Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறக்குமோ மாமன் எண்ணம்

அம்மையப்பன் 27

அம்மையப்பன் 27

 

திருச்செல்வம் தன் அறையின் ஓரத்தில் அமர்ந்திருந்தார்.. அவரின் விழிகள் இரண்டும் சுவற்றை வெறித்தவாறு இருந்தது.. இடையிடயே மெத்தையில் அயர்ந்து உறங்கிகொண்டிருந்த தன் மனைவியையும் பார்த்து கொண்டிருந்தார்..

 



Advertisement

உங்களுக்கு ரெண்டு தாரமாம்.. ரெண்டாவதா வர போறவங்களால தான் உங்களுக்கு குழந்தை கொடுக்க முடியும்னு ஏதோ சோசியர் காரன் சொன்னதா அண்ணி சொல்றாங்க.. அது கேட்டு என்ற உயிரே போயிடுச்சுங் மாமா.. அதான் அப்படி ஏதும் நடந்துடக்கூடாதுன்னு வேண்டுதல் வச்சேன்.. என தேம்பியவாறு அவர் சொல்ல திருச்செல்வம் சுக்கு நூறாய் உடைந்து போனார் ர்..

 

என்னால எப்படி மாமா உங்கள விட்டுக் கொடுக்க முடியும்.. மத்த மொறை பொண்ணுங்க உங்க பக்கத்துல நின்னாலே என்னால தாங்கிக்க முடியாது.. இதுல உங்க சாதகத்துல இன்னொரு தாரம் இருக்குன்னு சொல்றத என்னால சகிச்சுக்கவே முடியல மாமா.. அப்படி மட்டும் ஏதாச்சும் நடந்தா அன்னைக்கே என்ற உசிரு போயிடும் என கதறியழுத பவளத்தின் முகமே திருச்செல்வத்தின் உள்ளமெல்லாம் நிறைந்திருந்தது..

Advertisement

 

Advertisement

திருச்செல்வத்தால் எதுவும் பேச முடியாத நிலை.. இன்றைக்கே பவளத்திடம் அனைத்தையும் கூறிவிடலாம் என்ற முடிவோடுதான் தன் மகளையும் அழைத்து கொண்டு பெரிய வீட்டிற்கு வந்தார்.. ஆனால் அதற்குள் அனைத்தும் மாறிவிட்டது..

 

இப்பொழுது அவரால் நிச்சயம் குழந்தையை பற்றி பவளத்திடம் கூற முடியாது..

Advertisement

 

கோவிலில் இருந்து அனைவரும் வீட்டிற்கு வரும்பொழுது.. அமிர்தவல்லி கலையரசி மட்டுமே இருந்தனர்.. மற்ற மூவறையும் காணவில்லை..

 

மகளை காண திருச்செல்வத்தின் மனது துடித்தாலும், தன் கரத்தை பற்றி கொண்டு நடந்து வரும் மனைவியின் நினைவில் அவனால் எதுவும் பேச முடியவில்லை..

 

அவன் திருநாவுக்கரசுவை ஓர் பார்வை பார்த்தவாறு.. மனைவியுடன் மேலே சென்றுவிட்டான்..

 

தம்பியின் மனம் புரிந்த திருநாவுக்கரசு பார்வையாலே அவனுக்கு ஆறுதல் கூறிவிட்டு, கலையரசியையும் அமிர்தவல்லியையும் தனியே அழைத்தார்..

 

அவங்க எல்லாரும் எங்க..

 

அண்ணே அவங்கள நம்ம தோட்டத்துல வேலைகாரவங்களுக்கு கட்டி கொடுத்திருக்க வீட்டுல விட்டுட்டு வந்துருக்கேன் என கலையரசி சொல்ல.. திருநாவுக்கரசு கோபமானார்..

 

உனக்கு ஏதாவது அறிவு இருக்கா கலை.. அவங்களை போயி வேலைக்காரங்களுக்கு கொடுத்த வீட்டுல தங்க வச்சுருக்க.. அதி நம்ம வீட்டு மூத்த வாரிசு.. என சத்தமிட்டார்..

 

நான் எல்லாம் தெரிஞ்சு தான் பண்றேன் ண்ணே.. நீங்களும் உங்க தம்பியும் தான் புரிஞ்சுக்காம நடந்துக்குறீங்க.. இப்ப அவங்களை என்னன்னு சொல்லி இந்த வீட்டுக்குள்ள தங்க வைப்பீங்க..

 

சும்மா சோசியர் சொன்னான்னு சொன்னதுக்கே பவளம் எப்படியெல்லாம் இருந்தா.. பாத்திங்க தான்னே.. இப்போ போயி சின்னண்ணனுக்கு ஏற்கனவே கண்ணாலம் ஆகி ஒரு புள்ளையும் இருக்கு.. அது இதுதான்னு அந்த புள்ளையையும் காண்பிச்சீங்க அவ்வளவு தான்.. பவளம் உயிரோடவே இருக்க மாட்டா.. அதுனால தான் அவங்கள யாருக்கும் தெரியாம அங்க போய் விட்டேன்.. என கலையரசி அமைதியாக சொல்ல.. திருநாவுக்கரசு தவிப்புடன் நின்றார்..

 

தங்கை சொல்வது அனைத்தும் உண்மையான வார்த்தை தான்.. அதற்காக தங்கள் குடும்ப வாரிசு வேலைகாரர்கள் மத்தியில் இருப்பதா என வேதனையுடன் நினைத்தார்..

 

அதோட அங்க உள்ளவங்க கிட்ட எங்க ஊரு காரவங்க தான் ரொம்ப கஷ்டப்படுறாங்க.. புருஷன் இப்பதான் இறந்தான்னு சொல்லி வச்சிருக்கேன்.. என கலையரசி எவ்வித உணர்வுமின்றி சொல்ல.. திருநாவுக்கரசு அவளை அதிர்ந்து பார்த்தார்..

 

ஆக இனி என்றைக்கும் அதி இவ்வீட்டிற்குள் வாரிசாக நுழைய முடியாது என கலையரசி சொல்லாமல் சொன்னதை திருநாவுக்கரசு புரிந்து கொண்டார்.. இதனை தம்பி எவ்வாறு தாங்க போகிறானோ என திருச்செல்வத்தை நினைத்து வேதனை அடைந்தார்..

 

சற்று நேரத்தில் திருச்செல்வமும் வர அவனிடமும் சொல்லப்பட்டது.. உணர்வுகளற்ற முகத்துடன் அனைத்தையும் கேட்டு கொண்டிருந்தான்..

 

அண்ணே உங்களுக்கு இப்போ ரெண்டு பேருல ஒருத்தரு தான் கிடைப்பாங்க.. அதுல உள்ள சாதக பாதகத்தையும் நல்லா யோசிச்சிக்குங்க..

 

பவளம் வேணும்னா அதாவது பவளம் உயிரோட வேணும்னா யார்கிட்டயும் எதையும் சொல்லாதீங்க.. இப்போ போலவே நம்ம குடும்பம் சந்தோசமா இருக்கும்.. எதுவும் மாறாது.. ஆனா எல்லாருகிட்டயும் உண்மையை சொல்லி குழந்தைதான் முக்கியம்னு நீங்க நினைச்சீங்கன்னா.. பவளம் இருக்க மாட்டா.. நம்ம குடும்பத்தோட மானம் மரியாதை சந்தோஷம் எல்லாம் மொத்தமா அழிஞ்சுடும்.. உங்களுக்கு எது வேணும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க என கலையரசி சொல்லி செல்ல.. திருச்செல்வம் இடிந்து போய் அமர்ந்துவிட்டார்..

 

எல்லாம் முடிந்துவிட்டது.. இனி எக்காலத்திலும் பவளத்திடம் அவரால் உண்மையை கூற முடியாது.. அவருக்கும் குழந்தைக்கும் இடையில் பவளம் எனும் சுவர் மிகப்பெரிதாய் எழுந்து நின்றது..

 

குடும்பம் அதன் மரியாதை.. பவளத்தின் உயிர் என பல தளைகள் திருச்செல்வத்தின் கரத்தை கட்டிப்போட்டது..

 

அதன் விளைவு கோயம்புத்தூரில் கணகா மற்றும் அவர் மகனுடன் அதி தங்க வைக்கப்பட்டாள்.. சுற்றியுள்ளவர்களுக்கு அதி கணகாவின் குழந்தையாக அறிமுகப்படுத்த பட்டது..

 

திருச்செல்வம் விரைவாக கோயம்புத்தூரில் கார்மெண்ட்ஸ் ஆரம்பிக்கும் வேலையை தொடங்கினார்.. அப்பொழுது தினமும் தன் மகளை காணலாம் அல்லவா..

 

அவர்கள் கோயம்புத்தூரின் ஓர் மிடில் கிளாஸ் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்தனர்.. யாருக்கும் மற்றவர்கள் வீட்டின் விஷயத்தை கேட்கும் அளவிற்கு நேரம் இல்லாமல் இருக்கும் மனிதர்கள் வசிக்கும் பகுதி.. அது அம்மூவருக்கும் மிகுந்த வசதியாகி போனது..

 

கணகாவின் மகனை அங்குள்ள பிரபல பள்ளியில் சேர்த்துவிட்டார்.. கணகாவிற்கு திருச்செல்வம் மணிமேகலை மற்றும் குழந்தை பற்றிய ஆதி முதல் அந்தம் வரை தெரியும்.. அதனால் அவர் அதியை தன் கண்ணின் மணி போல் பார்த்து கொண்டார்..

 

******************************

 

பவளத்தின் மனம் இன்னும் சமாதானம் அடையாமல் இருந்தது.. ஒவ்வொரு மாதமும் குழந்தையை எதிர்பார்த்து அவர் காத்திருந்தார்.. ஆனால் ஏமாற்றம் மட்டுமே கிடைக்க கோவில் விரதம் என சுற்ற ஆரம்பித்தார்.. எந்நேரமும் சோகசித்திரமாய் இருக்கும் பவளத்தை எப்படி மாற்றுவது என திருச்செல்வத்திற்கும் அவர் குடும்பத்தினருக்கும் தெரியவில்லை..

 

எங்கு சோசியர் சொன்னது உண்மையாகிவிடுமோ என பயத்தினிலேயே இருந்தார்.. தனக்கு குழந்தை பிறக்காத காரணத்தால் தன் கணவருக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்து விடுவார்களோ என உள்ளுக்குள்ளேயே வருந்தி மருகிக் கொண்டிருந்தார்..

 

********************************

 

அதி மெல்ல அடி எடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தாள்.. பேச்சுக்கள் குழறலாய் வந்தது.. எந்நேரமும் கூடவே இருக்கும் கணகாவிற்கு கூட அவளின் சில வார்த்தைகள் புரியாது.. ஆனால் திருச்செல்வம் தினமும் இரண்டு மணிநேரம் மட்டும் தன் மகளுடன் செலவழித்தாலும் அவள் கூறும் அனைத்தையும் புரிந்து கொள்வார்..

 

அன்றும் அவர் தன் மகளை மடியில் வைத்து கொஞ்சி கொண்டிருக்க.. ப்பா.. என கிளுக்கி சிரித்தவாறு அதி கூற.. திருச்செல்வம் ஆனந்த அதிர்ச்சியில் உறைந்தார்..

 

தங்கம் தங்கமே என்னடா சொன்னீங்க.. தங்க மயிலு என அவர் மேலும் கெஞ்ச.. ப்பா என மீண்டும் அழைத்து அவள் சிரிக்க.. உடல் சிலிர்த்துப் போனார் திருச்செல்வம்..

 

பவளத்தின் மனநிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்ல.. திருச்செல்வத்தின் பொறுமை பறந்தது..

 

பவளம் ஏன் இப்படி இருக்க.. என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா.. உன்ன விட்டுட்டு வேற பொண்ணு பின்னாடி போயிடுவேன்னு சந்தேகம் படுறியா.. என அவர் தோளை உலுக்கி கோபமாக கேட்க பவளம் மிரண்டு விழித்தார்.. அதில் காதல் கொண்ட மனது இளகினாலும் கோபத்தை இழுத்து பிடித்தார்..

 

சொல்லு என திருச்செல்வம் அதட்ட.. பவளத்திற்கு அழுகை வந்தது.. அவரால் பதில் பேச முடியவில்லை..

 

ஆனால் கணவர் பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்த பவளம் மெல்ல தன் அழுகையையும் கேவலையும் விழுங்கி கொண்டு, இல்ல மாமா எனக்கு உங்க மேல சந்தேகம் எல்லாம் இல்ல என்ன மெதுவாக சொன்னார்..

 

அப்புறம் எதுக்கு இவ்வளவு கஷ்டப்படுற நமக்கு முன்னாடி கல்யாணமான அண்ணா அண்ணிக்குமே இன்னும் குழந்தை இல்ல.. அவங்களுக்கு முதல்ல பிறக்கட்டும் அதுக்கப்புறம் நம்மளுக்கு கண்டிப்பா குழந்தை பிறக்கும் என வருங்காலத்தை நினைத்துக் கூறினார்..

 

நான் உனக்கு வாக்கு கொடுக்கிறேன் பவளம், என்னோட வாழ்க்கையில என்னோட பாதியா நினச்சு மனசார நான் தொட்ட முதலும் கடைசியுமான பொண்ணு நீ மட்டும் தான் என திருச்செல்வம் கூற.. பவளத்தின் மனம் நிம்மதி கொண்டது.. தன் கணவர் தனக்கு மட்டும்தான் என மகிழ்ந்து போனார்..

 

ஆனால் திருச்செல்வம் என் வாழ்க்கையில் நீ மட்டும் தான் நான் தாலி கட்டிய மனைவி என்று கூறவில்லை.. பவளம் இருந்த மகிழ்ச்சியில் அதனை கவனிக்க தவறிவிட்டார்..

 

***************************

 

காலங்கள் வேகமாக ஓடியது.. பட்டு பாவாடை அணிந்த சின்ன சிட்டு ஒன்று வாசலுக்கும் வீட்டுக்கும்மாக ஓடி கொண்டிருந்தது..

 

பாப்பா வாடா கண்ணு.. வந்து சாப்புடு சாமி என கொஞ்சி கெஞ்சி கொண்டிருந்தார் கணகா..

 

ஆனால் அதியோ அவர் பேச்சை கேட்காது வாசலையே பார்த்து கொண்டிருக்க.. அவள் பின்னால் இருந்து தூக்கிக் கொண்டான் பதினைந்து வயது சத்யன்..

 

ண்ணா விது.. ண்ணா விது.. விது.. என கை காலை உதறி அலறிக் கொண்டிருந்தாள் நான்கு வயது பூஞ்சிட்டு..

 

அடேய் புள்ளய விடுடா என மகனை அதட்டினார் கணகா..

 

ப்ச் சும்மா இருங்கம்மா.. மணி பத்தாச்சு இன்னும் சாப்புடாம இருக்கா என அன்னையை முறைத்த சத்யன்.. பாப்பாகுட்டி என மென்மையாய் அழைக்க சின்னவள் முறைத்தாள்..

 

உங்க அப்பா வரதுக்கு இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்.. அதுக்குள்ள எங்க பாப்பாகுட்டியோட தொப்பைக்கு பசிக்கும் தானே.. இப்போ என்கிட்ட கொஞ்சமா சாப்பிடுவீங்களாம்.. அப்பொறம் உங்க அப்பாகூட கொஞ்சம் சாப்பிடுவீங்களாம் என கொஞ்ச..

 

மெல்ல கன்னத்தில் விரல் தட்டி யோசித்தவள்.. ஓகே.. பத் ஒன் இத்லி தான் என கறாராய் சொன்னாள்.. 

 

சரி ஒரு இட்லி மட்டும் சாப்பிடுங்க.. என சொன்ன சத்யன் அன்னைக்கு கண் காண்பிக்க ஒன்றை இட்லியை ஒரு இட்லியாக ஊற்றி கொண்டு வந்தார் கணகா..

 

சத்யன் அவளை சேரில் உட்கார வைத்து ஊட்டிவிட அவளும் சமத்தாக சாப்பிட்டாள்..

 

சத்யனின் செல்ல தங்கை அவள்.. ஒரு தாயின் வயிற்றில் பிறக்கவில்லை என்றாலும்.. சத்யனிற்க்கும் அதிக்கும் இடையில் அண்ணன் தங்கை பாசம் இருந்தது.. அதி கை குழந்தையாக இருக்கும்போது அவள் தான் சத்யனின் விளையாட்டு பொம்மையாக இருப்பாள்.. எந்நேரமும் அதி கூடத்தான் சுற்றிக் கொண்டே இருப்பான்.. வெளியில் சென்று அவன் வயதினரோடு என்றும் விளையாடியதில்லை..

 

அவள் சாப்பிட்ட அரைமணி நேரத்தில் திருச்செல்வம் திருநாவுக்கரசு மற்றும் நாகநாதன் வந்தனர்..

 

அவர்களைக் கண்டதும் முகம் முழுக்க சிரிப்புடன் ப்பா என ஓடிவந்தாள் அதி..

 

திருச்செல்வம் மகளை எதிர்கொண்டு வாரியணைத்து உச்சியில் முத்தமிட.. சின்னவள் கிளுக்கி சிரித்தாள்..

 

நாகநாதனும் திருநாவுக்கரசும் இருவரையும் நெகிழ்ச்சியாக பார்த்தனர்..

 

ப்பா என் பர்தே அப்பவும் லேத் என முகத்தை சுருக்க.. அச்சோ அம்மணி சாரிடா.. இனி அப்பா லேட்டா வர மாட்டேன்.. என்ற தங்கமயிலுக்கு வளையல் வாங்க போனேனா அதான் லேட்.. என சமாதானம் செய்ய.. சற்று நேரம் கழித்தே சமாதானமானாள்..

 

பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா மதுக்குட்டி.. என அவளை மீண்டும் முத்தமிட்டவாறு சொன்னவர்.. பிள்ளையின் கரத்தில் மரகதகள் பதித்த வளையல்களை அணிவித்தார்.. 

 

அடேய் என்ற பேத்திய இங்க கொடுடா.. இவனே வச்சுக்குவான்.. என நாகநாதன் மகனை திட்ட.. அதி முறைத்தாள்..

 

தாத்தா அப்பாவ தித்த கூதாது.. என விரல் நீட்டி எச்சரிக்கை செய்ய.. நாகநாதனின் நினைவுகள் பின்னோக்கி சென்றது..

 

இரண்டு வருடங்களுக்கு முன்புதான் திருச்செல்வம் மற்றும் அதியை பற்றி நாகநாதருக்கு தெரியவந்தது..

 

அவர் ஒருவேளையாய் கோவை வந்திருந்தார்.. திருச்செல்வத்தையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்லலாம் என நினைத்தவர், போன் பண்ணி கேட்க.. திருச்செல்வமும் வேறு இடத்தில் இருக்கிறேன் என கூறி ஃபோனை வைத்து விட்டார்.. ஆனால் அவர் வைத்த ஐந்து நிமிடங்களில் திருச்செல்வத்தின் கார் நாகநாதனை தாண்டி சென்றது.. அதில் சந்தேகம் கொண்ட நாகநாதன் திருச்செல்வத்தை பின் தொடர்ந்தார்..

 

திருச்செல்வம் ஒரு வீட்டில் நுழைய.. அங்கிருந்த ஒரு பெண்ணும் பையனும் வெளியேறுவதைக் கண்டு.. மேலும் சந்தேகம் கொண்டு வீட்டை நெருங்கினார்..

 

ப்பா.. ப்பா.. என திருச்செல்வத்தை கண்ட சந்தோஷத்தில் அதி குதித்துக் கொண்டிருக்க.. திருச்செல்வம் அவளை தூக்கிப்போட்டு கொஞ்சி கொண்டிருந்தார்.. இதனை கண்ட நாகநாதன் அதிர்ந்து விட்டார்..

 

முதலில் அவரை கவனித்த அதி ப்பா.. என அவரை நோக்கி கை நீட்ட.. சாதாரணமாக திரும்பிய திருச்செல்வம் அங்கு தன் தந்தை நிற்பதை பார்த்து திகைத்து விட்டார்..

 

என்றா இது.. யாரு புள்ளடா இது.. என கோபமாக அவரை நோக்கி கையை உயர்த்த.. சட்டென தன் கரத்தில் இருந்த பொம்மையை தூக்கி அவரின் முகத்தின் மேலே எரிந்தாள் அதி..

 

அதில் அதிர்ந்த நாகநாதன் பிள்ளையை பார்க்க.. அவளோ ப்பா தித்தி கொன்னு என ஒற்றை விரலை உயர்த்தி மிரட்டினாள்.. நாகநாதன் அந்நிலையிலும் குழந்தையின் செயலில் மயங்கித்தான் போனார்.. அதோடு குழந்தை மனைவியின் ஜாடையில் இருப்பதையும் கண்டு கொண்டார்..

 

அப்படி பண்ணக்கூடாது அம்மணி.. அவங்க நம்ம தாத்தா.. என பிள்ளையை சமாதானம் செய்த திருச்செல்வம்.. ஐயா முதலில் உட்காருங்க.. நான் உங்களுக்கு எல்லாம் சொல்றேன் என்ற திருச்செல்வம், அவரை அமரவைத்து தண்ணீர் கொடுத்தார்.. பிறகு ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் சொல்ல.. நாகநாதன் சிலை போல் சமைந்து விட்டார்..

 

தன் மக்கள் மூவரும் குடும்பத்திற்கு தெரியாமல் இவ்வளவு பெரிய விஷயம் செய்திருப்பதை நினைத்து உடைந்து போனார்.. அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை..

 

வீட்டிற்குச் சென்ற உடனே கலையரசி மற்றும் திருநாவுக்கரசை கண்டு கோபம் கொள்ள.. கலையரசி அவரையும் பேசியே சமாதானம் செய்து விட்டார்..

 

அப்போதிலிருந்து நாகநாதன் வந்தாலே அவரை முறைத்து கொண்டு தான் திரிவாள் அதி.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!