Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Isaiyindri ennaven

இசையின்றி என்னாவேன் 13 (3)

எழிலிடம் பேசிவிட்டு இசையை அழைத்த முல்லை அவளிடம் தமிழுக்கும் தந்தைக்கும் இடையேயான பிரச்சினையை மேலோட்டமாக கூறி, “நீங்க அண்ணாக்கு கொஞ்சம் கால் பண்ணி பாக்குறீங்களா” என்று கோர “நான் எப்படி முல்லை.. எழில் அண்ணா கால் பண்ணியே எடுக்கல.. நான் கால் பண்ணா எடுப்பாங்களா” என தயக்கத்துடன் இழுத்தாள் இன்னிசை.

“எனக்கு அவன இப்படி பாக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு கா.. என்கிட்டயும் சரியா பேச மாட்டிங்கிறான் அதான் உங்க கிட்ட கேட்கிறேன்.. ஒரே ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்களேன்.. எனக்காக ப்ளீஸ்” என்று அவள் கிட்ட தட்ட கெஞ்ச அதற்கு மேல் எப்படி மறுக்க? ஒத்துக்கொண்டாள் இன்னிசை.

“அக்கா அவன் ஃபோன எடுத்தா நான் சொல்லி பேசுற மாதிரி பேசாதீங்க.. நீங்களே கேஷ்சுவலா பேசுற மாதிரி பேசுங்க” என முல்லை கூற அவளும் சரியென கூறி அழைப்பை துண்டித்தாள்.

முல்லையிடம் பேசி முடித்து தமிழை அழைத்த இன்னிசைக்கு அவன் அழைப்பை ஏற்பான் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லை.



Advertisement

சிந்தனைகளற்று விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான் தமிழ். ஃபோன் வைப்ரேட் ஆகவும் முதலில் எழிலாக இருக்கக்கூடும் என அலட்சியபடுத்திவன் பின் ஏதோ ஒர் உந்துதலில் எடுத்து பார்க்க இசையிடம் இருந்து அழைப்பு. மெய்யாக அதை ஏற்று பேசும் மனநிலையில் அவன் இல்லை. அதே சமயம் அத்தனை எளிதில் அவள் அழைப்பை அலட்சியம் செய்யவும் மனம் வரவில்லை. இருக்காதா எத்தனை நாட்கள் இந்த அழைப்புகளுக்கெல்லாம் ஏக்கத்துடன் காத்திருந்திருக்கிறான்?

அழைப்பை முடியும் தருவாயில் ஏற்றவன், “சொல்லு இசை” என சோர்ந்த குரலில் கேட்க அவன் அழைப்பை ஏற்றதை நம்ப முடியாமல் மீண்டும் ஒரு முறை ஃபோனை சரிப்பார்த்தாள் இன்னிசை.

“ஹலோ..”. அவன் குரலில் தன் ஆராய்ச்சியை கைவிட்டவள், “ஃபிரீயா இருங்கீங்களா சீனியர்..” என கேட்க

Advertisement

“ம்ம் இருக்கேன் இசை.. என்ன விஷயம் சொல்லு” என்றவன் குரலில் எப்போதும் அவளுடன் பேசும் உற்சாகமோ ஆர்வமோ துளியுமில்லை.

Advertisement

“சும்மா தான் கால் பண்ணேன். சாப்டீங்களா?” என அவள் பேச்சை வளர்க்க இவனோ அவளின் கேள்விகளுக்கு பதில் மட்டுமே அளித்துக் கொண்டிருந்தான், பேச்சிற்கு கூட அவளிடம் திருப்பி கேட்கவில்லை. அதிலே அவன் மனநிலை ஓர் அளவு அவளுக்கு புரிந்தது.

“என்னாச்சு ரொம்ப டல்லா பேசுறீங்க?” அவன் மனம்விட்டு பேசினால் ஆறுதல் கூற நினைத்து அவள் கேட்க “ஒன்னுமில்ல இசை” என மழுப்பியவன் பேச்சை திசை திருப்பினான். தற்போது மனம் சற்று மட்டுப்பட்டிருக்க மீண்டும் அதை நினைவு கூற விரும்பவில்லை. தனிப்பட்ட விஷயத்தை தன்னுடன் பகிர பிடிக்கவில்லையோ என எண்ணி இசையும் ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை.

முல்லையின் வேண்டுகோளுக்கு இணங்க வேறு ஏதாவது பேசி அவன் மனநிலையை மாற்ற நினைத்தாள். ஆனால் அதற்கு அவன் ஒத்துழைத்தால் தானே? தமிழிடம் இயல்பான பேச்சுகள் இல்லை. அந்த ஐந்து நிமிட உரையாடலில் இவளே அதிகமாக பேச அதற்கு பதில்கள் மட்டுமே அவனிடமிருந்து.

Advertisement

அவன் ஏதோ கட்டாயத்தில் கடமைக்காக பேசுவதை போலிருக்க கோவம் கொண்டவள், “சரி சீனியர்.. பாய்.. குட் நைட்.. நான் வைக்கிறேன்” என அழைப்பை துண்டிக்க நினைத்தாள். பிடி குடுக்காமல் பேசுபவனிடம் வேறென்ன செய்ய?

சட்டென தன் எண்ணங்களை எட்டி நிறுத்தியவன், “அதுக்குள்ளயா..” என்று எப்போதும் போல் ஏக்கத்துடன் கேட்க ‘நீங்க பேசுற மனநிலையில இல்லையோ’ என்ற அர்த்தத்தில் பதிலளிக்க நினைத்தவள், “உங்களுக்கு என்கிட்ட பேச புடிக்கல போல” என்றுவிட்டாள்.

அவ்வளவு தான் மற்றவைகள் எல்லாம் பின் சென்றுவிட பிராதாமாகிவிட்டாள் இன்னிசை!

“ஏன் இசை இப்படி எல்லாம் பேசுற..” அவன் ஆதங்கமாய் அதட்ட “பின்ன நீங்க இப்படி பேசுனா நான் என்ன நினைக்க?” என்றாள் கோவமாக.

“சாரி இசை.. மச்.. நான் ஏதோ டென்ஷன்ல.. நான் உன்ன அவாய்ட் பண்ண நினைக்கல” தடுமாறியவன் மீண்டும் “இப்படி பேசாத எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..” என்று வருந்த “அப்போ எனக்கும் அப்படித்தானே இருக்கும்..” பட்டென கூறியவள் அமைதியாகிவிட்டாள்.

“ஏதாவது பேசு இசை.. ஐம் ரியலி சாரி.. நான் இனி இப்படி பண்ண மாட்டேன்” மொத்தமாய் சரணடைந்தவன் அவளை சமாதானம் செய்ய அவனை வெகு நேரம் கெஞ்ச விடாமல் மனம் இறங்கிவிட்டாள்.

“போதும் எவ்ளோ டைம் சாரி சொல்லுவீங்க.. அது நீங்க ஏதோ கடமைக்கு பேசுற மாதிரி பேசவும் எனக்கு ஒரு மாதிரி ஆயிருச்சு.. அதான் நானும் கொஞ்சம் கோவப்பட்டுட்டேன்.. நீங்க இவ்ளோ சீரியஸ் ஆகாதீங்க” என்றாள்.

“எல்லா எங்க அப்பா பண்ண வேலை..” கடுப்பாக முணுமுணுத்தவன் அவனாகவே தந்தையுடனான சண்டையை முற்றிலுமாக கூறினான். முல்லை இத்தனை விவரமாக அவளிடம் விளக்கவில்லை மேலோட்டமாக தான் கூறியிருந்தாள்.

இசைக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. தமிழ் அரியர் இருப்பதை மறைத்தது தவறு தான் அதற்காக இந்த சாதாரண விஷயத்தை அன்பு இவ்வளவு பெரிதுபடுத்தியிருக்க வேண்டாம் என்று நினைத்தாள். மனம் அவரை தன்னால் தன் தந்தையுடன் ஒப்பிட்டது. பேரறிவாளன் அப்படி இல்லையே! ஒருவேளை இவளே அரியர் வைத்தாலும் “விடு டா அடுத்த எக்ஸாம்ல பாத்துக்கலாம்” என ஊக்குவிப்பாரே தவிர ஒருபோதும் அவள் மனம் நோகும்படி பேசமாட்டார். அப்படிபட்டவரின் மகளுக்கு அன்பின் அடாவடியான அணுகுமுறை பிடிக்கவில்லை.

அவன் தந்தையை பற்றி அவனிடமே எப்படி குறை சொல்ல? “அப்பா தான சீனியர்.. ஏதோ கோவத்துல பேசியிருப்பாங்க விடுங்க” என்று சமாதானம் செய்தாள்.

“எப்படி விட சொல்ற?.. சின்ன பொய் சொன்னா நான் ஒழுக்கங்கெட்டவன்னு அர்த்தமா? இவரு என் ஒழுக்கத்த கேள்வி கேப்பாரா? நீயே காலேஜ்ல பாக்குறல பசங்கெல்லாம் எப்படி இருக்காங்கன்னு.. சொல்லு நான் அப்படியா இருக்கேன்? எங்கிட்ட ஏதாவது கெட்ட பழக்கம் இருக்கா? சொல்லு” அவன் ஆவேசமாக கேட்ட “நீங்க அவங்கள மாதிரியெல்லாம் இல்ல.. உங்க அப்பா அப்படி பேசுனது தப்பு தான்.. ஆனா அதுக்காக நீங்க ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க?” என்றாள். பொதுவாக தந்தையின் பேச்சுக்கெல்லாம் வருந்துபவன் இல்லையே அவன்.

“எப்படி இசை டென்ஷனாகம இருக்க சொல்ற? ஆமா நான் படிக்க மாட்டேன் லெத்தார்ஜிக்கா(lethargic) தான் இருப்பேன். அதுக்குனு ஏனோ தானோ எப்படி வேணா இருக்கலாம்னு இருக்கிறவன் கிடையாது. எனக்குனு வாழ்கைல சில வரைமுறை இருக்கு. இந்நாள் வரை அதுக்கு உட்பட்டு என் மனசாட்சிக்கு உண்மையா ஒழுக்கமா தான் இருக்கேன். இப்படி இருக்கிறப்போவே இவரு இந்த பேச்சு பேசுறாரே நான் மட்டும் மத்தவங்கள மாதிரியெல்லாம் இருந்தா இவரு என்ன பண்ணுவாரு?”

“அந்த டீன் பையன பாரு.. குடுத்து வச்சவன்.. அவன் காலேஜ்ல பண்ற அத்தன அழுச்சாட்டியத்துக்கும் அவங்க அப்பன் கண்ண மூடிட்டு சப்போர்ட் பண்றான்.. ஆனா எங்க அப்பா?” என்று பெருமூச்சு விட்டவன் “நான் நிஜமாவே இவங்க பையனா.. இல்ல என்ன எங்காவது தவுட்டுக்கு வாங்கீருப்பாங்களானு எனக்கு சந்தேகமா இருக்கு..” என்றான்‌. வாக்கியத்தில் இருந்த கேலி வார்த்தைகளில் இல்லை.

“ஏன் இப்படி பேசுறீங்க?”

“உனக்கு சொன்ன புரியாது இசை.. என் இடத்துல இருந்து பார்த்தா தான் தெரியும். காலையில தான் இதே விஷயத்த அம்மா கிட்ட சொன்னேன்.. திட்டுனாங்க ரெண்டு அடி அடிச்சாங்க.. அதை அப்பவே மறந்துட்டாங்க.. ஆனா எங்க அப்பா அப்படியில்ல இனி புதுசா ஏதாவது கிடைக்கிற வரைக்கும் இதை சொல்லியே குத்திக் காட்டுவாரு” என்றவன் மேலும் தன் மனத்தாங்கலை எல்லாம் அவளிடம் கொட்டி தீர்த்தான்.

இன்னிசை அவன் பேச்சில் இடைபுகாமல் இடையிடையே ஆறுதல் மட்டும் கூறி சமாதானம் செய்தாள். இத்தனை நேரம் அவன் புலம்பல்களை கேட்டு இருப்பக்கமும் சிந்தித்தில் அவளுக்கு புரிந்தது ஒன்றுதான் அன்பரசன் தன் மகன் பொறுப்பாக ஒழுக்கமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார் ஆனால் அதை அவனிடம் உணர்த்தும் முறையில் தான் தவறிவிடுகிறார்.

தமிழ் தன்மையாக சொன்னாலே கேட்டுக் கொள்வான், அதே இவர் அதிகாரமாகவோ ஆதிக்கமாகவோ கூறும் போது அவன் ஈகோ தலை தூக்க ஏட்டிட்கு போட்டியாக ஏதாவது செய்துவிடுகிறான். ஆகாமொத்தத்தில் ஒரே குணாதிசயங்கள் கொண்ட தந்தை மகனுக்குள் சற்றும் ஒத்துப் போவதில்லை.

தன் உள்ள குமுறல்களை கொட்டித் தீர்த்தவன் மீண்டும் இயல்பாகியிருக்க, “நான் மட்டும் உங்க கிட்ட எல்லாமே ஷேர் பண்ணிக்கணும் ஆனா நீங்க எதுவும் சொல்ல மாட்டீங்க?” என அவனுடன் உரிமையாக சண்டையிட்டாள் இசை. ‘என் துயரங்களில் துணையிருந்தவனுக்கு நானும் துணையிருப்பேன்’ என்ற எண்ணம் மட்டுமே அதை தாண்டி அவனை போல் வேறேதும் இல்லை.

இசையின் இந்த உரிமையான பேச்சு அவன் இளகிய மனதிற்கு மேலும் இதமளிக்க மெல்ல முறுவலித்தவன், “இசைஐஐ…” என்று இழுக்க “என்ன இசை?” என்றாள் கடுப்பாக.

“வர வர உனக்கு ரொம்ப கோவம் வருது..”

“பேச்ச மாத்தாதீங்க.. கேட்க கேள்விக்கு பதில்”

“சொல்ல கூடாதுனு இல்ல.. சொல்ல தோணல.. அது.. அந்த நேரம் ஒரு மாதிரி எல்லாமே வெறுப்பா இருந்துச்சு..” என தடுமாறியவனால் தன் உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை விவரிக்க தெரியவில்லை. “எனக்கு சரியா சொல்ல தெரியல இசை.. தனியா இருக்கணும்னு தோணிச்சு அவ்ளோ தான்..” என்றவன் “இப்போ தானே பேசி முடிச்சோம் திரும்ப திரும்ப அதை பத்தி பேச வேண்டாமே” என்றான்.

அவளிடம் உரையாடிக் கொண்டே அறையிலிருந்த சாளரத்தின் கதவுகள் திறந்தான். அந்த இரவு நேர ஈரக்காற்று அவன் முகத்தில் மோதி மேனியை குளிரூட்டியது. ஆகாயத்தை நிறைத்த நிலவின் ஒளி அகத்தையும் அமைதியாக்க அந்த சூழலை ரசித்தி நின்றவனுக்கு மனக்கசப்புகள் நீங்கி மனதில் ஓர் மோனநிலை. அதை மீண்டும் அவளுடன் வாதிட்டு கெடுக்க விரும்பவில்லை.

அவள் அமைதியாக இருக்க, “இசை…” என்று இசையாய் அழைத்தான்.

“ம்ம்”

“என் மேல கோவமா..?” என்றவனின் வருடும் குரலில் சற்று தடுமாறியவள், “அது.. கோ.. கோவமெல்லாம் இல்ல.. இதுல கோவப்பட என்ன இருக்கு.. எனக்கு புரியுது” என்றாள்.

“நெஜமா?”

“நெஜமா..” என்று அவள் உறுதியளிக்க, “அப்போ நான் ஒன்னு கேக்கவா?..” என்றான் ஆவலாக.

“ஹான் கேள்ளுங்க..” என்றவளுக்கோ என்ன வில்லங்கமாக கேட்க போகிறான் என்ற எண்ணம்.

“அது.. இசை.. இன்னிக்கு கொஸ்டின் பேப்பர்ஸ் குடுத்துட்டு போகும்போது என்னமோ சொன்னியே.. இல்ல இல்ல என்னமோ திட்டுனியே என்ன‌ திட்டுன?” என்றவனின் ஆர்வத்தில் சட்டென சிரித்து விட்டாள்.

“சிரிக்காத இசை..” என்றதும் மேலும் சிரித்தவள், “இதுக்கு தான் இந்த பில்டப்பா” என்றாள் சிரிப்புடனே.

“சரி சரி விடு.. அப்போ என்ன சொன்ன..?” என்றவனிடம் “என்ன சொன்னேன் எனக்கு நியாபகம் இல்லையே?” என்றாள் அவன் உரைத்த தொனியிலே.

“இசை… ப்ளீஸ் விளையாடாத.. என்ன சொன்ன?”

“என்னமோ சொன்னேன்…” என்றாள் அப்போதும் அசட்டையாக.

“இசை…” அவன் கடுப்பானதும் தன் விளையாட்டை கைவிட்டவள், “யூ ஆர் சச் அ பிவேரிகேட்டர்” (You’re such a prevaricator) என்றாள்.

“பிவேரிகேட்டர்?.. அது என்ன இங்கிலிஷ் கெட்ட வார்த்தையா?”

“ச்சீ புத்தி எங்க போகுது பாரு” என  கடுப்பானவள், “பாய்.. நான் வைக்கிறேன்” என்றாள்.

“அதுக்குள்ளையா..” என இழுத்தவன் “வைக்காத..” என்க “வச்சிட்டேன்..” என்று சிரித்தவள் “கூகுள் பண்ணுங்க.. பாய்.. குட் நைட்” என அழைப்பை துண்டித்து விட்டாள்.

அவள் அழைப்பை துண்டித்ததும் அவசர அவசரமாக அதற்கு அர்த்தம் தேடினான். “புளுகன்/ புரளிக்காரன் / பித்தலாட்ட பேர்வழி” போன்ற அர்த்தங்கள் வர “அடிப்பாவி!!.. ஓவரா இங்கிலிஷ் பேசுறாளே… உனக்கு செட் ஆகுமாடா தமிழு? ஹம்… எங்க போய் முடியப்போகுதோ!” என புலம்பியபடி  பெருமூச்சு விட்டான்.

இது போன எப்பியோட மீதி.. அடுத்த எப்பி டைப் பண்ணீட்டு இருக்கேன்.. முடிச்சுட்டா ராத்திரி போடுறேன் இல்ல காலையில போடுறேன் ஃபிரண்ட்ஸ்...

Really sorry for your inconvenience becoz of election exams are preponed so romba tight schedule. எனக்கு தெரியுது நிறைய நிறைய excuse கேக்குறேன்.. ஆனா எழுத போறது ஒரு தடவ சோ என்னால முடிஞ்ச அளவுக்கு உருப்படியா எழுதனும்னு நினைச்சு ஒவ்வொரு எப்பிசோடுக்கும் ரொம்ப நேரம் எடுத்துக்கிறேன். (இப்பவும் அது எந்த அளவுக்கு இருக்குனு தெரியல) இதுனால கதையோட இன்ட்ரெஸ்ட் குறையும்னு புரியுது.. ஆனா எனக்கு வேற வழி தெரியல ஆத்தா.. 🙃! சோ உங்களுக்கு படிக்க கஷ்டமா இருந்தா கதை முடிஞ்சதும் படிங்க.. 

Thank you 🫶🏼.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!