அதிகாலை நாளிதழை பார்த்துக்கொண்டிருந்தார் ரங்கசாமி. கணவனருகே வந்தமர்ந்த ஜானகி “எதோ யோசனையாவே இருக்கிங்க. இப்போ கூட பேப்பரை கையில வச்சிருக்கிங்க, ஆனா உங்க கவனம் அதுல இல்ல. என்னனு சொன்னா எனக்கு தெரிஞ்சதை சொல்வேன்ல?” என்றார்.
“முல்லை எழுந்துட்டாளா?”
“உங்க டென்ஷன்லயே நேத்து நைட் ரொம்ப நேரம் கழிச்சுதான் தூங்கியிருப்பா போல. பனெண்டு மணிக்கு தண்ணி எடுக்க வந்தப்போ ரூம்ல லைட் எரிஞ்சது. லேட்டாதான் எழுந்துப்பா”
“ஹம்… நேத்து நைட்லயிருந்து நம்ம முல்லையை அன்புக்கு கொடுத்தா என்னனு யோசனை. வேண்டாம் இது சரிவராது, நம்ம சுத்த சைவம், அவங்க தினமும் அசைவம் சாப்பிடறவங்க, அவங்கப்பாக்கும் நமக்கும் சின்ன சின்ன சங்கடங்கள்தான்னாலும் இரண்டு பேருமே வார்த்தையை விட்டுருக்கோம். இப்போ வலிய போய் சொல்லி மகளை வேண்டாம்னுட்டாங்கனா இன்னும் அவமானமாகிடும்னும் கவலையாவும் இருக்கு.
ஆனா நம்ம நிலைமையை யோசிச்சா ஒருமுறை கேட்டுத்தான் பார்ப்போமேனும் தோணுது. முல்லையை அன்புக்கு கொடுத்தா தினமும் பார்த்துட்டேயிருக்கலாம். அண்ணன் மகளையே சொந்த பொண்ணா வளர்க்குறவன், நம்ம மகளை நல்லா வச்சிருப்பானு நம்பிக்கை” என்றார் நம்பிக்கையாக.
ஜானகி முகம் அதிர்விற்குள்ளாக “ஏன் ஜானு உனக்கு பிடிக்கலயா?” என்றார் வருத்தமாக.
“இல்லைங்க, நம்ம சொந்த பந்தம்லாம்” எனும்போதே, தன் அக்காள் தம்பியை நினைத்தவர் “சொந்த பந்தத்துக்கும் நம்ம பொண்ணு கல்யாணத்துக்கும் என்னயிருக்கு?” என முகம் இறுகினார்.
“அச்சோ அதில்லைங்க, பெத்த பொண்ணாயிருந்தா இப்படி சாதி மாத்தி கட்டிகொடுப்பாங்களானு இளப்பமா நினைப்பாங்க. இதுவரை அவங்களோட நாம இயல்பா கூட பேசினதில்ல, அதோட நம்ம பொண்ணுக்கும் அவங்க குடும்பம் செட் ஆகாதுங்க. அந்த பையன் தினமும் கறி மீன் சாப்பிடுவான். முல்லை எப்படி இருப்பா? முல்லையை கட்டிக்கொடுத்தா நம்மளால எப்படி அவங்க வீட்டுல புழங்க முடியும்?” என்றார் ஒவ்வாமையோடு.
“முல்லையை தத்தெடுக்கும்போது என்ன சாதியோ? குலமோனு பேசனாங்க. நம்ம சாதில கட்டிக்கொடுத்தாலும் தத்தெடுத்த பிள்ளைக்கு இத்தனை சீரானு பேசுவாங்க. பேசுறவங்க எதையாவது பேசிட்டுத்தான் இருப்பாங்க. பேசுறவங்கள்ல ஒருத்தராவது நாம இல்லாத காலத்துக்கு முல்லைக்கு பக்கபலமா இருப்பாங்களா?”
கணவன் கூற்று உண்மைதான்… ஆனாலும் நம்மால அந்த குடும்பத்தோட இணங்கிப்போக முடியுமா? என்ற யோசனையில் ஜானகி இருக்க, “இன்னும் எத்தனை வருசத்துக்கு இருக்கப்போறோமோ? மூச்சு பிரியறதுக்குள்ள முல்லையை நல்ல இடத்துல ஒப்படைக்கனும்னு மனசு கிடந்து தவிக்குது ஜானு.
அந்த கஜேந்திரன் பிரச்சனை செய்தானு சொன்னதும், பழைய பகையெல்லாம் மறந்து நம்ம பொண்ணுக்காக யோசிச்சான் பாரு… அன்புக்கு முல்லையை கொடுக்க இந்த ஒன்னு போதும். அன்புக்கு கொடுத்தா நாம இல்லாத காலத்துலயும் முல்லை நிம்மதியா வாழ்வா.
ஜானகிக்கும் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாய் இருக்க, இந்த ஒரு சங்கடத்திற்காக அன்பரசை விட்டுவிட ரங்கசாமிக்கு மனமில்லை. மாதவனிடம் பேசிப்பார்ப்போமா என யோசித்திருந்தவரின் கவனத்தை கலைத்தாள் முல்லை.
“ப்பா… அப்படி என்ன யோசனை?” என அருகே வந்தமர்ந்தாள்.
“என் பொண்ணுக்கானவன் எங்க இருக்கானு எப்படி கண்டுபிடிக்கனு யோசிச்சிட்டிருந்தேன். உன்னைத் தவிர யோசிக்க எனக்கு வேற என்னடா இருக்கு?”
முல்லையின் முகம் வாடிட, திருமணத்தைப்பற்றி பேசியதும் முகம் வாடுகிறாள் என, “ஜானு போய் என் செல்லத்துக்கு டீ கொண்டு வா” என்றார்.
“கவலைப்படாதடா, இந்த முறை நான் தரகரை நம்பப்போறதில்ல, நானே பார்க்கப்போறேன். அதுவும் ரொம்ப தூரத்துல இல்லாம கல்யாணம் செய்தாலும் என் மகளை தினமும் பார்க்குற மாதிரி நம்ம சரௌண்டிங்லயே பார்க்கப்போறேன்.
முக்கியமா நம்மகிட்ட இருக்க சொத்தை யோசிக்காம, என் மகளை விரும்பி கல்யாணம் செய்துக்க நினைக்கிறவனை தேடிப் பிடிக்கப்போறேன். என் பொண்ணு என் வீட்டுக்கு தினமும் வந்து போகும்னு முன்னாடியே என் கண்டிஷன் எல்லாம் சொல்லி அதுக்கு சம்மதம் சொன்னா மட்டும் உன்னை பார்க்க வர சொல்றேன். அப்படி ஒரு மாப்பிள்ளை கிடைச்சா நீ சம்மதிப்பியாடா?” என்றார் கனிவாக.
“இப்படி கண்டிஷன்க்கு யார்ப்பா சம்மதிப்பாங்க?” என கிண்டலாய் முல்லை கேட்க, “அப்படி தேடி பிடிச்சி உன் முன்ன நிறுத்தினா உனக்கு ஒகேவா?” என்றார் சவாலாக.
தந்தை இத்தனை சொல்லும்போது மறுத்தால் வருந்துவார் என்றும், தன் திருமணம் ஒன்றே இவரின் நிம்மதி என்றும் யோசித்தாள்தான். ஆனாலும் முன்பு நடந்தேறிய திருமண பேச்சுகள் கசப்பை கொடுத்திருக்க, திருமணம் செய்யும் எண்ணம் துளியும் இல்லை.
“என்னடா யோசிக்கிற? அப்பாவால முடியாதுனு நினைக்கிறியா?” என்று ரங்கசாமி தளர்ந்து கேட்க, “ச்சே அப்படியில்லப்பா” என உடனே மறுத்து, தந்தை விருப்பப்படியெல்லாம் யாரும் கிடைக்கப்போவதில்லை என்ற நம்பிக்கையோடு “ட்ரை பண்ணுங்கப்பா, உங்க கண்டிஷன்க்கு சம்மதிக்கிறவன் வந்தா கல்யாணம் செய்துக்குறேன்” என்றாள்.
மகிழ்ந்தவர், “சரிடாம்மா. நீ டீ குடி, நான் குளிக்கப்போறேன்” என்று அறைக்குள் போனார்.
*** *** *** *** *** *** *** *** *** *** ***
காலை ஏழு மணியிலிருந்தே மாணவர்கள் தட்டச்சு செய்ய வர ஆரம்பித்திடுவார்கள். அதோடு தற்போதிருக்கும் குடும்ப சூழலில் இப்படி விழாக்களில் பங்கேற்கும் மனநிலையில்லாமல் போகவே, பேத்தியின் போட்டியை நேரில் கண்டதில்லை மாதவன்.
இன்று போட்டியை காண பேத்தியோடு தங்கை மகள் சுகந்தியும் அழைக்கவே மாதவன் வர சம்மதிக்கவும் கல்பனாவையும் அழைத்துக்கொண்டு அனைவரும்தான் வந்திருந்தனர்.
மாவட்ட அளவிளான போட்டிதான். முதல் பரிசு வாங்கியது பதினைந்து வயது சிறுமி. கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களை விட ஜனனியே சிறியவள். இரண்டாம் பரிசென்றாலும் பெரிய பெண்களையெல்லாம் தன் திறமையால் பின்னுக்குத்தள்ளி அத்தனை பேர் முன்னிலையில் பயமில்லாமல் மயக்கும் குரலில் பாடி அனைவர் மனதையும் வென்றது அன்பரசுக்கு அத்தனை சந்தோசத்தை கொடுக்க, கொண்டாடி தீர்த்தான் மகளை.
“ப்பா… செகண்ட் ப்ரைஸ்தான் வாங்கியிருக்கேன். இதுக்குபோய் ரொம்ப பாராட்டுறிங்க” என்று மகள் சங்கடத்தோடு சொல்ல, “இருபத்தியெட்டு காம்ப்படேட்டரை பின்னுக்கு தள்ளி செகண்ட் ப்ரைஸ் வாங்குறது எவ்வளோ பெரிய விசயம்?
ஏழு வயசுல எனக்கெல்லாம் ஒரு லைன்கூட பாடத்தெரியாதுடா. அவ்வளோ ஏன்? நம்ம குடும்பத்துல யாருக்குமே இப்போ கூட உன் அளவுக்கு பாட தெரியாது. அப்போ என் ஜனனிம்மா எனக்கு ஸ்பெஷல்தானே?” என்றான் மகிழ்வோடு.
“ம்… என் அப்பாக்கு நான்தான் ஸ்பெஷல்” என்றாள் பெருமையாக.
தனக்கு வரப்போகிறவள் சரியில்லையென்றால் மகளின் வாழ்வு என்னாகுமோ என்று அன்பரசு கவலையோடு சொன்னது நினைவு வர தற்போதைய அப்பா மகள் பிணைப்பை பார்த்து சுகந்திக்கு கண்கள் கலங்கியது.
சுகந்தியைப் பார்த்தவன் விழிகள் நொடியில் அகன்று மகளிடம் சென்றது. ம்… இதைத்தான்… இந்த பரிதாபத்தைதான் எதிர்பார்த்தேன் வருங்கால அண்ணியாரே என உல்லாசத்தோடு நினைத்தவன், கார் வாங்க இதுதான் சரியான நேரம் என, “அப்பா எல்லாரும் சாப்பிட்டு ஷோரூம் போய்ட்டு வீட்டுக்கு போலாம்” என்றான்.
“ஷோ ரூமா?” என மாதவன் புரியாமல் வினவ, “என் அத்தை பொண்ணு முதல் முறையா ஒன்னு கேட்டுருக்கு. அதை வாங்கத்தான்”
“நானா? நான் என்ன கேட்டேன்?” என சுகந்தியும் புரியாமல் பார்க்க, “கார் கேட்டதானே? இன்னைக்கே புக் பண்ணிடலாம்” என்றான்.
“நான் எப்போடா கேட்டேன்” என முணங்கலோடு யோசித்தவளுக்கு நியாபகம் வர, “உனக்கு வாங்க தோணினா வாங்கு. என்னை ஏன்டா சாக்கு வைக்கிற? என்னவோ அந்த கார்ல தினமும் நான் உலா வர மாதிரி” என்றாள் முறைப்போடு.
“நிஜமா நீ சொல்லும்வரை தோணவேயில்ல சுகந்தி. காலைல எல்லாருமா டாக்ஸியில வரும்போதுதான் நீ சொன்னது சரினு நினைச்சேன். உன்னை கூப்பிட வரவும் பைக் விட கார் வசதியா இருக்கும்.
அதோட ஜனனிம்மாவும் இனி நிறைய காம்படேஷன்ல கலந்துப்பாங்க. நான் இல்லைனாலும் பாப்பாவோட நீ போக வசதியா இருக்கும்ல? நிஜம்மா உனக்காகவும் ஜனனிம்மாக்காகவும்தான் கார் வாங்கறேன்” என்றான் உண்மையாக.
அன்பரசின் பாசத்தில் நெகிழ்ந்தாள் சுகந்தி. “அம்மா ஜனனியை பாத்ரூம் கூட்டிட்டு போ, அப்போவே போகனும்னு சொன்னா” என இருவரையும் அனுப்பி வைத்து, “அந்த பாட்டு டீச்சர் உன்னையே பார்த்திட்டிருந்தா, என்ன விசயம்?” என்றாள் விசாரணையாக.
சுகந்தி சொன்னது உண்மைதான் ஆதலால் “அதை அவங்ககிட்ட கேட்டாதானே தெரியும்” என்றான் சிரிப்போடு.
“அடப்பாவி… நீ இளிக்கிறதை பார்த்தா உனக்கும் தெரிஞ்சிருக்கும் போலயே. எத்தனை நாளாடா நடக்குது?” என்றாள் அதிர்வாக.
“சுகந்தி சொல்றது உண்மையா அன்பு?” என மாதவன் ஆசையோடு கேட்க, “அப்பா உடனே கல்யாணம் லெவலுக்கு நினைக்காதிங்க. அந்த டீச்சர் என்னை பார்க்குறது எனக்கு தெரியும், அவ்வளோதான். சத்யன் கல்யாணம் செய்துக்கலனா கண்டிப்பா நானும் செய்துக்கமாட்டேன். எனக்கு என் பொண்ணு ரொம்ப முக்கியம்” என்றான் கண்டிப்போடு.
டீச்சர் மீது கோபமில்லாமல் அன்பு பேசியதால், அன்புக்கும் விருப்பமிருந்து மறைக்கிறானோ என “என்னடா சொல்ற? அதுக்குனு நீ கல்யாணம் செய்துக்காம இருப்பியா? ஜனனியை பார்த்துக்க இத்தனை பேர் இருக்கோம். உன் பொண்டாட்டிதான் பார்க்கனும்னு அவசியமில்ல. பாப்பாவை காரணம் காட்டி உன் வாழ்க்கையை தொலைச்சிடாத. பெரியவளான பின்ன அவளே உன்னை மன்னிக்கமாட்டா” என்றாள் எச்சரிக்கையாக.
“மன்னிக்கலனா பரவால்ல. எத்தனை பேர் இருந்தாலும் அப்பாம்மா ஸ்தானத்தை பூர்த்தி செய்ய முடியுமா? எனக்கு என் தங்கபொண்ணு எந்த குறையுமில்லாம வாழ்ந்தாள்னா போதும்” என அசால்ட்டாய் சொல்லி, மாதவனிடம் “சத்யன் கல்யாணம் செய்துக்காதவரை கண்டிப்பா நான் செய்துக்கமாட்டேன். என்னை நம்பியேது பொண்ணு பார்த்துடாதிங்கப்பா” என்றான் முடிவாக.
“அவன் செத்துப்போன பொண்டாட்டியை நினைச்சிட்டிருக்கட்டும், சின்னவன் ஏமாத்தினவளை நினைச்சிட்டிருக்கட்டும், நீ இவங்களோட மல்லுகட்டிட்டு இரு. மூனு பசங்களை பெத்தும் ஒருத்தன் கல்யாணத்தை கூட பார்க்காம உன் அம்மாவை போல நானும் போய் சேர்ந்துடறேன்” என கொந்தளித்தார் மாதவன்.
“கல்பனா ஜனனியோடு வர, “பாப்பா வரா. இந்த பேச்சை விடுங்க. எல்லாரும் கார் வாங்க கிளம்பலாம்” என்றான் மகிழ்வோடு.
மாதவன் இத்தனை கோபமாய் பேசியும், தனது திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லையே. உண்மையில் இப்படியே இருந்திடுவானோ என்று கவலையானது சுகந்திக்கு. ஜனனி இருப்பதால் ஏதும் பேசாமல் பயணித்தாள்.