ஹேமா அன்று வீட்டுக்குச் சென்ற பின்னரும் சூரியா, சந்தியாவை பற்றியே யோசித்துக் கொண்டிருக்க அலுவலக வேலைகள் அனைத்தும் முடிந்து மாலையில் வீடு திரும்பிய நாராயணனின் பார்வையில் விழுந்தது அவரது மனைவியின் சிந்தனைவயப்பட்ட தோற்றம். சுளித்த புருவங்களுடன் கண்களை மூடி சோஃபாவில் சாய்ந்தவண்ணம் கால் மேல் கால் போட்டு அமர்த்தலாக அமர்ந்திருந்த ஹேமாவை பார்த்தபடியே தனது போனை எடுத்து மேஜையின் மீது வைத்தார்.
அந்த அரவம் கேட்டு கண் திறந்த ஹேமா கணவர் வந்துவிட்டதை அறிந்ததும் அவரிடம் கேள்விக்கணைகளை தொடுக்க ஆரம்பித்தார்.
“என்னங்க ஆரியா என் கிட்ட இன்னைக்கு சூரியாவை பத்தியும் அவனோட செகரட்டரி சந்தியா பத்தியும் என்னென்னவோ சொன்னான். அதுல்லாம் உண்மையா?” என்று மொட்டையாக கேட்க
நாராயணன் டையைக் கழற்றியபடி “இப்பிடி தலையும் இல்லாம வாலும் இல்லாம கேள்வி கேட்டா எப்பிடி பதில் சொல்லுறது ஹேமா?” என்று மனைவியின் கேள்விக்கு அர்த்தம் புரிந்தாலும் புரியாதவர் போல காட்டிக் கொள்ள
ஹேமா நீண்ட மூச்சை இழுத்துவிட்டவராக “ஓகே! ஓப்பனாவே கேக்கிறேன், நம்ம பையன் சூரியா அந்த செகரட்டரி பொண்ணு சந்தியாவை லவ் பண்ணுறானா?” என்று விஷயத்தை போட்டு உடைக்க
நாராயணன் “இந்த கேள்வியை நீ கேக்க வேண்டிய ஆள் நான் இல்லை ஹேமா! நீ இதை சூரியா கிட்ட தான் கேக்கணும்” என்று பதில் சொல்லாமல் தப்பிக்க முயல
ஹேமா விடாப்பிடியாக “நம்ம பசங்க ரெண்டு பேரும் உங்க கிட்ட எதையும் மறைக்க மாட்டாங்கனு எனக்கு நல்லாவே தெரியும். சோ அவன் லவ் பண்ணுனா அந்த விஷயம் உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். என் கிட்ட மறைக்க டிரை பண்ணாதிங்க. உண்மையை சொல்லுங்க” என்று கேட்கவும் அமைதியாக அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு முகம் கழுவ சென்றுவிட்டார்.
ஹேமாவோ “நான் எவ்ளோ சீரியஸா கேட்டுட்டிருக்கேன்.. இவருக்கு கொஞ்சமாச்சும் அது புரியுதா?” என்று மனதிற்குள் பொறுமி தீர்த்தார்.
நாராயணன் டவலில் முகம் துடைத்தபடி வர ஹேமா அவரிடம் ஆவேசமாக எதுவோ கேட்க வர அவரை கையுயர்த்தி தடுத்தவர் “லுக் ஹேமா! இப்போதைக்கு சந்தியாவுக்கும் அவனுக்குமான ரிலேசன்ஷிப்ல நான் தலையிட விரும்பலை. நீயும் விலகி இருக்கிறது தான் நல்லது. நம்ம பசங்க ஒன்னும் குழந்தைங்க இல்லை. அவங்க வாழ்க்கைக்கு எது நல்லது எது கெட்டதுனு டிசைட் பண்ணுற அளவுக்கு அவங்க வளர்ந்துட்டாங்க” என்று பொறுமையுடன் எடுத்து கூறினார்.
[the_ad id=”6605″]ஆனால் அதை அப்படியே செவி மடுத்தால் அவர் ஹேமா இல்லையே. கணவரின் பேச்சு அவருக்கு எரிச்சலை மூட்ட “என்ன பேசுறிங்க நீங்க? அவங்க ரெண்டு பேரும் நம்ம பசங்க. அவங்க வாழ்க்கையில என்ன நடக்குதுனு தெரிஞ்சிக்கிற உரிமை நமக்கு இல்லையா?” என்று ஆதங்கத்துடன் கேட்க
நாராயணன் உணர்ச்சியற்ற குரலில் “கடமையை சரியா செய்யாதவங்க உரிமையை பத்தி பேச தகுதி இல்லாதவங்க ஹேமா. பெத்தவங்களா நம்ம பசங்களுக்கு இந்த ஆடம்பர வாழ்க்கையை குடுத்ததை தவிர நம்ம என்ன பண்ணிருக்கோம்? பாசமா ரெண்டு வார்த்தை பேசிருப்போமா? நான் உன்னை மட்டும் ப்ளேம் பண்ண விரும்பலை. நானும் அதே தப்பை தான் செஞ்சிருக்கேன்.
அதனால அவங்க வாழ்க்கையில என்ன நடக்கணும்னு டிசைட் பண்ணுற உரிமையை நாம எப்பவோ இழந்துட்டோம். சூரியாவுக்கு நம்ம குடுக்காத பாசத்தை அந்த பொண்ணு குடுப்பானா எனக்கு அவங்க ரிலேசன்ஷிப்ல எந்த பிரச்சனையும் கிடையாது. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அவ மரியாதை தெரிஞ்ச பொண்ணு. அவங்க குடும்பமும் நல்ல குடும்பம் தான்” என்று மனைவிக்கு பொறுமையாக எடுத்து கூற
ஹேமா திகைப்புடன் “அவளோட ஃபேமிலி பத்தி உங்களுக்கு எப்பிடி தெரியும்? அப்போ முன்னாடியே உங்களுக்கு அந்த பொண்ணை தெரியுமா?” என்று படபடவென்று பொறிய
நாராயணன் “அவளால தான் சூரியா என் கூட இயல்பா பேச ஆரம்பிச்சான்” என்று ஆரம்பித்தவர் அவர்களின் நட்பு ஆரம்பித்த கதையை விலாவரியாக விவரித்தார். ஹேமா கணவர் கூறுவதை கவனமாக கேட்கவும் நாராயணனும் அனைத்தையும் ஒளிவுமறைவின்றி அனைத்தையும் கூறிவிட்டார்.
ஹேமா அனைத்தையும் உம் கொட்டி பொறுமையுடன் கேட்டு முடிக்க அவர் இதழில் ஒரு ஏளனச்சிரிப்பு மின்னியது. மனதிற்குள் “இதுக்கு தான் ஆரியா அவ்ளோ பில்டப் குடுத்தானா? நான் கூட என்னவோ ஏதோனு பயந்துட்டேன்” என்று எண்ணிக் கொண்டார்.
கணவரிடம் “நீங்க சொல்லுறதை வச்சு பார்த்தா சூரியா அவளை வெறும் ஃப்ரெண்டா மட்டும் தான் நினைக்கிறான் போல. இது புரியாம அப்பாவும் மகனும் ஓவரா கற்பனையில கோட்டை கட்டுறிங்க” என்று கேலியாக கூற
நாராயணன் “அவன் இவ்ளோ குளோஸா பழகுற பொண்ணு அவ மட்டும் தான் ஹேமா. நீ சொல்லுற மாதிரி இப்போ ஃப்ரெண்ட்ஷிப்னு அவங்க நினைச்சிட்டிருக்கிறது வருங்காலத்துல காதலா மாறுரதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு” என்று நம்பிக்கையுடன் கூற
ஹேமா கணவர் ஏதோ ஜோக் சொல்லியதை போல வாய்விட்டு சத்தமாக சிரித்தவர் “நீங்க ஒரு விஷயத்தை மறந்துட்டிங்க போல, இந்த சந்தியாவுக்கு முன்னாடியே அவனுக்கு ஒரு ஃப்ரெண்ட் இருக்கா, அவளும் சூரியாவுக்கு குளோஸ் தான். நீங்க சொல்லுற லாஜிக் அவளுக்கும் பொருந்தும் தானே” என்று முக்கியமான விஷயத்தை நினைவுபடுத்திவிட்டு எழுந்தார்.
நாராயணனும் அப்போது தான் அந்த விஷயம் நினைவுக்கு வந்தவராக அதிர்ச்சியுடன் மனைவியை பார்க்க ஹேமா “பார்ப்போம்! உங்க பையனோட எந்த தோழி அவனுக்கு காதலியாவும் மனைவியாவும் வர்றானு. ஆனா அதுக்கு முன்னாடி நீங்களும் உங்க சின்ன மகனும் வீணா கற்பனையை வளர்த்துக்காதிங்க” என்று கிண்டலாக மொழிந்துவிட்டு சந்தோசமாக போனை நோண்ட ஆரம்பித்தார்.
[the_ad id=”6605″]நாராயணனும் “நான் எப்பிடி அவளை மறந்தேன்? சூரியாவும் இன்னும் சந்தியாவை காதலிக்கிறதா ஓப்பனா சொல்லலை. நாங்க ஃப்ரெண்ட்ஸ்னு தான் ரெண்டு பேரும் சொல்லிக்கிறாங்க. அப்பிடி பார்த்தா சந்தியா மாதிரி அவளும் சூரியாவுக்கு குளோஸ் ஃப்ரெண்ட் தான். அந்த வகையில கிளாஸ், ஸ்டேட்டஸ் பார்க்குற ஹேமாக்கு சந்தியாவை விட அவளை தான் பிடிக்கும். இதுக்கு என்ன தான் முடிவுங்கிறதை சம்பந்தப்பட்ட ரெண்டு பேர் தான் தீர்மானிக்கணும்” என்று எண்ணியபடி பெருமூச்சு விட்டுக் கொண்டார்.
அதைப் பற்றிய யோசனையில் உழன்றவர் இளையமகன் வரவும் அவனைப் பிடித்துக் கொண்டார். ஹேமா கூறிய விஷயத்தை அவனிடம் கூற அவனோ “டாட்! உங்களுக்கு மதர் இந்தியா பத்தி தெரியாதா? அவங்க உங்களை கன்பியூஸ் பண்ணிட்டு போயிருக்காங்க. நான் ஒத்துக்கிறேன் ரெண்டு பேருமே அண்ணாக்கு குளோஸ் ஃப்ரெண்ட்ஸ் தான். எப்பிடி நம்ம தியாவுக்கும் அண்ணாக்கும் முடிச்சு போட முடியாதோ அதே மாதிரி தான் அவளுக்கும் அண்ணாக்கும் மதர் இந்தியாவால முடிச்சு போட முடியாது.
பட் நீங்க சொல்லுற ஸ்டேட்டஸ்ங்கிற ஒரு விஷயத்துக்காக அவங்க கண்டிப்பா தியாவை விட அவளுக்கு தான் பிரிஃபரன்ஸ் குடுப்பாங்க. இதுல அண்ணா தான் அவனுக்கு யார் ஃப்ரெண்ட், யார் லைஃப் பார்ட்னர்னு டிசைட் பண்ணனும். ஆனா அதுக்குள்ள மதர் இந்தியா அவனையும் உங்களை குழப்புன மாதிரி குழப்பிடக் கூடாது” என்று யோசனையுடன் கூறிவிட்டு அவனது அறைக்குச் சென்றான்.
தந்தையும் மகனும் இதே சிந்தனையில் இருக்க சூரியா வெகுநேரம் கழித்து வீடு திரும்பியவனோ சந்தியாவுடன் போனில் பேசிக் கொண்டிருக்க டைனிங் டேபிளில் அமர்ந்து இரவுணவை சுவைத்துக் கொண்டிருந்த நாராயணன் ஆரியாவிடம் கண்ணை காட்ட அவன் வெறுமெனே தலை அசைத்தான். ஹேமா இருவரின் பார்வை பரிமாற்றத்தைக் கண்டும் காணாதது போல சாப்பாட்டில் கண்ணை பதித்திருந்தார்.
அவனது பேச்சு சாப்பிட்டு முடிக்கும் வரை தொடரவே சூரியா லெட்சுமியிடம் ஒரு குட் நைட்டை கூறிவிட்டு போன் பேசியபடியே தனது அறையை அடைந்தான். “ஓகே ஓகே! உன்னால இதை கண்டிப்பா கிளியர் பண்ண முடியும். நான் தெரியாம உன்னை கலாய்ச்சிட்டேன். போதுமா?” என்று மறுமுனையில் பேசியவளை சமாதானம் செய்துவிட்டு போனை வைத்தவன் அங்கே தனக்காக காத்திருந்த ஆரியாவை கண்டதும் “என்னடா தூங்காம என் ரூம்ல என்ன பண்ணுற நீ?” என்ற கேள்வியுடன் அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.
ஆரியா யோசனையுடன் அண்ணனை பார்த்தவன் “இப்போ நீ தியா கூட தானே பேசிட்டு வர்ற? நான் உன்னை ஒன்னு கேப்பேன். உண்மையை சொல்லணும்” என்ற பீடிகையுடன் ஆரம்பிக்க
சூரியா “நீ என்ன வேணும்னாலும் கேளு! அதுக்கு முன்னாடி அவ நேமை இப்பிடி கொல்லாதே… கால் ஹெர் சந்தியா” என்று ஒரு மாதிரி குரலில் உரைக்க அவனது இளைய சகோதரனுக்கு உள்ளுக்குள் குளுகுளுவென்று இருந்தது. மனதிற்குள் “இதை கேக்க மதர் இந்தியா இல்லாம போச்சே… சோ வாட்! இதே ரூட்ல போனா இவனே இவன் வாயால உண்மையை ஒத்துக்குவான். எனக்கு அது போதும்” என்று எண்ணிக் கொண்டான்.
வேண்டுமென்றே “ஏன் நான் அவளை தியானு சொன்னா உனக்கு என்ன ப்ரோ? உன் ஃப்ரெண்ட் எனக்கும் ஃப்ரெண்ட் தானே. நீ தான் இவ்ளோ கோவப்படுற. பட் தியா என்னை எதுவுமே சொன்னது இல்ல” என்று பொய்யான கோபத்துடன் கூற
சூரியா அதைக் கேட்டுக் கேட்காதவன் போல “சரி அதை விடு! ஏதோ கேக்கணும்னு சொன்னியே, அதை கேளு” என்று சாதாரணக்குரலில் கூறிக் கொண்டே டிசர்ட்டுக்கு மாறினான்.
ஆரியா “தியாக்கும் உனக்கும் இடையில என்ன தான் நடக்குதுடா? மதர் இந்தியா டாட் கிட்ட உன்னோட இன்னொரு ஃப்ரெண்ட் இருக்காள்ல அவளை மாதிரி தான் தியாவும் உனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட்னு சொன்னாங்களாம். டாட் கன்பியூஸ் ஆயிட்டாருடா” என்று மனதில் இருப்பதை கேட்டுவிட
சூரியா அந்த கேள்வியில் சற்று யோசித்தவன் “அவ என்னோட குளோஸ் ஃப்ரெண்ட் தான். பட் பிரவுனி……” என்று ஏதோ சொல்ல வந்தவன் பின்னர் தலையசைத்து மறுத்தவனாய் “இந்த டாபிக்கை இதோட விட்டுடு ஆரியா. பிரவுனி இப்போ ஸ்டடீஸ்ல கான்சென்ட்ரேட் பண்ண வேண்டிய நேரம்” என்று சொல்லிவிட்டு தூங்க முற்பட
ஆரியா அவனது சகோதரனின் கையைப் பற்றியவன் “இப்போ நான் தியாவோட ஸ்டடீஸ் பத்தி உன் கிட்ட கேக்கலையே. நீ உன் மனசுல அவளைப் பத்தி என்ன தான் நினைச்சிட்டிருக்க?” என்று விடாப்பிடியாக கேட்க
சூரியா மொட்டையாக “தெரியலை ஆரியா, அவளை மாதிரி பிரவுனியும் எனக்கு ஃப்ரெண்டா இல்ல வேற எதாவதானு இப்போ வரைக்கும் புரியலை. ஆனா எப்போவும் அவ கூடவே இருக்கணும், அவ பேசுறதை கேக்கணும்னு மட்டும் தோணுது. அவ கிட்ட என்னை தவிர யாராவது அதிகமா உரிமை எடுத்துகிட்டா அது நீயாவே இருந்தாலும் கண்ணு மண்ணு தெரியாம கோவம் வருது.
[the_ad id=”6605″]இதுக்கெல்லாம் என்ன காரணம்னு எனக்கு புரியலை… ஒரு வேளை மூனு வருசம் கழிச்சு அவளை பார்த்ததால அப்பிடி தோணுதுனு நினைக்கிறேன். அதெல்லாம் ரொம்ப யோசிக்க நான் விரும்பலைடா. எனக்கு பிரவுனியை பிடிக்கும். இப்போ அவ என் கூட என்னோட ஆபிஸ்ல என் கண்ணு முன்னாடியே இருக்கா. இந்த ஃபீல் எனக்கு பிடிச்சிருக்கு. இதை தவிர வேற எதுவும் எனக்கு தோணலை” என்று இருக்கு ஆனால் இல்லை என்ற ரீதியில் பதிலளித்துவிட்டு படுக்கையில் அமர்ந்துவிட்டான்.
ஆரியா மானசீகமாக அண்ணனின் தலையில் குட்டு வைத்தவன் “என்ன மண்ணாங்கட்டி ஃபீலோ…. இப்போ அவ உன் கூடவே இருக்கானு சொன்னல்ல…. ஒரு நாள் இல்லைனா ஒரு நாள் அவ உன்னை விட்டு போக போறா… நீ தேவதாஸ் மாதிரி சுத்த போற. அப்போ தான் உனக்கு அவ மேல இருக்கிறது என்ன ஃபீல்னு உனக்கும் புரியும், அந்த தியாவுக்கும் புரியும்… என்ன ஒன்னு இந்த மதர் இந்தியா உங்க ரெண்டு பேரோட லைஃப்லயும் எதும் குட்டி கலாட்டா பண்ணாம இருந்தா போதும்” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டபடி அவனது அறையை நோக்கி நடையை கட்டினான்.
சூரியா அவன் சென்றதும் தீவிரமாக யோசித்தவன் யோசனையின் முடிவில் “ரொம்ப யோசிக்காதேடா! பிரவுனி எங்கே போக போறா? நீ இவங்கலாம் சொல்லுறாங்கன்னு உன் இஷ்டத்துக்கு எதையாச்சும் பண்ணி வச்சிடாதே…. அப்புறமா வீணா பிரவுனியோட வாழ்க்கை தான் டிஸ்டர்ப் ஆகும்…. அவ படிக்கட்டும்டா” என்று அவனது மனசாட்சி அவனுக்கு அறிவுறுத்த அதை ஏற்றுக் கொண்டபடி விழிகளை மூட நித்திராதேவி அவனை ஆட்கொள்ள தொடங்கினாள்.
******