாட்களுக்கு பிறகு தந்தையின் எண்ணில் இருந்து அழைப்பு வரவும் உடனே எடுத்தவன்,
“ஹாங் இருக்கேன்பா….நீ கொஞ்சம் கேரேஜ் வரைக்கும் வா….உனக்கு ஏதோ கொரியர் வந்திருக்கு நீ வந்தா தான் தருவாங்கனு சொல்லுறாங்க….”என்று அவர் கூற,
“ப்பா….அதை வேண்டாம்னு சொல்லி அனுப்பிடுங்க….நான் கம்பெனில பேசிக்கிறேன்….”என்று கூற,
“இங்க பாருடா….இன்னும் பத்து நிமிஷத்துல நீ இங்க இருக்க அவ்வளவு தான்….”என்று விட்டு போனை வைத்துவிட்டார்.அவர் கூறியது போல பத்து நிமிடத்தில் கேரேஜிற்கு வந்துவிட்டான் மகேஸ்வரன்.பொருட்களை எல்லாம் வாங்கி உள்ளே வைத்தவன் அந்த இடத்தை பூட்டிவிட்டு வெளியில் வந்து அதையே இரண்டு நிமிடம் பார்த்துக் கொண்டு நின்றான்.அவனின் கனவு இதோ கைக்குயெட்டும் தூரத்தில் இருக்கிறது ஆனால் அதை அனுபவிக்க முடியவில்லை மனது வலித்தது.
மாணிக்கம் மகனின் ஒவ்வொரு அசைவையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார் அவருக்குமே புரிந்தது இருவருமே இதற்காக நிறைய உழைத்திருந்தார்கள் என்று.மகன் சென்றவுடன் அந்த அறையில் அவரும் யோசனை செய்தபடி தான் இருந்தார்.மனது இன்றும் அவர்கள் செய்ததை ஏற்க வில்லை தான் ஆனால் அதற்காக இந்த கனவு அழிய வேண்டுமா என்று யோசித்தவர் பின் ஒரு முடிவுடன் மகனை காண சென்றார்.
மாணிக்கம் வீட்டிற்கு வந்து நேராக மகன் அறைக்கு தான் சென்றார்.ஏதோ பேப்பர் ஒன்றை கையில் வைத்தபடி தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான் அவன்.
“மகி….”என்று அழைக்கவும் வேகமாக தலையை தூக்கியவன் தந்தையை கண்டு அதிர்ந்துவிட்டான்.
“ப்பா….”என்று அவன் எழ,அவனின் தோள்களை அழுத்தி அமர வைத்தவிட்டு அவரும் பக்கத்தில் அமர்ந்தார்.இரண்டு நிமிடம் இருவருமே பேசிக்கொள்ளவில்லை.அந்த மௌனத்தை மகனே உடைத்தான்.
“ப்பா….என்னை மன்னிச்சிடுங்கப்பா….நான் தப்பு பண்ணிட்டேன்…சாரிப்பா….”என்று உடைந்து அழ,மாணிக்கம் எதுவும் கூறவில்லை அமைதியாக இருந்தார்.
“ப்பா பேசுங்கப்பா….எனக்கு நீங்க பேசாம இருக்குறது கஷ்டமா இருக்குப்பா….”என்று அவரின் மடியில் தலை வைத்து அழ,தந்தையாக அவருக்குமே மனது கலங்க தான் செய்தது.
“ப்பா….நான் என்னப்பா பண்ணட்டும் நான் எவ்வளவோ சொன்னேன் நீங்க என்னை புரிஞ்சிக்கவேயில்லை….அதான் இப்படி முட்டாள் தனமா பண்ணிட்டேன்….இதுல என் தப்பு தான்பா அதிகம் பரிதி எந்த தப்பு பண்ணலை…ஆனா அவன் தான் தண்டனை அனுபவிக்கிறான்…..எனக்கு கஷ்டமா இருக்குப்பா….நான் என்ன பண்ணட்டும் இப்ப….அவன் இல்லாம நான் கேரேஜை திறக்குறதா இல்லை……அதான் இந்த பொருளை எல்லாம் என்னோட பிரண்டு கேரேஜிக்கு கை மாத்திவிடலாம்னு இருக்கேன்….”என்று கூற,
“சபாஷ் நல்ல முடிவு….”என்று கோபமாக கத்தினார் மாணிக்கம்.
“ப்பா….”
“என்னடா அப்பா….ஏன்டா இதுக்கு தான இவ்வளவு செஞ்சீங்க….இப்ப எல்லாத்தை விடப்போறேன்னு சொல்லுற….அறிவு இருக்கா உனக்கு….இதோ இதனால தான் நான் நீ சொன்ன எதுக்கும் ஒத்துக்கல….”என்று கூற மகேஸ்வரன் புரியாமல் தந்தையை பார்க்க,
“என்ன அப்படி பார்க்குற…உன்கிட்ட எதை எப்படி செய்யனும் சொந்த அறிவு இல்லை….யாரோ எதோ சொன்னா அதை நீ செய்வியா…உனக்கு அறிவு எங்க போச்சு…அவன் அவசர புத்திகாரன்….உனக்கு ஏன் நிதானம் இல்லை…நீ செய்ய போறது எவ்வளவு பெரிய தப்புனு தெரிஞ்சும் ஏன் இப்படி செஞ்ச…”என்று மாணிக்கம் இத்தனை நாள் மனதில் அடக்கி வைத்திருந்த கேள்வியை கேட்க மகேஸ்வரன் பதில் கூறாமல் தலை குனிந்தான்.
“ப்பா…அது….நான் சொந்த கால்ல நிக்க நினைச்சேன்…அதான்…”
“அதுமட்டும் தான் காரணமா….அதுக்கு தான் இவ்வளவு அவசராமா…அதுவும் திருடுற அளவுக்கு போயிருக்க….”என்று மாணிக்கம் மகனை சரியாக நுனி பிடிக்க,
“அது….நான் ஒரு பொண்ணை விரும்புறேன்….அதான்….”என்று தனது மனதை பொட்டுடைத்தவன் தந்தையின் முகத்தை பார்க்க அவரோ அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“ப்பா…சத்தியமா இது தான் உண்மை…அம்மா எனக்கு திடீர்னு பொண்ணு பார்க்குறேன்னு சொன்னாங்க…அதான்….”என்று அவரின் முறைப்பு அதிகரிக்கவும் பேச்சை நிறுத்திவிட்டான்.
“ஏன் இதை உங்க அம்மா கிட்ட சொன்னா என்ன….அதுக்கு இப்படி குறுட்டு தனமான வேலை செய்வியா…..நாளைக்கு இதை விட பெரிய கஷ்டம் வந்தா என்ன செய்வ திரும்பியும் திருடுவியா….யாரு அந்த பொண்ணு பரிதியோட தங்கச்சி தான….”என்று சரியாக கேட்க,மகேஸ்வரனுக்கு மேலும் அதிர்ச்சி தான்,
“அதான் என் பிரண்ட்….”என்றவனை மேலும் பேசும் முன் தடுத்தவர்,
“ஒரு விஷயத்தை செய்யறதுக்கு முன்னாடி தான் ரொம்ப யோசிக்கனும் அதுல இறங்குனதுக்கு அப்புறம் யோசிக்க கூடாது….அது இன்னும் அபத்தமா தான் முடியும்…..”என்று அவர் கூற,
“பரிதி இல்லாம முடியாதுப்பா….மத்தவங்களுக்கு அவன் எப்படியோ எனக்கு தெரியாது ஆனா எனக்கு அவன் நல்ல நண்பன்,சகோதரன்….இன்னைக்கு இந்த வேலையை விட்டா நான் வேற செஞ்சிப்பேன் அவனை விட்டு கொடுத்துட்டா….ம்ஹம் கிடைக்கமாட்டான்….”என்று உறுதியாக மகன் கூற,
“பரிதியில்லாம செய்ய போறது இல்லை???அப்படிதான….”என்று அவர் கேட்க,
“இல்லை….”
“சரி அப்ப கிளம்பு…”
“எங்கப்பா???”
“உன்னை கிளம்புனு சொன்னேன்….”என்றுவிட்டு அவர் முன்னே செல்ல மகேஸ்வரனும் அவரின் பின்னே சென்றான்.இருவரும் சென்ற இடம் பரிதியின் வீடு.பரிதி அப்போது தான் வீட்டிற்கு வந்திருந்தான்.அவனிற்கு மகேஸ்வரனுடன் வந்த மாணிக்கத்தை கண்டவுடன் அதிர்ச்சியாக இருந்தது.
“வாங்க சார்….”என்று மிருதுளா தான் முதலில் அவரை அழைத்து அமர வைத்தாள்.நாயகி அவருக்கு தண்ணீர் கொடுக்க மறுக்காமல் வாங்கி பருகியவர் அமைதியாக அமர்ந்திருக்க,மகேஸ்வரன் தான் ஆரம்பித்தான்,
“இங்க பாரு அது சரிவராது….இதுக்கு என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா….”என்று மிருதுளாவை பார்த்துக் கொண்டே பரிதி கூற,
“நான் தான் அது சரிவராது சொல்லிட்டேனே அண்ணா….அப்புறம் ஏன்????”என்று மிருதுளாவும் கேட்க,
“இங்க பாரும்மா…நானும் அவனும் சேர்ந்து தான் எல்லாம் செஞ்சோம்….இப்ப நான் மட்டும் அதை அனுபவிக்க முடியாது….என் மனசாட்சியே என்னை கொன்னுடும்….”
“இல்லண்ணா….நான் அவரை அனுப்பறதா இல்லை….உங்களை கஷ்டப்படுத்துறோம்னு எனக்கு வருத்தமா தான் இருக்கு….ஆனா இது தான் நல்ல முடிவு….”என்று மிருதுளா தீர்மானமாக கூற,அதுவரை அமைதியாக இருந்த மாணிக்கம்,
“நான் கொஞ்சம் பேசலாமாம்மா….”என்று கேட்க,
“சொல்லுங்க….”என்று மிருதுளா கூற,
“இங்க பாரும்மா நீ எதுக்கா அவனை தடுக்குறனு எனக்கு புரியுது…..ஆனா இதுல இரண்டு பேரோட வாழ்க்கை அடங்கியிருக்கு….இவங்க இரண்டு பேருமே அந்த கேரேஜிற்காக ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க அது உண்மை…ஆனா அவங்க அதை அடைஞ்ச விதம் தான் தப்பு…..எனக்கும் கோபம் தான் முதல்ல ஆனா அதையே பிடிச்சிக்கிட்டு தொங்கிட்டு இருந்தா அடுத்ததை பார்க்க முடியாது….அதனால தான் நானே வந்தேன்….”என்றவர் பரிதி ஒரு பார்வை பார்க்க அவன் தலை தன் போல குனிந்தது.
“நீ முதன் முதல்ல என்கிட்ட வேலை கேட்கும் போது தலை நிமிர்ந்து கேட்ட ஆனா இப்ப தலை குனிஞ்சிட்ட….இது தான் நீ செஞ்ச பெரிய தப்புனு உனக்கு இப்பவாது புரியுதா….எல்லாதிலேயும் உனக்கு வேகம் தான் பொறுமை இல்லை….நீ செய்யுற விஷயம் அடுத்தவங்களை எவ்வளவு பாதிக்கும்னு இப்ப உனக்கு புரிஞ்சிருக்கும் நினைக்கிறேன்….எனக்கு உன் மேல கோபம்னு சொல்லுறதை விட வருத்தம் அதிகமா இருக்கு….இப்பவும் இருக்கு…..”என்றவர் இப்போது மிருதுளாவை பார்த்து,
“இங்க பாரும்மா….ஒரு மனுஷனுக்கு தப்பை திருத்திக்க அடிக்கடி வாய்ப்பு கிடைக்காது இந்த முறை இவனுக்கு கிடைச்சிருக்கு அதை அவன் சரியா பயன்படுத்திப்பான்னு நினைக்கிறேன்…அதனால அவனை வேலைக்கு அனுப்பு….மத்தத நான் பார்த்துக்குறேன்….”என்றுவிட மிருதுளாவிற்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை அவள் முகம் குழப்பமாக இருக்க,
“நீ பொறுமையா யோசி ஆனா முடிவு இது தான் அவன் நாளைக்கு கேரேஜிக்கு வரனும்….என்னடா மிரட்டுராருனு யோசிக்கிறியா….அப்படி தான்னு வச்சிக்க…என்ன பண்ணுறது சில நேரங்கள்ல ரொம்ப நம்பிக்கையானவங்க அந்த நம்பிக்கை உடைக்கும் போது மனசுக்கு கஷ்டமா தான் இருக்குது….அதுக்காக அவங்களை வெறுக்க முடியலை…நான் அவனை வெறுக்கல அதுக்காக மன்னிச்சிட்டேனு சொல்லமாட்டேன்….தப்ப திருத்திக்க வாய்ப்பு தரேன் முன்னேறிக்க சொல்லு….”என்று கடைசி வரியை பரிதியை அழுத்தமாக பார்த்து கூறிவிட்டு அவர் செல்ல பார்க்க,
“எங்க அண்ணன் அங்க வந்தா அவரை திட்டக்கூடாது….அவரு தப்பு பண்ணிட்டாரு தான் அதுக்காக அவரை அதை சொல்லியே நீங்க குத்தி காட்ட கூடாது….”என்று அதுவரை அமைதியாக இருந்த திவ்யா கூற அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் மகனை பார்த்தவர்,
“சரிம்மா….உன் அண்ணனை எதுவும் சொல்லலை….ஆனா சொல்லவிடமா பார்த்துக்க வேண்டியது உன் அண்ணன் கடமை….அதை உன் அண்ணன் கிட்ட சொல்லு….”என்றுவிட்டு அவர் செல்ல நாயகி திவ்யாவின் தலையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்தார்.
“ஏன்டீ பெரியவங்க கிட்ட இப்படி தான் பேசுவியா….”என்று கேட்க,
“போம்மா….உனக்கு ஒண்ணும் தெரியாது…..அன்னைக்கு அவரு அவங்க பையனை மட்டும் காப்பாத்த பார்த்தாரு….எனக்கு அவர் மேல கோபம் தான்….”என்று அங்கு அமர்ந்திருந்த மகேஸ்வரனை பார்த்துக் கொண்டே அவள் கூற அவளை முறைத்த மகேஸ்வரன்,
“அந்த தப்பை இனி எங்கப்பா செய்யமாட்டாரு….அதுக்கு அவசியமும் இருக்காது….”என்றுவிட்டு பரிதியிடம் திரும்பி,
“டேய் நீ வா….நமக்கு வேலை இருக்கு…..இன்னும் இரண்டு நாள்ல கேரேஜ் திறக்கனும் அதுக்கான ஏற்பாடு பண்ணணும்….வா…”என்று அவனை அழைக்க அவனோ மனைவி முகம் பார்த்து நின்றான்.இனி அவள் தான் அனைத்தும் அவள் கூறாமல் எதுவும் இல்லை.
“போயிட்டுவாங்க….”என்று மிருதுளா திருவாய் திறக்க,
“ப்பா…தங்கச்சியே சொல்லிடுச்சு….வாடா….”என்று மகேஸ்வரன் அவனை இழுக்க,பரிதி மிருதுளாவிடம் நெருங்கி,
“சண்டகாரி நிஜமா போகட்டுமா….உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே….”என்று கேட்க,அவனின் கரத்தை பிடித்தவள் பக்கத்தில் இருந்த சாமி படத்தின் முன் நிறுத்திவிட்டு கண்மூடி சிறிது நேரம் வேண்டியவள் சாமி படத்தின் கீழ் இருந்த கயிறை எடுத்து பரிதியின் கையில் கட்டியவாரே,
“உங்களை நம்பி ஒரு குடும்பம் இருக்கு…..அதனால எப்போதும் நிதானமா இருங்க…..நம்ம குட்டிக்கு எப்பவும் நீங்க தான் ஒரு முன் உதாரணமா இருக்கனும்….போயிட்டுவாங்க….”என்றுவிட்டு அவனின் நெற்றியில் திருநீரை வைத்துவிட பரிதி எதையும் மறுக்கவில்லை அனைத்தையும் ஏற்க பழகிக் கொண்டான்.என் குடும்பம் தான் முதலில் அதன் நலமும்,பாதுகாப்பும் என் கையில் அதனால் நான் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறிக் கொண்டே தனது வாழ்வில் முதல் அடியை எடுத்து வைத்தான்.