4.17- திக் திக் நிமிடங்கள்
கயலும் கால்டனும் உணவருந்த ஆரம்பிக்கையில் கேட்ட அந்த துப்பாக்கிச் சத்தம், அந்த மால் மொத்தத்தையும் கலவரப்படுத்தியது. மக்கள் அனைவரும் அங்குமிங்கும் தெறித்து ஓடத் துவங்கினர். கால்டன் கயலைப் பைகளை எடுத்துக்கொண்டு எழச்சொன்னார். அவள் கையை இறுகப் பற்றிக்கொண்டு திக்குத் தெரியாமல் ஓடத் துவங்கினார்.
செல்லும் வழியில், மன அழுத்தத்தில் இருக்கும் ஒருத்தன் துப்பாக்கியால் சுடத் துவங்கியிருக்கிறான் என்பதை விசாரித்து அறிந்தனர். இது அமெரிக்காவில் அடிக்கடி நிகழும் ஒன்றுதான் என்றாலும் பேராபத்தானதல்லவா.!!! ஒரு வயோதிகரை அவன் சுட்டுக்கொன்றுவிட்டான் என்ற செய்தியும் கிடைத்தது. ஆனால் சரியாக அவன் எந்த தளத்தில் இருக்கிறான் என்பது பற்றி புரளிகளே கிடைத்தன. துப்பாக்கி சத்தம் இவர்கள் இருந்த 10ஆவது தளத்திற்கு அருகில் தான் கேட்டது என்பதால் ஆபத்தின் தீவிரத்தை இருவருமே உணர்ந்திருந்தனர்.
பதட்டத்தில் எங்கு மறைவதென்று நோட்டம் விட்டு ஒரு உணவகத்தின் கவுண்ட்டரின் பின்னால் சென்று மறையத் திட்டமிட்டு கால்டன் கயலை இழுத்துக்கொண்டு சென்ற போது மீண்டும் துப்பாக்கிச் சத்தம். இம்முறை தொடர்ச்சியாய் இரு தடவைகள் கேட்டது.
கூச்சலிட்டுக்கொண்டு மக்கள் அங்குமிங்கும் இடித்துத் தள்ளிக்கொண்டு ஓடிய போது சிலர் மோதியதால் கால்டன் கயலின் கையை விட்டுவிட்டார். மக்கள் கூட்டம் செப்டம்பர் மாதங்களில் அதிகமாய் இருக்கும் அங்கே. அதனால் கூட்டத்தில் இருவரும் பிரிந்து போயினர். பரிதவித்தனர்.
இருவரும் தங்களைப் பாதுகாத்துக்கொள்வர் என்றாலும் இருவரும் ஒருவரையொருவர் நினைத்து மிகவும் டென்ஷன் ஆகினர். அவளின் கண்கள் அவரையும் அவரின் கண்கள் அவளையும் பரிதவிப்புடன் தேடின. அலைபேசியில் விசாரிக்கவெல்லாம் சந்தர்ப்பமே இல்லை. கிட்டத்தட்ட இருவரும் எதிரெதிர் திசைகளில் பிரிந்து சென்றுவிட, போலீஸ் வந்தது.
8ஆம் தளத்திற்கு மேல் இருந்த எல்லா தளங்களையும் போலீஸ் அடைத்தது. அந்த நபர் எங்கிருக்கிறான் என்று துல்லியமாய்க் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாய் ஒரு புறம் நடக்க, கால்டன் கயலைத் தேடிக் கண்டுபிடிக்கும் நோக்கில் ஓடிக்கொண்டிருந்தார்.
10ஆம் தளத்தில் அவள் இல்லை, 9ஆம் தளத்திலும் அவள் இல்லையென்று ஊர்ஜிதம் செய்துகொண்டு, கீழ் நோக்கிச் செல்ல வாய்ப்பில்லை என்பதால் மீண்டும் மேலே 11ஆம் தளத்தில் சென்று தேடினார். அங்கும் அவள் இல்லை.
12ஆம் தளத்திற்கும் சென்று தேடினார். அங்கும் அவளைக் காணாமல் 13ஆம் தளத்திற்கு ஏறக் கால் வைத்தபோது கண்ணில் பட்டாள் கயல்.
உயிரே வந்தது போல் இருந்தது அவருக்கு. அதே நேரம் கோபமும் வந்தது. 12ஆம் தளத்தில் யாருமே இல்லை. தனியாய் எதற்கு இத்தனை தூரம் பிரிந்து வந்திருக்கிறாள் என்று ஆத்திரம் வந்தது. அவளை நோக்கி மெதுவாய் ஓடினார்.
கிட்டே சென்றதும் அவள் பீதியில் வியர்த்துக் கொட்டிக் கீழே எதையோ பார்த்துக்கொண்டு நிற்பது தெரிந்தது. முகத்தில் பயம் குடிகொண்டிருந்தது. அவளுக்கு எதிரே சென்று நின்ற கால்டனிடம் உஷ் என்று செய்கை காட்டினாள்.
ஒன்றும் புரியவில்லை கால்டனுக்கு. அவள் ஒரு ஸ்னாக்ஸ் கவுண்ட்டரின் முனையில் நின்றிருந்தாள். கால்டன் அதே கவுண்ட்டரின் மறுமுனையில் இருந்தார். எதற்கு பயத்துடன் செய்கை செய்கிறாளென்று புரியாமல் கவுண்ட்டருக்குள் எட்டிப் பார்த்தார்…
கவுண்ட்டருக்கு அடியில் அமர்ந்திருந்தான் அந்த மனநலம் பாதிப்படைந்தவன். அவன் துப்பாக்கியின் குறியில் தான் கயலை நிறுத்தி வைத்திருந்தான். திக் திக் நிமிடங்கள்!
அவன் மிகவும் ரெஸ்ட்லெஸ்ஸாக இருந்தான். மண்டையைப் பிடித்துக்கொண்டு அவனுக்குள் மாறி மாறி அன்னியன் போல் பேசிக்கொண்டிருந்தான். அவன் பேசியது ஆங்கிலம் அல்ல!!
நடுவே கயலிடம் ஆங்கிலத்திலும் பேசிக்கொண்டிருந்தான். அதைப் பார்த்ததும் கயல் அவன் நம்பிக்கையினைப் பெறப்பார்க்கிறாள் என்று புரிந்தது கால்டனுக்கு. அவன் முதுகுப்புறமும் துப்பாக்கியும் தான் அவருக்குத் தெரிந்தது.
கயல் அவன் பார்வை அவள் மேல் இல்லாதிருந்த நேரத்தில் கால்டனுக்கு ஜாடையில் போலீஸுக்குத் தகவல் அளிக்கும்படி சொன்னாள். கால்டனும் அதைச் செய்தார்.
கயல் அவனிடம் கண்டிப்பாய் உதவுவதாய் வாக்களித்து துப்பாக்கியினைத் தன்னிடம் தரும்படி பேசிக்கொண்டிருந்தாள். அவன் தன் மூளைக்குள் யாரோ பேசுவதாய்ச் சொல்லி அழற்றிக்கொண்டிருந்தான்.
கயல் விடாமல் பேசிக்கொண்டே இருக்க, ஒரு வழியாய் அவன் துப்பாக்கியினைக் கயலிடம் தரும் முடிவுக்கு வந்து அடிக்குள்ளிருந்து எழுந்து வந்தான்.
துப்பாக்கியினைத் திருப்பி அவளிடம் நீட்டிய போது பூட்ஸ் சத்தம் கேட்டுத் திரும்பினான். பின்னால் நின்றிருந்த கால்டனைப் பார்த்தான். 5 நாட்கள் முன்பு கயலின் அறையில் காத்திருந்த அவனே தான் இவன் என்று மறுகணமே நினைவுக்கு வந்தது கால்டனுக்கு! அதிர்ந்து போனார்!
“நீ தானே அன்னிக்கு இவளை எனக்கு உதவ விடாம இழுத்துக்கிட்டு போன!” என்று கேட்டு கோபப்பார்வை வீசினான் அவன்.
மறு நொடி அவன் துப்பாக்கி கால்டனின் நெஞ்சினை நோக்கி நிமிர்ந்தது. கால்டன் உறைந்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாரித்த கயல், பக்கத்தில் சுத்தம் செய்வதற்குப் பயன்படும் மாப் ஒன்று இருந்ததைக் கவனித்தாள். லாவகமாய் அதைச் சிலம்பம் போல் சுற்றி, முறையான காலடிகள் எடுத்துவைத்து பின்புறமிருந்து அவனைத் தட்டியதில் கையிலிருந்த துப்பாக்கி நழுவி எட்டே போய் விழுந்தது. தமிழாசிரியர் மகளாதலால் தமிழரின் கலையான சிலம்பத்தில் அவளுக்கு அபாரப் பயிற்சி இருந்தது. அதை இச்சமயத்தில் சமயோஜிதமாய்ப் பயன்படுத்தி தன்னவனைக் காத்துவிட்டாள் கயல்.
ஆனால் கயலின் தாக்குதலால் கடுப்பான அவன், மொத்தக் கோபத்தையும் கயல் மேல் திருப்பினான். மன அழுத்தத்தில் வயலண்ட்டாக இருப்பவர்களுக்கு யானை பலம் வந்துவிடுமல்லவா! கடுமையாகக் கயலைத் தாக்கத் துவங்கிவிட்டான். கயலும் மல்லுக்கட்டினாள். ஆனால் கருவுற்றிருந்ததால் சோர்வாய் இருக்கும் அவளால் அவனின் அசுர பலத்திற்கு ஈடு கொடுக்க இயலவில்லை.
அந்த கவுண்டர் மிகவும் நீளமானது. கயலை அவன் தாக்கத் துவங்கிய மறுநொடி கால்டன் அவர்களை நோக்கி ஓடினார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் கயலை அடிவயிற்றிலேயே பலமாய் ஒரு உதை விட்டான். நிலைகுலைந்த கயல் பக்கமிருந்த படிக்கட்டுக்களில் விழுந்து உருளத் துவங்கினாள். கால்டன் அங்கு வந்து சேரவும் கயல் படிக்கட்டில் விழுந்து உருளத் துவங்கவும் சரியாய் இருந்தது. அவரால் அவளைப் பிடிக்க முடியாமல் போனது. “கயல் கயல்” என்று அலறிக்கொண்டே உருண்டு போய்க்கொண்டிருந்த அவள் பின்னால் ஓடினார்.
அதற்குள் அவன் துப்பாக்கியினைக் கைப்பற்ற மறுபுறம் ஓடினான். துப்பாக்கியை எடுத்து கயல் கால்டன் இருவரையும் சுடும் நோக்கத்தில் திரும்பியவனைப் போலீஸ் சுட்டுத் தள்ளியது. அங்கேயே செத்து விழுந்துவிட்டான்.
உருண்ட கயல் 20 படிக்கட்டுக்கள் கடந்து சமமாய் இருந்த இடத்தில் விழுந்து மயங்கிக் கிடந்தாள்.
அலறியபடி அவளை முதுகில் கைகொடுத்துத் தூக்கிய கால்டன் அவளின் வெள்ளை நிற ஆடை பின்புறத்தில் இரத்தத்தால் நனைந்திருந்ததைக் கவனித்தார்.
அதிர்ச்சியில் உறைந்தார்.
4.18- இழப்பு
-வித்யாகுரு