அதிகாலை வெயிலின் தாக்கமும், ஜன்னலின் வழியே உள்ளே நுழைந்த தென்றலின் வருடலும் அவ்வறையில் உறங்கிக் கொண்டிருந்தவனை துளியும் அசைக்கவில்லை… அக்கணம் கதவு தட்டும் கேட்டது… பட்டென கண்களை திறக்கவில்லை என்றாலும் கொஞ்சமே அசைந்தான் உறங்கிக் கொண்டிருந்தவன். மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டது.
“கடவுளே…” என்றபடி எழுந்தான் ஜெய் நந்தன். உறக்கத்திற்கு கெஞ்சிய கண்களை துடைத்துக் கொண்டே அறைக்கதவை திறந்தான். அவனின் கார்பன் காப்பி தான் நின்றுக் கொண்டிருந்தான்…
“கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா டா உனக்கு? தூங்கிட்டு இருக்கேன்னு தெரியுதுல, சும்மா சும்மா கதவை தட்டற…” கத்த ஆரம்பித்தவனை இழுத்து அணைத்துக் கொண்டான் வந்தவன்…
“ஹேய்…” என்று நிமிடம் அதிர்ச்சியானவனுக்கு சற்று முன்னிருந்த தூக்கம் கூட பறந்து சென்றிருந்தது..
தன்னை இறுக அணைத்துக் கொண்டிருந்தவனின் முதுகைத் தட்டிக் கொடுத்தான். ஜெய்யின் இந்த செய்கை எதிரில் இருந்தவனுக்கு ஆறுதலைக் கொடுத்திருக்க வேண்டும்.
“அவ இருக்கிற இடம் தெரிஞ்சுடுச்சு டா ஜெய்.இன்னைக்கே அவளை பார்க்க போறேன்.ரொம்ப வருஷம் ஆனா மாதிரி இருக்கு டா… என் மேல இன்னும் கோபம் இருந்தாலும் வெறுத்திருக்க மாட்டான்னு நம்பிக்கை இருக்கு டா…” என்றவனின் முதுகை வருடி விட்டானே தவிர பதில் பேசவில்லை…
“மாம் கிட்ட சொல்லு, அவங்க மருமகள் வந்தப்பறமாவது என்கிட்ட பேசுவாங்களான்னு பார்ப்போம். அண்ட் உன்னோட ஹிட்லர் கேட்டால்? அவருக்கு கண்ணுக்கு நான் தெரிய மாட்டேன்…” என்றபடி ஜெய்யின் அணைப்பிலிருந்து விலகினான் அவன்.
அவனது பேச்சிலிருந்த துக்கம் ஜெய்யை தாக்கியது”சரி…” என்பதைப் போல கண்களை மூடித் திறந்தான்.
“நான் கிளம்பறேன்…” என்றவன் மீண்டும் ஏதோ யோசித்தவனாய்
“அவள் என்னை மன்னிப்பாளா? என்னை ஏத்துப்பாளா?” குழந்தையாய் கேட்டவனைப் பார்த்து கண்ணீரே வந்துவிட்டது ஜெய்யிற்கு.
“இத்தனை வருசத்துல என்னை ஒரு தடவைக் கூடத் தேடி வரல டா, அப்ப இன்னும் என்மேல இருக்கிற கோபம் போகலன்னு தானே அர்த்தம்…அப்ப நான் போனாலும் என்னை வேண்டாம் சொல்ல வாய்ப்பு இருக்கு தானே…”என மேலும் அவன் கேட்க தாளாவே முடியவில்லை ஜெய்யால். எதிரில் நின்ற தன் அண்ணனை இறுக அணைத்து கொண்டான்.
“உன்னோட நல்ல மனசுக்கு எல்லாமே நல்லாதவே நடக்கும் அண்ணா.. கண்டிப்பா அண்ணி உன்னை புரிஞ்சுக்குவாங்க, நீ பயப்படாம போ….”என்றான். தம்பியின் வார்த்தைகள் இவனுக்கு தைரியமூட்ட மும்பையிலிருந்து சென்னையை நோக்கி பயணித்தான் அவன்…
உன் கருவிழியில் என்னை தொலைக்க…
உன் மெல்லிய சிரிப்பில் என்னை மறக்க…
உன் கற்றை கூந்தலில் என் வாசம் பிடிக்க..
கடல் கடந்து உன்னை நாடி வருக்கிறேனடி.
*********
“குழந்தைங்க ரெண்டு பேரும் கூட எழுந்துட்டாங்க… ஆனா இவ இன்னும் தூங்கிட்டு இருக்கா கழுதை…” அவளது தாயின் கத்தல் துளியும் காதில் விழவில்லை என்பதை போல் தான் உறங்கி கொண்டிருந்தாள் அவள்..
“இப்ப நீ எழுந்துக்க போறயா? இல்லை மூஞ்சில சுடு தண்ணி ஊத்தவா?…” அறையின் நுழைவாயிலில் தாயின் சத்தம் கோபமாக கேட்க ஆரம்பிக்கவும் கண்களை திறக்காமலேயே
“ஒரு ஃபைவ் மினிட்ஸ் ம்மா…” என்றவள் இன்னும் பல ஃபைவ் மினிட்ஸ் கடந்து தான் எழுந்தாள்.
சட்டென கலைந்த உறக்கத்தில் அடித்து பிடித்து எழுந்தவள் மணியை பார்க்க அதுவோ காலை எட்டு மணியை காட்டியது. தலையில் அடித்துக் கொண்டே அவசரமாக குளியல் அறைக்குள் நுழைந்தவள் அடுத்த சில நிமிடங்களில் தயாராகி வெளி வந்தாள்.
டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த பிள்ளைகளின் கேசத்தைக் கோதிக் கொண்டே “என்னம்மா நேரமா எழுப்பி விட்டுருக்க வேண்டாமா? பாருங்க ஆபீஸ்க்கு டைம் ஆயிடுச்சு… ஒரு ஆபிஸ் மேனேஜேர் நான்… நானே லேட்டா போனா நல்லாவா இருக்கும் சொல்லுங்க… உறக்கம் நீங்கா குரலில் கத்திய மகளை சமையலறையின் நுழைவாயிலில் நின்றபடி முறைத்தார் அவளின் தாய் பார்வதி…
அவரது பார்வையில் அசடு வழிய சிரித்தாள். பின் பிள்ளைகளிடம் திரும்ப அவர்களோ பாட்டியிடம் திட்டு வாங்கும் தன் தாயை பார்த்து வாயில் கைவைத்து சிரித்தனர்.
இருவரையும் குறுகுறுவென பார்த்தவள் “முதல்ல இவங்களை ஸ்கூல்ல ஜாயின் பண்ண வைங்க மா…என்னை மட்டும் ரெண்டரை வயசுலயே ஸ்கூல்லா சேத்தி விட்டுட்டு… இவங்கள இன்னும் ஸ்கூல்க்கு அனுப்பாம இருக்கீங்க..” என குரலில் சட்டென துளிர்த்த பொறாமையுடன் கேட்டாள்.
அவளின் ஸ்கூல் என்ற வார்த்தையில் பிள்ளைகளின் முகம் கடுப்போடு தாயின் மீது படிந்தது.
“நாங்க போக மாட்டோம்,…” என பிள்ளைகள் கத்தவும்
“ஃபைவ் ஈயர்ஸ் ஆனா தான் பிள்ளைங்களை ஸ்கூலுக்கு அனுப்ப வேணும்…”என பார்வதி சொல்லவும் சரியாக இருந்தது. வெடுக்கென திரும்பி பார்த்தாள். அன்றைய நாளில் ஸ்கூலுக்கு செல்ல மாட்டேன் செல்ல மாட்டேன் என கத்தியவளை முதுகில் நான்கு அடி வைத்தல்லவா அனுப்பி வைத்தார். இவளுக்கு ஒரு நியாயம், இவளின் பிள்ளைகளுக்கு ஒரு நியாயமா?
“அதெல்லாம் முடியாது, நான் நாளைக்கே இரண்டு பேரையும் பிளே ஸ்கூல்ல ஜாயின் பண்ண கேட்டுட்டு வரேன்…” என்றாள் தீவிர குரலில்..
“உனக்கு ஏன் மா இந்த கொலவெறி…” அந்த பக்கம் சரண் கூறினான் என்றால் மறு பக்கம்
உள்ளே நுழைந்த மோகனுக்கோ என்ன நடந்தது என்று புரியவில்லை திருத்திருவென விழித்தார்.
கணவரின் பார்வை புரிந்து கொண்ட பார்வதியோ “இப்ப மல்லுக்கு நிக்கிறதுக்கெல்லாம் நேரமாகலயா உனக்கு…” எனக் கேட்கவும் பதில் பேசாது கடிக்காரத்தை பார்த்தவள் அதற்கு மேல் பேசாது உணவை தின்றாள். அடுத்த சில நிமிடங்களில் அலுவலகத்திற்கு கிளம்பியும் விட்டாள்.
மிதமான வேகத்தில் வாகனத்தை செலுத்திக் கொண்டடிருந்தவளின் இதழ்களில் மெல்லிய புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. பிள்ளைகள் இருவரின் புன்னகையும் அவனது நினைவுகளை கொடுத்தது.
அவனது நினைவில் அவளையும் அறியாமல் அங்கையின் இதழ்களில் புன்னகை… அந்த புன்னகை தோன்றிய மறுகணம் அவன் விட்டு சென்ற நாளின் நினைவுகள் தாக்கியது… தொண்டை குழி ஏறி இறங்கியது… அவனை நுனி முதல் அடிவரை நேசித்தவள் தான் தற்பொழுது அவனை முழுவதுமாக வெறுத்து நிற்கிறாள்… விருப்பிற்கும், வெறுப்பிற்கும் நூலிழை தானே இடைவெளி…
அந்த இடைவெளியை நிரப்பும் நாள் தான் எப்பொழுதோ?..
அவனின் நினைவில் மூழ்கி இருந்தவள் எப்பொழுது அலுவலகம் வந்தாள் எப்பொழுது வேலைகளில் மூழ்கினாள் என்றே தெரியாத நிலை தான்…
என் காதலின் மனதிற்கு ஆயிரம்
கடிவாளம் இட்டு கொண்டாலும்..!!
உன் வாசம்மட்டும் என்னுள் இன்றும் இருக்கிறது ஏனோ..!!