ஷோரூமில், “எந்த கார் வாங்கலாம் சுகந்தி, ரொம்ப பணம் இல்ல, இருபத்தி அஞ்சு லட்சம் இருக்கு. அவ்வளோதான் அட்வான்ஸ் கொடுத்தாங்க, அதுக்கேத்த மாதிரி பாரு” என்றான் அன்பரசு.
அன்பரசு சொல்வது போல் பார்க்கலாம் என சுகந்தி யோசிக்க, ஷோரூமில் அன்பரசை கண்டுகொண்ட ஒருவன், “சார் நீங்கலாம் இப்படி சொல்லலாங்களா? இப்போ பெரிய பட்ஜட் படத்துல நடிச்சிட்டிருக்கிங்க. உங்க ரேன்ஜ்சுக்கு பாருங்க சார்” என்றான் இன்முகத்தோடு.
சுகந்திக்கு ஒருமாதிரி ஆகிட, “அன்பு… சத்யனுக்கு போன் செய்து அமௌண்ட் அனுப்ப சொல்லு, அந்த தம்பி சொல்றது சரிதானே? இப்போ போய்ட்டிருக்க படம் ரிலீஸ் ஆகிடுச்சுனா ரொம்ப பேமஸ் ஆகிடுவ, ஹோண்டாசிட்டி கார்ல போனா நல்லாவா இருக்கும்?” என்றாள் யோசனையாக.
“யாரோ என்னவோ நினைக்கட்டும், என் ஜனனிம்மாவைப் பத்தி கவலைப்படாதவன்கிட்ட என்னால பணம் கேட்க முடியாது. என்னால எது முடியுமோ அதை வாங்கிகொடுப்பேன். நிறைய சம்பாதிக்கும்போது ரிச்சா வாங்கிக்கலாம்” என்றான்.
“சரி அவன்கிட்ட வேணாம், சரவணன்கிட்ட கேளு”
“அவன் மட்டும் என்ன? எவளோ ஒருத்தி ஏமாத்திட்டானு… இல்ல இல்ல இவன் எவகிட்டயோ ஏமார்ந்துட்டு குடும்பத்தை பத்தி யோசிக்காம இருக்கான். அவனுக்கா எப்போ புத்தி வந்து அப்பாவோட இருக்கலாம்னு நினைக்கிறானோ அதுவரை அவன்கிட்டயும் ஏதும் வாங்கிக்கமாட்டேன்” என்றான் கோபமாக.
“எதை சொன்னாலும் குறை கண்டுபிடிக்கிறது” என முறைத்தாலும் அன்பு சொன்னது சரியெனப்பட, “சரி அப்போ இருக்குற பணத்தை அட்வான்ஸ் கொடுத்துடு, எப்படியாவது பணத்தை புரட்டிடலாம். பி.எம்.டபள்யு, பென்ஸ், இப்படி எதாவது வாங்கு” என்றாள் அன்பரசின் கௌரவத்திற்காக.
“உனக்காகவும் ஜனனிக்காகவும்தான் கார். உன் விருப்பம் அதான்னா அப்படியே வாங்கிக்கலாம்” என்றவன், பின்னே தான் பரிந்துரைத்த காரின் விலை தெரிந்ததும் சுகந்தி மறுத்தும் கூட, “பதினைஞ்சு லட்சம்தானே அதிகமாகுது? பார்த்துக்கலாம் விடு” என்றவன், மீதி பணத்தை ஒரு வாரத்திற்குள் கட்டிவிட்டு காரை எடுத்துக்கொள்வதாக சொல்லி பென்ஸ் காரையே புக் செய்தான் சுகந்தி பெயரில்.
அதற்கும் சுகந்தி மறுக்க, “நான் எப்போ வெளில கிளம்புவேனு தெரியாது. அப்பாக்கும் கார் ஓட்ட தெரியாது. நீதான் இங்கயிருந்து கார் எடுக்கனும். அதான் உன் பேர்ல புக் பண்றேன். ரொம்ப அலட்டிக்காம ஃபார்ம் ஃபில்லப் பண்ணு” என்று சிறு வயதில் சுகந்தியை மிரட்டுவது போல மிரட்டி சம்மதிக்க வைத்தான்.
வீட்டிற்கு வந்ததும், “ஏன் அன்பு… அப்போ உனக்கு என்மேலயும்தானே கோபம் இருக்கும்?” என்றாள் சன்னக்குரலில்.
“கோபம்லாம் இல்ல, நிறைய வருத்தம் இருக்கு” என்க, சுகந்தி முகம் வாடினாள்.
“நீ அவனை விட்டுட்டு வந்தது தப்பில்ல. ஸ்ட்ராங்கான காரணம் இல்லாம இந்த முடிவெடுத்திருக்கமாட்ட. ஆனா எதையோ பறிகொடுத்தமாதிரி எதுக்கு வீட்டுக்குள்ள அடைஞ்சிருக்க? உன்னை கஷ்டப்படுத்தினவன் இன்னொரு கல்யாணம் செய்து சந்தோசமா வாழறான். எங்க ஆசைக்காக மறுமணம் செய்துக்கலனாலும் பரவால்ல, முன்னமாதிரி உனக்கு பிடிச்சதை செய்துட்டு உனக்கான வாழ்க்கையை வாழலாமில்ல?” என்றான் ஆற்றாமையாக.
“எது உனக்கு பிடிச்சது? நீ சுடிதார் போடுறதை நிறுத்தி எத்தனை வருசமாகுது? முன்னமாதிரி இங்க வரியா? இல்ல என்கிட்டதான் பேசுறியா? நானா பேசினா பதில் மட்டும் வரும்” என்றான் கடுப்போடு.
“எல்லாரும் கல்யாணத்தை பத்தி பேசவும்தான் அப்படி இருந்தேன். இப்போதான் நீ பேசக்கூடாதுனு சொல்லிட்டல்ல? இனி முன்னமாதிரி சந்தோசமா இருக்கேன். சரியா?” என்றாள் சமாதானமாக.
“ம்… பார்க்கலாம் பார்க்கலாம்” என்று இவனும் கோபத்தை விடுத்து, “நான் வீட்டுல இல்லாத நேரம் ஜனனிம்மா விசயத்துல எனக்கு ஹெல்ப் பண்ணுவதானே?” என்றான் எதிர்பார்ப்போடு.
சுகந்தி சம்மதமாய் தலையசைக்க, ஜனனியை வைத்தே சுகந்தியை நிரந்தரமாக நம் வீட்டிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். ஜனனியை விட்டு சுகந்தியாலேயே பிரிய முடியாத அளவிற்கு ஜனனியை இவளோடு ஒன்ற வைக்கவேண்டும் என நினைத்துக்கொண்டான்.
பின்னே அடுத்தநாள் சுகந்தியை அழைத்துச்சென்று அவள் வீட்டில் விட்டவன், “சேகர் ரொம்ப வருசத்துக்கு முன்ன டிரைவிங் க்ளாஸ் போனப்ப கார் ஓட்டினது, இப்போ எப்படி ஓட்டும்னு தெரியாது. சுகந்தியை தினமும் அரைமணி நேரம் கார் ஓட்ட விடு. உன் தங்கையை நம்பித்தான் கார் புக் பண்ணியிருக்கேன்” என்றான்.
“கார் வாங்க மீதி பணத்துக்கு சத்யன், சரவணன்கிட்டதான் வாங்கல. என்கிட்டயாவது வாங்குவியா? வெளில கடன் வாங்குனா வட்டி அதிகமாகும்” என்றாள் தயக்கத்தோடு.
“எவ்வளோ வச்சிருக்க?” என்றான் ஆர்வமாக.
“பணமெல்லாம் இல்ல. என் நகைகள் இருக்கு. அதோட அம்மாவோடதும் இருபது பவுன் இருக்கு”
“இப்போல்லாம் சுகந்தியை அவ இவனு சொல்றதில்ல போல” என்றார் அடுத்த ஆச்சர்யமாக.
தந்தைக்கு சந்தேகம் வந்துவிட்டது என்றுணர்ந்தவன் “அப்போ சின்ன பையன்ல சொன்னேன், இப்போ அப்படி சொன்னா என் பொண்ணு நான் சொல்றதை போல சுகந்தியை மரியாதையில்லாம பேச பழகிடுவால்ல? அதான் முடிஞ்சவரை மரியாதையோட பேசுறேன்” என்றான் தடுமாறாமல்.
“ஹம்” என பெருமூச்சிழுத்து, “சுகந்தி விசயத்துல என்னவோ ப்ளான் போடுற. நிச்சயம் அது சுகந்திக்கு நல்லதாதான் இருக்கும். ஆனா ஏதும் அபத்தமாகிடாம செய்து முடி” என்று நகையை வாங்கி பத்திரப்படுத்தினார் மாதவன்.
சத்யனுக்கு கொடுத்த ஒரு மாத கெடு முடிந்து ஒரு வாரம் முடிந்திருக்க, பதிலேதும் சொல்லாத அண்ணன் மேல் கோபம் வந்தபோதும், லேட்டானாலும் சம்மதிச்சிட்டானா பரவால்ல, கடவுளே சம்மதிக்கனும் என்ற பல யோசனையோடு இரண்டு நாள் வீட்டிலிருந்தவன் கால்ஷீட் கொடுத்த தேதியில் நடித்துக் கொடுக்க பட பிடிப்பிற்கு கிளம்பினான்.
*** *** *** ***
அடுத்த நாள் காலை ஒன்பது மணிபோல் தந்தைக்கு அழைத்தான் அன்பரசு. மாதவன் அழைப்பை ஏற்க, “அப்பா… காம்ப்ளக்ஸ் ஓனர் என்கிட்ட எதோ பேசனும்னு சொன்னார்ப்பா. அடுத்தநாள் காம்பளக்ஸ்ல பேசலாம்னு சொல்லி அனுப்பினேன். ஆனா மறந்துட்டேன். அவரை போய் பாருப்பா, எதாவது அர்ஜண்ட் விசயமா இருக்கப்போகுது” என்றான் அக்கறையாக.
“உன்கிட்ட பேசனும்னு சொன்னாரா?” என யோசனையோடு முணுமுணுத்து, “எனக்கும் அவருக்கும் ஆகாதுடா. நான் போய் எப்படி பேச?” என்றார் சங்கடமாக.
“அதெல்லாம் முன்னதான்ப்பா. கஜேந்திரன் பிரச்சனைல நான் உதவி செய்ததுலயிருந்து மாறிட்டார். நீ போய் கேளேன்”
இத்தனை வருடத்தில் இருவரும் இயல்பாக பேசிக்கொண்டதே இல்லை ஆதலால் தற்பொழுதும் மாதவன் தயங்க, “சரி வேணாம், ஆதிராஜ்க்கு கால் பண்ணி விசாரிக்க சொல்றேன்” என்று ஆதிராஜிற்கு அழைத்தான்.
பின்னே அன்பரசு சொன்னது போல ரங்கசாமியின் எண்ணை அன்பரசிற்கு ஆதிராஜ் அனுப்பவே, வாங்கியதும் ரங்கசாமிக்கு அழைத்தான்.
ரங்கசாமி “ஹலோ” என்றதும், “சாரிங்க ஐயா, ஒர்க் டென்ஷன்ல உங்களை மீட் பண்ண மறந்துட்டேன். இப்போ வெளில இருக்கேன், வர இன்னும் பத்து நாளைக்கு மேல ஆகும்” என்றான் வருத்தமாக.
“பரவால்ல அன்பரசு, நீ வரும்போது பேசிக்கலாம்” என்றார்.
“எதாவது அவசர தேவைனா எனக்கு கால் பண்ணுங்க, நான் இல்லனாலும் ஆதியை அனுப்பிவிடறேன்” என்றதும், ரங்கசாமி சம்மதிக்கவே, இணைப்பை துண்டித்தான்.
நேற்று சொன்னதை நியாபகம் வைத்து தனக்கு அழைத்து விசாரித்ததில் நெகிழ்ந்தவர், இப்படி பையனை தனது தயக்கத்தால் விட்டுவிடக்கூடாது. மாதவனிடத்தில் தயக்கம் உடைத்து சொல்ல வேண்டும் என திடமாய் நினைத்தார்.
பிறகு நல்ல நாள் பார்த்து நான்கு நாள் கழித்து ஐந்தாம் நாள் மாதவனின் டைப் இன்ஸ்டியூட்டிற்கு சென்றார்.
வழக்கம்போல் புகார் சொல்ல வந்திருப்பாரோ? என யோசித்தாலும் ரங்கசாமி மகனிடம் பேசியதை நினைத்து அதுபற்றி இருக்குமோ என்ற யோசனையும் வர, முதல் முறையாக முறைக்காமல் “வாங்க” என்றார் மாதவன்.
“பசங்க அவங்க வேலையை செய்வாங்க, இப்போவே பேசலாம், அப்படி வாங்க” என மேலே ஜிம்மிற்கு செல்லும் நீண்ட பாதை பக்கம் அழைத்துச்சென்றார்.
எப்படி ஆரம்பிப்பதென ரங்கசாமி தயங்க, “வெளில நிற்குறோம்னு யோசிக்காதிங்க, ஜிம்ல பசங்க ஒர்க்கவுட் பண்ணிட்டிருக்காங்க. எனக்குனு தனியாலாம் இங்க ரூம் இல்லைங்க” என இவ்விடத்து நிலையை சொன்னார் மாதவன்.
“அது பரவால்லங்க, நான் பேச வந்த விசயம்” என தயங்கி, பின்னே சில நொடி கழித்து “என் பொண்ணை இரண்டொரு இடத்துல கேட்டாங்க. எல்லாரும் என் சொத்தை மனசுல வச்சு கேட்குறாங்க. எங்க காலத்துக்கப்புறமும் என் மகளை நல்லபடியா வச்சி காப்பாத்துறவனை தேடிட்டிருக்கேன்” என்றவர், “தேடிட்டு இருந்தேன்” என திருத்தினார்.
“எனக்கு தெரிஞ்ச புரோகர் சொல்லட்டுங்களா?” என மாதவன் கேட்க, “இல்ல வேணாம்” என அவசரமாய் மறுத்து, “என் மகளை உங்க வீட்டுக்கு மருமகளாக்கிப்பிங்களா?” என்றார் தயக்கம் உடைத்து.
அதிர்ச்சியில் மாதவன் இருக்க, பெரிய மகனுக்கென நினைத்திடுவாரோ என பதறி, “அன்பரசுக்கு சொல்றேன்ங்க” என்றார் திருத்தமாக.
“அச்சோ அப்படியில்லங்க. இப்படி கேட்பிங்கனு உண்மையா எதிர்பார்க்கல” என்றார்.
ரங்கசாமி அமைதிகாக்க, அவரின் தவிப்பறிந்து, “எங்க குடும்ப கதை உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன், பெரியவனுக்கு கல்யாணம் ஆகாம நான் செய்துக்கமாட்டேனு அன்பு பிடிவாதமா சொல்லிட்டான். பெரியவன் மறு கல்யாணத்தை பத்தி யோசிக்கிற மாதிரியே தெரியல” என்றதும், நிராகரிப்பதற்காக சொல்கிறாரா என்ற சந்தேகத்தில் ரங்கசாமியின் முகம் மொத்தமாய் வாடியது.
“அன்பு உதவி செய்ததால கேட்கிறிங்க போல. அந்த காலம் போல பெரியவங்க முடிவு செய்ய முடியாதில்லைங்களா? அன்புக்கும் உங்க பொண்ணையும், உங்க பொண்ணுக்கு என் மகனையும் பிடிக்கனும். முக்கியமா நீங்க சைவம், நாங்க அசைவம். எங்க குடும்பத்தோட உங்க மகளால ஒன்றி போக முடியுமா தெரியாது.
என் பேத்தியை தன் மகளா வளர்க்குறான் அன்பு. அன்பை கட்டிக்கப்போறவளுக்கும் இதுல சம்மதம் இருக்கனும். இல்லைனா பின்னாடி பிரச்சனை வரும். இப்படி நிறைய யோசிக்க வேண்டியிருக்கு. நான் அன்புகிட்ட கேட்டுட்டு சொல்றேன். நீங்களும் நல்லா யோசிச்சிக்கோங்க” என்றார் பொறுமையாக.
மொத்தமாய் நிராகரிக்காமல் மாதவன் பேசியது நிம்மதியை கொடுக்கவே, “இப்படி யோசிப்பிங்கன்றதாலதான் உங்க குடும்பத்துல பொண்ணை கொடுக்க நினைச்சேன், என் பொண்ணு நான் சொன்னா சம்மதிப்பா. உங்க மகன்கிட்ட கேட்டுட்டு நல்ல பதிலா சொல்லுங்க” என்று இன்முகத்தோடு கிளம்பினார் ரங்கசாமி.
வீட்டிற்கு வந்ததும் மனைவியிடம் விசயத்தை சொல்ல, “நிஜமாவே கேட்டுட்டிங்களா?” என வியந்து, முல்லைகிட்ட எப்போ சொல்லப்போறிங்க? அவளுக்கு பிடிக்குமா? அன்பு அப்பா என்ன சொன்னார்?” என அன்னை தந்தையிடம் கேட்டதையும், அதற்கு தந்தையின் பதிலையும் தனதறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தாள் முல்லை.