Skip to content
Post Views: 1,049
மைவிழி – 11(b)
மகள் கல்யாணத்தை கண்ணாரப் பார்த்துக் கொண்டிருந்த சரஸ்வதிக்கு அதீத சந்தோசத்தில் ஆனந்தக் கண்ணீர் அது பாட்டுக்கு வழிய நெஞ்சம் நிறைந்து கிடந்தது.
Advertisement
எத்தனை பேச்சுக்களை கேட்டிருப்பார் இந்த திருமணம் நிச்சயம் செய்ததிலிருந்து.
ஒரு சிலர் வேண்டுமென்றே வாசனின் முதல் காதல் தோல்வியை கோடிட்டு காட்டி அவனைப் பற்றி தவறாக சொல்லியதும்,இன்னும் சில சொந்தங்கள் மகள் நிறத்தை குறையாய் பேசியதும் என அந்த தாயுள்ளத்தை கலங்கப் படுத்திருந்தனர்.
Advertisement
Advertisement
இன்று காலையிலுமே இவர் அண்ணனின் மனைவி,
“ஹூக்கும்!வேதவிக்கு வாழ்வு தான். என்னதான் வசதி இல்லன்னாலும் அவன் அழகு பார்த்து தான் கட்டி கொடுத்திருக்காங்க”என வேண்டுமென்றே சொந்தங்களிடம் நையாண்டி பேசியிருந்தார்.
Advertisement
‘தன் பெண்ணுக்கு என்ன குறை’என கேள்வி கேட்க சரஸ்வதிக்கு துறுதுறுத்தாலும் கல்யாணத்தில் கலகம் எதற்கென அப்போதைக்கு அமைதியாய் இருந்தார்.
அவர்கள் பொறாமையை இப்படி காட்டுகிறார்கள்!அதற்காக தன் மகளின் திருமணத்தில் தான் சுணக்கமாக இருக்க முடியுமா? யார் என்ன பேசினாலும் கண்டு கொள்ளவில்லை அவர்.
இந்த ஒரு திருமணத்திலே சொந்தங்களின் உண்மை முகம் தெரிய வந்து அத்தனையும் வெறுத்திருந்தது.
தேவையில்லாத எண்ணங்களை விரட்டி அடித்து விட்டு மணமேடையை பார்த்தார் சரஸ்வதி.
மணமக்கள் ஜோடி அத்தனை பொருத்தமாய் இருந்தனர்.
“நானே கண்ணு வெச்சுட்டேனே. இரண்டு பேருக்கும் சுத்திப் போடணும்” என தனக்கே சொல்லிக் கொண்டார்.
பக்கத்திலிருந்த கணவனைப் பார்த்தவருக்கு வெளிப்படையாய் தன்னைக் காட்டிக் கொள்ளாமல் அவர் நெகிழ்ந்திருப்பது மகளை பார்த்திருப்பதிலே தெரிந்தது.
கண்களைத் துடைத்துக் கொண்ட சரஸ்வதி,
“நம்ம சையாக்கு அடுத்தது கல்யாணம் செய்யணும்”என சொல்ல, திடுக்கிட்டுதான் போனார் மனிதர்.
“அடியே! அவ இப்ப தான் பத்தொன்பதுல நிக்கறா” என்றார் அதிர்ச்சி மாறாத குரலில்.
மனைவி சிரிப்பை அடக்குவது கண்டு முறைத்த சத்யநாதன்,
“கூறு கெட்டவ, என்னை பதட்டப்படுத்தவே இருக்கா” என முணுமுணுத்துக் கொண்டார்.
அமரேசன் இவர்களை கூப்பிடவும், கணவனை அழைத்து கொண்டு வந்தவர் மணமக்கள் அருகில் நெருங்கி ஆசீர்வாதம் செய்தனர்.
அமரேசன் தம்பதிகளுக்கும் மகன் திருமணத்தை கண் குளிர பார்த்ததில் மனம் நிறைந்திருந்தது.
மகனை அணைத்துக் கொண்டார் அமரேசன்.
இங்கோ,தாயை கட்டிப் பிடித்து ஒரே அழுகை வேதவி. தன்னை அத்தனை திடமாய் காட்டிக் கொண்டிருந்தவள் தான் சத்யன் அருகில் வந்து மகள் தலையில் நெகிழ்ச்சியாய் கை வைத்ததும் கண்ணெல்லாம் கலங்கி விட்டது பெண்ணுக்கு.
ஓரடி தள்ளி நின்றே பாசத்தையும் கண்டிப்பாய் காட்டும் தந்தை இப்படி தன்னையே பார்த்து நின்றதில் அவர் கையையும் பற்றிக் கொண்டாள், சத்தமின்றி அழுகையுடன்.
“பக்கத்துல தானே இருக்கீங்க வேதா. நாங்கெல்லாம் வந்து பார்க்க மாட்டோமா!”என அதையும் அதட்டித் தான் சொன்னார் மனிதர்.
சிரிக்க முயன்றபடி கன்னத்தை துடைத்துக் கொண்டவளின் வலது கரத்தை இயல்பாய் பற்றி அவளருகில் நின்று கொண்டான் கீர்த்தி வாசன்.
“வேதவிய நான் பார்த்துக்கறேன் மாமா”என புன்னகையுடன் கூறியவன் மனைவியையும் பார்த்து புன்னகைத்து கண்களால் ஆறுதல் செய்தான்.
இதையெல்லாம் சிறு முறுவலுடன் பார்த்தபடி தன் ஃபோனில் கிளிக்கிக் கொண்டிருந்தான் தமிழ்க் கனியன்.
சிவகுமரன் மாப்பிள்ளைத் தோழனாக வந்திருந்தான். வேதவி வீட்டு ஆண்களுடன் ஏற்கனவே பழக்கமிருந்ததால் கனியன் மட்டுமே புதிதாய் அறிமுகம்.
குடும்பம்,நண்பர்கள்,நெருங்கிய சொந்தங்களுடனான ஆர்ப்பாட்டமில்லாத புகைப்படம் எடுத்தல் நிகழ்வு.
வாசனும் அதைத் தான் விரும்பிருக்க, மணமக்களுக்கு மண்டபத்திலே சின்னதாய் போட்டோ ஷூட்!
அதன் பின்,திருமண சடங்குகள் முடிந்ததும் மண்டபத்திலிருந்து நேரே வாசன் வீட்டிற்கு வந்திருந்தனர் மணமக்கள்.
மணமக்களை ஆரத்தி எடுத்து உள்ளே வரவழைத்த மேகலை மருமகளை சாமியறை அழைத்துச் சென்று விளக்கேற்றச் சொன்னார்.
இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்து வேதவியை சௌந்தர்யாவின் அறைக்குள் விட்டனர்.
வேதவி வீட்டினராக சங்கரியும் அவரது இரு மருமகள்களும் வந்திருக்க, மணிமேகலையுடன் சங்கரி பேசிக் கொண்டிருக்க, ரதியும், சுஜியும் வேதவியோடு இருந்தனர்.
அட்டேச் பாத்ரூம் அற்ற மூன்று படுக்கையறை, சமையல் அறை, ஓய்வறை, கூடம், சாமியறை என மாடி வீடு அல்லாத அவ்வீட்டை பார்த்த ரதிக்கு, வேதவியை நினைத்து யோசனை தான்.
சங்கரி வீடும் இது போல தான்.. ஆனால் சரஸ்வதியினது மாடி வீடு.
இவ்வீடு அமரேசனுக்கு உரியது என்றாலும் பொறுப்பு அவர் பெரிய மகன் கிருஷ்ணனிடம். அமரேசன் தம்பதிக்கு ஒரு அறையும் மற்றது கீர்த்தி வாசனது.
அதே வளவிற்குள் சற்று தள்ளி பரதனின் வீடிருந்தது. அதே ஏரியாவில் விஜயாவும் குடியிருக்க கௌசல்யா பெருந்துரையில் திருமண முடிந்திருப்பதால் அங்கு தான் அவளின் வாசம்.
“என்னண்ணி பார்க்கறீங்க?” என அங்கு சுற்றிமுற்றி பார்த்திருந்த ரதியிடம் கேட்டாள் வேதவி.
“சின்ன வீடு தான் போல நீ அட்ஜஸ்ட் பண்ணிப்பியா வேதவி?”என்றாள் ரதி.
“அதெல்லாம் பண்ணிப்பேன் ண்ணி!”
“….”
“எங்க வீடு மாடி வீடுன்னாலும் மேல் புளோர் யூஸ் பண்ணிக்கிறது இல்லையே அண்ணி! உங்களுக்கு தெரியாததா?ஆனா,எனக்கு இப்படித்தான் இருக்கனும்னெல்லாம் இல்லைண்ணி”என்ற வேதவி,
“அவங்க வீடு இப்படித்தான் வாசனும் எங்கிட்ட சொல்லிருந்தாங்க. கிருஷ்ணா மாமாவும் தனிக்குடித்தனம் போக ஈரோடுல தான் எங்கையோ பெருசா வீடு கட்டிட்டு இருக்காகங்ன்னு சொன்னாங்க”என்றாள் கூடுதலாய்.
மென்நகையுடன் புரிந்ததாக தலையசைத்த ரதி,
“பாருங்களேன் சுஜிக்கா. கல்யாணம் முடிஞ்ச உடனே நம்ம பொண்ணுக்கு பொறுப்பு வந்துடிச்சு”என வேதவியைக் கேலி செய்தாள்.
சுஜித்ரா சிரிக்கவும் அண்ணிகளை போலியாக முறைத்த வேதவி, காபி கப்புக்களோடு அங்கு வந்த சௌந்தர்யாவைக் கண்டு எழுந்து நிற்க,
“உக்கார்ந்துக்கோ வேதவி” என்றபடி மூவருக்கும் காபியைக் கொடுத்தவள்,
“நைட் டிபன் சாப்பிட்டே நீங்க கிளம்புங்க”என்றாள் ரதி, சுஜியிடம்.
மறுக்க வந்தவர்களிடம்,
“மறுக்காதீங்க சுஜி. அத்தையும் சொல்லிருக்காங்க” என சிநேகமாகவே சொன்ன சௌந்தர்யா,
“நீ வேணும்னா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ வேதவி”என்றவள், வேதவியின் கரத்தைப் பற்றி,
“உனக்கு இங்க என்ன சங்கடம்னாலும் எங்கிட்ட சொல்லும்மா”என சொல்லி விட்டே வெளியில் சென்றாள்.
“நான் நெனச்சேன். இந்தம்மாவும் வில்லியா இருப்பாங்கன்னு! நல்லாவே பேசுறாங்க. நல்லவங்களாத் தான் தெரியறாங்க”என்றாள் ரதி.
சுஜித்ரா ஒப்பாக தலையசைக்க, வேதவிக்கு இதெல்லாம் புதிதாக இருந்தது. அவர்களை புரிந்து கொள்ள வேண்டியும் இருந்தது.
மாலை மங்கி இரவும் வந்து விட, சற்று நேரம் தூங்கி எழுந்த வேதவியை இரவுக்காக ஆயத்தம் செய்தனர், அவளது அண்ணியர்.
குளித்து வந்தவளுக்கு புது புடவை அணிவித்து தலையில் பூ வைத்து விட்டனர். சுஜி ஒப்பனை செய்ய வர வேண்டாமென மறுத்து விட்டாள்.
அனைவரும் இரவுணவுக்கு கூடம் வர அப்போது தான் கணவனை கண்டு கொண்டாள் வேதவி. அதுவரையிலும் அவனை பார்த்திருக்கவில்லை அவள். எங்கே என மனம் தேடினாலும் இருந்த அலுப்பிலும், தயக்கத்திலும் யாரிடமும் கேட்கத் தெரியவில்லை. ஆனால் இவள் தூங்கிருந்த சமயம் அவளைப் பார்த்து விட்டுத்தான் சென்றிருந்தான் வாசன்.
கீர்த்தி பக்கத்தில் வேதவியை அமர வைத்து ஒன்றாக உணவு பரிமாறினார் மேகலை.
மகனிடம், “சாப்பிடுப்பா கீர்த்தி. வேதாக்கும் என்ன புடிக்கும்னு கேட்டு சொல்லு” என்றார்.
இவனுக்குப் புன்னகை. சொன்னது போலவே திருமணம் முடித்த பின் தான் பேசி இருக்கிறார் அன்னை என.
உணவு முடித்து விட்டவர்களுக்கு திருநீறு பூசி சங்கரியும், அமரேசன் தம்பதியினரும் ஆசிர்வாதம் செய்து அறைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலில் வாசன் சென்று விட, உள்ளே எழுந்த படபடப்போடு அவன் பின் சென்றாள் வேதவி.
வேதவி குடும்பத்தினரும் உணவு முடித்துக் கிளம்பினர். அதோடு வாசன் குடும்பத்தினரும் மணமக்களுக்கு தனிமை வேண்டி அன்றைய இரவு பரதன் வீட்டில் தங்க ஏற்பாடு.
வாசன்,அண்ணன் தந்தையிடம் போக வேண்டாமென தடுத்திருக்க அவர்கள் கேட்கவில்லை. இப்போது அவர்களும் சென்று விட, வீடு அமைதியானது.
வேதவி அறைக் கதவை தாளிட்டு திரும்ப, இள நகையுடன் கட்டிலில் அமர்ந்த படி அவளைப் பார்த்திருந்தான் கீர்த்தி வாசன்.
“வா வேதா உக்காரு”என அழைத்தான்.
கொஞ்சம் தயக்கம், நாணம்,அதீத படபடப்பு என அவனருகில் அமர்ந்தாள் பெண்.என்ன தான் இத்தனை நாள் பேசி, சண்டையிட்டு, சமாதானம் செய்திருந்தாலும் தடுமாற்றம் இருக்கத்தான் செய்தது.
அவள் முகத்தையே சற்று நேரம் பார்த்திருந்தவன் அவள் உணர்வுகளை உள்வாங்கிய படி,
“எதுக்கு இத்தனை படபடப்பு? ஃப்ரீயா இருங்க வேதாஜி” என்றான் தானும் உடலை தளர்த்தி.
“புது இடம். கொஞ்சம்.. அதான்..”என இழுத்தாள் பெண்.
“ஹ்ம்ம்ம்”
“உங்களுக்கு இப்படியெல்லாம் பீல் ஆகாதுல்ல. நேர்வஸா?” என கேட்க,
சிரித்தவன்,
“அதெல்லாம் ஆகும்.. ஆனா என்ன ஜென்ஸ் நாங்க காட்டிக்க மாட்டோம்” என்றவனை கண் சுருக்கிப் பெண் பார்க்க,
“நிஜமா!நம்பலயா நீ?”என நடுங்கும் தன் கரத்தை தூக்கி காட்ட,கண் விரித்தவளின் விழிகளில் வீழ்வதைப் புரிந்து மீசையோடு மேழுதடு கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டவன், அழுந்த பின்னந்தலையயைக் கோதிக் கொள்ள, பார்வையை மாற்றிருக்கவில்லை வேதவி.
“ப்ச், என்ன பார்வை? போதும்” அதட்டலிட்டவன் டென்ஷனைக் குறைக்க தாடியை நீவிக் கொள்ள, கண்களை அவன் தாடிக்கு நகர்த்தியிருந்தவள், நிமிர்ந்து அவனை முறைத்தாள்.
அதில் சத்தமாக சிரித்தான் வாசன்.
“இன்னும் கோபமா?”
“பின்ன தாடிய எடுக்கறேன்னு மெசேஜ் பண்ணீங்க”என்றாள் இவள் முறைப்பை மாற்றாது.
“அதான் எடுக்க வேணான்னு பலமான மிரட்டல் வந்துச்சே” நகைப்புடன் அவன்.
“…”
“நீ கேட்ட தானே?”
“அ..அது… அப்போ!”
“இப்போ?” பதில் தெரிந்து கொண்டே கேள்வியுடன் அவன்.
“நீங்க எ.. எனக்கு. ம்ப்ச்!நீங்க எனக்கு இப்படித்தான்” என்றவள்,
“ஹ்ம்ம், எடுக்கவே கூடாது!எப்பவும்” என்றாள் கட்டளையாக.
புருவம் உயர்த்தி, “பார்க்கலாம்” என்றவனிடம் முகத்தை திருப்ப,
“இதென்ன.. ப்ச், என்னைப் பார் வேதா!அதான் மெஹந்தி ஃபோட்டோஸ் அனுப்பாம பழி வாங்கிட்டியே”என சீண்டினான்.
அவனை பாராமல் எங்கோ பார்த்தபடி, “நான் இன்னும் முதல் போட்ட சண்டைக்கே சமாதானம் ஆகல. நீங்க சமாதானப் படுத்தல”என்றாள்.
“ஆமால்ல?”
“இப்படி சிரிச்சா? நான் நிறைய சண்டை போடுவேன்”என்றாள் பெண்.
“நிர்ர்ர்ர்றைய சண்டை போடலாம்”என அடக்கப்பட்ட சிரிப்புடன் வாசன் ராகமிழுக்க,
‘டபுள் மீனிங்ல சொல்றாரா?’ வேதவி அவனை ஆராய்ந்தாள். அவன் கண்கள் சிரிக்க, பெண் கன்னங்கள் குறுகுறுத்தது.
“கேடி வாசா” முணுமுணுத்தாள்.
அவழிதசைவில் கண்டு கொண்டவன் காட்டிக் கொள்ளாமல்,
“வேற?”அவன் கேட்க,
“வேற?” அவளும் கேட்டாள்.
“ஹ்ம்ம் தூக்கம் வருதா?”
இல்லையென தலையசைத்தாள்.
“ம்ம், எனக்கும் தான்” என்றவன்,
“என்ன செய்யலாம்? பேசலாமா? இல்ல உனக்கு டயர்டா இருந்தா சாஞ்சிக்கோ வேதா”என எழுந்து சென்று ஏதோவொரு புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு கட்டிலில் அமர,
“வாசன் …”எனத் தயங்கினாள். இவன் என்னவென புருவம் உயர்த்த,
“எனக்கு இன்னும் ரெண்டு நாள்ல எக்ஸாம் இருக்கு. கல்யாண பிஸில படிக்கல.!நான் படிக்கட்டா?”எனக் கேட்டாள். அவன் கையிலும் புத்தகம் இருக்கின்றதே!
வாஞ்சையுடன் இவன் சரியென தலையசைக்க, முகம் முழுக்க சிரிப்புடன் அவனைப் பார்த்து விட்டு தன் பெட்டியைத் திறந்து புக்கை எடுத்துக் கொண்டிருந்தவள்,
“நீங்க என்ன படிக்கறீங்க?” எனக் கேட்க,
“நான் சொல்லிருந்தேனே லாயர்க்கு ட்ரை பண்றேன்னு..எனக்கு ஆல் இன்டியன் பார் கவுன்சில் எக்ஸாம் இருக்கு”என்றான்.
“ஹ்ம்ம்”வாசனிடம் பேசிய படியே பேனை, புத்தகம் என எடுத்துக் கொண்டு வந்தவள் தன் பக்கம் சென்று,படிக்க அமர்ந்து விட்டாள் அவனுடன்.
இடையில் ரதி சொன்னது நினைவில் வர, அடிக்கடி மௌனமாய் சிரித்துக் கொண்டாள் வேதவி.
மனைவியைக் கவனித்து விட்டவன்,
“என்ன? எதையோ நினைச்சி சிரிக்கற மாதிரி இருக்கு?”எனக் கேட்க,புன்னகையுடன் ஒன்றுமில்லை என தலையசைத்தாள் இவள்.
“அப்போ என்னவோ இருக்கு? சொல்லு” வாசன் விடுவதாக இல்லை.
தெரியாமல் விட மாட்டான் எனப் புரிய,
“என் அண்ணிங்க ரெண்டு பேரும் அன்னைக்கு இதை சொல்லி கிண்டல் பண்ணாங்க. ஃபர்ஸ்ட் நைட்ல போய் படிப்பேன்னு. இப்ப ரெண்டு பேருமே படிக்கிறோம்” என்றவளுக்கு என்ன முயன்றும் சிரிப்பை அடக்க முடியாமல் போக, கலகலவென சிரித்தாள் பெண்.
சற்று நேரம் அவள் சிரிப்பையே ரசனையாய் பார்த்திருந்தவன், தண்ணீர் குடித்து ஆசுவாசமாக தன்னை நோக்கியவளைக் கண்டு குறும்பு சிரிப்புடன்,
“படிக்காம.. அப்போ ஃபர்ஸ்ட் நைட்ல என்ன செய்வாங்களாம் வேதா ஜி?” எனக் கேட்டு பெண்ணவளை திணறடித்தான் கீர்த்தி வாசன்.
error: Content is protected !!