அதோ இதோவென மூன்று மாதங்கள் ஓடிய வேகம் தெரியவே இல்ல. சிந்துவின் வாழ்விலும், அவளிடத்திலும் மாற்றங்கள் இருந்தன.
எப்போதும் போல, அதனை ஏற்றுக்கொண்டே அவளும் அதனூடே பயணித்தாள் சிந்துஜா.
எது எப்படியோ அவளின் வீட்டின் சூழல் சிறிதும் மாற்றமின்றி, இன்னும் மோசமாக தான் சென்றது.
கர்ப்பமாக இருக்கும் தங்கை முழுநேரமும் அவளின் வீட்டிலே குடியேற, அதனை சாக்காக வைத்து அவள் நினைத்தை கேக்க, அதற்க்கு அவளின் அம்மாவும் சேர்ந்துகொண்டு சிந்துவிடம் பணத்தை கேட்டு நச்சரித்தனர்.
தொலைபேசி அவர்கள் வீட்டிலிருந்து என்றாலே அது பணம் குறித்து மட்டும் தான். மத்தபடி அவள் எப்படி இருக்கிறாள் என்று ஒரு வார்த்தை கூட ஒரு சால்சாப்பிற்கு கூட வராது பெற்றவள் வாயிலிருந்து.
சிந்துவும் ஒரு ஆற்றாமையில் கேட்டுவிட்டால் போதும், உனக்கென்ன குறை அங்க ரெண்டு கை நிறைய சம்பாரிச்சி, உனக்கு வச்சிக்கிட்டு மிச்சத்தை தான அனுப்புற… நல்லா ஏக போகமா வாழுற. மூணு வேலை சாப்பாடு, ஒரு வேலை செய்யணும்னு அவசியம் இல்ல. வேலைக்கு மட்டும் தான போய்ட்டு வர. அப்பறம் எதுக்கு கேக்கணும் என்று முந்திக்கொண்டு பூஜாவே பேசிவிடுவாள்.
நான் மாசமா இருக்குற நேரம் கூட, எனக்குன்னு செய்யாம நீ சொகுசா இருந்துட்டு மிச்சத்தை தானே அனுப்பிவிடுற. மாசமா இருக்குற புள்ளைக்கு செய்யாம, நீ மட்டும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறியே, உனக்கெல்லாம் அப்பறம் எப்படி கல்யாணம் நடக்கும் என சிந்து ஒரு கேள்வி ஆதங்கமாக கேட்டால், ஏன் கேட்டோம் என்ற அளவுக்கு அவளின் தங்கை பேசுவாள்.
அவ அந்த அளவுக்கு பேசுறா, ஆனாலும் உங்களுக்கு அவ பேசுறா பேச்சு ஏதும் பெருசா தெரியல. நீங்க என்னை இன்னும் என்ன செய்ய இருக்கீங்கன்னு எனக்கு தெரில. ஆனா நான் இனிமேல் இப்படி உங்களை பேச விட்டுட்டு இருக்கமாட்டேன். என்னோட கடமையா உங்களை நல்லா பாத்துக்கணும்னு நினைச்சி தான் இதுவரைக்கும் நீங்க பேசுறா எல்லாத்தையும் பொறுத்துட்டு, சம்பாரிச்சி உங்களுக்கு அனுப்பிட்டு இருக்கேன்.
எனக்கு மட்டும் தான் கடமை இருக்குனு, நீங்க நான் வேலைக்கு போகும் போதே, என் தலையில மட்டும் கட்டிட்டிங்க. இப்படி உங்க இன்னொரு பொண்ணுக்கும் கொஞ்சமாவது சொல்லிருக்கலாம். அப்படி அவளுக்கு கடமைன்னு ஒன்னை செய்ய முடியலைனாலும் பரவால்ல. உபத்திரம் பண்ணாம இருக்க சொல்லுங்க. இங்க நான் எனக்காகன்னு ஒரு காசும் எடுத்துக்காம, எல்லாத்தையும் தான் உங்களுக்கு அனுப்புறேன். பணம் ஒன்னும் மரத்துல இருந்து புடுங்கி உங்களுக்கு அனுப்பி வெக்கல. வாரம் முழுக்க ஓய்வில்லாம ஒழச்சி தான் அனுப்புறேன். இவ்வளோ தான் என்னால முடியும். அப்படியும் வேணம்னா சொல்லிடுங்க என ஒரே போடாக போட்டு அன்னையிடம் பேசிவிட்டாள் சிந்துஜா.
பெத்த பொண்ணு, நெறைய சம்பாரிச்சா, அதை பார்த்து பெருமை படுற தகப்பனை தான் பாத்துருக்கேன். முதல் முறையா பொண்ணு நிறையா சம்பாரிக்குறான்னு, பொறாமை பட்டு தண்ணி தெளிச்சு விட்டா தந்தையை இப்போதான் உங் ரூபத்துல பாக்குறேன் என தந்தையையும் விடாமல் பேசிவிட்டாள் சிந்துஜா.
இப்படி பணத்திற்காக மட்டுமே தான் என்று நினைக்கும் அவளின் குடும்பத்திலிருந்து, பேச்சை முற்றிலுமாக குறைத்து கொண்டாள். என்னோட கடமையை நான் செய்யவும் தவறமாட்டேன் என்று மாதாமாதம் பணத்தை அனுப்பிவிடுவாள் சிந்துஜா.
இப்படி பேசியும் அடங்காது இன்னும் அவளை குத்திக்கொண்டே இருக்கும் வீட்டினரை பற்றி யோசித்துக்கொண்டே அவள் தொலைபேசியில் பார்வையை பதிந்திருக்க, “ஹலோ மேடம்… போனை பாத்துட்டு இருக்கவங்களே… கொஞ்சம் இங்க என்னை பாக்குறது…” என வித்யு கேலியாக சிந்துவை அழைக்க,
“ஹான்… என்ன வித்யு…” என்றாள் சிந்து.
வித்யு, “இல்ல… அந்த போனையே ரொம்ப நேரமா வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு இருக்கீங்களே… அதான் அதுல என்ன தெரியுதுனு தெரிஞ்சா நானும் பாக்கலாம்ன்னு தான்…”
சிந்து, “அதுலாம் ஒன்னும் இல்ல… சும்மா யோசனை…”
“எதை பத்தி?… யாரை பத்தி யோசனை…” என சிரிப்புடன் அவள் கேக்க,
கேக்கும் தோழியை முறைத்து வைத்தாள் நங்கை.
“உண்மையை தானே கேக்குறேன்… உங்க காவல் துறை தான் இப்போ உங்களை நிறையா ஆக்கிரமிச்சிருக்காரே… அப்பறம் என்னங்க மேடம்…” என கிண்டலாக கேட்டாள் வித்யு.
அன்றைய நிகழ்விற்கு பிறகு, அந்த காவல் அதிகாரியின் மேல் அபரிவிதமான நம்பிக்கை. காரணமின்றி அவனின் நினைவுகளை அசைபோடுவாள். இந்த நினைப்பு தனக்கு குடுப்பணை இல்லை என தெரிந்து மனதை அடக்கினாலும் அதில் அவனும் அவளின் நினைவை நினைக்க வைப்பான் அவள் வைத்திருந்த போனின் மூலம்.
ஆம்… சிந்துஜா இன்னும் அவன் குடுத்த போனை தான் உபயோகிக்கிறாள். காவல் உடையை எங்காது காண நேரிட்டால், அவனின் முகம் தான் முதலில் மனக்கண்ணில் தோன்றும். இதையெல்லாம் வைத்து தான் தோழி அவளை ஓட்டுவாள்.
“பச்… வித்யு இப்படி ஓட்டாத… அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல…” என தோழியிடம் சொன்னாலும், அவளிற்கு தெரியுமே, அவன் மீது தோன்றிருக்கும் துளி விருப்பம் ரீங்காரமாய் அவளுள் இன்பமாய் இம்சிக்கிறது. இருந்தும் அது நிரந்தரமில்லை என்பது அவளின் நிதர்சனம்.
“அப்படி இருந்தாலும் தப்பு இல்லனு தான் சொல்லுறேன்… நீ எங்க கேக்குற…” என்றாள் தோழி.
“சும்மா இரு வித்யு… உனக்கு இதே தான் எப்பவும்…” என சொல்லிவிட்டு எழுந்து சென்றாள் சிந்து.
அவள் தங்கியிருக்கும் விடுதியின் மொட்டை மாடியில், ஒரு மூலையில் நின்று, குளிர்ச்சியாக வானத்தில் ஸ்ருங்காரமாய் வசியம் செய்யும் பிறை நிலவை பார்த்துக்கொண்டே அவனை தான் கற்பனையில் கண்முன்னே கொண்டுவந்தாள். தன்னுள் அவனுக்கான இடம் என்னவென்பதை அவனை கற்பனையில் கொண்டுவந்த நொடியே தெள்ள தெளிவாக புரிந்துவிட, இருந்தும் அவளின் அறிவு அதனை ஏற்கமுடியாமல் அவளின் மனதிற்கு எதிராக கொடி பிடித்தது.
நீ இப்படி அவரை நேசிப்பது தெரிந்தால், அவரின் எண்ணம் உன்னை பற்றி எவ்வளவு கீழாக இருக்கும் என்று யோசி, “எதிர்பார்ப்பில்லாம உதவி பண்ணிருக்காங்க, உனக்கெல்லாம் அதுவே ரொம்ப பெருசு… முதல் முறையே அட்வான்டேஜ் எடுத்து பேச வேணாம்ன்னு அவங்களை பேசுனவ நீ… இதுல எந்த மூஞ்சியை வச்சிட்டு அவங்ககிட்ட எனக்கு உங்களை பிடிச்சிருக்குன்னு சொல்லுவ… எப்படி பிடிச்சதுன்னு கேட்டா என்ன சொல்லுவ?” என்று அவளின் அறிவு சரமாரியாக சாட்டையாய் கேள்வி எழுப்ப, அவளின் மனதோ “என்னையே அறியாமல் என்னுள்ளே ரீங்காரமாய் இசைக்கிறான்” என கவிதை சொல்ல, “நீ ஒழுங்கா உன் மனசை அடக்கி வை… அதுதான் உனக்கு நல்லது சொல்லிட்டேன்” என அறிவு மறுபடியும் வலியுறுத்த, இப்படி அவளின் அறிவிற்கும், மனதிற்கும் இடையில் மாட்டிக்கொண்டு தத்தளிக்க, கடைசியில் போராடி அறிவிற்கு செவி சாய்ப்பதாக மனதிடம் சொல்லிவிட்டு முடிவெடுக்க இருந்த சமயம், அவளின் அலைபேசி ரம்யமாய் ஒலித்தது.
தன்னிலை அடைந்து, கையில் உள்ள அலைபேசியை பார்க்க, யாரின் பிம்பத்தை மனக்கண்ணில் கொண்டுவந்தாளோ அவனே தான். ஒரு வித படபடப்பும், அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் திரையில் மின்னி மறைந்த அவனின் பெயரையே ஒரு நொடி பார்த்துவிட்டு அவசரமாக கடைசி ரிங்கில் அட்டென்ட் செய்து காதில் வைத்தாள் பாவை, சிந்து.
“ஹலோ சார்…” என்றாள் சிந்து.
விஷ்ணு, “சாரே தான்… என்ன என் நம்பரை பார்த்துட்டு எடுக்கலாமா? வேணாமான்னு? யோசிச்சிட்டு இருந்தியா? ” என கேட்க,
அவனுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் அவள் அமைதியாக,
“ஹோய் சுண்டக்கா… எங்க வாய் பேசாம இருக்க…” என்றான் அவன்.
“ஹாங்… என்ன சுண்டக்காவா?…” என அதிர்ந்து அவனிடம் கேக்க,
விஷ்ணு, “ஆமா… அதுக்கென்ன இப்போ…”
“சார்… நான் சிந்து…இல்ல சிந்துஜான்னு சொல்லுங்க, இப்படிலாம் கூப்பிடாதிங்க…”
“உன்னைய எனக்கு எப்படி கூப்பிட தோணுதோ அப்படி தான் சொல்ல முடியும். அது என்ன எப்போ பாத்தாலும் நீ இதையே சொல்லுற… நான் எப்படி கூப்பிட்டாலும் உன்னை தான் சொல்லுறேன்னு தெரியுதுல்ல, அப்பறம் என்ன?…” என கேட்டு அவன் மடக்க,
“ஹான் அது…” என மேற்கொண்டு சொல்ல வராமல் இழுக்க,
“அது என்னவோ இருந்துட்டு போகட்டும்… கால் பண்ணுனா எதுக்கு கால் பண்ணிருக்கீங்கன்னு கேக்க மாட்டியா?… நீ தான் கால் பண்ணும் போது எதுக்கு கால் பண்ணிருக்கன்னு சொல்லாம பேசுவன்னா… உனக்கு கால் பண்ணிருங்கவங்க கிட்டயும் என்னனு கேக்காம, அவசியமில்லாம உன் பேரை வச்சி லெக்க்ஷர் எடுப்பியா?…” என அவன் சாவகாசமாக கேக்க,
“சார்… நீங்க என்னைய ரொம்ப பேசுறீங்க… இதுலாம் கொஞ்சங்க்கூட நல்ல இல்ல… சொல்லிட்டேன்…” என அவள் ரோஷமாக பேச,
“நான் எங்க பேசுறேன்?… நீ தான் இன்னும் நான் பேசுறதுக்கெல்லாம், ரோஷமா பேசிட்டு இருக்க… இதுல என்னை சொல்லுற…”
“ஆஹ்…” என ஒரு நொடி எடுத்து, “சார்… இதுதான் சொல்லுறேன் சார் … நீங்க இப்படி ஏதாவது பேசுறீங்க… நானும் நீங்க பேசுற பேச்சுக்கு உங்களோடவே பேசுறேன்…” என பழியை அவன் மீதே போட,
“இது என்ன ரொம்ப அநியாயமா இருக்கே… நீயா பேசிட்டு, என்னையவே காரணம் சொல்லுவியா?… உனக்கு தான் இருக்கனும், நீ என்ன பேசுறேன்னு… நான் பேசுனா என் கூடவே பேசணுமா என்ன?…” என்று அவனும் திரும்பி கேக்க,
“சார்…”
“என்ன சார்… நான் என்ன உனக்கு வாத்தியாரா… சும்மா சார் சார் மோர் மோர்ன்னு எதுக்கெடுத்தாலும் இழுத்துட்டு இருக்க… இதுல என்னைய மட்டும் சிந்து இல்ல சிந்துஜா சொல்லுங்கன்னு கேக்குற…” என கடுப்பாக கேக்க,
சிந்து, “இதுலாம் ரொம்ப ஓவர்… நீங்க என்னோட பெரியவங்க, பெரிய பதவில இருக்கீங்க… அப்பறம் அப்படி தான் சொல்ல முடியும்…” என்றாள் முறுக்கியவளாக,
“ஓஹோ… நீ அப்படி சொல்லுறியா…”
“ஆமா அப்படிதான் சார்…” என்று சொன்னால் அந்த சாரில் அழுத்தம் கொடுத்து,
“அப்போ சரிடி சுண்டக்கா… நானும் அப்போ உன்னைய இப்படி தான் சொல்லுவேன்…” என்றான் கேசுவலாக,
“என்ன?…” என கேட்டு அவள் அந்த பக்கம் பல்லைக்கடிக்க,
“ஆஹ்… இப்போ தான் என்னனு சரியாய் கேட்ருக்க… இப்போ சொல்லவா நான் எதுக்கு உனக்கு கால் பண்ணுனேன்னு… அதை விட்டுட்டு என்கிட்ட பேச்சுல மல்லுக்கட்டிட்டு இருக்குற… ஒரு ஆஃபீசர் கிட்ட பேசுறோம்னு கொஞ்சம் கூட மரியாதையை இல்லாம பேசிட்டு, இதுல சார் வேற…” என அவன் கொட்டுவைத்து சொல்ல,
அவனின் பேச்சில் இருந்த உண்மையை கண்டு அமைதி காக்க,
“என்ன இவ்வளோ நேரம் ரோஷமா பேசுன வாய் இப்போ அப்படியே மூடிக்கிச்சு… பேச்சையே காணும்…” என விஷ்ணு கேக்க,
“சார்…” என்றாள் குரலில் சுருதி இறங்கி,
“வேணும்னா முள்ளங்கி ஜூஸ் குடிக்குறியா தினமும்… இப்படி வாய்ஸ்ல அப் அண்ட் டவுன் இல்லாம இருக்கும்…” என அவன் நக்கலாக சொல்ல,
அவனின் பேச்சில் கடுப்பாக, “நீங்க தான் இப்போ அன்வான்டெட் ஆஹ் பேசுறீங்க… எதுக்கு கால் பண்ணுனீங்கன்னு சொல்லாம…” என சொன்னாள் சிந்து.
“ஜூஸ் குடிக்க சொன்னது தப்பா அப்போ…” என கேட்டு, இவ்வளோ நேரம் நல்ல வாய்கிழிய பேசிட்டு… இப்போ வந்து எதுக்கு கால் பண்ணுனீங்கன்னு கேட்டா, நான் உடனே சொல்லனுமா…” என அவன் கேக்க,
“தப்பு தான் சார்… இனிமே இப்படி வாய்கிழிய பேசாம இருக்கேன்…” என்றாள் சிந்து பட்டென்று.
“சரி… அடுத்து பேசும் சொல்றேன் நீ எப்படி பேசுறேன்னு…” என சொல்லிவிட்டு, “நீ தான் உங்க பணம் குடுக்கணும் எப்போ வாங்கிக்குறீங்கன்னு கேட்டு டெய்லி இம்சையா மெசேஜ் அனுப்பிட்டு இருந்த… இப்போ என்ன ஒரு பத்து நாளா ஆளே காணும்… அதான் சுயமரியாதையை சாப்பாட்டுல போட்டு சாப்புடுற சுண்டக்கா எங்கயாவது என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகிடியான்னு பாக்க தான் கால் பண்ணுனேன்…” என அவன் எதுக்காக அழைத்தான் என சொல்ல,
“ஆஹ் சார் அது… அப்படியெல்லாம் உங்களை ஏமாத்தமாட்டேன்… கொஞ்சம் ஒர்க் டென்ஷன்…” என்றாள் சமாளிப்பாக,
“போலீஸ்காரன் கிட்டயே சமாளிக்குற… என்ன மறைக்குற… ஒழுங்கா சொல்லு…” என அவன் தோரணையாக கேக்க,
“சார் இங்க பாருங்க… அதுலாம் ஒன்னும் இல்ல… உங்க பணம் முதல கொடுக்குறேன்… அப்பறம் உங்க போனையும் குடுக்குறேன்னு தானே சொன்னேன்… அதுலாம் குடுக்கமாக எங்கயும் போகமாட்டேன்…”
“உன்னைய யாரு விடுறேன்னு சொன்னா…” என அவனும் கேக்க,
அவனின் பேச்சில், “ஆஹ் வென்று…” வாயை பிளந்து அங்க அவள் நிற்க,
விஷ்ணு, “ஓய்… சரவெடி சாத்துக்குடி… என்ன சைலன்ட் ஆகிட்ட?…”
“ஹான்… இல்லையே… அதெல்லாம் இல்லையே…” என அவள் வேகமாய் பதில் சொல்ல,
“என்னமோ சொல்லுற… போயி வேலைய பாரு… இவளோ நேரம் வெட்டியா பேசி நேரத்தை போக்கிருக்க… அப்பறம் நாளைக்கு பாக்கலாம்…” என சொல்லி வைத்துவிட்டான் விஷ்ணு.
“பாரேன்… இவங்களை…” என வாய் விட்டு சொல்ல, “அவங்களை தான் உனக்கு பிடிச்சிருக்கு…” என மனசு சொல்ல, அதற்கு செவி சாய்க்காமல், “ஹா… நாளைக்கு பாக்கலாம்னா… அப்போ… நாளைக்கு வராங்களா?… எப்போன்னு சொல்லவே இல்லையே…” என போனை பார்த்துக்கொண்டே பேச,
“சிந்து… என்ன பண்ணிட்டு இருக்க இன்னும்… உன்னைய காணும்னு தான் வந்தேன்…” என சொல்லிக்கொண்டே வித்யு சிந்துவை நோக்கி வந்தாள்.
சட்டென்று நிதானித்து, “எப்படியும் கால் பண்ணுவாங்க… பாத்துக்கலாம்… நம்ம பிடித்தம் நம்மகிட்ட மட்டும் தான்…” என மனதிற்குள் சொல்லிவிட்டு வித்யுவுடன் இணைந்து தன் அறைக்கு சென்றாள்.
——
இங்கு அவளுடன் பேசிவிட்டு வைத்த விஷ்ணுவோ, “இந்த சுண்டைக்காய்க்கு வாய் ரொம்ப ஜாஸ்தி ஆகிட்டு…” என நினைத்து அவள் பேசின பேச்சை நினைத்து சிரித்துக்கொண்டே வெளியே கிளம்பி வர,
அங்கு ஹாலில் அமர்ந்திருந்த அன்னையை பார்த்து, “என்ன ம்மா… தூங்குற ஐடியா இல்லையா?…” என கேட்டுக்கொண்டே வர,
“ஆஹ்… உனக்கு நைட் ரௌண்ட்ஸ் மாறி… எனக்கும் ஒருத்தனுக்கு ரவுண்டு கட்டணும்… அதுக்கு தான் வைட்டிங்…” என்றார் விசாலாட்சி.
“அஹான்… என்ன பண்ணுனான் சூரி…” என விஷ்ணு கேக்க,
“ஏன் என்கிட்ட கேக்குற…உனக்கு தெரியாத என்ன?… நீங்க தான் கூட்டு களவாணி ஆச்சே…” என அவர் கேக்க,
“இங்க பாருங்க விசா… நீங்க இப்படி பொடி வச்சி பேசுறத கண்டுபிடிக்குற அளவுக்கு எனக்கு இப்போ நேரமில்லை… அதுனால இன்னும் ஒரு நிமிசத்துல என்னனு சொன்னிங்கன்னா, கேட்டுட்டு கிளம்புறேன்… இல்லனா நீங்க சொல்லவே வேணாம்…” என காரிடரில் தன் பூட்ஸை அணிந்துகொண்டே பேச,
விசா, “அப்படி ஒன்னும் உன் அவசரத்துக்கு சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்ல… போடா… போயி உன் ஊரு சுத்துற வேலையை பாரு… பெருசா வந்துட்டான் டைம்குள்ள சொல்லுங்கன்னு…நான் சொல்லமாட்டேன்…” என அவனை திட்டி சொல்ல,
“சரி சொல்லாதீங்க… அப்பறம் அம்மா பேசுனேன்… ஆட்டுக்குட்டி பேசுனேன்… நீ காதுலயே வாங்குறது இல்லன்னு சொல்லிட்டு என்கிட்ட வராதீங்க…” என போகிற போக்கில் சொல்லிவிட்டு, அவனின் வேலையை பார்க்க சென்றான் விஷ்ணு பிரசாத்.