தேவியின் மனநிலை சாருக்கு தெளிவாக புரிந்தது. பிள்ளை இல்லை என்பதே பெரிய காயம் என்றால் அதை ஊரும், உறவும் குத்தி ரணப்படுத்தி விட்டது.
“சித்ராவ தப்பு சொல்ல முடியாது தேவி. இப்ப இருக்குற பெரும்பாலான பெற்றோர் மனநிலை அது தான். நம்ம பிள்ளைகளை நம்மளை தவிர வேற யாரும் சரியா பார்த்துக்க மாட்டாங்கன்னு ஒரு எண்ணம் மிகுந்து இருக்கு. அப்போ எல்லாம் லீவுக்கு அத்தை வீடு, மாமா வீடு போற மாதிரி இப்போ யாரும் போறது இல்லை. பிள்ளைகளை வெளிய விளையாட விட்டா கூட கண் பார்த்துட்டே இருக்கணும். யாரையும் நம்ப கூடாதுன்னு ஒன்னை பெருசா நம்ப ஆரம்பிச்சுட்டோம்…” என்ற சாரு,
“இந்த வீடியோவ பாருங்க…” என்று தேவிக்கு காட்டினாள். தேவியும் புரியாமல் பார்க்க தொடங்க,
போர் மேகம் சூழ்ந்த இடம், பனி விழும் பெருங்கடல், அதில் ஒரு குடும்பம் தன் இரண்டரை வயது குழந்தையுடன் அகதியாக குழந்தையை தூக்கி கொண்டு உயிர் தப்பி விடும் நோக்கோடு கடலில் இறங்கியது தெரிந்தது…
தேவியின் கண்கள் அந்த குழந்தையையே வட்டமிட்டது. சிவப்பு வண்ண டீ ஷர்ட் அணிந்து, வெண்ணெயை உருட்டி வைத்தது போல அழகு முகத்தில், கோழி குண்டு கண்ணை உருட்டி பார்த்தது. பனி அதிகமாக இருக்க, குளிரில் குழந்தை நடுங்க உதடு துடித்தது. பார்த்ததும் தேவி கண்களில் நீர் நிறைந்து விட்டது. ஐயோ! கை குழந்தை மனம் அலற பார்த்தாள் தேவி.
அந்த வீடியோ முடிந்து அடுத்த ஒன்னு ஓடியது. தேவி உற்று பார்க்க, சிவப்பு வண்ண சட்டை தெரிந்தது. அந்த குழந்தை உடையது தான். யாருமற்ற நடுக்கடலில், குப்புற கவுந்து உயிரற்ற உடலாக மிதந்து வந்தது. காலில் மாட்டி இருந்த ஷீ கூட கலட்ட வில்லை. முகமும் சரியாக தெரிய வில்லை. ஒரு பகுதி தான் தெரிந்தது. தலைக்கு மேல் இரு கைகள் கிடக்க, யாருமற்ற கடலில் அனாதையாக கரை ஒதுங்கியது.
தேவி வேகமாக போனை பிடிங்கி உற்று பார்த்தாள். அகதிகளாக தப்பி வேற நாட்டில் தஞ்சம் புகும் முன் சிறிய ரக ஃபோர்ட் கவுந்து இறந்து விட்டதாக தகவல் இருந்தது.
தேவிக்கு நெஞ்சே வலித்தது. வேற எதையும் பார்க்க வில்லை. அந்த குழந்தை சாடலமாக நீரில் மிதந்ததை மட்டும் தான் பார்த்தாள். படத்தை பெரியதாக்கி அந்த குழந்தையின் கை, கால், கன்னம், தலை, முகத்தில் படர்ந்த முடி, மூடிய கண்கள், சிவந்த உதடு என்று ஒவ்வொன்றையும் பார்க்க, பார்க்க நெஞ்சை அடைத்தது.
இந்த வயதில் எத்தனை பெரிய போராட்டம் அந்த குழந்தைக்கு. தாயின் அரவணைப்பில் உயிர் தப்பி விடுவோம் என்று நினைத்திருக்கும். பனியில் உறையும் வயதா அதற்கு, கடலில் மூழ்கும் போது குழந்தை எப்படி உணர்ந்திருக்கும். மூச்சு திணறல் வந்திருக்கும், தாயை தேடி இருக்கும் அல்லவா…
நினைக்க, நினைக்க தேவிக்கு பொறுக்க முடியவில்லை. பெரிய கேவல் வந்து விட்டது. அழுகை ஓயவில்லை, அரட்ட தொடங்கினாள்.
தேவி என்று சாரு அருகில் வர, “,ஐயோ! அது பிஞ்சு குழந்தை. சாகுர வலி எப்படி இருந்துச்சோ… என்ன கஷ்டம் எல்லாம் பட்டதோ…” என்று சொல்லி சொல்லி தேவி அழுக, சாரு தான் சமாதானம் செய்தாள்.
முழுதாக ஒரு மணி நேரம் கடந்தது தேவி அழுகை குறைய. அந்த பிஞ்சு முகத்தை நினைத்தாலே நெஞ்சில் வலி எழுந்தது.
“எதுக்கு அழுகை தேவி…” என்று சாரு கேட்க.
“ என்ன இப்படி கேக்குறீங்க. அந்த பச்சை பிள்ளையை பார்த்தீங்க தான…”
“ ஆமா, கஷ்டம் தான் அதுக்கு ஏன் நீங்க இப்படி அழுகுறீங்க…”
“என்ன சாரு நீங்க, என் நெஞ்சே எரியுது, மனசு கனத்து போச்சு. அதை நெனைச்சா கூட என் வயுறு கும்புது… நீங்க இப்படி சொல்றீங்க, அது குழந்தை அதை பார்த்து உங்களுக்கு ஒன்னுமே தோணலையா…” வருத்தமாக தேவி சொல்ல,
“அப்படியா” என்று ஆச்சர்யமாக கேட்டவள்,
“உங்களுக்கு ஏன் நெஞ்சு வலிக்கணும். நீங்க என்ன அம்மாவா? ஒரு குழந்தையை பெத்தவளுக்கு தான் அந்த வலி தெரியும். நீங்க தான் பிள்ளை இல்லாதவளாச்சே, உங்களுக்கு ஏன் வலிக்குது…” என்று சாரு கேட்க.
திகைத்து போய் பார்த்தாள் தேவி.
“சொல்லுங்க தேவி. மசக்கை மயக்கம், வாந்தி, வயிறு வீங்கி, கரு தங்கி வலிச்சு பிள்ளை பெத்தீங்களா? எதுவுமே இல்லாம, ஏதோ வீடியோவில் பார்த்த குழந்தைக்கு எதுக்கு பதருறீங்க… உங்களால எப்படி இதையெல்லாம் உணர முடியும்” நக்கலாக சாரு கேட்க.
“ஏன் உணர முடியாது. பிள்ளை பெத்தா தானா? அந்த முகத்தை பாருங்க, நெஞ்சு கொதிக்கும்…” கடுப்பாகி விட்டாள் தேவி.
“அட, அதை தாங்க நானும் சொல்றேன். பிள்ளை பெத்தா தான பாசம் வரும்? ஒரு குழந்தைக்கு தாயான தான தாய்மை உணர்வு வரும்?” என்று கேள்வியை தேவி பக்கம் திருப்பி விட, வாயடைத்து போனாள் தேவி.
“உங்களுக்கு ஒன்னு தெரியுமா, எங்க அம்மா, அப்பா ரெண்டு பேரும் வேலைக்கு போறவங்க தான். தினமும் அம்மா கூட டிரெயின்ல ஸ்கூல் போவேன். அதுவும் காலையில ஏழு மணிக்கு. எம் பக்கத்துல வேற ஒரு ஆன்ட்டி தினமும் வருவாங்க. அவங்களும் வேலைக்கு போறவங்க தான். நேரமில்லாமல் அங்க வந்து தான் சாப்பிடுவாங்க. நான் ஸ்கூல் போய் சாப்பிடுவேன்…”
“ஒரு நாள் அவங்க கொண்டு வந்த பாக்ஸ்ல பூரி இருந்துச்சு. பார்த்ததும் எனக்கு ஆசை. ஆனா வாய் திறந்து நான் கேட்கல. அவங்க ஒரு குட்டி தட்டுல எனக்கும் ரெண்டு வச்சு குடுத்தாங்க. எனக்கு ஒரே ஷாக், எங்க அம்மா வேணாம்ன்னு சொன்னாங்களா, அதுக்கு அந்த ஆன்ட்டி என்ன சொன்னாங்க தெரியுமா?…”
“ பக்கத்துல குழந்தையை பார்க்க வச்சு, நான் மட்டும் சாப்பிட மனசு வரல. எனக்கும் சாப்பாடு இறங்காதுன்னு சொன்னாங்க. அப்புறம் தினமும் எனக்கு ஏதாவது கொண்டு வருவாங்க. அந்த விசயம் எனக்கு மனசுல பதிஞ்சு போச்சு…”
“நான் ஏன் சொல்றேன் தெரியுமா! ஒரு குழந்தை மேல அன்பா இருக்க, தாயா இருக்கணும்ன்னு அவசியமில்லை. முக்கியமா தாய்மை அடஞ்சு இருக்கணும்னும் அவசியமில்லை…” சாரு சொல்ல, தேவிக்கு மீண்டும் அழுகை தான் வந்தது.
இந்த அழுகை வலியில் இல்லை, வலி குறைவதால் வந்த அழுகை.
“மனசு கஷ்டத்தில் இருக்கும் போது ஒரு குட்டி பாப்பா நம்மளை பார்த்து சிரிச்சா, எனக்கே கஷ்டம் நீ வேறன்னா சொல்ல தோணும். குழந்தை சிரிச்சா, நம்ம முகமும் சேர்ந்து சிரிக்கும். அந்த உணர்வு தான் தாய்மை…”
“எங்கயோ டிவில, பேப்பர்ல நாடு கடந்து கூட ஒரு குழந்தைக்கு அநியாயம் நடந்தா, நம்ம மனசு ஏன் துடிக்குது. யாரோ ஒரு குழந்தை இறப்புக்கு, இவ்வளவு நேரம் நீங்க அழுதீங்களே, அந்த அழுகை தாங்க தாய்மை. அந்த குழந்தைக்காக உங்க மனசு துடிச்சது பாருங்க, அந்த உணர்வு தான் தாய்மை…”
“இந்த குழந்தை இறப்புக்கு முன்ன, ரெண்டு நாட்டு விவகாரம்ன்னு ஒதுங்கி தான் எல்லோரும் இருந்தாங்க. பெத்தவங்களை இழந்து, பனியில உறஞ்சு போய், சடலமா கிடந்த இந்த குழந்தையை பார்த்து உலகமே கொதிச்சு போச்சு. அந்த குழந்தைக்கு பல நாட்டு தலைவர்களும் நீதி கேட்டாங்க, பார்த்த மக்கள் கண்ணுல எல்லாம் கண்ணீர் தான். அவங்க யாரும் இந்த குழந்தையை சுமந்தவங்க கிடையாது. ஆனாலும் அவங்களுக்கு தாய்மை உணர்வு இருக்கு தான…”
“சினிமா பக்குறோம், நடிப்பு ன்னு நல்லா தெரியும். அப்படி இருந்தும் ஏதாவது குழந்தைக்கு கேட்டது நடந்தா கண் கலங்கும், ஆதங்கம் வரும். இந்த உணர்வு தாய்மை தான். பலர் அறியாமையில் இருந்தா அவங்க அறியாமைக்கு நீங்க கொடி பிடிக்காதீங்க தேவி…”
“ நீங்க நிச்சயம் ஒரு தாய் தான். உங்களுக்குள்ள தாய்மை உணர்வும் இருக்கு. தேவி மலடி கிடையாது. அவ ஒரு தாய். பிள்ளை பெறாமலே தாய்மையை உணரும் வரம் வாங்கி வந்தவள்…” என்று சாரு சொல்லி முடிக்க, அவள் இரு கைகளையும் பற்றி கொண்டாள் தேவி.
வார்த்தை எல்லாம் வரவில்லை. நீ ஒரு தாய் என்று அடுத்தவர் சொல்லும் போது அழுத்தம் குறைந்தது.
“தேவி, நம்ம மக்கள் நல்லவங்க தான். ஆனாலும் கொஞ்சம் முட்டாள் தனம் நிறஞ்சவங்க. நம்ம நாட்டுல அதிகம் பாதிக்படுறது பெண்களும், குழந்தைகளும் தான். அவங்களுக்கு ஒரு பாதுகாப்பு கொடுக்க, தாய்மையின் தன்மையை ஆண்களும் அறிந்து கொள்ளும்ன்னு தான் தாய்மை வரம், புனிதம், கடவுள் ஆசிர்வாதம், மேன்மை, உயர்வு, பிள்ளை வரம், காணக்கிடைக்காத பொக்கிஷம்ன்னு பெரியவங்க சொல்லி வச்சாங்க. ஆனா நம்ம மக்கள் இப்படி புரிஞ்சு வச்சு இருக்காங்க. தாய்மை வரம்ன்னா, தாய்மை அடையாதவங்க சாபம் வாங்கி வந்தவங்களா? ஆனா அப்படி தான் மாறி போச்சு,..” சாரு சொல்ல,
“ நன்றி, ரொம்ப நன்றி சாரு. அதுக்கும் மேல எனக்கு என்ன சொல்லன்னு தெரியலை. எனக்கு ஒரு தெளிவ கொடுத்து இருக்கீங்க…”
“என் வேலையே அது தான தேவி. நீங்க வளர்ற இடத்துல இருக்கீங்க. இன்னும் அதிகமா விமர்சனம் வரும். நீங்க குறையா எதை நினைக்கிறீங்களோ அதை வச்சு தான் உங்களை டார்கெட் பண்ணுவாங்க. ஒன்ன எப்பவும் மனசுல வைங்க. உங்க தப்பால உங்க கர்ப்பம் பாதிக்க படலை. கடவுள் கொடுக்கல, அதனால் உங்களுக்கு தாய்மை உணர்வு இல்லன்னு ஆகாது…”
“அன்னை தெரசா எத்தனை குழந்தை பெத்தாங்க. அவங்களை ஏன் அன்னைன்னு சொல்றோம். சாமி கும்பிடுவீங்க தான, சிவன் பாதி பார்வதிக்கு எப்படி கணேசனும், முருகனும் குழந்தையா வந்தாங்க. தாய்மைன்றது ஒரு உணர்வு அதை உங்களால உணர முடிஞ்சா நீங்க தாய் தான்…” விளக்கமாக மேற்கோள் காட்டி புரிய வைத்தாள் சாரு.
தேவிக்கு ஒரு திடம் வந்தது. சாருவின் ஆலோசனை பின் ஒரு தெளிவு கிடைத்தது. நானாக எந்த தப்பும் செய்ய வில்லையே, தானாக அல்லவா குறை வைத்து விட்டார் கடவுள்.
பிறக்கும் போதே கண் தெரியாமல், உடல் ஊனமாக, மன பிறழ்வு என்று வாழும் மக்களை பார்க்கும் போது அவர்கள் மேல் பரிதாபமும், கருணையும் தோன்றும். கடவுள் சபித்து விட்டார் என்று கடவுளை தூற்றும் மக்கள். அதே, பிள்ளை சுமக்க முடியா பெண்களை அபச குணமாகவும், அதிஷ்டம் கெட்டவளாகவும், குறை உள்ளவளாகவும் பார்ப்பது ஏன்?…
“இதை பண்ணுங்கன்னு நான் உங்களுக்கு சொல்ல போறதே இல்லை தேவி. என்ன பண்ணனும்ன்னு உங்களுக்கே விளங்கும். முதல் அடி எடுத்து வைக்கும் போது முள்ளு தான் தெரியும். தயங்காம அடுத்த அடி எடுத்து வைங்க, நிச்சயம் பாதை தெரியும்…”