4.15 உன்கிட்ட ஒன்னு கேட்கனும்..
4.16- சூழ்ந்து வந்த ஆபத்து
மேலோட்டமாக இந்தியாவில் பணி செய்யவே ஆசை என்று வெளிப்படுத்திய கயல், கால்டனின் முகம் மாறியதையும் சட்டென்று அவர் எழுந்து போய்விட்டதையும் நினைத்து வருந்தினாள். ஓரளவு அவள் எதிர்பார்த்த ரியாக்ஷன் தான் என்றாலும் வருத்தமாய் இருந்தது அவளுக்கு.
கால்டன் விரிவாகப் பேச்சை வளர்த்தாமல் தவிர்த்துவிட்டுப் போனது போல் தோன்றியது. இருவருக்கும் காதல் என்ற ஒரே ஒரு உணர்வினைத் தாண்டி எதுவுமே பொருந்தவில்லை என்பதை நினைத்து நொந்தாள்.
ஆனால் கால்டனைப் பிரிவது சாத்தியமே இல்லை என்றும் அவள் மனம் கூப்பாடு போட்டது. பலமான சிந்தனையில் இருவருமே மூழ்கினர். இருவரும் அதற்குப் பின் பேசிக்கொள்ளவும் இல்லை. உணவருந்த வந்த போது கூட கால்டன் அலைபேசியை நோண்டிக்கொண்டிருந்தாரே தவிர முகம் கொடுத்துப் பேசவில்லை.
கயல் லீலாவிடம் பேசிவிட்டுத் தந்தையைப் பார்த்துவிட்டு தூங்காமல் கால்டனுக்காய்க் காத்திருந்தாள். 3 நாட்களாகக் கால்டன் கயலின் அறையில் தான் வேறு கட்டில் போட்டுப் படுத்து உறங்கினார்.
11 மணியானது. “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீ தூங்கு” என்று மெசேஜ் தான் வந்தது கால்டனிடமிருந்து. ஏமாற்றமானது. வலித்தது. தன் அம்மாவின் புடவையைக் கட்டி அணைத்துக்கொண்டு படுத்தாள். உறங்கியும் போனாள்.
காலை கயல் விழித்த போதும் கால்டன் அங்கே இல்லை. பிறகு டூட்டிக்குத் தயாராகி வெளியே போனாள். கால்டன் தயாராகத் தான் இருந்தார். ஆனால் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஒரு பார்வை கூட இல்லை. மருத்துவமனை வந்ததும் இறக்கிவிட்டுச் சட்டென்று காரைக் கிளப்பிக் கொண்டும் போய்விட்டார்.
கயலுக்கு வேதனையாய் இருந்தது. இதுவரை அப்படி அவர் போனதே இல்லை. சில சமயங்களில் வெறும் காதல் மட்டும் போதுமானதாய் இருப்பதில்லை என்று நினைத்தாள். டூட்டி முடிந்த அன்று மாலை கால்டனிடமிருந்து மெசேஜ் வந்தது.
“நான் வர லேட் ஆகும். நீ ஒரு டாக்ஸி புடிச்சு வீட்டுக்குப் போய்டு” என்று. கயல் வருத்தத்தில் பதில் அனுப்பவில்லை. லேசாகக் கோபம் வந்தது. ஆரம்பத்திலேயே கால்டனின் காதல் தடுமாறுவதாய் நினைத்தாள்.
யோசித்துப் பார்த்து ஒரு தெளிவுக்கு வந்தாள். கால்டனிடம் நேருக்கு நேராய் வெட்டு ஒன்று துண்டு இரண்டாய்க் கேட்டுவிடுவது என்று. இது அவளுக்குப் பெரிய டார்ச்சராய் மாறிவிட்டதாய்த் தோன்றியது. அதனால் இதற்கு நிச்சியம் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட முடிவெடுத்தாள். கால்டன் தான் வெளிப்படுத்தியிருக்கிறாரே தவிர கயல் இன்னும் பதில் சொல்லவில்லை.
உண்மையில் இருவரும் இன்னும் ஒரு முறை கூட மனம் திறந்து பேசிக்கொள்ளவே இல்லை. அதனால்தான் இத்தனை குழம்புகிறது இந்த காதல் என்று ஒருவழியாய் அவளுக்கு எட்டிவிட்டது. அதனால் இரவு எந்நேரமாயினும் பேசி ஒரு தெளிவுக்கு வந்துவிடுவது என்று நினைத்துக்கொண்டாள்.
அவளின் மருத்துவமனைக்கு அருகில் ஒரு மால் இருந்தது. சில பொருட்கள் அவளுக்குத் தேவைப்பட்டதினால் வாங்குவதற்காக அங்கு சென்றாள். மணி 5.45. ஆனாலும் வெளிச்சமாகவே இருந்தது. அப்போது கால்டனிடமிருந்து அழைப்பு வந்தது.
“வீட்டுக்கு போயிட்டியா?”
“இல்ல.”
“ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கியா?”
“இல்ல.”
“எங்க இருக்க?”
“மால்-ல”
“பக்கத்தில இருக்கே அங்கையா?”
“ஆமா”
துண்டித்துவிட்டார். பெருமூச்செறிந்த கயல் ஷாப்பிங்கைத் தொடர்ந்தாள்.
அந்த மாலில் 9ஆம் தளத்தில் கயல் சுற்றிக்கொண்டிருந்தாள். வாங்கவேண்டியவற்றை வாங்கிவிட்டாள். ஆனாலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு போலி நகைக்கடை ஷோரூம் முன்னின்று கண்ணாடிகளுக்குப் பின்னால் இருந்த ஒரு பொம்மை அணிந்திருந்த வெள்ளைக் கல் கழுத்தணிகலனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அது மிகவும் அழகாய் சிம்பிளாய் இருந்தது. அதை வாங்கும் எண்ணெமெல்லாம் அவளுக்கு இல்லை. ஆனால் அந்த நெக்லஸ் அவள் கவனத்தை ஈர்த்தது. அரை நிமிடம் அதைப் பார்த்துவிட்டு நகர்ந்தாள். இன்னும் சில கடைகளைப் பார்த்துவிட்டு நகரும் படிக்கட்டுக்களில் ஏறினாள். மேல் தளத்தில் ஒரு இந்திய உணவகம் இருந்தது. அங்கு சென்று பசியாற நினைத்தாள்.
படிக்கட்டு பாதி வழியில் இருக்கும் போது மேலே அவள் பார்வை போனது. படிக்கட்டின் மேல் முனையில் கையில் ஒரு சிறு பையோடு அவளைக் காதல் வழிந்தோடிய படி பார்த்துக்கொண்டு புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தார் கால்டன்.
அவரைப் பார்த்ததுமே அவளின் கோபமெல்லாம் பறந்தே போனது. ஆச்சரியப் புன்னையொன்று படர்ந்தது.
படிக்கட்டுக்கள் நகர்ந்தோடித் தலைவியைத் தலைவனின் கரங்களில் கொண்டு சேர்க்க, அவளைக் கட்டியணைத்தார் கால்டன். காதுமடல் முத்தமும் கழுத்தடியில் கோதலும் கால்டன் செய்ததும் கயலுக்கு உலடெங்கும் குப்பென்று குறுதி பாய்ந்தது.
“ஷாப்பிங் முடிச்சிட்டியா?”
“ம்..”
“சாப்பிட போலாமா”
“அங்க தான் போயிட்டிருந்தேன்”
“வா.. டேபிள் ரெடியா இருக்கு!”
என்று அவளைத் தோளில் அணைத்தபடியே நடந்தார் கால்டன். முந்தினம் இரவில் இருந்து விழுந்துவிட்ட இடைவெளி தற்போது மீண்டும் ஒட்டிக்கொண்டது.
இருவரும் உணவகத்தில் சென்று அமர்ந்து ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தனர். கயலிடம் ஒரு பரிசுப்பெட்டியை நீட்டினார் கால்டன். புதிர் பார்வை வீசிவிட்டு அதை வாங்கிப் பிரித்தாள் கயல்.
சற்றுமுன் அவள் ரசித்துப் பார்த்த அதே நெக்லஸ் இருந்தது அந்தப் பரிசுப் பேழைக்குள். ஒரு சிறு அட்டையில் “Love you my life” என்ற வாசகமும் கால்டனின் அந்த ஓவியக் கையெழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது.
“என்ன ஃபாலோ பண்றீங்களா!!”
“நோ…..”
“தேங்க்ஸ்.. நானும் உங்களுக்கு ஒன்னு வாங்கிருக்கேன்”
“என்னது?”
“இப்போ தரமாட்டேன். எனக்கு எப்போ தோணுதோ அப்ப தான் தருவேன்”
“ஹோ.. இண்ட்ரெஸ்டிங். ஓக்கே.. காத்திருக்கேன்”
ஆர்டர் செய்த உணவு வந்ததும் இருவரும் சாப்பிட ஆரம்பித்த போது, துப்பாக்கி சுடும் சத்தம் சற்று தூரத்தில் கேட்டது. அடுத்த சில நிமிடங்களில் அந்த மாலே அல்லோகல்லோகப் பட்டது. மக்கள் அனைவரும் கன்னாபின்னாவென்று ஓடத் துவங்கினர். கயலும் கால்டனும் எதுவும் புரியாமல் விழித்தனர்.
4.17- திக் திக் நிமிடங்கள்
-வித்யாகுரு