எந்த ஒரு காரியம் நடக்கும் முன், அது குறித்த திட்டத்தை வகுத்து விடுவது தான் மனித இயல்பு. மனைவியை தன் சொந்த ஊருக்கு அழைத்து வரும் கரிகாலனிடம் ஒரு திட்டம் இருந்தது. அவனுடன் வரும் மதுவுக்கும் மனதில் ஒரு திட்டம் இருந்தது. இவர்கள் வரவை எதிர்பார்த்து காத்திருந்த கருப்பாயிக்கும் மனதில் ஒரு திட்டம் ஓடி கொண்டு தான் இருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் தான், மதுரை வந்து விடும்.
கரிகாலனுக்கு ஆச்சர்யம் தான். மனைவி தன்னுடன் வர ஒத்து கொண்டது. இப்போது இல்லாவிட்டாலும், குழந்தை பிறந்த பின் அங்கு போய் தான் ஆக வேண்டும். சொந்த வீடு, ஊர் எல்லாம் அது தான். ஆனால், தந்தை வந்து கோவிலுக்கு வர சொல்லி கூப்பிட்ட உடன் மது சரி என்று சொன்னது தான் அவன் ஆச்சர்யபடுவதற்கு காரணம். அவ்வளவு சீக்கிரம் அவள் மனமாற்றம் கணவன் எதிர்பாராதது தான். மாசமாக இருக்கும் மருமகளை பார்க்க வந்தவர், கெடா வெட்டு விசயத்தை சொன்னார்.
“பதினெட்டு வருசத்துக்கு அப்புறம் இப்ப தான் கும்பிட போறாங்க… மருமக மாசமா இருக்குன்னு போன் போட்டையா, எனக்கு ஒரே யோசனை தான். ஆனா, பெரிய பாண்டி தான் விடலை. சொந்த வீடு கட்டி இருக்கேன், என் மாமியார் வீட்டு சொந்தமெல்லாம் இருக்கு, ஒண்ணா நிக்க முடியாது ஐயான்னு சொல்லிட்டான். அவன் தனியா போய்டான், அவன் பழக்க வழக்கம் வேற, அவன் சொந்தமும் வேறாகி போச்சு. எல்லாம் ஒரே குடும்பமா இருந்தா எம் பேச்சு எடுபடும். அதான், பெரிய பாண்டிக்கு சரி சொல்லிட்டேன். நாம மட்டும் வெட்டலை பாண்டி…” என்ற தந்தைக்கு, ஒரு சின்ன சிரிப்பு சிரித்தவன்.
“நீங்க தனியா கெடா புடிங்கப்பா…”
“ஏலே சின்ன பாண்டி! என்ன ஆளாளுக்கு என்னை ஒதுக்கி வைக்கீங்க… நான், உங்க அப்பன்லே, என் தோலுக்கு மேல வளர்ந்தா என்னை தாண்டி நிக்கணுமா?…” என்று அவர் எகிறி வர.
“ஐயா!… நான் அதை சொல்லல. அம்மைக்கு கூட பொறப்பு எட்டு பேரு, இதுல வசந்தி வீடும் இருக்கு. சம்மந்தி வீட்டு ஆளுகளை விட்டு கொடுக்க முடியாது. மத்த சொந்தமும் இருக்கு. எல்லோருக்கும் ஒரு பேச்சா இருக்க வேணாம். நாங்க தள்ளி நிக்குறோம். நீங்க கெடா வெட்டுங்க. எங்களை யோசிச்சு எல்லாரையும் பகைக்க வேணாம்…” நிதர்சனத்தை தான் சொன்னான்.
புரிந்தாலும் விட்டு கொடுக்க முடியவில்லை தந்தையால்.
“சரிலே சின்ன பாண்டி. அவங்களையும் யோசிக்கணும் தான். அப்ப வெளிய எடுத்துப்போம். யாருக்கும் சடவு இல்லை…” என்று முடிவாக சொல்லி விட்டார்.
ஆனால், அப்போதும் கரிகாலன் மனைவி முகம் தான் பார்த்து நின்றான். அவள் சம்மதம் தெரிவித்த பின் தான் மதுரை வந்து சேர்ந்தது. அங்கு வந்து சேர, மதுவின் தந்தை வந்து விட்டார். இவர்களை அழைத்து செல்ல… அவர்களுடன் மனைவியை மட்டும் தான் அனுப்பி வைத்தான். கரிகாலன் உடன் செல்ல வில்லை.
அவளுக்கு புரிந்தது. கோவில் கெடா வெட்டு, அவனுக்கு வேலை அதிகம். அவளை காவல் காக்க முடியாது. அத்தோடு அவளுக்கும், யாரோடும் ஒட்ட முடியாது. ஊர் வரும் போதே சொல்லி தான் அழைத்து வந்தான். பெற்றவர்கள் மேல் என்ன கோபம் இருந்தாலும், அதை வெளிப்படையாக பேசிய பின் விரோதம் இல்லாமல் சேர வேண்டும். பிள்ளைகளுக்காக வாழ்ந்தவர்களை பிள்ளைகளே ஒதுக்க கூடாது. மதுக்கும் மசக்கை பாடு பெற்றவர்களை தேடியது. ஐந்து மாத முன் வயிற்றை ஒரு கையால் பிடித்து வந்த மகளை பார்த்து பூரித்து போனார் சுந்தரம். இது தானே அவர்கள் கனவும். வீட்டிற்கு வந்து தாயை கண்ட மதுக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்தது. மீனாட்சிக்கு கண் நிறைய கண்ணீர் தான். தாய்மை கோலத்தில் மகள் நிற்க, பெற்றவர்கள் பார்த்து, பார்த்து பூரித்து போனார்கள்.
மறுநாள் காலை வெகு சீக்கிரத்திலேயே மது தயாராகி விட்டாள். இன்று தான் கோவில். ஊர் செல்ல வேண்டும். கணவன் விரைவாக வந்து விடுவான் என்பதால் முன்பே தயாராகி நின்றாள்.
சரியாக ஆறு மணிக்கு எல்லாம் கரிகாலன் வந்து விட்டான். அதாவது, அவன் மட்டும் அல்ல… கிட்டதட்ட முப்பது பேர் வந்தார்கள். மது வீட்டு ஆட்கள் ஒன்றும் புரியாமல் முழித்து நின்றனர். அவர்களுக்கு கரிகாலன் தெரிவிக்கவும் இல்லை. தன் மனைவியை மரியாதையாகவே அழைத்து செல்ல எண்ணினான். மதுவுக்கும் இது தெரியாது. அவளே ஆச்சர்யமாக தான் பார்த்தாள். கணவன் மனதில் இப்படி ஒன்று உள்ளது என்று அவள் நினைக்க கூட இல்லை.
ஆனால், கரிகாலன் அறிவான். அவன் தாய் கருப்பாயி பற்றி நன்கு அறிவான். அவ்வளவு எளிதாக தன் குணத்தை மாற்றி கொள்ளும் ஆள் இல்லை. நிச்சயம் ஏதோ ஒன்று செய்வார். அது கண்டிப்பாக மனைவியை பாதிக்கும் என்று தெரிந்து தான். இப்படி ஒன்றை செய்தான். அவர்கள் பக்க பங்காளி வீடு, மாமன் வீடு, மச்சான், அக்கா, தங்கை என்று முப்பது பேருக்கு மேல் தான் வந்தார்கள்.
மீனாட்சிக்கு ஒன்றும் ஓடவில்லை. இதே மருமகனை பார்த்து தான், என் பெண்ணிற்கு நீ தகுதியில்லை என்று சொன்னவர் தான். அவர் பேசிய பேச்சுக்கள் அதிகம். அதை எல்லாம் மனதில் வைக்காமல் மருமகன், தன் சொந்தங்களோடு வீடு வந்த பின் எதுவும் மனதில் நிற்க வில்லை. முழு மனதோடு தான் வரவேற்றார்…
“வாங்கி தம்பி… வாங்க வாங்க… எல்லோரும் உள்ள வாங்க” என்று அழைத்து சென்று அமர வைத்தவர். கணவனை பார்க்க, அவரும் தன் பங்கிற்கு வரவேற்றார்.
மது தான் வாய் பேச வராமல் நின்றாள். அவளுக்கு நடப்பதை நம்பவே முடியவில்லை. ஆனால், வந்திருந்த சொந்தங்கள் அவளை விடவில்லை. எதார்த்தமாகவே தங்கள் கூட்டுக்குள் இழுத்து கொண்டார்கள்.
“கல்யாணத்தப்ப பார்த்ததை விட, இப்ப இன்னும் அழகா இருக்க… எத்தனை மாசம். எந்த மாசம் பிரசவம்…” அடுத்தடுத்து உறுத்தாத கேள்விகள், அவளை அவர்களோடு கலக்க செய்தது.
சுந்தரம் ஓட்டலில் உணவு சொல்லி விட்டு, தன் பக்க சொந்தங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லி விட்டார். எப்படி இருந்தாலும் உறவுகளை ஒதுக்க முடியாது. ஒரே ஊர் என்பதால் அடுத்த அரை மணி நேரத்தில் மது வீட்டு ஆட்கள் வந்து விட்டார்கள்.
இரு பக்க உறவுகளும் பொதுவாகவே கலந்து பேசி, நல்ல நேரத்தில் மதுவை அனுப்பி வைத்தார்கள். சேர்ந்து வாழும் தம்பதிகளிடம் தாங்கள் என்ன அறிவுரை சொல்ல முடியும். இதில் கவனிக்க தக்கது என்னவென்றால், கருப்பாயி, வசந்தி, சகுந்தலா, ராஜபாண்டி என்று அவன் குடும்பம் மட்டும் வரவில்லை. அவர்கள் வந்திருந்தால் தப்பு அவர்கள் மேல் என்று தான் மாறும். அதன் கொண்டு யாரும் வரவில்லை, அத்தோடு அவளை அழைத்து வர பிடிக்கவும் இல்லை.
கரிகாலன் தன் மாமனாரை பார்த்து இரு கை கூப்பி, தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு விட்டான். அன்று இருந்த கோபத்தின் வீரியம், இன்று முற்றிலும் குறைந்து இருக்க, பதறி போய் தடுத்தார் சுந்தரம். மகளின் நல்வாழ்க்கை கண் முன் தெரிய வேற என்ன வேண்டும். மகளை நல்ல முறையில் வைத்து கொள்வான் என்று நம்பி தான் கரிகாலன் கையில் ஒப்பு கொடுத்தார். அந்த நம்பிக்கையை அவன் காத்து விட்டான். மற்றது எதுவும் தேவையற்றது.
நல்ல நேரத்தில் மதுவை அழைத்து கொண்டு கிளம்பி விட்டார்கள். மது, தன் உணர்வு எதையும் வெளிப்படுத்தவில்லை. அவள் ஏதோ ஒரு சிந்தனையில் தான் இருந்தாள்.
மாசமாக இருக்கும் பெண், கெடா வெட்டும் போது இருக்க கூடாது. அதனால் மது கோவிலுக்கு வரவில்லை. அவளை கொண்டு போய் வீட்டில் விட கரிகாலன் சென்றான். தெரு முனை தொட்டு திரும்பும் போது, அங்கிருந்த பாதி கட்டிய கட்டடத்தில் நுழைந்து கொண்டாள். “மது” என்று அதிர்ந்து போய் பார்த்தான் கணவன்.
அவள் முகம் இறுகி கிடந்தது. “சாமி கும்பிட போகும் போது மட்டும் கூப்பிடுங்க கரிகாலன்…”
“மது… வேற எதுவுமா?… என்ன யோசிக்கிற?…” கரிகாலன் மனதில் அறியாத ஒரு பயம்.
“நான் தனியா இருக்கணும் கரிகாலன்…” வேற பேச்சே இல்லை அவளிடம்.
அமைதியாக மனைவியை விட்டு எழுந்தான் கரிகாலன். அவனுக்கு ஏதோ ஒரு நெருடல், அவளை பார்த்து கொண்டே தான் கோவில் சென்றான். கெடா வெட்டு முடிந்து பூஜை ஆரம்பிக்கும் போது தான் கரிகாலன், தன் மனைவியை அழைத்து வந்தான். இந்த கோவிலில் தான் அவர்கள் கல்யாணமும் நடந்தது. அன்று பார்த்தது தான், இன்று தான் காண்கிறாள். ஏனோ கண்ணெல்லாம் கலங்கியது. முழுமனதோடு தெய்வத்தை பார்த்து தன் சேலை முந்தனையை விரித்து தம்பதிகளாக வணங்கி எழுந்தார்கள்.
தாலி கொடி இல்லாமல், மொட்டையாக இருக்கும் அவள் கழுத்தை பார்த்து சகுந்தலாக்கு பரம திருப்தி. சின்ன சங்கிலி கண்ணுக்கே தெரியவில்லை. தான் பட்டும், நகையும் ஜொலிக்க நிக்க, அவளின் சாதாரண தோற்றம் கண்டு, சகுந்தலாவிற்கு அவளை வென்றது போல் ஒரு எண்ணம். பந்தி தொடங்க, மது அங்கிருந்த அரச மரத்தடியில் அமர்ந்து கொண்டாள். ஆண்கள் பந்தி முடிந்து, பெண்கள் பந்தி தொடங்கிய போதும் அவள் எழுந்து கொள்ளவில்லை. அவள் உண்ணாமல் கரிகாலன் எவ்வாறு உண்ணுவான். அவனும் வேலைகளை செய்தானே ஒழிய உண்ணவில்லை. கருப்பாயி எல்லாம் பார்த்து கொண்டு தான் இருந்தார்.
ஆரவாரம் ஓய்ந்து, வெத்தலை பாக்கு தொடங்கியது. அப்போது வந்து பொதுவில் அமர்ந்தார் சின்ன மாயன். கருப்பாயி தம்பி, போலீஸ் ஆபீசர். அவர்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரி. அவர் மேல் எல்லோருக்கும் மிகுந்த மரியாதை. அவர் தான் ஆரம்பித்தார்.
“ஏலே பெரிய பாண்டி… இங்க வா, என்னா சங்கதி. உனக்கும், சின்ன பாண்டிக்கும் என்ன தகராறு… சின்னவன் சம்சாரம் மாசமா நிக்க, நீ கெடா வெட்டலாமா. எல்லாம் ஒரு குடும்பம் தான…” பொதுவில் பேச்சு தொடங்கியது.
“சின்ன பாண்டி செய்றது எதுவும் எங்களுக்கு ஒப்பலை தம்பி. எல்லாம் அவன் விருப்பம்ன்னா, பெத்தவங்க நாங்க எதுக்கு, எங்களை கலக்காம அவனா ஒரு முடிவு எடுக்குறான்…” சொன்னது கருப்பாயி.
“உங்க மனசு ஒப்பாமா என்ன செஞ்சான் எம் மாப்பிள்ளை?…”
“பெரியவங்க நாங்க இருக்க, எங்க கிட்ட ஒரு வார்த்தை கலக்காம அந்த பிள்ளைய கூட்டி போய் குடும்பம் நடத்துறான். மானம் போச்சு, எல்லாரும் கேக்குறாங்க… இது என்ன திருட்டுதனம், எம் பிள்ளைக்கு இந்த புத்தி அண்டாது…”
“எந்த பிள்ளை. அந்த பிள்ளைக்கு பேரு இல்லையா. அதுக்கு உறவு இல்லையா. அது என்ன திருட்டு தனம். இது மட்டும் நல்ல பேச்சா அக்கா. மாமியார், மருமகள் சண்டை தான!… புருசன், பொண்டாட்டி சண்டை இல்லையே. அவன் பொண்டாட்டிய கூட்டி போய் அவன் குடும்பம் நடத்துறான். இதுல என்ன ஒளிவு,மறைவு. எனக்கு தெரியும், மாமனுக்கு தெரியும், பெரியப்பா, பங்காளி வீடு எல்லோருக்கும் தெரியும். இதுல நீ சொன்னது எங்கேயும் இல்லையே… அத்தோட, அந்த பிள்ளை அவன் சம்சாரம். அதை அவன் சம்சாரம கொண்டு வந்தது நாம எல்லோரும் தான். முறையா இந்த வீட்டுக்கு வந்த மருமகள். அப்ப நீ சொல்றது தான் தப்பு. உனக்கு தான் மருமகள் மேல விரோதம். சரிதானா…” பொட்டில் அடித்தது போல் கேள்வி வர,
“எனக்கு என்ன விரோதம் தம்பி. அவ குணம் சரியில்லை. கூட்டு குடும்பம் அனுசரிச்சு தான் போகணும், விட்டு கொடுக்கணும், சமையல் கட்டு பக்கமே எட்டி பார்க்க மாட்டா, ஒரு வேலையும் தெரியாது. ம்ம்… சீர் கேட்டேன், ஊர் உலகத்துல நடக்காததா… அதுக்கும் அவங்க வீட்டுல முறுக்குனா… சொந்ததை கட்டி இழுக்கணும், இவளுக்கு ஒன்னுமே தெரியலை…” என்று அடுக்கினார் கருப்பாயி.
“இது எல்லாம் சரி செய்ய கூடியது தான். பெரிய தப்பு ஒண்ணும் இல்லை. இந்த காலத்து பிள்ளைக எல்லாம் அப்படி தான் இருக்கு. நான் கேட்டது, சின்ன பாண்டி இந்த குடும்பத்தில ஒருத்தன். அப்படி இருக்க, அவனை ஒதுக்கி ஒரு காரியம் நீங்க செய்யலாமா?…”
இந்த முறை பதில் கொடுத்தது சகுந்தலா…
“ஒரே குடும்பத்தில பொறந்த, ஒன்னாவே இருக்கணுமா சித்தப்பா. அவங்களுக்கும் தனி தனி குடும்பம் இருக்கு. பிள்ளைக, சொந்தம், சம்பாத்தியம், நல்லது, கெட்டது ஆயிரம் வரும். எல்லாத்தையும் இவங்களை வச்சு நாங்க பார்க்க முடியுமா… எம் பிள்ளைக்க, எங்க பொழப்பு பார்க்கணும் தான… எம் மாமியார் வீட்டை கேளுங்க, அது நியாயம். எங்களை ஏன் கேட்கணும். நாங்க அதுக்கு பொறுப்பு இல்லை. பாடுபட்டு வீடு கட்டுனோம், அதுக்கு ஒரு விசேஷம் காண முடியுதா…” என்று முடிக்க.
“சரிதான் மகளே. நீ வீடு கட்டுன விசேஷம் வைக்கிற, சின்ன பாண்டி எப்போ வீடு கட்ட…” என்று அழுத்தமா சின்ன மாயன் கேட்க.
எல்லோருக்கும் விசயம் பிடிபட தொடங்கியது. கரிகாலன் சற்று முன்னதாகவே கண்டு கொண்டான். ஆட்டத்தில் மனைவி இருக்கிறாள் என்று…