மறுநாள் பொழுது விடிய, நேற்றைய தினம் போலவே காலை உணவு உண்ணதும், மதியும் மொழியும் ரெசார்ட்டை வலம் வர சென்றுவிட்டனர். அதிலும் இன்று அவர் வயதுக்குரிய தோழமைகள் கிடைத்ததால் அவர்கள் பொழுது நன்றாகவே போனது. நளினியும் வழக்கம்போல் சாகரிக்கு உதவுவதற்காக சென்றுவிட்டார். நாளையிலிருந்து விசேஷ நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பதால் அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் இதைப்பற்றி பேசவே அவர்கள் இருவருக்கும் அதிக விஷயங்கள் இருந்தது.
நயந்தினியும் இன்று முழுவதும் ராகவியுடன் இருப்பதற்காக சென்றாலும், நேற்று இரவு விக்கியுடன் பேசியதாலோ என்னவோ, “நாளைக்கு தானே பங்ஷன்லாம் ஆரம்பிக்குது. அதுவும் நாளைக்கு சும்மா கெட் டூ கெதர் பார்ட்டி தான், அதுக்கு எதுக்கு நேத்தே வந்தோம்னு தெரியல, நாளைக்கு ஈவ்னிங் தானே பார்ட்டி, அதுக்கு நாளைக்கு காலையிலேயே வந்திருக்கலாம், எல்லாம் இந்த அம்மாவால வந்தது. ஒரே பிடியாக நின்னு கூட்டிட்டு வந்துட்டாங்க,” என்று நினைத்து கடுப்பானவள், அங்கு சென்றதும் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததில் அப்படியே மாறிவிட்டாள்.
இன்று மாப்பிள்ளை வீட்டிலிருந்து வருகிறார்கள். உடன் மாப்பிள்ளையும் வரவே, ராகவியின் தோழிகள் அவளை கேலி செய்து பொழுதைப் போக்க, நயந்தினிக்கும் அதெல்லாம் கண்டு உற்சாகமாகிவிட்டது.
இதில் ரோஹன் வேறு அவர்களோடு இணைந்து கொள்ள, “ஏன் டா, பொண்ணுங்களோட உனக்கென்ன இங்க வேலை.” என்று அவனையும் விட்டு வைக்காமல் அவர்கள் கேலி செய்ய,
“பின்ன கல்யாணம்னு சொல்லி இங்க கொண்டு வந்து அடைச்சு வச்சிட்டீங்க, எனக்கு பொழுது போக வேண்டாமா?” என்று அவன் பதில் கூறினான்.
“நீயும் என்னைப்போலத்தான் ஃபீல் செய்றீயா ரோஹன்,” என்று கேட்ட நயந்தினி, பின் நாக்கை கடித்துக் கொள்ள,
“அப்போ உனக்கு இங்க போர் அடிக்குதா? என்னோட இருப்பது உனக்கு சந்தோஷமா இல்லை அப்படித்தானே,” என்று ராகவி கோபப்படவும்,
“அதானே அப்போ எங்களோட இருப்பது உனக்கு ஜாலி இல்லையா?” என்று ராகவியின் தோழிகளும் கேட்டனர்.
“அய்யோ அப்படி இல்லை. இன்னும் எந்த பங்ஷனும் ஆரம்பிக்காம இருக்குல்ல, அதைத்தான் சொன்னேன்.” என்று நயந்தினி சமாளித்தாள்.
“நயனி சொல்றதும் சரிதான், பங்ஷன் ஆரம்பிச்சா சும்மா செமயா இருக்கும், அதுவரை பொழுதை போக்க கஷ்டமா இருக்கு, நிகர் மாம்ஸ் இருந்தாலாவது பரவாயில்லை. அவங்களும் இல்லாம ரொம்ப போர் அடிக்குது. நாளைக்கு கெட் டூ கெதர் பார்ட்டிக்கு வந்துடுவீங்களான்னு கேட்டா, வர்றது ரொம்ப கஷ்டம்னு சொல்றாங்க, இங்க எனக்கு தோதா வேற யார் இருக்கா?” என்று ரோஹன் கூற,
“சரி சரி இன்னைக்கு ஒருநாள் தானே, நாளையிலிருந்து எஞ்சாய்மென்ட் இருக்கும், அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோங்க,” என்று ராகவி கூறவும், இருவரும் தலையசைத்துக் கொண்டனர்.
“சரி ஈவ்னிங் மாப்பிள்ளை வராங்க இல்லையா? நீ பளிச்சின்னு இருக்க வேண்டாமா? வா ஸ்பாக்கு போயிட்டு வருவோம்,” என்று தோழிகள் ராகவியை கூப்பிட, நயந்தினியும் அவர்கள் பின்னே போகப் பார்க்கவும்,
ரோஹனோ அவளை தடுத்து நிறுத்தியவன், அவங்களோட போய் என்ன செய்யப் போற, என்னோட இரு,” என்று அவளை தன்னோடு இருக்க வைத்தவன்,
“ஆமாம் நம்ம ஸ்கூல் ஃப்ரண்ட்ஸோட காண்டாக்ட்ல இருக்கீயா? வாட்ஸ்அப் க்ரூப்ல கூட உன்னைப் பார்க்க முடியல,” என்று கேட்க,
“க்ரூப் மெசேஜ்லாம் பார்ப்பேன். ஆனா நான் எதுவும் மெசேஜ் போட மாட்டேன். என்ன எப்போதும் வழக்கமா குட்மார்னிங் குட்நைட் மெசேஜும், ஃபார்வேர்ட் மெசேஜும் தானே அதிகம் வருது. சிலப்பேரை இன்ஸ்டால ஃபாலோ செய்றேன். காலேஜ் சேர்ந்த முதல் ரெண்டுவருஷம் சில ஃப்ரண்ட்ஸ் அப்பப்போ மீட் பண்ணோம், ஆனா கடைசி ரெண்டுவருஷமா யாரையும் பார்க்கறது இல்லை.” என்று நயந்தினி அதற்கு பதில் கூறினாள்.
“ஆமாம் இந்த ரெண்டுவருஷம் மேடம் ஆளே மாறிட்ட தான், என்னோடவும் பேசி ரெண்டு வருஷத்துக்கு மேல இருக்குமா? நீ வீட்டுக்கு வந்து ரெண்டுவருஷம் ஆகுதுன்னு அக்கா சொன்னா, ஃப்ரண்ட்ஸையும் மீட் பண்றதில்ல, அப்படி இதெல்லாம் விட இந்த ரெண்டு வருஷத்தில் உனக்கு எது முக்கியமா போச்சு, ஸ்டடீஸ்ல கவனமா இருந்தேன்னு என்னிடமே கதை விடாத, சொல்லு எங்களை மறக்கற அளவுக்கு யார் உனக்கு அவ்வளவு முக்கியமா போயிட்டா?” என்று ரோஹன் கேட்கவும், நயந்தினிக்கு விக்கியின் முகம் தான் ஞாபகத்திற்கு வந்தது.
“ஏதாச்சும் லவ் மேட்டரா? யாரு? ஒரே காலேஜா? ஒரே கிளாசா?” என்று அவளின் முக மாற்றத்தை கண்டு ரோஹன் கேட்க,
“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல டா, காலேஜ், ஹாஸ்டல் எஞ்சாய்மென்ட்க்கு சொல்லவா வேணும், ஃப்ரண்ட்ஸ் ஊருக்கு போகாம இருந்தா நானும் அவங்களோட அங்கேயே இருப்பேன். அவங்க ஊருக்குப் போனா வீட்டுக்கு வந்திடுவேன். அம்மா முன்னாடி இப்படியெல்லாம் கேட்டுடாத, அதை அவங்க எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியாது.” என்று சொன்னவளை ரோஹன் யோசனையுடன் பார்த்தான்.
“ஆமாம் ஸ்கூல் ஃப்ரண்ட்ஸை மேரேஜ்க்கு இன்வைட் செய்திருக்கீயா? வருவாங்களா?” என்று அவள் பேச்சை மாற்ற,
“பொதுவா வாட்ஸ்அப் க்ரூப்ல போட்டதுதான், இப்போதைக்கு சென்னையில் இருக்க 4 பாய்ஸ் வர்றதா சொல்லி என்னோட பேசினாங்க, ம்ம் நீ வருவீயான்னு ஷோபாவும் மகியும் கேட்டாங்க, வருவேன்னு சொல்லியிருந்தேன். ஒருவேளை நீ வந்தா அவங்களும் வர ஐடியாவில் இருக்காங்களோ என்னவோ, அவங்களிடம் பேசு,” என்றவன்,
“வா நாம செல்ஃபி எடுத்து நம்ம ஸ்கூல் க்ரூப்ல போடுவோம், அதைப்பார்த்து சில ஃப்ரண்ட்ஸ் வர வாய்ப்பிருக்கு,” என்று ரோஹன் சொல்லவும், நயந்தினியும் அதை ஆமோதித்தாள்.
பின் இருவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டதும், ரோஹன் அதை வாட்ஸ்அப் குழுமத்தில் பகிர்ந்தவன், ஸ்டேடஸிலும் வைத்துக் கொள்ள, அதைப்பார்த்த நயந்தினியும் நண்பனை நெடுநாள் கழித்து பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டதால் “நானும் இந்த போட்டோவை என் ஸ்டேடஸில் வைக்கிறேன்.” என்று நண்பனிடம் கூறியவள், பின் அவளும் அந்த புகைப்படத்தை தனது வாட்ஸ்அப் ஸ்டேடஸில் வைத்தாள்.
இவர்கள் இருவரும் வைத்த வாட்ஸ்அப் ஸ்டேடஸை பார்த்த வேறு இரு நபர்களின் கண்கள் மட்டுமல்ல மனநிலையும் வெவ்வேறாக இருந்தது.
அதில் ஒரு நபர் விக்கி. அந்த ஸ்டேடஸை பார்த்து விக்கிக்கு கோபம் தான் வந்தது. கோபப்பட்டது மட்டுமல்லாமல் அடுத்த நொடியே நயந்தினியின் அலைபேசிக்கு விக்கி அழைக்கவும், இந்த நேரத்தில் விக்கியின் அழைப்பை எதிர்பார்க்காதவளோ, “ஃப்ரண்டோட கால் தான், பேசிட்டு வந்துட்றேன்.” என்று ரோஹனிடம் சொல்லிவிட்டு தள்ளிச் சென்றவள், “சொல்லு விக்கி,” என்று பேச,
“ஆமாம் யாரோட எடுத்த போட்டோவை வாட்ஸ்அப்ல வச்சிருக்க?” என்று எடுத்தவுடன் விக்கி கேட்கவும்,
“ரோஹன், என்னோட ஸ்கூல் ஃப்ரண்ட். அதில்லாம பக்கத்து வீட்டில் இருந்தாங்க, அவங்க அக்கா கல்யாணத்துக்கு தான் நாங்க இப்போ வந்திருக்கோம்” என்று நயந்தினி விளக்கம் கொடுத்தாள்.
“எனக்கு அதெல்லாம் தேவையில்லாதது. நீ அவனோட எடுத்த போட்டோவை வச்சது எனக்கு பிடிக்கல, முதலில் அந்த ஸ்டேடஸை எடு,” என்று விக்கி கட்டளைப் போல் கூறவும்,
“அது எப்படி டா எடுக்க முடியும், நான் ஸ்டேடஸ் வச்சதை ரோஹனும் பார்த்தான். இப்போ அந்த ஸ்டேடஸை டெலீட் செய்தா அவன் ஏன்னு கேட்பான். அவன் என் ஃப்ரண்ட் தான் விக்கி, அவன் போட்டோவை வைப்பதில் என்ன தப்பு?” என்று நயந்தினி கேட்டாள்.
“உன்னோட ஃப்ரண்ட்னு சொல்லிக் கூட, நீ அந்த போட்டோவை வைக்கறதுக்கு எனக்குப் பிடிக்கல, அது ஒரு பொண்ணா இருந்தாலும் நான் அப்படித்தான் சொல்வேன். உனக்கு என்னைத் தவிர வேற யாரும் முக்கியமா இருக்கக் கூடாது.” என்ற விக்கியின் பேச்சைக் கேட்ட நயந்தினிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
விக்கிக்கு தன்மீது உரிமை உணர்வு அதிகம் என்பது புரிந்திருந்தாலும், சில சமயம் அது தனக்கு சங்கடத்தையும் கொடுப்பதை விக்கி புரிந்து கொள்ளாததை நினைத்து நயந்தினிக்கு கோபம் தான் வந்தது. ஆனால் விக்கி ரொம்ப சென்சிடிவ், தான் சொல்லி ஒன்றை செய்யாமல் போனால் அதற்கு விக்கி என்ன வேண்டுமானாலும் செய்ய துணியலாம் என்ற உண்மை புரிந்ததால், இப்போது என்ன செய்வது என்று அவளுக்கு தெரியவில்லை.
“என்ன அமைதியா இருக்க? அப்போ நான் சொல்லியும் அந்த வாட்ஸ்அப் ஸ்டேடஸை எடுக்க மாட்டல்ல, என் மேல உனக்கு அவ்வளவு தான் பாசம் அப்படித்தானே, நீ மட்டும் தான் என் உலகம் அப்படின்னு நான்தான் சொல்லிட்டு இருக்கேன். உனக்கு அப்படி எதுவும் இல்லை. அப்படித்தானே?” என்று விக்கி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியவள்,
“ஏன் இப்படியெல்லாம் பேசற விக்கி, இப்போ என்ன உனக்கு, நான் அந்த ஸ்டேடஸை ரிமூவ் செய்யணும் அவ்வளவு தானே, உடனே செய்றேன் போதுமா?” என்று கோபமாக சொல்லிய நயந்தினி அலைபேசி அழைப்பை அணைத்தவள், உடனே தான் வைத்த ஸ்டேடஸையும் நீக்கினாள்.
பின் நண்பன் அருகில் வந்தவள், “எனக்கு கொஞ்சம் தலைவலியா இருக்கு ரோஹன், நான் ரூம்ல போய் ரெஸ்ட் எடுக்கிறேன். ராகவி அக்கா கேட்டா சொல்லிடு,” என்று சொல்லியவள், விறுவிறுவென அங்கிருந்து சென்றுவிட, போகும் அவளை ரோஹன் யோசனையுடன் பார்த்திருந்தான்.
அவளுக்கு அழைப்பு வரும்போது அதில் மிளிர்ந்த பெயர் அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. ‘விக்கி என்ற நபர் யாராக இருக்கும்? ஒருவேளை உண்மையாகவே நயனி யாரையாச்சும் காதலிக்கிறாளா? அந்த நபர் விக்கி தானா? மத்த எந்த விஷயத்திலும் நயனி ஈடுபாடில்லாமல் இருக்கறதை பார்த்தா கண்டிப்பா லவ்ல தான் மாட்டிக்கிட்டு இருக்கா, இந்த கல்யாணம் முடிஞ்சு போறதுக்குள்ள எப்படியாச்சும் அவளிடம் விஷயத்தை கறந்துட வேண்டியது தான்,’ என்று யோசித்துக் கொண்டிருந்த ரோஹனோ,
அவள் ஸ்டேடஸ் வைப்பதற்கு முன் சொல்லிவிட்டு வைத்ததால், அவனும் அதை கவனித்திருந்ததால் தன் அலைபேசியில் அந்த ஸ்டேடஸ் தெரிகிறதா என்று ரோஹன் பார்க்க, அவள் வைத்ததற்கான அறிகுறியே இல்லை. “வைக்கப் போறதா சொன்னா தானே, ஒருவேளை என்னை ஹைட் செய்திருப்பாளோ, என்னோட இருக்க போட்டோவை வைக்கும்போது எதுக்கு என்னை ஹைட் செய்யணும், மொத்தமா ஸ்டேடஸையே ரிமூவ் பண்ணியிருப்பா, ஸ்டேடஸ் வச்சதும் உடனே போன் வருது. பேசி முடிச்சதும் ரிமூவ் பண்றான்னா, கண்டிப்பா அவ லவ் பண்றா,” என்று ரோஹன் வாய்விட்டு சொல்லிக் கொண்டவன், பின் அவனும் அங்கிருந்து சென்றுவிட்டான்.
இங்கு அறைக்கு வந்த நயந்தினியோ, ‘விக்கி சொன்னதுக்காக நான் அந்த ஸ்டேடஸை ரிமூவ் பண்ணியிருக்கக் கூடாது. ரோஹனுக்கு நான் ஸ்டேடஸ் வச்சது தெரியும், இப்போ அந்த ஸ்டேடஸ் இல்லாதது பார்த்து அவன் என்ன நினைப்பான்? ச்சே விக்கி பத்தி தெரிஞ்சும் அந்த வாட்ஸ்அப் ஸ்டேடஸை விக்கிக்கு பார்க்க முடியாதபடி ஹைட் பண்ணாதது என்னோட தப்பு தான்,” என்று நினைத்த நயந்தினிக்கு ஏனோ விக்கியின் மீது கோபம் வந்தது.
சிறிது நேரம் எதேதோ யோசித்தப்படி படுத்துக் கொண்டிருந்தவளோ உறக்கம் வரவே அப்படியே உறங்கிவிட்டாள். மதியம் பசி எடுக்கவே எழுந்தவள், உணவை அறைக்கே வரவழைத்துவிட்டு, அதுவரைக்கும் அலைபேசியை பார்க்கலாம் என்று அலைபேசியை எடுத்துப் பார்த்தால், “சாரி சாரி,” என்று வரிசையாக விக்கியிடமிருந்து குறுந்தகவல்கள் வந்திருந்தது.
அதைப் பார்த்தவளோ, ‘இந்த விக்கிக்கு என்ன தான் வேணுமோ தெரியல, என்ன இருந்தாலும் விக்கியை அத்தனை சீக்கிரம் மன்னிக்கறதா இல்லை.’ என்று மனதில் சொல்லிக் கொண்டவள், விக்கி போன் செய்து தொந்தரவு செய்யக் கூடாது என்பதால், அலைபேசியை அணைப்பில் போட்டவள், உணவு வந்ததும் நிறுத்தி நிதானாமாக சாப்பிட்டு முடித்து, ராகவியை தேடிச் சென்றாள்.
நல்லவேளை இவள் அங்கு சென்றபோது ரோஹன் அங்கு இல்லை. அவன் இருந்து அந்த வாட்ஸ்அப் ஸ்டேடஸை பத்தி கேட்டிருந்தால் தர்மசங்கடமாக ஆகியிருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.
“இவளை கண்டதும் ராகவியோ, “ என்னாச்சு நயனி, உனக்கு தலைவலின்னு ரோஹன் சொன்னான். நல்லா தானே இருந்த, திடீர்னு என்னாச்சு?” என்று கேட்க,
“ம்ம் திடீர்னு இடம் மாறி படுத்ததா என்னன்னு தெரியல, நைட் சரியாகவே தூக்கம் இல்லை. காலையிலிருந்து லேசா தலைவலிச்சிட்டே இருந்துச்சு, திடீர்னு அதிகம் ஆகிடுச்சு, இப்போ கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வந்ததில் பரவாயில்லையா இருக்கு,” என்று நயந்தினி பதில் கூறினாள்.
“நிஜமாவே இப்போ பெட்டரா ஃபீல் பண்ற தானே, இல்லை இங்க ரெசார்ட்ல இருக்க கிளினிக்ல போய் ஒருமுறை பார்த்துட்டு வந்துடு,” என்று ராகவி அக்கறையாக கூற,
“இல்லை க்கா, இப்போ நல்லாவே இருக்கேன்.” என்று அவள் பதில் கூறவும், ராகவியும் அத்துடன் விட்டுவிட்டாள்.
அதன்பின் ராகவியை திருமணம் செய்து கொள்ளப் போகும் மாதேஷும் அவனது குடும்பமும் வரவே அந்த பொழுது பரபரப்பாக போனது. நயந்தினிக்கு அந்த நேரங்கள் பிடித்தும் இருந்தது. அத்துடன் இரவு படுப்பதற்கு தான் அறைக்கு வந்தாள். அப்போது தான் அலைபேசியையும் எடுத்துப் பார்த்தாள்.
வழக்கம்போல் விக்கியிடமிருந்து ஏகப்பட்ட குறுந்தகவல்கள். ‘சாரி, இருந்தாலும் நான் அப்படி செய்திருக்கக் கூடாது தான், எனக்கு கால் பண்ணு ப்ளீஸ்,” என்று வரிசையாக அதே குறுந்தகவல்களை விக்கி அனுப்பியிருக்க, ஏனோ முன்பிருந்த கோபம் இப்போது நயந்தினிக்கு குறைந்திருந்ததால் விக்கியிடம் பேச அவள் மனம் துடித்தது.
நேற்றைய இரவு போல் அன்னையும் தங்கைகளும் உறங்கட்டும் என்று காத்திருந்தவள், இன்றும் அவர்களது பக்கத்து அறை பூட்டியிருந்ததை கவனித்துவிட்டு தான் வந்தாள். அதனால் அதே பக்கத்து பால்கனியில் சென்று பேசலாம் என்ற முடிவில் இருந்தாள்.
அவள் எதிர்பார்த்தது போலவே, சிறிது நேரத்தில் நளினியும், இரட்டை சகோதரிகளும் உறங்கி விடவும், மெல்ல சத்தம் கேட்காமல் பால்கனிக்கு சென்றவள், பக்கத்து பால்கனியிலும் சத்தமில்லாமல் தாவி குதித்தவள், விக்கியை அலைபேசியில் அழைத்தாள்.
அதற்காகவே காத்திருந்தது போல் அழைத்த அடுத்த நொடியே விக்கி அழைப்பை ஏற்று, “சாரி நயன், நான் அப்படி செய்திருக்கக் கூடாது தான், நீ இன்னொருத்தரோட குளோசா இருக்கறதை என்னால பார்க்க முடியல, கோபம் வந்துடுது, என்ன செய்ய சொல்லு, நான் கொஞ்சம் ஓவரா ரியாக்ட் செய்துட்டேன் தான், அதுக்காக நீ என்னை அவாய்ட் செய்துடுவீயா? இன்னைக்கு மட்டும் என் போனை நீ எடுக்காம இருந்திருக்கணும், அப்புறம் நாளைக்கு என்னை உயிரோடவே பார்த்திருக்க முடியாது.” என்ற விக்கியின் பேச்சைக் கேட்டு,
“ஸ்டாப்பிட் விக்கி,” என்று கொஞ்சம் கோபமாக கத்தியவள், பின் பக்கத்து பால்கனியில் இருந்து பேசினாலும் தங்களது அறையில் உறங்கிக் கொண்டிருக்கும் அன்னைக்கும் தங்கைகளுக்கும் கேட்கப் போகிறது என்பதை உணர்ந்தவள், மெதுவாக பேச ஆரம்பித்தாள்.
“இப்போதும் நீ ஓவரா தான் ரியாக்ட் செய்ற விக்கி, ஒரு சின்ன விஷயத்துக்கு செத்துடுவேன்னு ஏன் சொல்ற, நீ இப்படியே செஞ்சுட்டு இருந்தா அப்புறம் எனக்கு செம கோபம் வந்துடும் பார்த்துக்க, நான் முன்னமே சொல்லியிருக்கேன். நம்ம விஷயத்துக்கு அம்மாவை கன்வின்ஸ் செய்ய வேண்டியிருக்கும், அதுக்காக அவங்க சொல்றதை நான் கேட்டுத்தான் ஆகணும், அதுக்கு தான் இந்த கல்யாணத்துக்கு வந்தது. வந்த இடத்தில் ரொம்பநாள் கழிச்சு ஃப்ரண்டை பார்த்து பேசினதால அவனோட ஒரு செல்ஃபி எடுத்தது அவ்வளவு பெரிய தப்பா, எனக்கு யாருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணும்னு நல்லாவே தெரியும், இன்னொரு முறை இப்படி ஏதாவது செய்த?” என்று அடுத்து ஏதோ சொல்ல வருவதற்குள், யாரோ அவளை வேகமாக அறைக்குள்ளிருந்து பிடித்து இழுத்தனர்.
அந்த பிடியில் நயந்தினி கொஞ்சம் என்ன அதிகமே பயந்து கண்களை மூடிக் கொள்ள, “நயா நீயா?” என்ற குரலில் மெதுவாக கண்களை திற்ந்து பார்த்தவள் அதிர்ந்தே போனாள். அதிலும் அவளை தன் பிடியில் வைத்திருந்த ஆடவன் அவளை அழைத்ததை கேட்டு,
இந்த ரெசார்ட்டிற்கு வரும்போது தங்கைகள் பேசியதெல்லாம் அவளது ஞாபகத்திற்கு வந்து போனது.