நண்பர்கள் மூவரும் ஆவலாக எதிர்பார்த்த திங்கள் கிழமை, வழக்கத்துக்கு மாறாக பரபரப்புடன் விடிய, காலை எழுந்தது முதலே வசீகரன் பம்பரமாய் சுற்றி தயாராக, உமையாளோ எப்பொழுதும் போல தேரென ஆடி அசைந்து தயாரானாள்.
இருவரும் உணவு மேசையில் உணவுக்காக அமர, வசீகரனை பார்த்து உமையாள் மென்மையாக புன்னைகை புரிய, அந்த புன்னகை புது புத்துணர்வை தர, கொஞ்சம் பரபரப்பு நீங்க, அவனும் புன்னகையுடனே அமர்ந்தான்.
இருவரும் உணவில் கவனமாக இருக்க, வசீகரனின் கைப்பேசி ஒலித்து அதன் இருப்பை உணர்த்த, அதில் ஒளிர்ந்த பெயரை பார்த்து யோசனையுடனே அழைப்பை ஏற்றான் வசீகரன்,
“வசீகரன் ஹியர்”
“………….”
“அப்படி என்ன முக்கியமான வேலை”
“……………….”
“கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா, இன்னைக்கு பாரின் கிளைன்ட்ஸ் வராங்க, கடைசி நிமிஷத்துல வந்து இப்படி சொல்றிங்க, உங்களை”
“………………”
“வைங்க” என்று அழைப்பை துண்டித்தான் வசீகரனின் முகம் முழுக்க கோப மேகங்கள்.
[the_ad id=”6605″]
அவன் பேச ஆரம்பித்ததும் அவனின் முகத்தை தான் பார்த்து கொண்டு இருந்த உமையாள், பேச, பேச அவனின் கோபம் அதிகரிப்பதை கண்டு, என்ன காரணம் என்று புரியாமல் அவன் பேசி முடிக்கும் வரை காத்திருந்தவள், அவன் அழைப்பை துண்டித்ததும்,
“என்ன கரன், என்ன பிரச்சனை” என, யார் அழைத்தது, என்ன சொன்னார்கள் என்று எல்லாம் கேட்காமல் நேரடியாக என்ன பிரச்சனை என்று கேட்டாள் உமையாள்,
“நம்ப கியு.சி மேனேஜர் அழகி தான் கால் பண்ணி இருந்தாங்க, இன்னைக்கு அழகியால ஆபீஸ் வர முடியாதாம், அவங்க தான் கிளைன்ட்ஸ் அஹ வெல்கம் பண்றதா இருந்தது” என அவள் கேட்காத கேள்விக்கும் சேர்த்தே பதில் அளித்தான் வசீகரன்,
அவனின் குரலில் இன்னும் கோபம் மிச்சம் இருக்க, அதற்கான காரணத்தை சரியாக புரிந்து கொண்ட உமையாள்,
“சரி அதனால் என்ன, நீங்க யாராவது வெல்கம் பண்ணுங்க, இதுல யோசிக்க என்ன இருக்கு கரன்” என்றாள் உமையாள்.
“அழகியால் ஏன் வர முடியாது, அப்படி என்ன முக்கியமான வேலை” என்று யோசித்தாலும், அதை வசீகரனிடம் கேட்காமல், இலகுவாகவே பிரச்சனைக்கு ஒரு தீர்வை சொல்லி முடித்திருந்தால் உமையாள். ஆனால் வசீகரனோ,
“இல்ல பாப்பு, பாலா தான் யாராவது லேடிஸ் வெல்கம் பண்ணா நல்லா இருக்கும்னு சொல்லி, அழகிக்கு அந்த பொறுப்பை கொடுத்தான்” என இன்னும் யோசிக்க, உமையாளோ,
“இப்போ என்ன யாராவது ஒரு பொண்ணு, அங்கே இருந்து வர அந்த மைதா மாவு பொம்மைகளுக்கு பொக்கே கொடுத்து வரவேற்கணும், அவ்ளோ தானே, விடு நானே வெல்கம் பண்றேன்” என்று குரும்புடன் சொல்ல, வசீகரனும் அவள் அவர்களுக்கு வைத்த பெயரில் மெல்ல சிரித்து கொண்டான்.
சாதாரணமாக வசீகரன் இந்த மாதிரி சின்ன விசயத்துக்கு எல்லாம் கோபப்படுவன் இல்லை. ஒரு பிரச்சனை என்று வந்தால், அதை எப்படி சரி செய்வது என்பது தான் அவனின் சிந்தனையாக இருக்கும்.
ஆனால் இன்று, எல்லாம் சரியா நடக்க வேண்டுமே என்ற சின்ன பதட்டத்தில் இருந்த வசீகரனுக்கு, சீராக திட்டமிடப் பட்டிருந்த நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட சிறு வேகதடையில், கோவம் போலும் என நினைத்து சிரித்து கொண்டாள் உமையாள்.
உமையாள் உடன் இருக்க போகிறாள் என்பதிலேயே அவனுக்கு ஒரு ஆசுவாசம் கிடைக்க, மூச்சை நன்றாக உள்ளே இழுத்து விட்டவன், “எல்லாம் நல்ல படியாக முடியும்”, என்று தனக்கு தானே சொல்லி கொண்டு, நம்பிக்கையுடன் அவன் காரில் அலுவலகம் கிளம்பினான் வசீகரன்.
எட்டு மணிக்கு அவர்கள் விமானம் தரையிறங்குவதாக தகவல் வந்து இருக்க, அவர்களை விமான நிலையத்தில் வரவேற்க, பாலா சென்றிருந்தான்.
அவர்களை வரவேற்று, அவர்களுக்காக தயாராக இருக்கும் நட்சத்திர விடுயில், அவர்களின் அறைகளில் சிறுது ஓய்வு எடுத்து, பின் அவர்கள் தயாரானதும், காலை உணவை அங்கே அவர்களை முடிக்க வைத்து, அவர்களை அலுவலகம் அழைத்து வருவதாக தான் திட்டம்.
அதற்குள் வசீகரனும், கிருஷ்ணாவும் அலுவலகம், தொழிற்சாலை என எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, எல்லாம் சரியாக இருப்பதை உறுதி செய்து கொண்டனர்.
உமையாள் காலையில் இருந்து அவளின் வேலை பிரிவிற்கு செல்லாமல், வசீகரன் உடனே சுற்றி கொண்டு, ஏதாவது பேசி அவனை புன்னகை முகத்துடனே வலம் வர செய்து கொண்டு இருந்தாள்.
[the_ad id=”6605″]
வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் நால்வரும் நட்சத்திர விடுதியில் இருந்து, பாலாவுடன் கிளம்ப, அவன் நண்பர்களுக்கு அழைத்து, தாங்கள் வந்து கொண்டிருக்கும் தகவலை அவர்களுக்கு தெரிவித்தான்.
சரியாக அவர்கள் உள்ளே நுழையும் நேரம், உமையாள், வசீகரன், கிருஷ்ணா என மூவரும் இன்னும் பிற சில முக்கிய மேலதிகாரிகளும் அவர்களை வரவேற்க குழுமி இருந்தனர்.
அவர்களை அழைத்து கொண்டு வந்த பாலா, தன் நண்பர்களை குறிப்பிட்டும், மற்ற முக்கிய மேலதிகாரிகளை பொதுவாகவும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினான்.
அதே சமயம், அவர்களை ஒவ்வொருவராக தனி தனியே குறிப்பிட்டு, தன் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான்.
ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி அறிமுகமாக, அப்போது தான் வசீகரனுக்கு பின் நின்று கொண்டிருந்த உமையாள் முன் வந்து, ஒவ்வொருவருக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்க ஆரம்பித்தாள்.
இவ்வளவு நேரம் பாலா தன் நண்பர்களை அறிமுகப்படுத்தும் போது கூட, கொஞ்சம் திமிருடனும், நிறைய அலட்சியத்துடனும் நின்றிருந்த அந்த வெளிநாட்டு மூவர் படையின், தலைவன் போல தோற்றம் கொண்டிருந்த நான்காமவன், உமையாள் முன்னாள் வந்ததும், அவனின் உடல் மொழியில் அப்படி ஒரு மாற்றம்.
உமையாள் ஒவ்வொருவராக பூங்கொத்து கொடுக்க, அந்த தலைவனின் முறை வரவும் அவனின் அருகில் உமையாள் வர, அவனின் உதடுகள், மெதுவாக “ஏஞ்சல்” என்று முனுமுனுத்தது.
அவன் முனுமுனுப்பாக சொல்லிய போதும், அவனின் அருகில் நின்ற உமையாள், அவளின் அருகில் நின்ற வசீகரன், பாலா மற்றும் கிருஷ்ணா என அனைவருக்கும் அவன் சொல்லியது தெளிவாக காதில் விழுந்தது.
உமையாளின் மொழியில், அந்த மைதா மாவு பொம்மை தன்னை “ஏஞ்சல்” என அழைத்ததும், அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ ஒரு மெகா சைஸ் புன்னகையை அவளை நோக்கி சிந்த, உமையாளோ அறிமுகம் இல்லா நபருக்கான, சினேக புன்னகையுடனே அவனை பார்த்தாள்.
மனம் அவனின் “ஏஞ்சல்” என்ற வார்த்தையில் குழம்பி, அவன் யார் என யோசனையுடன் அவனை பார்த்தாலும், கைகள் அதன் போக்கில் அவனுக்கு பூங்கொத்து கொடுக்க, திருவாய் மலர்ந்து அவனை வரவேற்றுவிட்டு, இரண்டு எட்டு பின்னால் எடுத்து வைத்து வசீகரனின் அருகில் சென்று நின்று கொண்டாள்.
ஆனால் அவனோ, உமையாள் எடுத்து வைத்த இரண்டு எட்டை, ஒரே எட்டாக எடுத்து வைத்து, அவளின் அருகில் வர முயல, இயல்பு போல ஒரு பக்கம் வசீகரனும், மறுபக்கம் கிருஷ்ணாவும் அணைப் போல அவளை நெருங்க விடாமல் நிற்க, சற்று தயங்கினான் அந்த மைதாமாவு பொம்மைகளின் தலைவன்.
இது எல்லாமே தொழிற்சாலையின் வளாகத்தின் உள்ளே, அலுவலகத்தின் வாசலிலே அரங்கேற, ஓரு ஓரமாய் நின்று கொண்டு, கூரிய பார்வையில் எல்லோரையும் அளவெடுத்துக்கொண்டு இருந்த மைக்கேல், அவன் உமையாளை நெருங்க முயல, அவரும் அவனை தடுக்க வேகமாக உமையாளை நெருங்க முயன்றார்.
அவரை நிமிர்ந்து பார்த்த உமையாள் கண்களால் எதோ சைகை செய்ய, தன் நடையை தேக்கிய மைக்கேல், தான் முன்பு இருந்த இடத்தில் இருந்தே மீண்டும் நடப்பவற்றை பார்வையிட ஆரம்பித்தார்.
இப்போது தான், உமையாளுக்கு தன்னை, அடையாளம் தெரியவில்லை என்பதை புரிந்து கொண்ட, அந்த மைதாமாவு பொம்மைகளின் தலைவன், தான் யார் என்று அவளுக்கு தன்னை நினைவுட்டும் விதமாக,
“ஹே ஏஞ்சல், ஐ அம் ஸ்டீபன்” என்று உற்சாகமாகவே தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான் அவன். ஏதோ அவனின் பெயரே, அவனை அவளுக்கு நினைவுப்படுத்த போதும் எனும் விதமாக இருந்தது அவனின் செயல்.
ஆனால் அப்போதும் உமையாளின் முகத்தில் யோசனை பாவம் தான். அவளின் பாவத்தில் அந்த ஸ்டீபன் ஆகப்பட்டவனின் சுண்டைக்காய் முகம், இன்னும் கொஞ்சம் சுருங்க,
“ஏஞ்சல் ஸ்..டீ..ப…ன், கரோலின்’ஸ் கசின்….” என்று கொஞ்சம் வருத்ததுடனே சொல்ல, அவன் பெயரை சொன்னபோது, “எந்த ஸ்டீபன்” என்று யோசித்தவள், அவன் சொன்ன கரோலின் என்ற தன்னுடைய தோழியின் பெயரில் அவன் யார் என்று புரிய,
“ஹே ஸ்டீவ், ஹௌ ஆர் யூ மேன்” என நல்ல விதமாக நலம் விசாரிக்க, அவளுக்கு அவனை அடையாளம் தெரிந்ததிலே அந்த ஸ்டீவ் அக மகிழ்ந்து விட்டான்.
[the_ad id=”6605″]
இப்போது அங்கு நின்றது, உமையாள், வசீகரன், கிருஷ்ணா, பாலா மற்றும் அந்த ஸ்டீவ் அவனின் படையில் இருந்த மூவர் மட்டும் தான்.
அந்த ஸ்டீவ், உமையாளை நெருங்க அடி எடுத்து வைத்தபோதே, கிருஷ்ணாவின் கண்ணசைவில், பாலா தங்களை தவிர மற்ற மேலதிகாரிகளை அவர்களின் பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தி இருந்தான்.
அறிமுகம் முடிந்ததால் அவர்களும் அமைதியாக தங்களின் பிரிவை நோக்கி செல்ல, கடைசியில் சென்ற உமையாள் பிரிவின் மேனேஜர் திரும்பி பார்க்க, அவர் பார்த்தது, உமையாளுடன் சுவாரசியமாக உரையாடி கொண்டு இருந்த, அந்த ஸ்டீவை தான்.
அவரின் மனமோ, ” அம்மாடி, இந்த பொண்ணுக்கு பாரின் ரேன்ஜ்ல பவர் இருக்கும் போலவே, அலார்ட் அஹ இருந்துகோடா” என்று வடிவேல் பாணியில் தனக்கு தானே சொல்லி கொண்ட அவரும், தன் பிரிவை நோக்கி சென்றார்.
உமையாளுக்கு அவன் அறிமுகம் ஆனவன் தான் என புரிந்து, வசீகரன் உடல் மொழி சற்று இலகுவாக, சற்று அவளை விட்டு தள்ளி நின்றாலும், அவனின் “ஏஞ்சல்” என்ற வார்த்தை வசீகரனுக்கு உள்ளூர உறுத்தல் தான்.
வசீகரன் சற்று தள்ளி நிற்க, வேறு வழியும் இல்லாமல், விருப்பமும் இல்லாமல் கிருஷ்ணாவும் சற்று தள்ளி நின்றான்.
அந்த ஸ்டீவ் வெகு ஆர்வமாக உமையாளுடன் உரையாட ஆரம்பிக்க, வசீகரனின் முக குறிப்பிலே ஏதோ புரிந்தது போல, உமையாள் வசீகரனை நோக்கி,
“கரன் இது யாருன்னு தெரியுதா, முன்னாடி நம்ப பக்கத்து வீட்டுல இருந்தாங்களே ஆங்லோ-இந்தியன் பேமிலி, கரோலின், என்னோட பிரின்ட், அவளை நியாபகம் இருக்கா, அவளோட கசின்” என ஸ்டீவை அவனுக்கு அறிமுகப் படுத்தியவள், அவனிடமும்,
“ஸ்டீவ் இது கரன், என்னோட கசின், நீங்க கூட பார்த்து இருப்பீங்க” என பரஸ்பரம் அறிமுகப் படுத்த, ஏனோ இரு ஆண்களுக்கும் முதல் பார்வையிலே ஒருவரை ஒருவருக்கு பிடிக்காமல் போக, அதையும் அடுத்தவர் அறியும் படி முக குறிப்பிலே காட்டினர் இருவரும்.
உமையாளுக்காக இருவரும் மிக கடினப்பட்டு உதடுகளை இழுத்து வைத்து புன்னகைக்க முயல, உமையாள் இதை கண்டுகொண்டாலும் ஒன்றும் செய்ய முடியாமல் நடுவில் நின்று கொண்டிருந்தாள்.
ஒரு வழியாக உள்ளே செல்லலாம் என பாலா அழைக்க, அனைவரும் உள்ளே செல்ல, மெதுவாக பின் தங்கிய பாலா, அவனின் அருகில் வந்த கிருஷ்ணாவிடம்,
“மச்சான் அந்த நெட்டையன் இருக்கானே, அவனுக்கு ஸ்டீவ்னு பேரு வச்சதுக்கு பதிலா, ஸ்டவ்னு வச்சி இருக்கலாம், என்னய
என்னா முறை முறைச்சான் தெரியுமா, அவனை ரிஸிவ் பண்ண போனா, அப்படி ஒரு அலட்சியம், திமிரு அவனுக்கு, இப்போ பாரேன் நம்ப உமாவை பார்த்ததும் என்னா ஒரு பார்வை மச்சான், அவனை பார்த்த இந்த நாலு மணி நேரத்தில் அவனுக்கு சிரிக்க தெரியும்னே எனக்கு இப்போ தான்டா தெரியும், பக்கி காது வரைக்கும் சிரிக்கிறான்டா” என பொறுமினான்.
கிருஷ்ணா அந்த “ஸ்டீவ்” ஆகப்பட்டவனின் உமையாளின் மீதான ஆர்வமான பார்வையிலும், அவனின் “ஏஞ்சல்” என்னும் விளிப்பிலும், அடக்கப்பட்ட கடுப்புடன் நிற்க, உமையாளும் அவனை அடையாளம் தெரிந்துகொண்டு, இவனை விட அவனிடம் சகஜமாக பேச,பேச இவனுக்கோ உள்ளுக்குள் புயலின் சீற்றம்.
ஏற்கனவே உலைக்களம் என கொதித்து கொண்டு இருந்த கிருஷ்ணாவிற்கு, இப்போது பாலாவின் பேச்சும் சேர்ந்து கொள்ள, எப்போது வேண்டுமானாலும் வெடித்து விடுவேன் எனும் நிலையில் இருந்தான்.
உமையாளால் ஸ்டீவ் என அழைக்கப்பட்டவன், யாரை பற்றியும் கவலை கொள்ளாமல், உமையாளுடன், இப்பொழுது விட்டால் பின் எப்பொழுதும் பேசவே முடியாது, என்பது போல் உரையாடினான்.
உமையாளோ தனக்கு அருகில் நடந்து வந்த வசீகரனின் முகத்தை ஓர கண்ணால் அளவிட்டவாறே, அந்த ஸ்டீவ் கேட்ட கேள்விகளுக்கு விடை அளித்து கொண்டு இருந்தாள்.
[the_ad id=”6605″]
ஒரு வழியாக எல்லாரும் கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்கு வந்து சேர, சிறிது நேர பேச்சிற்கு பிறகு, அனைவரும் தொழிற்சாலையை சுற்றி பார்க்க கிளம்பினர்.
ஸ்டீவ், உமையாளையும் அவர்களின் உடன் வர அழைக்க, கிருஷ்ணா அந்த ஸ்டீவை பார்வையால் எரித்தான் என்றால், வசீகரன் உமையாளை உறுத்து விழித்தான்.
மரியாதை நிமிர்த்தமாக, “முடியாது” என்று சொல்ல முடியாமல், வேறு வழி இல்லாமல் உமையாள் அவர்களுடன் தொழிற்சாலையை பார்வையிட கிளம்ப, மற்றவர்களாலும் எதும் சொல்ல முடியாத நிலைமை.
பார்வையிடும் போதும், எல்லாவற்றையும் பாலா மற்றும் வசீகரன், மாற்றி மாற்றி விளக்க, தன் சந்தேகங்களை மற்ற மூவரும் அவர்களிடம் கேட்க, அந்த ஸ்டீவ்வோ உமையாளிடம் கேட்டு, வசீகரன் மற்றும் கிருஷ்ணா இருவரின் இரத்த அழுத்தத்தை ஏகாலத்தில் எகிற வைத்தான்.
ஒரு வழியாக தொழிற்சாலையின் செயல்பாடுகளை அறிந்து, அவர்கள் திருப்தியாக உணர, மீண்டும் அலுவலகம் திருப்பினார் அனைவரும்.
அங்கு அவர்களுக்காக நட்சத்திர உணவகத்தில் இருந்து உணவும், அதை பரிமாற ஆட்களும் தயாராக இருக்க, அனைவரும் உணவு உண்ண தயாராகினார்.
அப்போது உமையாளின் அருகில் வந்த அந்த ஸ்டீபன், அவளிடம்,
“ஒரே ஒரு போட்டோ பிளீஸ்” என்று கேட்க, உமையாளோ என்ன சொல்வது என்று ஒரு நிமிடம் முழிக்க, அவன் மீண்டும்,
“பிளீஸ்” என, நிறைய தயக்கத்துடன் அவள் தலையசைக்க, அவளின் அருகில் கொஞ்சம் இடைவெளி விட்டு நின்றவன், ஒரு புகைப்படம் எடுத்தவன், அதை யாருக்கோ அனுப்பி வைத்துவிட்டு அவளை பார்த்து கண்களை சிமிட்டினான்.
வசீகரனுக்கோ அவனின் செயலில், கோபம் கொப்பளிக்க ஆரம்பிக்க, கிருஷ்ணாவோ எந்த நேரமும் ஸ்டீபன் மேல் பாய்ந்து அவனை அடிக்க தயார் என்னும் நிலையில் இறுக்கத்துடன் நின்றிருந்தான்.
அந்த ஸ்டீபன் அந்த புகைப்படத்தை அனுப்பிய அடுத்த நொடி, அவனின் கைப்பேசியில் முகத்தை பார்த்து பேசும் வகையில் அழைப்பு வர, அந்த அழைப்பை ஏற்றவன், கொஞ்சம் நேரம் அந்த நபருடன் தள்ளி நின்று பேசியவன், பின்பு உமையாளின் அருகில் வந்து இருவருக்கும் பொதுவாக திரையை உயர்த்தி பிடித்தான்.
ஸ்டீபனின் செய்கையில் அவனை புரியாமல் பார்த்த உமையாள், திரையில் தெரிந்த அந்த நபரை பார்த்ததும் உற்சாகமாக,
“கரோலின்” என ஆர்வத்துடன் பேச ஆரம்பித்தாள்.
நடுவில் சில காரணங்களால் தொடர்பு விட்டு போய் இருந்த, தன் தோழியை, நீண்ட நாள் கழித்து பார்த்து மகிழ்ச்சி அப்பட்டமாய் முகத்தில் தெரிய, அவளுடன் உரையாட ஆரம்பித்தாள்.
உமையாளின் மகிழ்ச்சியான முகத்தை பார்த்து கொஞ்சமே கொஞ்சம் கோபம் குறைந்தாலும், அவளின் அருகே நின்று, அவளின் முகத்தையே பருகுவது போல பார்த்து கொண்டிருந்த அந்த ஸ்டீபனின் முகத்தை பார்த்ததும், இறங்கிய கோவம் எல்லாம், இறங்கிய வேகத்தை விட வேகமாக, இரண்டு மடங்காக ஏறியது கிருஷ்ணாவுக்கு.
ஒருவழியாக அவர்கள் இருவரும் கைப்பேசி அழைப்பை பேசி முடித்துவிட்டு வர, அனைவரும் உணவு மேசையில் அமர்ந்தனர்.
வசீகரன் உமையாளை முறைத்து பார்க்க, அவளோ “தவிர்க்க முடியவில்லை” எனும் விதமாக, பாவமாக அவனை பார்த்து வைத்தாள்.
இப்பொழுதும் உமையாளின் அருகிலே இருக்கும் இருக்கையிலே அமர்ந்து கொண்டான் ஸ்டீபன்.
அவனை எரிக்கும் பார்வை பார்த்து கொண்டிருந்த கிருஷ்ணா, உமையாளின் மறுபக்கம் அமர்ந்து இருந்த வசீகரனை பார்க்க, அவனின் விழி மொழியில் துணுக்குற்றான்.
ஒரு வழியாக அன்றைய நாள் முடிய, அடுத்தநாள் அவர்களை ஊரை சுற்றி பார்க்க அழைத்து செல்வதாக ஏற்கனவே முடிவு செய்து இருந்தது தான்.
ஆனால் இந்த ஸ்டீபனின் செய்கையில் கடுப்பான நண்பர்கள், அவசியம் அழைத்து செல்ல வேண்டுமா என யோசிக்க, அவ்வளவு தொலைவில் இருந்து வந்து இருப்பவர்களை அப்படியே அனுப்ப மனம் இல்லாமல், அதோடு இது தொழில் என்பதால், தங்களின் சொந்த வெறுப்புகளை இதில் திணிக்க விரும்பாமல் அமைதியாய் இருந்தனர்.
அப்படியும் கிளம்பும் போது, நாளை உமையாள் வருவதை உறுதி செய்து கொண்டு தான் கிளம்பினான் அந்த ஸ்டீபன்.
வீட்டிற்கு வந்த பிறகு வசீகரன், உமையாளிடம் கோபமாக பேச வில்லை என்றாலும், ஏதோ யோசனையுடனே இருந்தான்.
அவன் ஏதோ தீவிர சிந்தனையில் இருக்க, அதை கலைக்க விரும்பாமல், அமைதியாக உண்டுவிட்டு தனது அறைக்கு உறங்க சென்றாள் உமையாள்.
தன் அறையில், அந்த ஸ்டீபனின் செயலால் விளைந்த கோபம் இன்னும் மட்டுபடாமல் இருக்க, கோபத்துடனும், தன் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான் கிருஷ்ணா.
அதே நேரம் மதியம் தான் பார்த்தா வசீகரனின் முகமும், அதில் இருந்த உணர்வுகளும், இவனை தீவிரமான சிந்தனையின் பிடியில் இறுக்கி பிடித்து கொண்டன.
[the_ad id=”6605″]
உமையாள் உறங்க சென்ற பிறகு, உறக்கம் வராமல் தனது அறையில் நடை பயின்று கொண்டிருந்த வசீகரன் அவனின் ஆஸ்தான இடத்தை தேடி வந்தான்.
தோட்டத்தில், சீராக பராமரிக்கபட்ட புல்வெளியில் அப்படியே படுத்து வானத்தையும், அதில் உலாவி கொண்டு இருந்த நிலாவையும் பார்த்து கொண்டே, இன்று நடந்தவைகளை அசைப்போட்டு கொண்டு இருந்தான் வசீகரன்.
இன்று, அவனின் செயல் அவனுக்கே வித்தியாசமாக தான் இருந்தது. இன்று நடந்ததற்கு, தான் கோவப்பட வேண்டிய அவசியம் தான் என்ன??
இந்த கேள்விக்கு சரியான பதில் கிடைக்காமல் போக, சரி ஒரு வழியில் தன் கோபத்தை நியாயம் என்று ஏற்றுக் கொண்டாலும், கோபத்தையும் தாண்டி தான் உணர்ந்த உணர்விற்கு பெயர் என்ன??
தன்னால் அவளின் அருகில், இன்னொருவர் உரிமையாய் நிற்பதை சகித்து கொள்ளவே முடியவில்லையே????
தன் மனதில் அவளின் மீது எந்த விதமான எண்ணமும் இல்லாத போது, நான் இதை சாதாரணமாக கடந்து வந்து இருக்க வேண்டும் தானே, ஆனால் என்னால் ஏன் முடியவில்லை????
ஏன்?? ஏன்??? ஏன்???
நாளை ஒரு நாள், அவள் வேறு ஒருவரை மணம் முடிக்க கூட கூடும், உன்னால் அவளை விட்டுக்கொடுக்க முடியுமா???
என்று மனம் கேள்வி கேட்க, அந்த நினைவே மனதை பிசைய, அப்படி நினைத்து பார்க்க கூட முடி,
“முடியாது, என்னால் முடியாது”
என மனம் அரட்ட, இந்த உணர்வுகளுக்கு பெயர் என்ன???
தீவிர சிந்தனையில் அவன் மனம் ஆதி முதல் அந்தம் வரை எல்லாவற்றையும் அலச, அவனின் எல்லா கேள்விகளுக்கும், அவன் மனம் அளித்த ஒரே பதில்,
“காதல்”
“காதல்” மிக மென்மையாய் அந்த வார்த்தையை உச்சரித்து பார்த்தான் வசீகரன். அவனின் நயனங்களும், அதரங்களும் சேர்ந்து மலர, ஒரு வசீகர புன்னகை ஒய்யாரமாய் வந்து அமர்ந்து கொண்டது அவனின் முகத்தில்.
முகத்தில் உறைந்த புன்னகையுடன், மேகங்களுடன் ஒளிந்து விளையாடி கொண்டிருந்த நிலவை பார்த்தவன், அது அவனின் தலைவியின் முகத்தை நியாபகப்படுத்த,
தன் மொத்த காதலையும் குரலில் குழைத்து,
“நிலா”
என்று பட்டினும் மென்மையான குரலில் சொல்லி பார்த்தான். மனம் இது வரை அறியாத ஆனந்தத்தில் ஆர்பரிக்க,
“என் நிலா”
“என்னோட நிலா”
“என்னோட நிலா பொண்ணு”
விதம் விதமாக, ஓராயிரம் முறை சொல்லி பார்த்தும், அலுக்கவில்லை போலும் அவனுக்கு. இதழின் ஓரம் உறைந்த புன்னகையுடன், அதையே மந்திரம் போல சொல்லி கொண்டே இருந்தான் வசீகரன்.
மனம் இப்பொழுதே உமையாளிடம் இதை பகிர பரபரக்க, அவள் இந்நேரம் உறங்கி இருக்க கூடும் என புத்தி இடித்துரைக்க, “பொறு மனமே பொறு” என்று அதை சமாதனப் படுத்தியவன், கண்கள் கனவில் மிதக்க, அதனுடன் மனது எதையோ யோசனையும் செய்ய, கலவையான உணர்வுகளுடன் எழுந்து தனது அறைக்கு சென்றான் வசீகரன்.
காதல் கொள்வோம்………..