Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

உன்னைப் பார்த்த முதல் நாளே 3

“செல்லம் இன்னும் பெல் அடிக்கலடா.  டைம் இருக்குடா.  மாமா கரெக்ட் டைம் உன்னை கூட்டிட்டு வந்துட்டேன்…” என அஸ்வத், சைந்தவியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, அவள் ஸ்கூல் பேகையும் லன்ச் பேகையும் மறு கையில் எடுத்துக்கொண்டு ஸகூல் கேட்டுக்குள் நுழைந்தான்.

“அச்சோ, மாமா… ஸ்கூல் கேட்குள்ளாற பேரன்ட்ஸ் வரக்கூடாது.  நாட் அலவ்ட்.  நீங்க இங்கயேதான் விடனும்.  நானே போய்ப்பேன்”.

“ஓ… உள்ள வரகூடாதா…?  சரி பேக் மாட்டிக்கோ…” என அவள் முதுகில் ஸ்கூல் பேகை மாட்டி விட்டவன், லன்ச் பேகையும் அவள் கையில் கொடுத்தான்.  “பார்த்து மெதுவா நடந்து போங்க…” என அக்காள் மகளிடம் சொல்லியவன் குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

சைந்தவியும் மாமனின் கழுத்தை பற்றி இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டாள்.  “சாயந்திரம் சொன்ன மாதிரி வந்து கூட்டிட்டு போகனும்”.



Advertisement

“ம்ம்…. சரிடா குட்டி.  கண்டிப்பா வந்திடறேன்.  நீங்க அம்மா சொன்ன மாதிரி லன்ச் மீதி வைக்காம சாப்பிடனும்.  ஓகே”.

“ம்ம்…” என தலையசைத்தவள், “பாய்…” என கையசைத்து டாட்டா காண்பித்துவிட்டு, திரும்பி, திரும்பி, அவனை பார்த்துகொண்டே பள்ளிக்குள் நடந்தாள்.

சைந்தவி அவளது வகுப்பு இருக்கும் பகுதிக்குள் நுழையும்வரை பார்த்துகொண்டு அங்கேயே ஓரமாக நின்றிருந்தான் அஸ்வத்.  இவனைப் போலவே இவன் பக்கத்தில் நிறைய பேரன்ட்ஸ் நின்று தங்கள் குழந்தைகளை பள்ளிக்குள் அனுப்பிவிட்டு கேட்டின் ஓரத்திலேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

Advertisement

அங்கே அருந்ததி சக ஆசிரியைகளுடன் பேசியவாறே பள்ளியை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள்.  அஸ்வத்துக்கு அவளை அங்கு எதிர்பாராமல் திடுமென பார்த்ததும் முகம் தானாகவே புன்னகையில் மின்னியது.  உள்ளத்தில் இன்ப அதிர்ச்சியும்கூட.

Advertisement

ஓ இவள் இங்கதான் வேலை பார்க்கிறாளா…?  இவளை பார்த்து இரண்டு வருஷம் இருக்குமா…?  அன்னைக்கு பார்த்தமாதிரி அப்படியே இருக்கா.  ஆள் கொஞ்சம்கூட மாறலை என அவளையே சில நொடிகள் பார்த்திருந்தவனின் கண்கள் அவளது கழுத்தைதான் முதலில் ஆராய்ந்தது.  கல்யாணம் முடிந்துவிட்டதா…? என.

அருந்ததியின் கழுத்தில் மெல்லியதாக டாலர் வைத்த ஒரு செயின் இருந்ததைப் பார்த்ததும் சின்ன திருப்தி.  இதழினில் முறுவல்.  என்னவோ அவனுக்காக அவள் காத்துக் கொண்டிருக்கிற மாதிரி உள்ளத்தில் சந்தோஷம் நிரம்பியது.

டேய் ஏதோ முதுமலையில மசினக்குடியில பார்த்த சைட் அடிச்ச.  அதோட முடிஞ்சது.  இது என்னடா புதுசா லுக்கு என அவன் மனமே அவனை கேலி செய்தது.

Advertisement

ஏன் இருக்ககூடாதா…?  நான் பார்க்க கூடாதா…?  பார்த்தேன், பிடிச்சுது, சைட் அடிச்சேன்.  இப்பவும் பார்த்தேன், பிடிக்குது, சைட் அடிக்கிறேன்.  நீ என்ன சும்மா சும்மா எல்லாத்துக்கு ரூல் போடற…?

டேய்…  அப்பவாவது அவள் காலேஜ் படிச்சிட்டுருந்தா…?  இப்ப பொறுப்பான வேலையில இருக்கா…  அதுவும் டீச்சரா இருக்கா போல.

இருக்கட்டுமே.  நானும்தான் பொறுப்பான வேலையில இருக்கேன்.  மக்களை காப்பாத்தற பதவியில இருக்கேன்.  வேலைக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்.  எனக்கு அப்பவே அவளை பிடிச்சிருந்தது.  அவளோட அந்த குறும்பும், சேட்டையும், துருதுருப்பும் என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணுச்சு.  இப்ப இன்னும் ரொம்ப பிடிக்குது.  சேலையெல்லாம் கட்டி, பார்க்கவே இன்னும் அழகாயிருக்கா.

சக ஆசிரியையுடன் பேசிக்கொண்டு, முகத்தில் புன்னகை மிளிர நடந்து செல்பவளையே விழியெடுக்காமல் பார்த்து நின்றான்..

இரண்டு வருடங்களுக்கு பிறகு திரும்பவும் அவளை இங்கு பார்ப்பான் என அவன் கனவிலும் நினைக்கவில்லை.  அவனுக்கு உள்ளுக்குள் சொல்ல முடியாத மகிழ்ச்சி.

கண்களிலிருந்து அருந்ததியின் உருவம் மறையும்வரை நின்று பார்த்தவன் மெல்ல அவளைப்பற்றி அசைப்போட்டவாறே அவனது அக்காவின் வீட்டிற்கு திரும்பியிருந்தான்.

பூஜா இவனுக்கு மூத்தவள்.  உடன்பிறந்தவள்.  திருமணமாகி சென்னையில் கணவனுடன் வசித்து வருகிறாள்.  பூஜாவின் கணவன் தனியார் வங்கியில் வேலை பார்க்கிறான்.  அவர்களுடைய பெண்தான் சைந்தவி.

அஸ்வத் இன்னும் சென்னையில்தான் வேலை பார்க்கிறான்.  அரசாங்கம் அளித்த குவார்ட்டசில்தான் அவன் வாசம் செய்வது எல்லாம்.  எப்போதாவது இதுமாதிரி தமக்கையின் அழைப்பின் பேரில் வாரத்தில் சில நாட்கள் அவர்களுடன் இருப்பதுண்டு.

நேற்று விடுமுறை நாளென்பதால் சைந்தவியுடன் பொழுதைக் கழிக்க எண்ணி இங்கே வந்திருந்தான்.  மாமனைப் பார்த்தாலே அக்காள் மகளுக்கு கொண்டாட்டம்தான்.  தன்னுடன் விளையாட ஆள் சேர்ந்ததாக, அவனையும் அவள் விளையாட்டுக்குள் இழுத்துக் கொள்வாள்.

இருவரும் சேர்ந்தாலே அந்த இடத்தை அதகளப்படுத்திவிடுவர்.  இதில் சைந்தவி வேறு அவனுடன் சேர்ந்துகொண்டு இருக்கிற விளையாட்டு சாமான்களை எல்லாம் இழுத்து போட்டு அந்த இடத்தை ஒரு வழியாக்கி விடுவாள்.

பூஜாவுக்குதான் நெட்டித் தள்ளும் இவர்கள் இறைத்து வைப்பதை சரிகட்டி சீராக்குவதற்குள்.  அதற்கு இருவருக்கும் ஏச்சும் கிட்டும்.

தம்பி உள்ளே நுழைவதைப் பார்த்த பூஜா “கரெக்ட் டைம் போனீங்களாடா..?  இரண்டு நிமிஷம் கூட லேட்டா போக முடியாது.  உள்ள விடமாட்டாங்க.  கேட் க்ளோஸ் பண்ணிடுவாங்க” என விசாரித்தாள் அவனிடம்.

“அதெல்லாம் டைம்கு போயிட்டோம் க்கா…  நாங்க போய் ஐஞ்சு நிமிஷம் கழிச்சுதான் பெல்லே அடிச்சாங்க”.

“சரி நீ குளிச்சுட்டு வா.  சூடா பூரி போட்டு வைக்கிறேன். சாப்பிடலாம்”.

சரி என தலையசைத்த அஸ்வத், அடுத்து கொஞ்ச நேரத்தில் குளித்து முடித்து சாப்பிட வந்து அமர்ந்தான்.

அவனுக்கு தட்டு வைத்து, பூரியை எடுத்து வைத்தவள், கிழங்குடன் தேங்காய் சட்னியையும் சேர்த்து பறிமாறினாள்.  அஸ்வத்துக்கு பூரி என்றால் தேங்காய் சட்னியும் இருக்க வேண்டும்.  அதனுடன் சேர்த்து சாப்பிட அவனுக்கு பிடிக்கும்.  ஆதலால் தம்பிக்கு பிடித்த மாதிரி கிழங்குடன், தேங்காய் சட்னியையும் அரைத்து வைத்தாள்.

“நீயும் உட்காரு க்கா.  சேர்ந்து சாப்பிடலாம்”.

“இதோ நானும்தான்டா… உட்காரப் போறேன்.  நீ சாப்பிடு” என தட்டை எடுத்து வைத்துக்கொண்டு அவளும் சாப்பிட உட்கார்ந்தாள்.

“மாமா எப்ப வரார்…?”

“நாளைக்கு காலை இங்க வந்திருவேன்னு சொன்னார்”.

“நீயும் போயிருக்கலாமில்ல அத்தை மாமாவ பார்க்க.  நீ உன் மாமியார் வீட்டுக்கு போயே, ரொம்ப நாளாகுதுல்ல”.

“போயிருக்கலாம்தான்.  நாலஞ்சு நாள் தங்கற மாதிரின்னா… போகலாம்.  அவரே ஒரு நாள்ல திரும்பி வரார்.  ஒரே நாள்ல போயிட்டு வரதுன்னா சைந்தவிக்கு ஒத்துக்காதுடா.  உடம்பு அலண்டுடும்.  அதுதான் அடுத்த தடவை போகும்போது தங்கற மாதிரி கூட்டிட்டு போறேன்னுட்டார் மாமா”.

“இன்னொரு பூரி வைச்சுக்கோடா….”

“போதும் க்கா…  ரொம்ப சாப்பிட்டா எண்ணெய் நெஞ்சு கரிக்கற மாதிரி இருக்கும்”.

சரி என தலையசைத்தவள், “அம்மா ஏதாவது பேசுனாங்களா….டா…?” என்றாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தவன், “தினமும்தான் பேசிட்டிருக்காங்க.  நீ என்ன புதுசா கேட்கறே…?” என்றான்.

“ம்ப்ச்.  டேய் அது எனக்கு தெரியாதா…?  உன் கல்யாணத்தை பத்தி ஏதாவது பேசுனாங்களான்னு கேட்டேன்”.

“அது என்ன புதுசாவா பேசறாங்க.  எப்பவும் பேசறதுதான…”

“ஏன்டா இப்படி அலுத்துக்கறே…?  உனக்கும் வயசு ஏறுதுல்ல.  அம்மா சொல்றபடிதான் கேளேன்டா…”

……………………

“இல்ல வேற ஏதாவது….” என இழுத்தாள்  அவனைப் பார்த்து சிரித்தபடி.

“புரியல…?” என்றான் முகத்தை சுருக்கி அவளைப் பார்த்து.

“டேய்…. உடனே முறைக்காத.  எப்ப கல்யாணத்த பத்தி பேசுனாலும், காது குடுத்தே கேட்க மாட்டேன்றயே… ஏதா…வ…து லவ்… கிவ் பண்….றியோன்னு கேட்டேன்…டா”. என்றாள் ராகமாக.

“ஹா… ஹா…. லவ்தான…. பண்ணிட்டா போச்சு…” என்றான் சிரித்துக்கொண்டே.

“டேய் எல்லாமே உனக்கு விளையாட்டா…?  நான் சீரியசா கேட்டுட்டு இருக்கேன் நீ சிரிச்சுட்டு பதில் சொல்ற…” என்றாள் அவன் கேலியில் கடுப்பாகி முறைத்துக்கொண்டே.

“நானும் சீரியசாதான் பதில் சொல்றேன் க்கா.  நல்லா… அழகா மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒரு பொண்ணா பார்த்து லவ் பண்ணிட்டா போச்சுன்னு சொன்னேன்”.

“டேய் என்னடா…?  என்னை கோர்த்து விட்டுடுவ போலருக்கு அம்மாகிட்ட.  அம்மா கல்யாணத்த பத்தி உன்கிட்ட பேச சொன்னாங்களேன்னு நான் ஏதோ விளையாட்டா பேச… நீ என்னை மாட்டி விட்டுடாதடா….”

“ஏன் நான் லவ் பண்ண கூடாதா…?”

அச்சோ… இவன் நிஜமாவே லவ் பண்றானா…? என முழித்துக்கொண்டிருந்தாள் அவனைப் பார்த்தவாறே.

கிணறு வெட்ட பூதம் கிளம்புன மாதிரி, நான் ஏதோ தமாஷா கேட்கப்போய் இவன் எனக்கே ஆப்பு வச்சிருவான் போலிருக்கே.

“என்ன பாக்கற…? அப்படி பண்ணாதான் நீ அம்மாகிட்ட எனக்காக பேசி  கல்யாணம் பண்ணி வைக்க மாட்டியா…?” என்றான் பூஜாவைப் பார்த்து சிரித்துகொண்டே.

“ஐயா…. சாமி.  இந்த விளையாட்டுக்கு நான் வரலபா.  என்னை ஆளை விடுடா…” என தட்டை எடுத்துக்கொண்டு எழுந்துவிட்டாள்.

“என்னக்கா…. இப்படி பயந்து ஓடற.  என்னோட அக்காவா நீ.  தைரியமா அம்மாகிட்ட எனக்காக பேசி கல்யாணம் பண்ணி வைப்பேன்னு சொல்லுவன்னு எதிர்பார்த்தேன்… நான்.  இப்படி எழுந்து ஓடற…” என் கிண்டல் செய்தான் தமக்கையை.

“சொல்லுவடா….  வேணாம் சாமி.  இதுல எல்லாம் எனக்கு எப்பவும் தைரியமே வேணாம்.  நான் எப்பவும் அம்மா அப்பா பேச்சை மீறாத பொண்ணுதான்.  அதுதான் எனக்கும் செட் ஆகும்”.

“போக்கா… நான் உன்கிட்டயிருந்து வேறல்ல எதிர்பார்த்தேன்”.

“என்னத்த எதிர்பார்த்த….?”

“அப்படி யாராவது உன் மனசுல இருந்தாலும் சொல்லுடா… தம்பி.  அம்மாக்கு பிடிக்கலனாகூட… நான் அவங்ககிட்ட பேசி சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என் பொறுப்புன்னு சொல்லுவேன்னு எதிர்பார்த்தேன்.  நீ என்னன்னா… அப்படியே பேக் அடிச்சுட்ட”.

“ஹா…. ஹா…. ஐயாவுக்கு அப்படி வேற ஆசையோ…?  ஏன்டா எவ்வளவு நாளா வெயிட் பண்ண.  என்னையும் அம்மாவையும் கோர்த்துவிட்டு நீ குளிர் காயலாம்னு.  இந்த ஆட்டத்துக்கு நான வரல சாமி”.

“ஹா… ஹா… கண்டுபிடிச்சுட்டியா…”

“ம்ம்… எனக்கும் கொஞ்சூண்டு மூளை இருக்கு ஸார்…” என்றாள் சிரிப்புடன்.

“பூரி சாப்பிட்டது நெஞ்சு கரிக்குது க்கா.  கொஞ்சமா டீ போடு”.

“ம்ம்….  அம்மா கேட்கறதுலயும் என்னடா தப்பிருக்கு.  எப்பதான் கல்யாணம் பண்ற ஐடியால இருக்க.  பாவம்டா அவங்க.  எப்ப போன் எடுத்தாலும் உன்னை பத்திதான் புலம்பறாங்க”.

“உன் வயசுல இருக்கவன்லாம் கல்யாணம் பண்ணி குழந்தை குட்டியோட இருக்காங்க.  நீ மட்டும் ஏன்டா… அவங்கள இப்படி புலம்பவிடற…?”

“ம்ப்ச்…. நீயும் அதே பாட்டை பாடி போரடிக்காத க்கா… கொஞ்ச நாள் போகட்டும்”.

“இதையேதான்டா கேக்கும் போதெல்லாம் சொல்லி எஸ்கேப் ஆகுற.  அம்மா என்னன்னா… என்னை பிடிச்சு காய்ச்சறாங்க.  அவன்கிட்ட பேசமாட்டியாடின்னு….”

“உன்கிட்டதான கேட்கிறாங்க.  நீயே சமாளி.  என்கிட்ட எதையும் கொண்டு வராத”.

“ரொம்ப நல்லவன்டா நீ….” என புன்னகையுடன் அவனுக்கு டீயைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

“கொஞ்ச நாள் போகட்டும் க்கா…. நானே சொல்றேன்.  இப்ப நீயே அம்மாவ பேசி சமாளி”.

அடுத்து ஒரு மாதம் கழித்து சைந்தவியுடன் அவளது பள்ளிக்கு வந்திருந்தான் அஸ்வத்தாமன்.

“சந்துமா என்னடா எல்லாரும் கலர் டிரஸ்ல வந்திருக்காங்க…” என்றான் அங்கு பள்ளியில் வந்திருந்த மாணவர்களைக் காட்டி.

“ஆமாம்.  இன்னைக்கு ரிப்போர்ட் கார்ட்தான குடுக்கறாங்க.  அதனால இன்னைக்கு நோ யூனிபார்ம்.  ஒன்லி கலர் டிரஸ்…” என்றாள் முகமெல்லாம் சிரிப்புடன் குஷியாக.

நேத்திலிருந்தே என்ன டிரஸ் ஸ்கூலுக்கு போட்டு செல்வது என பூஜாவுடன் பெரிய டிஸ்கஷன் நடந்திருந்தது வீட்டில்.  அதில் தனது தோழிகள் இந்த மாதிரி அணிந்து வருவார்கள்.  நாங்கள் எங்களுக்குள் பேசி வைத்துள்ளோம்.  இதைதான் அணிவேன் என ஒரு பிடிவாதம் வேறு.  எதற்கு இவ்வளவு கிராண்டான டிரஸ் என பூஜாவும் சொல்லிப் பார்த்துவிட்டு, எப்படியோ போ என விட்டுவிட்டாள் இறுதியாக.

“எங்கடா இருக்கு உன் கிளாஸ்….?”

“இந்த பில்டிங்தான்” என எதிரில் இருந்த கட்டிடத்தை கை காட்டியவள்,  “தேர்ட்… ப்ளோர்ல இருக்கு எங்க கிளாஸ்” என பெருமையாக கூறிக்கொண்டே அவனது கையைப் பிடித்து நடந்து வந்து கொண்டிருந்தாள் துள்ளலுடன்.

இதில் வழியில் வேறு சில தோழிகள் ரிப்போர்ட் கார்ட் வாங்கிக்கொண்டு அவர்களது பெற்றோர்களுடன் திரும்பி வீட்டுக்கு செல்வதைப் பார்த்து அவர்களுடனும் சந்தோஷமாக பேசிக் கொண்டேதான் நடந்து வந்தாள்.

இவனுக்குதான் எல்லாம் புதுமையாக இருந்தது.  அவளின் செயல்களை எல்லாம் புன்முறுவலோடு பார்த்திருந்தான்.  இன்று அஸ்வத் சைந்தவியுடன் அவளது பள்ளிக்கு வந்திருந்தான்.  அவளுடைய வகுப்பு ஆசிரியரை மீட் செய்து இவளுடைய பிராகரஸ் கார்டை வாங்கி செல்ல வந்திருந்தான்.

பிராகரஸ் ரிப்போர்ட் வழங்கும்போது மாணவர்களின் பெற்றோர்கள் நேரிடையாக வந்து அவர்களுடைய ஆசிரியர்களை சந்தித்து தங்களது பிள்ளைகளின் நிறைகுறைகளை பேசி, தெரிந்து வாங்குவது வழக்கம்.  இதற்கான காலநேரமும் முன்கூட்டியே பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தியிருப்பர்.

எப்போதும் இந்த மாதிரி தருணங்களில் பூஜா வருவதுதான் வழக்கம்.  இன்று அவள் ஒரு வேலையாக வெளியே செல்ல வேண்டி இருந்ததால் அஸ்வத் வந்திருந்தான் மருமகளுடன் ரிப்போர்ட் கார்ட் வாங்க.

அதில் சைந்தவிக்குதான் ஏக குஷி, பெருமை எல்லாம்.  ஏற்கனவே அவன் காவல் துறையில் வேலை செய்வதை தங்களது தோழிகளிடம் சொல்லி பெருமைபட்டுக் கொள்வாள்.  இன்று அவனை தனது தோழிகளின் எதிரே பள்ளி வளாகத்தினுள், வகுப்புக்கு அழைத்து வந்திருந்தது இன்னும் ஏக சந்தோஷம் அவளுக்கு.  அது அவளது முகத்திலேயே தெரிந்தது.

மாமனும் மருமகளும் மூன்றாவது மாடி ஏறி வந்து, தேர்ட் ஸ்டேன்டர்ட் என போடப்பட்டிருந்த வகுப்பின் முன் நின்றிருக்கும் வரிசையில் நின்றார்கள்.  இதுதான் அவன் முதல் முறை பள்ளியின் உள்ளே வருவது.  அவளை டிராப் செய்ய அவன் வருவான்தான்.  ஆனால் அது கேட் வரை கொண்டுவந்து விட்டு, அப்படியே திரும்பிவிடுவான்.

இன்று முதன் முறையாக வகுப்புவரை வந்திருந்தான்.  இங்கும் அங்கும் பள்ளி வளாகத்தை சுற்றி அவன் கண்கள் ஆராய்ந்து கொண்டிருந்தது.  ம்ம்… ஸ்கூல் நல்லா பெரிசாதான் இருக்கு என நின்ற இடத்தில் இருந்தே பள்ளியை சுற்றிப்பார்த்து ஆராய்ந்து கொண்டிருந்தான்.

காம்பவுன்டிற்குள்ளேயே, பள்ளியின் முன் பக்கம் நிறைய காலி இடங்கள் விட்டு, மாணவர்களுக்கு சைக்கிள் பார்க்கிங்,  ஆசிரியர்களுக்கு, வேலை செய்பவர்களுக்கு டூவீலர் பார்க்கிங், கார் பார்க்கிங் என தனி தனியாக இருந்தது.  இரண்டு பக்கமும் இடம் விட்டு, பேஸ்கட் பால் கோர்ட், டென்னிஸ் கோர்ட் என தனிதனியாக வைத்திருந்தனர்.  பள்ளிக்கு பின்பக்கத்திலும் மாணவர்கள் விளையாட என நிறைய காலி இடங்கள் இருந்தன.

இடமே அத்தனை விஸ்தாரமாக இருந்தது.  கிட்டத்தட்ட ஐம்பது ஏக்கருக்கு மேல் இருக்கும் பள்ளி இருந்த இடத்தின் அளவு.  எங்கும் மரங்கள் சூழ்ந்திருந்தது.  வேப்ப மரமும் மாமரமும்தான் நிறைய காணப்பட்டது.  அங்கங்கே பூச்செடிகளும் வரிசைகட்டி அழகுக்காக இருந்தது.  வெளிக்கேட்டில் இருந்து பள்ளிக்குள் நடந்து வருவதே கிட்டத்தட்ட ஐநூறு மீட்டர் தூரமாவது இருக்கும்.

ஒரு ஏரியாவே வளைச்சு போட்டிருக்காங்க என மனதில் நினைத்தவன், “நைஸ்…” என முணுமணுத்துக்கொண்டான்.

“குட்டிம்மா… லன்ச் எங்க சாப்பிடுவீங்க” என்றான் சைந்தவியைப் பார்த்து.

சைந்தவி எதிரில் தெரிந்த பாதாம் மரத்தை கைக்காட்டினாள்.  “யாரும் கிளாஸ்ல உட்கார்ந்து சாப்பிட கூடாது.  எல்லாரும் வெளியதான் சாப்பிடனும்.  என் பிரண்ட்ஸோட உட்கார்ந்து சாப்பிடுவேன்”.

மரங்களும் அடர்ந்து காணப்பட்டதால் வெம்மை தெரியாமல் காற்றோட்டமாகதான் இருந்தது.  இடத்தையும் சுத்தமாகவும் பராமரித்துக் கொண்டிருந்தார்கள்.

அதற்குள் அங்கு வரிசையில் நின்றிருந்த கூட்டம் குறைந்திருந்தது.  இவர்களுக்கு முன்னால் நின்றிருந்தவர்கள் வகுப்பின் உள்ளே சென்றிருந்தார்கள்.

“மாமா… நெக்ஸ்ட் நாமதான்….”

சரி என தலையசைத்து கொண்டான்.  அடுத்த சில நிமிடங்களில் உள்ளேயிருந்த பேரண்ட்ஸ் வெளி வந்ததும் இவர்கள் வகுப்பின் உள்ளே நுழைந்தனர்.

உள்ளே நுழைந்தவனின் கண்கள் சட்டென்று அங்கே ஆசிரியை நாற்காலியில் அருந்ததியைப் பார்த்து, ஒரு நொடி ஆச்சர்யத்தில் நின்று மீண்டிருந்தது.

அவளுக்கும் அப்படிதான் இருந்தது.  அவனை அடையாளம் கண்டு கொண்டிருந்தாள். திடீரென இவனைப் இங்குப் பார்த்ததும், க்ஷண நேரம் முகத்தில் ஆச்சர்யம் கலந்த சந்தோஷம் மின்னலாக மின்னி மறைந்தது.

இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.

அருந்ததி, “ஹலோ ஸார்…” என்றாள் புன்னகை முகமாகவே.

புன்னகையுடன் தலையசைத்து கொண்டே அவளுக்கு எதிரில் இருந்த பெஞ்சில் அமர்ந்தான்.  சைந்தவி மாமனின் பக்கம் வந்து நின்றவள் “குட்மார்னிங் மிஸ்” என்றாள் அருந்ததியைப் பார்த்து.

“குட்மார்னிங்….” என்ற அருந்ததி சிரித்த முகமாகவே, “உன்னோட ரோல் நம்பர் சொல்லு சைந்தவி” என்றாள்.

சைந்தவி சொன்னதும் டேபிளில் அடுக்கி வைத்திருந்த ரிப்போர்ட் கார்டுகளில் இருந்து இவளுடைய கார்டை எடுத்து பிரித்து பார்த்து, அவனிடம் கொடுத்தவள், சைந்தவியிடம், “மம்மி வரலையா…?” என்றாள்.

“இல்லை.  அக்காக்கு இன்னைக்கு வேற ஒரு முக்கியமான வேலை.  அதான் நான் வந்தேன்”

“ஓஹ்…  நோ இஷ்யுஸ்…” இவனோட அக்கா பொண்ணா சைந்தவி என இருந்தது அவளுக்கு மனதில்.

அருந்ததி கொடுத்த ரிப்போர்ட் கார்டை அஸ்வத் பிரித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

“எப்படி படிக்கறா…?”

“குட்.  நல்லா படிக்கிறா.  எல்லா சப்ஜெக்ட்லயும் எ கிரேட்தான்.  ஹோம் வொர்க்லகூட எந்த பிரச்சினையும் இல்லை” என அஸ்வத்தை பார்த்து புன்னகை முகமாக சொன்னவள், திரும்பி சைந்தவியைப் பார்த்து “கீப் இட் அப் சைந்தவி…” என்று முடித்துவிட்டாள்.

பேரண்ட்ஸ் என்றால் பிரியாக பேசலாம்.  இவனிடம் என்ன பேசுவது என அவள் மேலோட்டமாக சைந்தவியைப் பற்றி கூறி முடித்து விட்டாள்.  பூஜாவை நேரில் பார்க்கும்போது பேசிக்கொள்ளலாம் என மனதில் எண்ணிக் கொண்டாள் அருந்ததி.

அருந்ததி சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவன், சைந்தவியைத் திரும்பி பார்த்து கண்களாலேயே சொல்லவா என சைகை செய்தான் சைந்தவியிடம்.

அவ்வளவுதான் இவ்வளவு நேரம் அருந்ததி கூறிய புகழாரத்தில் மலர்ந்திருந்த முகம் சட்டென்று பதட்டமானது.  “ம்கூம் வேணாம்” என மாமனின் கையைப் பிடித்து சத்தம் வராமல் மெல்ல முணுமுணுத்தாள் சைந்தவி.

இவர்களது சம்பாஷணையை பார்த்த அருந்ததிக்கு ஒன்றும் புரியவில்லை.  “என்ன” என வாய்திறந்து கேட்டாள் சைந்தவியிடம் புன்னகையுடனே.

“நோ மிஸ்…” என தடுமாறினாள் சைந்தவி.

அஸ்வத் சைந்தவியின் முகத்தைப் பார்த்து சிரித்துகொண்டே, “அ…து…” என அவன் சொல்ல வருவதற்குள் அவனைத் திரும்பி முறைத்துப் பார்த்தாள் சைந்தவி.

மருமகளைப் பார்த்து முகம் விரிய சிரித்தான் இப்போது.

“வாட் ஹேப்பன்…?” என்றாள் அருந்ததி.  அவளுக்கும் முகத்தில் முறுவல் வந்தது.  இவர்கள் இரகசியம் பேசுவதைப் பார்த்து.

“இல்லை ஒன்னுமில்லை.  அக்கா உன்கிட்ட…. ஸாரி… உங்ககிட்ட சொல்ல சொன்னாங்க.  தினம் வீட்ல ஜஸ்கிரீம் வேணும்னு கேட்டு அடம் பிடிக்கிறானு”.

“அப்படியா…..?” என சைந்தவியைப் பார்த்தவள், “சைந்தவி குட் கேர்ள் ஆச்சே…” என்றாள் சிரித்த முகமாகவே.

“நோ… மிஸ்.  நான் எப்பயாவது தான் கேப்பேன்….” என்றாள் தயக்கமாக பயந்துகொண்டே.

“அதான  சைந்தவி எப்பவுமே குட் கேர்ள்.  கரெக்ட்தான சைந்தவி” என்றாள் அவளிடமே.

“எஸ் மிஸ்….” என்றாள் தலையசைத்து சைந்தவி பயம் தெளிந்து.

“ம்ம்… ஸோ ஸ்வீட்.  குட்” என்றவள் சைந்தவியை அருகில் அழைத்து அவளுக்கு பொறுமையாக அட்வைஸ் செய்ய ஆரம்பித்திருந்தாள் ஆசிரியையாக

அஸ்வத் அவர்களைதான் பார்த்திருந்தான்.  பார்வை மொத்தமும் அருந்ததியின் மீது இருந்தது.  அவளையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான்.

சைந்தவியிடம் பேசிவிட்டு திரும்பிய அருந்ததி, அஸ்வத்தின் பார்வையில் திகைத்து போனவள், தன்னை சுதாரித்து திரும்ப அவன் பார்வையை என்னவென்று கண்டறிவதற்குள், சட்டென்று பார்வையை மாற்றியிருந்தான்.

அவளுக்கே சந்தேகம் வந்துவிட்டது.  இவர் இப்ப என்ன பண்ணார்.  என்னை பார்த்தாரா…, இல்லையா…? என அவளுக்கே சந்தேகம் வந்திருந்தது.  க்ஷண நேரத்தில் தன்னை கட்டுப்படுத்தியிருந்தான்.

அதற்குமேல் அவனுக்கும் அங்கே அவள் எதிரில் உட்கார முடியாமல் “ம்க்கும்…” என தொண்டையை கனைத்து எழுந்து நின்றவன், அவள் நிமிர்ந்து பார்த்ததும் “தேங்க்ஸ்…” என தலையசைத்துவிட்டு நகரத் தொடங்கினான்.

அவளும் அவனது விழிகளைப் பார்த்தவாறே எழுந்து “தேங்க்ஸ் ஸார்” என்றாள்.  சைந்தவியும் “தேங்க்ஸ் மிஸ்” என மாமனின் கைப்பிடித்து நடக்க ஆரம்பித்தாள்.

அஸ்வத் பார்த்தது க்ஷண நேரம் என்றாலும் அவன் பார்வை அவளை என்னவோ செய்திருந்தது.  ஆனால் டக்கென்று அவன் பார்வையை மாற்றி தன்னை சரி செய்து கொண்டதில், இவளுக்குதான் தடுமாற்றம்.  நான்தான் தப்பா ஏதாவது நினைச்சிட்டனா என்று குழம்பினாள் அவளுக்குள்ளயே.

அவளையே நினைத்துக் கொண்டு பார்க்கிங்வரை நடந்து வந்தவனின் காதில் யாரோ… யாரையோ ஹனி என கூப்பிடும் குரல் கேட்டது.  ஹ்ம்ம் ஹனிதான், ஹனி  மாதிரிதான் இருக்கா  பார்க்றதுக்கு… என மனதுக்குள் எண்ணத் தோன்றியது அவனுக்கு.

அருந்ததி இங்கு வேலை செய்கிறாள் என்று அவனுக்கு முன்னமே தெரிந்திருந்தது.  ஆனால் அக்கா மகள் சைந்தவிக்கே வகுப்பாசிரியராக இருப்பாள் என்பது ஆனந்த அதிர்ச்சியாகதான் இருந்தது.

அவளை எதிர்பாராமல் பார்த்ததில் அவனது மூளை வேலை நிறுத்தம் செய்து, மனம் முழுக்க அவளிடமே தேங்கியிருந்தது.  “மாமா… மாமா…” என சைந்தவி அவனது கையைப் பிடித்து ஆட்டவும்தான் ஸ்மரணை வந்து தலையில் தட்டிக்கொண்டு, “என்னடா…?” என்றான் மருமகளிடம்.

“நீ ஐஸ்கிரீம் வாங்கித் தரேன்னு சொல்லியிருக்க…  மறந்துடாத” என்றாள் காரியத்தில் கண்ணாக.

“இப்பதான உன் மிஸ் சாப்பிடக் கூடாதுன்னு சொன்னாங்க”.

“அதெல்லாம் இல்ல.  எப்பவாவது சாப்பிடலாம் சொல்லிட்டாங்க.  ஸோ நீ இப்ப வாங்கித் தா…” என்றாள் சிணுங்கிக்கொண்டே.

“அதான உன் வேலையில குறியாயிருப்பியே.  சரி ஏறு போலாம்” என அவன் புல்லட்டில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!