பகல் பொழுது கடந்து, பாதி இரவு நெருங்கி இருந்தது. இரவு உணவை அவர்களது வீட்டு தோட்டத்திலேயே முடித்துவிட்டு அங்கையே அமர்ந்திருந்தனர் அனைவரும்.
பல நாட்களுக்கு பிறகு ஆரி பெண்ணின் முகம் புன்னகையில் மலர்ந்து கிடந்தது. இனியும் பாவையின் புன்னகையை வாட விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென எண்ணிக் கொண்டான் ஏகலைவன்.
அலைபேசியில் மணியை பார்த்துக் கொண்டே “காலையில நேரமா கிளம்பினும்ங்க… போயி தூங்குங்க, இப்பவே மணி பதினொன்ற ஆயிடுச்சு…” என்றான். அதற்கு அவள் பதில் சொல்லும் முன்பே
“கொஞ்ச நேரம் இருக்கட்டும் தம்பி, நம்ம கூட இருந்தா புள்ளை முகமே சிரிச்சு கிடக்கு…” கோவிலில் அவளது முகத்தில் தெரிந்த இறுக்கத்தை மனதில் வைத்து கூறினார் சௌந்தர்யா.
“இல்லை மா…” ஏதோ சொல்ல வந்தவன் ஆரியின் முக விகாசிப்பை பார்த்து சரியென்று விட்டான்…
அடுத்த அரைமணி நேரத்தில் அவள் தூங்கி வழிய, “அம்மா நான் அவங்களை என் ரூமில போயி விட்டுவிட்டு வரேன்…” என்றது மட்டுமல்லாமல் அவர்களது பதிலைக் கூட கேட்காது ஆரியை அவனது அறைக்குள் அழைத்தும் சென்றிருந்தான்.
பெரியவர்களின் அர்த்தமான சிரிப்பும், மேகலையின் கேலி சிரிப்பும் இளையவர்களை பின் தொடர்ந்தது….
அறைக்குள் நுழைந்ததுமே கலையை இறுக அணைத்துக் கொண்டவள் அவன் எதிர்பாராத நேரம் அவனது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு படுக்கையில் விழுந்தாள். அவளது அணைப்பிலும், எதிர்ப் பாராத முத்தத்திலும் திகைத்து நின்றான் ஆடவன்.
****
சுழலும் நாற்காலியில் முகம் முழுக்க விசாகித்து அமர்ந்திருந்தவனை தான் குறுகுறுவென பார்த்து கொண்டிருந்தான் காசி.
காசியின் பார்வை நிமிடத்திற்கு மேல் பொறுக்க மாட்டாது “ப்ம்ச்ச்….என்னடா…” எனக் கேட்டான் கலை.
நேற்றைய தினம் நடந்த அனைத்தையும் காசியிடம் கூறியிருந்தான் ஏகலைவன். ஆனால் அவனோ அதனை துளியும் நம்பாது கலையை சந்தேகமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
‘நான் கூறிய காதலைக் ஏற்றுக் கொண்டாள்…’ என்று கூறியிருந்தால் கூட நம்பி இருப்பானோ என்னவோ? ஆனால் ‘அவள் தன் காதலைக் கூறினாள்…’ என்று அள்ளி விடவும் தான் காசிக்கு சந்தேகமே வந்தது… அவன் பேச்சை நம்பாதவனாய் கலையை சந்தேகமாக பார்த்தான் காசிநாதன்.
அவனது சந்தேக பார்வையில்
“சரி நான் சொல்றதை நம்ப வேண்டாம்… வேணும்னா உங்க மேடத்தையே கேட்டுப் பாரேன்…” என்றவன் தன் அறையிலிருந்து வெளியில் வந்தவளிடம்
அவளின் அறைக்கு நேராக அமர்ந்திருந்தால் என்னவோ கலையைத் தான் பார்த்தபடி வந்தாள். அவன் கைக் காட்டிக் கூறியது புரிந்து கொள்ள நொடிகள் தேவைப்படவில்லை பெண்ணிற்கு. கலைக்கு பக்கவாட்டில் அமர்ந்திருந்த ஜீவாவையும், எதிரில் பதட்டமாக நின்றிருந்த காசியையும் தான் பார்த்தாள்.
ஆம் ஜீவாவும் அங்கு தான் அமர்ந்திருந்தான். புதிய புராஜக்ட் விசயமாக காசியிடம் பேசிக் கொண்டிருந்தான் ஜீவா. முன்பை போல் இல்லாமல் அடக்கமாக தான் பேசிக் கொண்டிருந்தான். அதற்கு முதல் காரணம் சூர்யாவை அதிரடியாக அலுவகத்தில் இருந்து வெளியனுப்பியது நம்பீசன் புராஜக்ட் குளறுபடி காரணமாக அவனை வேலையில் இருந்து தூக்கி இருந்தாள் ஆரி. மற்றொரு காரணம் கலை தான்.
ஆம் கலை தான்… அன்று ஆரியை தவறாகப் பேசியதற்கு அலுவகத்தில் மட்டுமல்லாமல் வெளியில் வைத்து நன்றாக கவனித்து இருந்தான். அது ஒரு வாரம் லீவ் போடும் அளவிற்கு இருந்தது. அதனாலயே கலையிருக்கும் நேரங்களில் கொஞ்சம் அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறான். எங்கே ஆரியிடம் இவன் பேசியதை கூறி விடுவானோ என்று பயந்தான். மிஞ்சி மிஞ்சி போனால் வேலையை விட்டு நிறுத்தி விடுவாள் அவ்வளவு தான். இவனுக்கும் வேறு வேலை கிடைக்காமல் இல்லை. ஆனால் வேறு இடத்தில் இவளது அலுவகத்தில் கிடைக்கும் சலுகைகள் கிடைப்பதில்லை, அதனாலயே அடங்கி போனான்.
இங்கு காசியோ, கலை,ஆரியை அழைத்ததுமே தன் இருக்கையை விட்டு பதட்டமாக எழுந்து நின்று விட்டான்.
“இவன் திருந்தவே மாட்டான்…” என்ற லூக்கை விட்டுவிட்டு மங்கையை பார்த்தான் கலை. அவளோ காசியை கேள்வியாக பார்த்தபடி நின்றாள். அவளது விழிகளின் கேள்வியை புரிந்து கொண்டவன் போல்
“ஐயோ இல்லை மேம், கலை தான்…” சற்றே தயங்கியவன் கலையை கடுப்போடு பார்த்தான்.
அவனோ ‘ சொல்லி தான் பாரேன்…’ என்ற நக்கல் பார்வையை வீசினான்.
“நீங்க இரண்டு பேரும் லவ் பண்றதா சொல்லிட்டு இருக்கான் மேடம்…” படப்படப்போடு பள்ளி ஆசிரியையிடம் குறை வாசிப்பது போல் கூறியவனைப் பார்த்து சிரிப்பு தான் வந்தது ஆரிக்கு. அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கலையை என்ன என்பதை போல் பார்த்தாள்.
தோள் குலுக்கி “நீ எங்கயோ என்னை வளைச்சு போட்டுட்டியாம் ஜீவா சொல்றார்…” சீவனே என்று அமர்ந்திருந்த ஜீவாவை வம்புக்கு இழுத்தான்.
அவனோ “ஐயோ மேடம்… நான் எதுவும் சொல்லல…” பதறினான். ஜீவாவை ஒரு பார்வை பார்த்தவள் கலையை சிறு கண்டிப்போடு பார்த்தாள்.
பாவையின் முறைப்பில் சிறு புன்னகையை இதழ்களில் தவழ விட்டவன் ஒற்றைக் கண் சிமிட்டி ” சும்மா…” என்றான்.
“மேம்… நியூ சைட் டீடைல்ஸ் கலக்ட் பண்ண வந்தேன்…” என்றான் பவ்வியமாக.
“கலக்ட் பண்ணியாச்சா?…” எனக் கேள்வியாக கேட்டாள். அதற்கு அவசரமாக ஆமேன்று தலையாட்டினான்.
“ஓகே நம்பீசன் புராஜக்ட்ல கொஞ்சம் சேஞ்ச் இருக்கு. சிஸ்டம் ஓபன் பண்ணி வைங்க வரேன்…” என்றாள் கட்டளையாக..
“ஓகே மேம்…” என்றவன் அங்கிருந்து நகர்ந்தான். அவன் வெளியேறியதும் காசியிடம் திரும்பியவள் “நீங்களும் வாங்க…” எனக் கூறினாள்.
பின் கலையை பார்த்தவள் ‘போயிட்டு வரேன்…’ என்பதை போல் தலையாட்டி விட்டு சென்றாள். அத்தனை உரிமையாய் அவள் தலையாட்டி விட்டு சென்றதை விழிகள் இரண்டும் விரிய பார்த்திருந்தான் காசிநாதன்.
அவனது விரிந்த இமைகளை மூடி விட்டான் ஏகலைவன். பட்டென
கலையின் கையை தட்டி விட்டவன் “அடேய் நீ சொன்னதெல்லாம் உண்மையா…” அதிர்ச்சி குரலில் கேட்டான்.
“பின்ன பொய்யா? நான் கூறிய அனைத்தும் உண்மையே.. உண்மையை தவிர வேறு ஒன்றுமில்லை…” அபிநயத்தோடு ஏற்றியிறக்கி கூறினான்.
அவனது பேச்சில் மேலும் அதிர்ந்தவன் போல “இனி உன்னை கையிலையே பிடிக்க முடியாதே டா…” என்றான்.
“அடிங்க…” அடிக்க பாய ஒரே ஓட்டமாக அங்கிருந்து ஓடியிருந்தான் காசிநாதன்.
****
நாளும் பொழுதுமாக இரண்டு வாரங்கள் கடந்திருந்தது.. பழைய புராஜக்ட், புது புராஜக்ட் என்று படு பிஸியாக இருந்தாள் ஆரியா.. அவளது வேலையை அறிந்தவன் என்பதாலோ என்னவோ கலையும் அவளை அதிகம் தொந்தரவு செய்யவில்லை. இருவரும் அதிக நேரம் பேசிக் கொள்ளவில்லை என்றாலும் தினத்திற்கு ஒருமுறையாவது பேசிக் கொண்டனர்.
அன்று இரவு… பல நாட்களுக்கு பிறகு பாகுபலி தோசைக் கடைக்கு காசியும், கலையும் இணைந்து வந்திருந்தனர். இருவருக்கும் அதிரடி தோசையை கூறிவிட்டு திரும்ப தூரத்தில் ஆரியின் வாகனத்தைப் பார்த்தான் ஏகலைவன். உடனே ஆரிக்கு அழைத்தான். அவள் அழைப்பை ஏற்காது போகவும் வேலுவிற்கு அழைத்து வாகனத்தை நிறுத்தக் கூறினான்.
“அண்ணா இங்க…” எனக் கைகாட்ட, சிலடி தூரத்தில் வாகனத்தை நிறுத்தினார் வேலு.
“பாப்பா சாப்பிடுமா தெரியல தம்பி, நீங்க விவரத்தை சொல்லி பாப்பாவை கூட்டிட்டு வாங்க, நான் காசி தம்பியோட இருக்கேன்…” எனக் கூறியவர் அழைப்பை துண்டித்துவிட்டு இறங்கி நின்றார். அதற்குள் கலையும் அங்கு சென்றிருந்தான்.
அவனைப் பார்த்ததும் புன்னகையோடு “பேசிட்டு வாங்க. நான் முன்னாடி போறேன்…” என்றவர் காசியை நோக்கி நடந்தார்.
அவர் நகர்ந்ததும் காரில் அமர்ந்து இருப்பவளை தான் பார்த்தான். இவன் வந்தது கூட தெரியாதவள் போல் கண்களை இறுக மூடி அமர்ந்திருந்தாள்.
‘நான் வந்தது கூட தெரியாம இருக்கா? முதல்ல என்னோட வாசத்தை இவளுக்கு பழக்கி விடணும்…அப்ப தான் நம்ம எங்கிருந்தாலும் கண்டுபிடிப்பா…’ தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டவன் கன்னத்தில் புரண்ட கேசத்தை காதோரம் ஒதுக்கி விட்டபடி “என்னாச்சுங்க…” எனக் கேட்டான்.
அவனது தொடுகையில் விழி திறந்தவள் ஆடவனை பார்த்தாள்.
நன்றாகவே சோர்ந்து இருந்தாள் பெண். “உன்னால முடியலனா வேலு அண்ணாவை பார்க்க சொல்லலாம் தானே டி…பாரு ரொம்ப டையர்ட்டா இருக்க…” எனக் கடிந்து கொண்டவனிடம் “நம்ம தானே பார்க்கணும்…” என்றாள் சோர்வான குரலில்.
“நம்ம தான் பார்க்கணும் இல்லைன்னு சொல்லல, அதுக்காக உடம்பை கெடுத்துட்டு தான் பார்க்கணுமா? யாராவது நம்பிக்கையான ஆளை போயி பார்த்திட்டு வர சொல்லு.. இல்லைன்னா த்ரீ டேஸ் ஒன்ஸ் போயி பாரு…”
“அப்படியும் இல்லைன்னா சைட் என்ஜினியர மார்னிங் அண்ட் ஈவினிங் என்ன வேலை நடந்தது என்னன்னு பிக்ஸ் அனுப்ப சொல்லு… அதுல உனக்கு டவுட்டா இருந்தா நேர்ல போயி பார்த்திட்டு வா…” என்றான். அதற்கு பதில் பேசாது கலையே பார்த்து வைத்தாள். அவளது பார்வையில் “என்ன…” என்பதை போல் புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்டான்.
“நீ இந்தளவுக்கு அறிவாளியா இருப்பன்னு நினைக்கவே இல்லை ஏகவா,..” குறும்பாக கூறினாள்
“மண்டமூக்கி உன்னை…” என்று அவளது மூக்கை பிடிக்க போகும் சமயம் பார்த்து காசி அழைத்தான்.
“ஷ்…வந்ததை மறந்துட்டு பேசிட்டு இருக்கேன் பாரு..இங்க தோசை நல்லா இருக்கும் வா சாப்படாலாம்…” என அழைத்தான்.
முதல் முறை அவன் அழைக்கிறான் எப்படி மாட்டேன் என்பாள் பதில் பேசாமல் இறங்கி அவனோடு நடந்தாள்.
“இந்தா…” என்று தோசையை நீட்டினான் காசி. அந்த தோசையை பார்த்ததும் “என்ன இது இப்படி இருக்கு. எனக்கு வேண்டாம்…” என்றாள் அவசரமாக
“ஏய் நல்லா இருக்கும் டி. சாப்பிட்டு பார்த்திட்டு சொல்லு…” என்றவன் காஸியிடம் தட்டை வாங்கி தோசையை பிய்த்து ஆரிக்கு ஊட்டி விட்டான்…
முதலில் வேண்டா வெறுப்பாக வாங்கியவள் அதன் ருசியில் புருவத்தை உயர்த்தி “ம்ம் நல்லா இருக்கு…” என்றாள்.
“சொன்னேன்ல…” என்றவன் அவளுக்கு ஊட்டி விட்டுக் கொண்டே அவனும் உண்டு முடித்தான்.
ஒரு தோசை முடிந்ததும் காசியிடம் “மாமா இன்னொரு தோசை சொல்லேன்…” எனக் கூறினான்.
“இப்ப தான் நான், உன் கண்ணுக்கு தெரியறன்ல…” முணுமுணுத்து விட்டு கலை கூறியதை செய்தான் காசி.
“டூ மினிட்ஸ்.. வந்துரும்…” என்றவனிடம் சரியென்று தலையாட்டியவள் “நாளைக்கு ஆபிஸ் வர லேட் ஆகும்.நஹாஸ்பிடல் போனும்…” என்றாள்.
“ஏன் என்னாச்சு?..” வேலுவை ஒரு பார்வை பார்த்தபடி இவளிடம் கேட்டான். அவனது பார்வையில் தெரியவில்லை என்பது போல் தோள் குலுக்கினார்.
தற்பொழுது பெண்ணை கேள்வியாக பார்த்தான் ஆடவன்.அவனது பார்வைக்கு பதில் கூறாமல் “நாளைக்கு என்னோட நீயும் வா…” என்றாள்.